அட்டைப்படத்தில் ரத்தன் டாடாவும் ஷாந்தனுவும் இருக்கும் ஓவியம், சிறியதாக ஒரு கலங்கரை விளக்கம். அந்த புத்தகத்தை எழுதியவனைப் பற்றி அவளுக்கு பெரிய அறிமுகமில்லை என்றாலும், முதன்முறை ஆனந்தன் அவளுக்குத் தந்த புத்தகம். அவன் ரசனை எப்படியிருக்கிறது என்று அறிய ஒரு ஆவல் அவளிடம் தோன்றியது.
ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அந்த புத்தகம் இருந்தது.
அன்றிரவு அப்பாவிடம் அவன் வாரிதி பற்றி பகிர,
அவரோ, “கடலுக்குக் கலங்கரை விளக்கம் கொடுத்தியா டா? ம்ம், குட் சாய்ஸ். நானும் அந்த புக் படிச்சதில்லை, எனக்கு ஒரு காப்பி எடுத்துட்டு வா இல்லை ஆர்டர் போடு” என்றார் கார்த்திகேயன்.
ஒரு வாரம் கடந்திருந்தது. ரேவதிக்கு அன்று மூன்றாம் நாள் வகுப்பு. கார்த்திகேயன் ரேவதிக்கு முதல் நாள் வழிகாட்டிவிட, அந்த வாரம் முழுவதும் இருவரும் சந்திக்கவில்லை. அவர் வகுப்பு முடிந்து வெளியே வர, பேட்மிண்டன் கோர்ட்டிலிருந்து வந்தார் கார்த்திகேயன்.
“எப்படியிருக்கீங்க ரேவதி? க்ளாஸ் எப்படி போகுது?” என்று கேட்ட கார்த்திகேயன், அந்த கட்டிடத்தின் உள்ளே இருக்கும் காத்திருப்போருக்கான இருக்கையில் உட்கார்ந்தார். ரேவதியும் அவரோடு பேசியபடி அருகே அமர்ந்தார்.
நெற்றியில் ஒட்டியிருந்த வியர்வைத்துளிகளை கார்த்திகேயன் தன் கைக்குட்டையில் துடைத்தவர், தனது பையிலிருந்து தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் பருகினார்.
“புதுசா இருக்கு கார்த்திகேயன். எப்பவும் நான் டீச்சரா இருந்துட்டு இப்போ இன்னொருத்தங்க சொல்லி கேட்குறது வித்தியாசமா இருக்கு”
ரேவதியின் பதிலில் கார்த்திகேயன் புன்னகைத்தார்.
“புதுசா ப்ரண்ட்ஸ் எல்லாம் கிடைச்சாங்களா? இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?”
கார்த்திகேயன் கேட்க, அந்த வளாகத்தினுள் பூத்திருந்த அரளிப்பூக்களைப் பார்த்தபடி பேசினார் ரேவதி.
“ரொம்ப வருஷமா தனியாதான் இருக்கேன். ஆனா எனக்குனு தனியா என்ன செஞ்சேன்னு தெரியல. ஸ்கூலுக்குத் தனியா போனாலும் அது வேலைனு ஒரு காரணம். மத்தபடி கோவிலுக்கு மட்டும்தான் தனியா போயிருக்கேன், எனக்காகன்னு கிளம்பி இங்க க்ளாஸ் வரது கொஞ்சம் கடுப்பா இருந்தாலும் முட்டி வலி அதிகமாகுறதை நினைச்சே, வந்துடுறேன்”
“ஹாஹா, ரொம்ப போர் அடிச்சா அடுத்து பேட்மிண்டன், டென்னீஸ்னு ஜாய்ன் பண்ணிடுங்க” என்று கார்த்திகேயன் சொல்ல, ரேவதி மறுப்பாகத் தலையாட்டினார்.
“இதுக்கே நான் திணறுறேன், உங்களவு எல்லாம் எனக்கு டேலெண்ட் இல்லை” என்றதும்
“அட ரேவதி! டேலண்ட்டா? நான் என்ன இந்த வயசுல சேம்பியன் ஆகப்போறேனா? உங்ககிட்ட சொன்ன மாதிரி தெரியாத விஷயம் கத்துக்கும்போது நம்ம குழந்தைங்க மாதிரி ஆகிடுவோம், ஒரு ஆர்வமிருக்கும். தப்பு செஞ்சாலும் கத்துக்கலாம்னு தோணும். பேட்மிண்டன் ரொம்ப வருஷமா ஆடுறேன், இப்போ போன மாசம் டேபிள் டென்னில் சேர்ந்தேன். நான் விளையாடுற லட்சணம் பார்த்து அஞ்சாவது படிக்கிற பையன்லாம் சிரிக்கிறான்.” என்றதும் ரேவதிக்கும் சிரிப்பு வந்தது.
“பாருங்க நான் விளையாடுறதைப் பார்க்காமலே நீங்க சிரிக்கிறீங்க”
ரேவதிக்கு இன்னும் சிரிப்பு வந்தது. வஞ்சனையின்றி சிரித்தும் விட்டார்.
“நீங்க என்னை டேலெண்ட்னு சொல்றீங்க” என்று சலித்த கார்த்திகேயன்,
“நான் எல்லாத்தையும் ஒரு அனுபவம் வேணும்னு கத்துக்கிறேங்க, அவ்வளவுதான்! நம்ம அந்த விஷயத்தை செய்ற நேரம் ஈடுபாட்டோட இருக்கணும், புதுசா சில மனுஷங்க, புதுசா சில பார்வைகள். போன வாரம் அந்த ஃபிஃப்த் படிக்கிற பையன் என்னோட ப்ரண்ட் ஆகிட்டான். அந்த சின்ன குழந்தை எனக்கு வேறு ஒரு பார்வையில உலகத்தைக் காட்டுறான். உண்மையை சொல்லப்போனா நீங்கதான் எனக்கு ஆச்சரியம்” என்றதும் ரேவதி ஆச்சரியமாகப் பார்த்தார்.
ரேவதி அவரை பெரிதாக நினைத்ததில்லை. அவர் மிகவும் சராசரியானவர், ஒரு எளிமையான பள்ளி ஆசிரியை. அதைத்தாண்டி அவருக்குத் தன்னைப் பற்றி வேறு பிம்பம் இல்லை.
“என்ன அப்படி பார்க்குறீங்க? ரீமேரேஜ் பண்றதெல்லாம் இப்போ நிறைய நடந்தாலும், நீங்க இந்த வயசுல அதுக்குத் தைரியமா முடிவெடுத்தது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அண்ட் எனக்குக் கொஞ்சம் இல்ல நிறைய திமிர் உண்டு, தனியா இருக்கிறது எனக்குப் பழகிடுச்சு. அண்ட் எனக்கு அது பிடிச்சும் இருக்கு. உங்ககூட பேசின பின்னாடிதான் நம்ம தனிமை ஒன்னு இல்லைனு புரிஞ்சது. நீங்க எனக்கு வேற ஒரு பார்வை கொடுத்தீங்க”
ரேவதிக்குக் கார்த்திகேயனின் வெளிப்படையான பேச்சு பிடித்தது. கார்த்திகேயனின் பேச்சு ரேவதியையும் மனம் திறக்க வைத்தது.
“அப்படியெல்லாம் இல்லை சார். என் மாமியார் இருந்தவரைக்கும் எனக்குப் பெருசா தெரிஞ்சதில்லை. அவங்க போனதும் உண்மையில தனியா ஆகிட்டேன். என் ப்ரண்ட் ஓட பொண்ணு, அவ ரொம்ப ப்ரண்ட்லி. அவதான் ஆண்டி இப்படி இருக்குனு என்னை கன்வின்ஸ் பண்ணினா. அவ சொல்றதை செய்யணும்னு சில நேரம் தனியா இருக்கும்போது தோணும். அப்புறம் கொஞ்ச நேரத்துல அந்த தனிமை பழகி, இனிமே என்ன இருக்குனு ஒரு சலிப்பு.”
“நீங்க ஏன் அப்படி நினைக்குறீங்க? இப்போ ஆனந்தனை நினைச்சு எனக்குக் கவலையிருக்கு. உங்களுக்கு அது கூட இல்லையே ரேவதி. யாரைப் பத்தியும் கவலையில்லாம ஜாலியா இஷ்டம்போல இருங்க”
மிகவும் எதார்த்தமாக இயல்பாக வந்தன கார்த்திகேயனின் வார்த்தைகள். கார்த்திகேயனின் தனிமை ‘ஏகாந்தம்’. அந்த தருணங்கள் அவள் விரும்புவது, எல்லாருக்கும் அது ஏகாந்தமாக இருக்காதே. ரேவதியை சகஜமாக்க அவர் சொல்ல, ரேவதியோ ஆழ்ந்த குரலில்,
“நம்மை நினைச்சுக் கவலைப்படறதுக்கும், நாம நினைச்சு கவலைப்படவும் ஒருத்தங்க வேணும் கார்த்திகேயன்” என்றார்.
என்னமோ ஆழமாக அவ்வார்த்தைகள் சென்று கார்த்திகேயனை தாக்கின. முழுதாக இன்னும் அவருக்கு ரேவதியைப் புரியவில்லை என்று புரிந்தது.
“நீங்க கேட்டீங்களே இந்த வயசுல எப்படி தோணுச்சுனு. ரூபா எப்ப சொன்னாலும் நான் அதை சின்னப்பொண்ணு பேசுறான்னு கண்டுக்க மாட்டேன். என் வீட்டுக்காரர் எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு ஒன்றரை வருஷத்துல போய்ட்டார். ஒரு ஆக்சிடெண்ட். அந்த அதிர்ச்சியில இருந்து நான் நார்மலா வாழவே ரொம்பக் கஷ்டப்பட்டேன்”
“ஆனா இருக்கவங்க வாழ்ந்துதானே ஆகணும். என் ஹஸ்பண்ட் இடத்துல இருந்து அவங்க அப்பா, அம்மாவைப் பார்க்கிறது என் பொறுப்புனு பதிய வச்சாங்க. எனக்கு அப்போ வாழ ஒரு காரணமா அவங்க இருந்தாங்க. அப்போ பெருசா நான் அவரை நினைச்சதே இல்லை, நினைச்சா கஷ்டமா இருக்கும். சாப்பிட முடியாது, தூங்க முடியாது, அடுத்த நாள் ஸ்கூல்ல ரொம்ப கஷ்டமாகிடும். அவரை நினைக்காம இருந்து பழகி, இப்போ நினைச்சாலும் பெருசா ஞாபகங்களே இல்லை.”
துயரங்களிலிருந்து மீள, எல்லாவற்றையும் நினைக்காமலிருந்து பின் நினைத்துப் பார்க்க நினைக்கும்போது, அவை நினைவடுக்கில் இல்லாமல் போன கவலை ரேவதியிடம் இருந்தது.
“லைக் பழகிடும். கரெண்ட் பில் கட்டணும், காய்கறி வாங்கணும்னு இயல்பான லைஃப்க்கு என்ன தேவையோ அதை செய்ய ஆரம்பிச்சிடுவேன். என் மாமியார் இறந்த பின்னாடி இரண்டு வருஷம் இருக்கும், என் நாத்தனார் கடன் கேட்டாங்க. எங்கிட்ட இல்லைனு சொன்னா உனக்கென்ன செலவு, அதான் ஸ்கூல்ல சம்பாரிக்கிற, என் அம்மாவும் இல்லை. உனக்கென்ன புள்ளையா குட்டியா காசில்லனு பொய் சொல்றேன் சொன்னாங்க”
“யாரும் இல்லைனாலும் நான் இருக்கேனே, என் மாமியார் இல்லாத நாலு வருஷத்துல என்னை நான் தானே பார்க்கிறேன். என் செலவுக்கு என்ன செய்வேனு யோசிக்கல அவங்க. இப்படியான மனுஷங்களா என்னை கடைசி காலத்துல பார்ப்பாங்கனு பயம் வந்துடுச்சு. கோவத்துல நானும் பேச எங்கம்மா இல்லனதும் நீ ரொம்ப மாறிட்ட சொன்னாங்க.”
“எனக்கு வெறுப்பா வந்துச்சு, என்ன ஆகப்போகுதுனு ஒரு குருட்டுத் தைரியத்துலதான் டேட்டிங் ஆப் ரூபா இன்ஸ்டால் பண்ணினப்போ வேண்டாம் சொல்லல. அங்கயும் ஆம்பளைங்க எல்லாம் மோசமாதான் இருந்தாங்க. சிலர் உண்மையா கூட இருந்தாங்க. எனக்கு எதுவும் பிடிக்கல, கோவத்துல டெலிட் பண்ணலாம் நினைக்கும்போதுதான் உங்க ப்ரோஃபைல்’ல ரூபா ஷார்ட் லிஸ்ட் பண்ணி வச்சிருந்தா… அப்புறம் இப்போ யோகா க்ளாஸ்” என்று ரேவதி சொல்ல
“கவலைப்படாதீங்க ரேவதி! கண்டிப்பா நீங்க நல்லாயிருப்பீங்க. இப்பவும் ஆப் இன்ஸ்டால் பண்ணி பாருங்க. நம்ம சேர்ந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு ப்ரண்ட் இருக்கேன், அதை மறந்துடாதீங்க” என்ற கார்த்திகேயன்
“நான் இதை மறந்துட்டேன்” என்றவர் தனது பையிலிருந்து இரண்டு கேசட்’கள் நீட்டினார். ஒரு வாரமாக அவரும் கொடுக்க நினைப்பார், சரியான நேரத்தில் அவரால் வகுப்புகளுக்கு வர முடியாமல் போக, இன்றுதான் இருவருக்கும் சரியான தருணம் அமைந்தது. ரேவதி நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவர்,
“அதான் நான் சொன்னேனே சார், ஒரு நேரம் எனக்கு யாராவது வேணும்னு தோணும். ஒரு நேரம் இதுவே போதும்னு தோணும். என்னோட முடிவே தெளிவில்லாம இருக்கும்போது இன்னொருத்தங்களை இதுல இழுக்க எனக்கு விருப்பமில்லை” என்றதற்குப் புரிந்ததாக தலையசைத்து, கேசட்டைக் கண்காட்டினார்.
“கேட்டுட்டு சொல்லுங்க” என்ற கார்த்திகேயன்,
“வாங்களேன் சூப் குடிக்கலாம்” என்று ரேவதியை அந்த கட்டிடத்தின் வெளியே இருக்கும் சூப் கடைக்கு அழைத்துச் சென்றார். அவரது பையைக் காரில் போட்டு சூப் வாங்கினார், இரண்டு ஆட்டுக்கால் சூப்போடு ரேவதியிடம் வந்தார்.
“ஏன் இதெல்லாம்?” என்று ரேவதி மறுப்பாகப் பார்க்க,
“முட்டி வலினு சொல்றீங்க, நீங்கதான் உங்களை நல்லா பார்த்துக்கணும். இப்படி தெம்பா குடிச்சாதானே நாள் முழுக்க நின்னு க்ளாஸ் எடுக்கலாம்” கொஞ்சம் அதட்டலாக வந்தது கார்த்திகேயன் வார்த்தைகள்.
ரேவதிக்கு அந்த வார்த்தைகள் வந்த தொனியை விட, அதில் தொனித்த அக்கறைப் பிடித்தது. அவரது தோழி தவிர, வேறு யாரும் இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அக்கறை காண்பித்து அவர் பார்த்ததில்லை. அப்படியே அக்கறைக் காட்டியிருந்தாலும், அந்த அக்கறைக்குப் பின்னால் எப்போதும் எல்லாருக்கும் ஒரு தேவை இருந்திருக்கிறது. உண்மையில் கார்த்திகேயனை நல்ல நண்பனாக உணர்ந்தார் ரேவதி.
கார்த்திகேயன் சூப்’பைக் குடித்து முடிக்க, ஆனந்தனிடமிருந்து அழைப்பு வந்தது.
“இதோ என் கவலை கூப்பிட்டாச்சு” கிண்டலாக சொன்ன கார்த்திகேயனை முறைத்தார் ரேவதி.
“சொல்லுடா” என்றிட
“மழை வர மாதிரி இருக்கு. இன்னும் வீட்டுக்குப் போகலன்னு முத்து மாமா சொன்னார், க்ளாஸ் முடிஞ்சு எவ்வளவு நேரமாகுது? எங்க இருக்கீங்கப்பா?” என்று அதட்டலாகக் கேட்டான் ஆனந்தன்.
எப்போது இந்த பிள்ளைகள் வளர்கிறார்கள் என்றே தெரியவில்லை. சட்டென்று வளர்ந்து வளர்த்தவர்களைக் கேள்வி கேட்கிறார்கள். அதில் பெருமையும், சுணக்கமும் பெற்றோர்களுக்குச் சேர்ந்தே வருகிறது, குழந்தையாகவே பார்க்கும் அவர்களின் பண்பு. வளர்ந்துவிட்டேன் என்று உணர்த்தும் அவர்களின் வயதும் வார்த்தைகளும் bittersweet! அதே எண்ணத்தோடு கார்த்திகேயன்,
“டேய் நான் ஒன்னும் குழந்தை இல்லை. வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். நான் ரேவதி மிஸ்’கூடத்தான் பேசிட்டு இருக்கேன்” என்றார்.
“மிஸ்ஸும் கூட இருந்தா அவங்களையும் நம்ம வீட்டுக்குக் கூப்பிடுங்க” என்று கத்தி சொன்னவன், ‘எல்லாம் நான் சொல்லித்தரணும், மேனர்ஸ் தெரியல’ என்று முணுமுணுக்க
“எனக்குத் தெரியும். வேணும்னா நீ பேசு” என்றார்.
“உங்ககிட்ட பேசணுமாம்” என்றதும் ரேவதியும் புன்னகையோடு பேச கை நீட்ட,
“அவன் வெயிட் பண்ணுவான். சூப்பைக் குடிங்க” என்றார் அழுத்தமாக. ரேவதி சட்டென்று ஒரு பார்வை பார்த்தவர் சூப்பைக் குடித்தார். அவர் வேகமாகக் குடித்துவிட்டு ஆனந்தனிடம் பேச கை நீட்ட, அலைப்பேசியை நீட்டினார் கார்த்திகேயன். அவர்கள் பேசட்டும் என்று கொஞ்சம் தள்ளி அவர் கார் மீது சாய்ந்து நின்றார்.
ஆனந்தன் ரேவதியை வீட்டுக்கு வர சொல்லி அழைக்க, அவர் மறுத்தார்.
“அப்போ என் பர்த்டே அன்னிக்கு நீங்க வரணும்” என்றான் உரிமையாக. ரேவதி ஆனந்தனின் பிறந்த நாள் என்றதும் மகிழ்ச்சியாக அதைக் குறித்து விசாரிக்க, அவன் பிறந்த நாள் அன்று வீடு வர சம்மதம் சொன்னார் ரேவதி.
கார்த்திகேயனின் கவனமெல்லாம் இப்போது ஆகாயத்தில் குவிந்தது. மழைக்கு முந்தைய வானம் அவருக்கு அவ்வளவு பிடிக்கும், மழை மழலை போல் தான் வரவை குளிர் காற்றைத் தூதனுப்பி சொல்வதாக நினைப்பார். எல்லாரையும் தன் வருகைக்கு எதிர்நோக்க வைத்து, எதிர்ப்பார்க்க வைக்கும் மழை. மழை வரப்போகும் அறிகுறியை ஆகாயம் பார்த்து அறிவது எத்தனை அலாதியான நிலை.
காற்றில் குளிர் பரவியிருக்க, மின்மினி பூச்சிகள் போல் மஞ்சள் வண்ணத்தில் பழுத்த இலைகள் உதிர்ந்து கீழேயும் காரின் மேலும் கார்த்திகேயன் மீதும் விழுந்தன. அவை காற்றோடு போராடி அங்குமிங்கும் மின்னின. மழையை சுமந்து நிற்கும் மாலைப்பொழுதுகள் மஞ்சிமம் கூடித் தெரிந்தன.
அவர் வானத்தைப் பார்த்து நிற்க, அதற்குள் மழைப் பேசத் தொடங்கிவிட்டது.
வீட்டிலிருந்த வாரிதி அன்று இரவு அவள் நிகழ்ச்சியில் மழையைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள். சட்டென்று கே.கே’வின் ‘மழையோடு பேச வேண்டும்’ கவிதை நினைவில் வர, புன்னகையோடு அவளும் ஜன்னல் வழி மழையைத் தொட்டு உணர்ந்தாள். அந்த கவிதையை ஆனந்தனுக்குப் பகிர தோன்ற, குறுஞ்செய்தியாக அதை அனுப்பினாள்.
‘மழையோடு பேச வேண்டும்’ என்ற வரிகள் வாரிதியிடமிருந்து செய்தியாக வந்து விழ, ஆனந்தனும் முகம் மலர, அவளுக்கு அதையே திரும்ப அனுப்பினான்.