வாரிதி வீட்டில் ஆனந்தன் கொடுத்த புத்தகத்தை எடுத்தாள். ஐந்து நிமிடங்கள் அலைபாய்ந்த மனது, அடுத்த ஏதோவொரு நொடியில் புத்தகத்துக்குள் புகுந்தது.
வாரிதி புத்தகத்தை எடுத்தவுடனே அதனை நுகர்ந்து அதன் வாசத்தை உள்ளிழுத்தாள். அது தந்த உணர்வினை விவரிக்க முடியவில்லை. வார்த்தைகளை நுகர்வது போல் ஒரு உணர்வு, அச்சொற்கள் சுவாசத்தில் கலந்த நிலை. அரை மணி நேரத்தில் தொண்ணூற்றாறவது பக்கத்தில் இருந்தாள் வாரிதி.
அப்புத்தகம் ‘I came upon a lighthouse’, நான் ஒரு கலங்கரை விளக்கத்தைக் கண்டபோது. ரத்தன் டாடா என்ற மனிதரின் வாழ்க்கையில் ஷாந்தனு என்ற சராசரி இளைஞன் எப்படி நுழைந்தான் என்ற நினைவுக்குறிப்பே. அவளுக்கு ஷாந்தனுவையும் தெரியாது, ரத்தன் டாடாவையும் தெரியாது. இருந்தும் அப்புத்தகம் சில நிமிடங்களில் அவளை அரவணைத்துக் கொண்டது.
இளைஞனாக ஷாந்தனு எதிர்கொண்ட தனிமையை வாசிக்கும்போது, அவளுக்குத் தன்னை யாரோ புரிந்துகொண்ட உணர்வு. புத்தகங்களை விட யாரும் அவளை புரிந்துகொண்டதில்லை! எங்கோ இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை வேறாக இருந்தாலும், சில உணர்வுகள் எப்படி ஒன்றாக இருக்கின்றன என்ற ஆச்சரியம் ஒவ்வொரு முறையும் வாரிதிக்குப் புத்தகம் படிக்கும்போதும் எழும்.
இன்றும் அப்படியே!
‘Look at the people closest to you, the most special ones that changed your lives, and see what beautiful sequence of coincidences had to take place for them to be in your life’ (உங்களுக்கு நெருக்கமான மனிதர்களைப் பாருங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றிய விசேஷமானவர்கள், எத்தனை அழகாய்த் தற்செயலாக உங்கள் வாழ்க்கையில் வந்திருப்பார்கள்?)
இவ்வரிகளைப் படிக்கும்போது அந்த புத்தகம் அவளிடம் வந்தது சேர்ந்ததே அழகான உணர்வாக இருந்தது. புத்தகத்தோடு அதனை அவளுக்குத் தந்தவனும் மனதில் உலா போனான்.
வாழ்க்கையில் வரும் மனிதர்கள் ஒவ்வொருவரும் அதிசயம், அவர்கள் தருவது அனுபவம்! ஏன் வந்தார்கள் என்ற கேள்வி விட்டுச்செல்லும்போது புரியலாம், இல்லை இருக்கும்போதே தெரியலாம். அறுபது வயது இடைவெளியில் நட்பு வருமா? ஷாந்தனுவுக்கும் ரத்தன் டாடாவுக்குமான நட்பு அப்படித்தான் வந்தது. ஒத்த சிந்தனை, ஒத்த ரசனை, ஒத்த நோக்கம் இதுதானே எப்போதும் எல்லாரையும் இணைக்கிறது.
இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஷாந்தனுக்கும் எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்த இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் சம்ராஜ்ஜியத்தின் தலைவனையும் இணைத்தது என்ன? வாயில்லா ஜீவனுகளுக்கான ஒரு எண்ணம்!
ஒரே ஒரு நல்லெண்ணம்!
மோட்டார் வாகனங்களில் குறுக்கே அடிப்பட்டு விழுகின்ற நாய்களின் நிலை ஷாந்தனுவை வருத்தியது. வருத்தத்தோடு அவன் நிற்கவில்லை. அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று யோசித்தான். தீடீரென சாலையின் குறுக்கே பிராணிகள் வரும்போது சட்டென்று வண்டியை நிறுத்த முடியாமல் கண நேரத்தில் விபத்துகள் நிகழ்கின்றன என்பதை ஷாந்தனுவும் அவன் குழுவும் அறிந்தனர். அதன் பின் வாகனங்கள் தொலைவில் வரும்போதே சாலைகளில் பிராணிகளின் நடமாட்டம் இருப்பதைத் தெரியப்படுத்தும் வகையில் industrial retro-reflective fabric(தொழில்துறை ரெட்ரோ-பிரதிபலிப்பு துணி) வகையிலான காலர்கள் செய்து அதனை பிராணிகளின் கழுத்தில் மாட்டிவிட்டால் போதும். கிட்டதட்ட ஐநூறு மீட்டர் தொலைவு வரை அவர்களின் நடமாட்டம் தெரியும். முடிந்தவரையில் விபத்துகளைத் தவிர்க்கலாம், அதுதான் Motopaws இன் பிறப்பு.
‘டிட்டோ’ மற்றும் ‘டாங்கோ’ என்று இரு நாய்களை வளர்க்கும் ரத்தன் டாட்டாவுக்கு ஷாந்தனுவின் அந்த எண்ணம் பிடித்தது. அவன் அவருக்குக் கடிதம் எழுத, புதிதாய் ஒரு அத்தியாயம் பிறக்கிறது. அவர்களுக்குள் இருந்த பெரிய தலைமுறை இடைவெளி, முதலில் நண்பராகப் பார்த்த ஒரு மனிதரை பின் அவனின் பாஸ்-ஆக பார்க்கும் நிலை. இரண்டுக்கும் இடையே இருமுக உணர்ச்சியில் அவன் தவித்தது என்று நகரும் நினைவுக்குறிப்பில் வாரிதியை மிகவும் தொட்டது ஷாந்தனு கார்னல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது எதிர்கொண்ட தனிமை.
இப்போது வாரிதி எதிர்கொள்கின்ற அதே உணர்வு. அவள் தனித்து இல்லை! அதே சமயம் அரவிந்தனைப் போல் அவளைப் புரிந்துகொள்ள யாருமில்லை. அவனிடம் உணர்ந்த அதே நட்பின் ஸ்பரிசம் வேறு யாரிடமும் கிட்டவில்லை. அப்படியான சமயங்களில் அவள் சரணாகதி புத்தகங்களே! புத்தகங்கள் அவளை எப்போதும் வந்தாலும், எக்கேள்வியும் கேட்காமல் அரவணைத்து விடும். அவளின் எண்ணமோ, இல்லை அவளை சுற்றியுள்ளவர்களையோ பிரதிபலிக்கின்ற புத்தகங்கள் அவளுக்கு நெருக்கமானவை.
‘He was largest part of my New York City story’
ஷாந்தனு ரத்தன் டாடாவை சந்திக்க நியு ஹார்க் நகரம் சென்றதைக் குறித்து இப்படி ஒரு வரி வரும். ஷாந்தனுவின் நியு யார்க் நகர கதைகள் ரத்தன் டாடாவை மையமாகக் கொண்டவை. அந்த வரிகளை ஆனந்தன் இளம் பச்சை நிறத்தில் தனிப்படுத்தி(Highlight) இருந்தான்.
நம்மைப் போலவே உலகைப் பார்க்கிறவர்களை நமக்குப் பிடிக்கிறது. நம்மைப் போலவே ஒரு புத்தகத்தை ஒருவர் பார்க்கும்போது, அந்த பார்வையும் புரிதலும் நமக்குத் தருகின்ற அலாதியுணர்வு நட்பின் துவக்கமாகிவிடும். ஒரே புத்தகத்தை வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையின் அனுபவங்கள் கொண்டு அதனை அவர்கள் பார்க்கும் விதமும், ஏற்கும் பார்வையும் மாறிடும்.
அரவிந்தன் வார்த்தைகள் அவள் காதில் ஒலித்தன.
“ஹே உனக்கும் அந்த லைன்ஸ் பிடிச்சதா? நீ ஹைலைட் பண்ணிருந்த அதே இடம் எனக்குப் பிடிச்சதுடி. பரவாயில்லையே உனக்கும் நல்ல ரசனை..” என்பான் கிண்டல் குரலில்.
முகம் காட்டாமல் எங்கோ ஏதோ ஒரு தேசத்தில் இருக்கின்ற ஒரு எழுத்தாளனின் கதாபாத்திரம் காட்டுகின்ற உணர்வு, அது தருகின்ற ஆறுதல் அது மிகுந்த அர்த்தமுள்ளது. வாரிதிக்கும் அரவிந்தனுக்குமான ரசனைகள் வேறு. அது எல்லாரோடும் எல்லா சமயங்களிலும் ஒத்துப்போகாது. அப்படியிருக்க, அவர்களைப் போலவே சிந்திக்கும் செயல்படுகின்ற ஒரு உண்மையான மனிதனையோ இல்லை கற்பனை சித்திரத்தையோ ஒரு புத்தகத்தில் காணும்போது அவர்களுக்கு அவர்களைப் போல ஒரு இணையைக் கண்ட இன்பம்.
முன்பெல்லாம் எதுவானாலும் பேச அரவிந்தன் இருந்தான், ஒரு புத்தகம் பற்றியோ பிடித்த பாடல் பற்றியோ பிடிக்காத உணவு பற்றியோ பேச அரவிந்தன் இருப்பான். இன்னதென்று இல்லாமல் பிரபஞ்சத்தின் கூரையில் இருக்கும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவனிடம் பேசலாம். அரவிந்தன் மருத்துவமனையில் இருந்த பொழுதுகளில் வாரிதி அவனுடனான இருக்க விரும்பி, பல நாட்கள் கல்லூரி சென்றதில்லை. ஒரு செமெஸ்டரையே அவள் விட்டாள். அவன் மரணத்திலிருந்து மீள்வதற்குள் அவளின் கல்லூரி படிப்பும் முடிந்து போக, நெருங்கி பழக யாரையும் அவள் அனுமதிக்கவில்லை.
எப்போதும் சோர்வும் சோகமும் யோசனையுமாக இருந்த வாரிதியிடம் பேசவும் யாருக்கும் விருப்பமில்லை. அச்சமயத்தில் அரவிந்தன் படித்து வைத்த, படிக்க விரும்பிய புத்தகங்களே வாரிதியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன, அவளும் அவ்வுலகில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.
வேலை, வீடு என்று வாழ்க்கை ஓடினாலும் கொஞ்சம் சோர்ந்தாலும் ஒரு புத்தகம் அவளை மீட்டுவிடும். புனையப்பட்ட ஒரு கதாபாத்திரமோ இல்லை நிஜமான மனிதர்களோ, வெவ்வேறு தேசத்தை சேர்ந்தவரோடு கூட அவளின் எண்ணங்கள் ஒன்றிபோகும்.
நான் தனியாக இல்லை. என் உணர்வுகள் போல உணரும் மனிதர்களும் இவ்வுலகில் உண்டு என்ற உணர்வினைப் புத்தகத்தைப் படித்தே அறிந்தாள் பாவை. ஆனந்தனுக்குப் பிடித்த அதே வரி அவளுக்கும் பிடித்தது. அரவிந்தன் இப்புத்தகத்தைப் படித்திருந்தால் அவனுக்கும் பிடித்திருக்கும் என்று நண்பனையும் நினைத்தாள்.
ஒரு நகரத்தின் கதை என்பது என்ன? அந்த நகரத்தில் வாழும் மனிதர்கள், அந்த நகரத்தில் நமக்குத் தெரிந்தவர்கள். அவர்கள்தானே நமக்கு நினைவில் நிற்பார்கள். அவர்களோடு அந்நகரில் நாம் காற்பதித்த தடங்கள் எப்போதும் காலத்தில் நிற்கும் தானே?
அரவிந்தனோடு போன இடங்கள், பகிர்ந்த பேச்சுகள் எல்லாம் காற்றில் இன்னும் கரைந்துதானே இருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் அவர்கள் நண்பர்கள் குழுவாக ஊட்டி சென்றனர். ஊட்டி ஊட்டிய உணர்வுகள் இன்னும் வாரிதியிடம் ஜில்லென இருந்தன. இப்படி புத்தகத்தில் இருந்த நினைவுகளோடு அவ்வப்போது வாரிதியின் நினைவுகளும் கலக்க, ஒருவழியாக படித்து முடித்தாள்.
புத்தகத்தைப் படித்து முடித்தவளுக்கு ஆனந்தனுக்குப் பதிலுக்கு எதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. தான் சோர்ந்து இருந்த பொழுதில் அவன் புத்தகம் கொடுத்தது பிடித்திருந்தது.
அந்த வாரம் உலா சென்றபோது வாரிதி கையில் ஆனந்தனுக்காக பூச்செடி இருந்தது.
புத்தகத்தை ஆனந்தனிடம் திருப்பிக் கொடுக்க,
“என் கிஃப்டா வச்சுக்கோ” என்றான்.
“நீங்க இப்படி சொல்லுவீங்கனு தெரியும்” என்று புன்னகத்த வாரிதி அவனிடம் கையில் இருந்த பூச்செடியை நீட்டினாள். அவள் உள்ளே நுழையும்போதே கண்டாலும், ஆனந்தனுக்கு அது அவனுக்கானது என்று தெரியவில்லை. பூ பூக்கும் முன்னே அந்த பூவின் வாசத்தை ஆனந்தனால் உணர முடிந்தது.
குண்டு மல்லி செடி.
“ஓஹ், வாரிதியோட பரிசா இல்லை கடவுளோட பரிசா?” என்று அவன் கேட்க, வாரிதிக்கு முதலில் புரியவில்லை. பின் அவளுக்குத் தெரிந்தது. பாரசீக(persian) மொழியில் மல்லிகையின் பெயர் யாஸ்மின், அதாவது கடவுளின் பரிசு.