“புத்தகத்துக்குப் பூச்செடி பதிலா?” ஆனந்தன் மிகுந்த கவனமாக அவளிடமிருந்து செடியை வாங்கிக்கொண்டான்.
“புத்தகத்தோட வாசம் எல்லாருக்கும் தெரியாது. பூ வாசம் எல்லாருக்கும் தெரியுமே? அதனால புத்தகத்துக்குப் பூச்செடி பதில் இல்லை.” என்ற வாரிதி
“அரவிந்தனோட ஹேபிட், என்னோட பத்தாவது பர்த்டேவுக்கு ரோஜா செடி வாங்கி கொடுத்தான். எனக்கு ரொம்ப சந்தோஷம். அதில இருந்து வருஷம் வருஷம் ஒரு செடி வாங்கி கொடுப்பான். நாங்க சொந்தமா வீடு வாங்கினதும் நான் வீட்டுக்கு முன்னாடி நிறைய செடி வச்சிட்டேன். அதுல நானும் அரவிந்தனும் சேர்ந்து வச்ச செடியும் நிறைய இருக்கு.”
“நல்ல கிஃப்ட். ஒரு உயிரைப் பரிசா கொடுக்கிறது. ப்யூட்டிஃபுல் இல்ல?” ஆனந்தன் அரவிந்தனை மெச்சியபடி சொல்ல, வாரிதியும் தலையசைத்தாள்.
“ஆனா அதை எல்லாருக்கும் கொடுக்கக் கூடாது. என் ஆபிஸ்ல என்னோட ஒரு அண்ணா வர்க் பண்றாங்க, அவங்களுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் செடி கொடுக்கிறது உங்களுக்குத்தான். புத்தகமோ பூச்செடியோ யார் நம்மை விட பத்திரமா வச்சுப்பாங்களோ அவங்களுக்குத்தான் கொடுக்கணும். எல்லாருக்கும் கொடுக்கக் கூடாது! அவங்களுக்குப் பிடிச்சதா கொடுக்கணும், நமக்குப் பிடிச்சதுனு சில பேருக்குப் புக்ஸ் கொடுத்து நான் பல்ப் வாங்கியிருக்கேன்” என்று சிரித்தாள்.
“கரெக்ட்தான்! நீ கவலைப்படாத. இப்போ பல்ப் வாங்கல” என்று ஆனந்தனும் சொல்ல, உலாவின் உள் பகுதியிலிருந்து கையில் கேன்வாஸ், பெயிண்ட் உடன் வந்தாள் இந்து.
“ஓஹ் இந்துவோட வந்தியா?” வாரிதியை ஆனந்தன் கேட்க,
“ஆமா, அவளுக்குக் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும் சொன்னா. நானும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். வாங்கிட்டு வரேன், கடவுளோட பரிசு பத்திரம்” என்று மீண்டும் சொல்லியவள் உலாவினுள் உலா போனாள்.
ஆனந்தன் பூச்செடியை பார்வையால் பருகி நிற்க, அவன் ஏகாந்தம் தடை செய்தாள் இந்து. வாரிதியிடம் ஏதோ சொல்லியவள் ஆனந்தனிடம் வந்தாள்.
“சொல்லுங்க இந்து, என்ன வேணும்?” என்று அவன் முன் வந்து நின்ற பெண்ணிடம் ஆனந்தன் கேட்க, இந்துவின் முகத்தில் ஒரு கலக்கம், எரிச்சல். ஏனோ வாரிதி ஆனந்தனுக்குப் பூச்செடி பரிசாய்த் தந்ததை எல்லாம் ஏற்கவே முடியவில்லை.
“இங்க பாருங்க, நீங்க வரு அக்கா கிட்ட ஓவர் அட்வாண்டேஜ் எடுக்க ட்ரை பண்ணாதீங்க. அவங்களுக்கு எப்பவும் நீங்க பெஸ்ட் ப்ரண்ட் எல்லாம் ஆக முடியாது. நீங்க அவங்களோட பேசுறது எனக்குப் பிடிக்கல.” என்று அந்த குட்டிப்பெண் தனக்கு உத்தரவு போட, ஆனந்தனுக்கு எரிச்சல்தான் மிகுதியாக வந்தது.
“ஓஹ், அப்போ நீயே உன் வருக்கா கிட்ட என்னோட பேச வேண்டாம் சொல்ல வேண்டிதானே?” நக்கலாகக் கேட்டான் ஆனந்தன்.
“தீப்பெட்டி சைஸ்’ல இருந்து எனக்கு ஆர்டர் போடுறியா? என்ன சொன்ன உங்க வருக்காவுக்கு நான் பெஸ்ட் ப்ரண்ட் ஆக முடியாதா? சேலஞ்ச் பண்றியா? நான் உன் அக்காவோட பெஸ்ட் ப்ரண்ட் ஆகி காட்டவா?” ஆனந்தன் சீண்டலாகக் கேட்டான். இந்துவுக்குக் கோபம் வந்தது. அகராதியில் இல்லா ஒரு அலைபாய்தல் அவளிடம். தன் அண்ணனின் இடத்தில் வாரிதி ஆனந்தனை வைக்கிறாளோ என்ற பயம், அவளை அப்படிப் பேச தூண்டியது.
“அப்படியெல்லாம் வருக்கா கூட யாரும் ப்ரண்ட் ஆக முடியாது. சேலஞ்ச்” என்றாள் இந்துவும்.
வாரிதியோடு பேசியதில் கிட்டியிருந்த வாசமான உணர்வினை, இந்துவின் பேச்சு களவாடியது போல் ஒரு கசப்பான உணர்வு ஆனந்தனிடம். இந்துவை வாரிதி அழைக்கவும் அவள் போக, ஆனந்தன் வாரிதி கொடுத்த பூச்செடியைத் திரும்பிப் பார்த்தான்.
இன்னும் பூ பூக்காத செடி அவனைக் கண்டு புன்னகைத்தது. பூ என்றாலே வாசத்தை மனம் உணரும் போது வரும் உவகைக்கு என்ன உவமை சொல்லி விளக்குவது?
பூச்செடியைப் பார்க்கவும் அப்பா ரேவதி மிஸ்ஸுக்கும் பூச்செடி கொடுத்தார் என்று நினைவில் வர, அன்றைய நினைவுகளை அசைப்போட்டான். ரேவதியை வீட்டில் விட்டு ஆனந்தன் வீடு வரவும்,
“என்ன கார்த்திக், பூச்செடியெல்லாம் பரிசா தரீங்க?” என்று அப்பாவின் தோளில் கைப்போட்டுக் கொண்டு கிண்டலாகக் கேட்டான்.
“வேற என்ன கொடுக்க சொல்ற? அவங்களுக்குச் சாப்பிட என்ன பிடிக்கும் தெரியாது. லேடீஸ் யூஸ் பண்ற பொருள் ஒன்னும் நமக்கு வாங்க தெரியாது. செடி கொடுத்தா அவங்களுக்கும் பொழுது போகுமே.” என்று கார்த்திகேயன் சொல்லிச் சென்றார்.
அதில் நியாயமிருந்த போதிலும் நேயமிருந்ததாகத்(நேசம்) தெரியவில்லை. கார்த்திகேயன் அப்படி சொல்லிவிட்டு சென்றதும் ஆனந்தனுக்கு யோசனைகள். அப்பா அப்போது எனக்காக மட்டுமே ரேவதி மிஸ்ஸோடு பேசுகிறாரோ என்று தோன்றியது. அதே நேரம் அவரின் யோகா வகுப்பு, ரேவதி மிஸ் இயல்பாகப் பேசுவது எல்லாம் கண்டவனுக்குக் குழப்பமாக இருந்தாலும், மாற்றத்திற்கான நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான்.
வாரிதி கொடுத்த செடியை வீட்டில் எங்கு வைப்பது என்று யோசனையில் ஆனந்தன் நின்றிருக்க,
“ஆனந்த், பில் போடுங்க” என்று வந்தாள் வாரிதி.
அன்று வாரிதி நிறைய வாங்கியிருந்தாள். நோட்டு புத்தகங்கள், பெயிண்ட், ப்ரஷ், கேன்வாஸ், மண்டாலா நோட் என்று நிறைய இந்துவுக்காக வாங்கியிருந்தாள். இந்து வாரிதி பக்கமாக வந்து நின்றவள் ஆனந்தனை வெறுப்பாக பார்த்தாலே தவிர பேசவில்லை. வாரிதி அவனிடம் புன்னகையோடு விடைப்பெற்றுக்கொண்டாள்.
**********
“பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்”
பேட்மிண்டன் க்ளாஸ் முடிந்து வந்த கார்த்திகேயன் வியர்வை சொட்ட சொட்ட புன்னகையோடு தன்னருகே இருந்த ரேவதியிடம் பாடி காட்டினார். ரேவதி இப்போதெல்லாம் சுடிதார் அணிய ஆரம்பித்திருந்தார். யோகா செய்ய அதுவே வசதியாக இருக்க, கார்த்திகேயன் பார்வையில் அது விழுந்தது. இயல்பான ஒரு ஆச்சரியத்தோடு அதனை கடந்தவர், வகுப்பு முடியவும் உற்சாகமாகப் பாடினார்.
“இந்த பாட்டுதான் அன்னிக்கு ஆனந்தன் வாசிச்சது ரேவதி” என்று கண்டுபிடித்த குஷியோடு அவர் சொல்ல,
சட்டென்று முதலில் சொல்லிவிட்டாலும், இப்போது தயங்கினார். “வேண்டாம் விடுங்க” என்று மறுக்க
“நம்ம ப்ரண்ட்ஸ்தானே? சும்மா சொல்லுங்க” என்றிட
ரேவதியும், “கழுதைக்கும் உங்களுக்கும் போட்டி வச்சா கழுத ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கும்னு சொன்னான் இல்லை. அது உண்மைனு தெரிஞ்சது” என்று வேறு பக்கம் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்போடு ரேவதி சொன்னார்.
கார்த்திகேயன் ஒரு நொடி அதிர்ந்தார். பின் அவரும் சிரித்துவிட்டார். அந்த சிரிப்பு ரேவதியைக் கார்த்திகேயன் பக்கம் பார்க்க வைத்தது.
“எப்படி பாடுறேனா முக்கியம். எப்படியோ கண்டுபிடிச்சிட்டன்ல.” பெருமையாக அவரின் வெள்ளை நிற டீஷர்ட் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். ரேவதிக்குச் சிரிப்பு வந்தது. கார்த்திகேயன் தண்ணீர் குடித்தவர்,
“எப்படித்தான் இந்த யோகா எல்லாம் பண்றீங்களோ ரேவதி? எனக்கெல்லாம் சும்மா ரொம்ப நேரம் உட்கார முடியல. நானும் ட்ரை பண்ணி பார்த்துட்டு அதுக்காகதான் இப்படி ஸ்போர்ட்ஸ் பக்கம் வந்துட்டேன்.” என்றதும்
“என்னது சும்மா உட்காரோமா?” ரேவதி முறைக்க,
“அப்படியில்லைமா. அந்த இன்ஸ்ட்ரக்டர் சொல்லி ஒவ்வொன்னா செஞ்சு. அது எனக்கு செம போர், கொஞ்சம் இப்படி பிசிகல் ஆக்டிவிட்டியும் பண்றது நல்லது. ஸ்பிலிட் செகண்ட் டிஷிசன் எடுக்கணும், சோ டக்கு டக்குனு எதையும் யோசிக்காம விளையாடலாம்” என்று சொல்ல, கார்த்திகேயனை ரேவதிக்குப் புரிந்தது.
மனைவியைப் பிரிந்து, மகனுடன் தனியாக ஒரு வாழ்க்கை. அவரின் முடிவுகள் எல்லாம் அவர் வசம். ஆகையால் யார் பேச்சையும் கேட்க விருப்பமில்லை என்று நினைத்தார். பின் நினைவு வந்தவராக, அவரின் கைப்பையைத் துழாவிய ரேவதி,
“இந்தாங்க” என்று ஒரு டிபன் பாக்ஸை நீட்டினார்.
“என்ன?” என்றபடி கார்த்திகேயன் திறக்க பார்க்க,
“ரவா லட்டு, ஆனந்தனுக்கு” என்றார். கார்த்திகேயன் திறக்காமல் அப்படியே விட,
கார்த்திகேயன் வீடு சென்றதும் ஆனந்தனிடம் அந்த ரவா லட்டைக் கொடுக்க, மகன் விரும்பி சாப்பிடுவதைக் கண்ட கார்த்திகேயன், அந்த வார இறுதியில் யூடூபில் பார்த்து அவரும் ரவா லட்டு செய்ய, லட்டு வரவே இல்லை. முத்து செய்கிறேன் என்றதற்கும் விடவில்லை. கார்த்திகேயன் சில நேரம் அப்படித்தான், ஆனந்தனுக்கு எதாவது பிடிக்கிறதென்றால் அவராகவே கற்று செய்ய ஆரம்பித்துவிடுவார்.
ரவா லட்டு பதமாக வராமல் போகவும், ரேவதியிடமே கேட்டார்.
“அதுக்கென்ன கார்த்திகேயன்? நான் நாளைக்குச் செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்றதும் கார்த்திகேயனுக்குக் கோபம் வந்தது.
“நீங்க எப்படி செய்றதுனு எனக்கு சொல்லுங்க ரேவதி. நானே செய்யத்தானே கேட்கிறேன்” என்றார் கொஞ்சம் எரிச்சல் எட்டிப்பார்த்த குரலில். ரேவதிக்கு அது புரிந்தாலும் கோபமில்லை. அவர் செய்முறையை ஆடியோவாக அனுப்பி வைத்தார். கார்த்திகேயனும் அப்படியே செய்ய, ஆனந்தன் உண்டுவிட்டு
“நல்லாயிருக்குப்பா, ஆனா ரேவதி மா செய்ற மாதிரி இல்லை” என்று சொல்லி அவரின் பொறாமையைத் தூண்டிவிட்டான்.
ரேவதிக்கோ கார்த்திகேயன் ஆனந்தனுக்காக இப்போதும் எடுக்கும் பிரியத்தின் பிரயர்த்தனங்கள் பிடித்தது. ஆனந்தனின் அப்பாவாக கார்த்திகேயனை அவருக்குப் பிடித்தது.
அன்று காலை ரேவதியை வெளியே கொட்டிய மழை எழுப்பியது. ஆனால் மழையை விட ரேவதியின் மனதை நனைத்தது அவர் வீட்டில் பூத்திருந்த சிவப்பு ரோஜா.
புத்தகங்கள், பூச்செடிகள், புதுபாடல்கள் எல்லாம் நமக்கு அறிமுகம் செய்கிறவர்கள் அவர்களின் ஞாபகங்களையும் தந்து போகிறார்கள். கொஞ்சம் புன்னகையும். அப்படித்தான் பூத்திருந்த ரோஜாவைக் காணவும் ரேவதிக்கு அத்தனை உற்சாகம்.
அந்த பூ செடியை அவர் அத்தனை கவனமாக வளர்த்தார். இன்று அதில் முதல் பூ பூத்திருக்க, மழையில் நனைந்த ரோஜாவை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை.