ஆனந்தனின் ஆதர்சம் அவன் அப்பாதான்! கார்த்திகேயன் அவர் பெயருக்கு ஏற்ப மகன் வாழ்வில் ஒரு நட்சத்திரம். ஆனந்தன் கல்லூரி செல்லும்வரை அப்பாவின் மீது உரிமை, அன்பு, உடைமைத்தனமெல்லாம் இருந்தது. என் அப்பா என்ற பெருமிதமிருந்தது. கல்லூரி, வேலை என்றான பின் அப்பாவின் மீது மரியாதை மிகுந்தது. அப்பாவின் மீதிருந்த அன்பு மிகைவாதமாக மாறியது.
அவரின் நேரம், அதை அவனுக்காக அதிகம் செலவிட்ட மனிதர். வேலை முடிந்த கணம் நண்பர்களோ, கேளிக்கைகளோ இன்றி அவனோடு இருப்பார். எதற்குமே அவன் ஏங்கிட கூடாதென்ற எண்ணம். அதையும் மீறி அத்தனை உறவாக ஆனந்தனுக்கு அவர் மட்டுமே இருந்தார்.
கார்த்திகேயன் எதையாவது செய்யாதே என்றால் காரண காரியத்தோடு கூடிய கண்டிப்பாக இருக்கும். பதின்ம வயதில் அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இயல்பாக வருகின்ற இடைவெளி கூட அவர்களிடமில்லை, அப்போதுதான் இன்னும் புரிதல் பெருகியது.
ஆனந்தன் கல்லூரி, வேலை என்று சென்ற பின் அவனுக்கென நண்பர்கள் என்று நேரம் செலவழித்த போது, ஒரு பக்கம் கார்த்திகேயனை தனிமையில் விடுகிறோம் என்று உறுத்தும். ஆனால் கார்த்திகேயன் கொஞ்சமும் அதனை காட்டியதில்லை, மகனுக்கான நேரத்தில் அவருக்கென எதையும் செய்துகொள்ள மாட்டார். அவன் வாழ்க்கையை வெறுத்து, தனித்து, உடைந்து, உதற நினைத்த கணத்தில் அப்பா மட்டுமே அவன் வாழ நினைத்த, நினைக்கும் ஒரே காரணம். அவரின்றி ஆனந்தனில்லை, அவனிடம் ஆனந்தமுமில்லை!
ஆனந்தனை திருமணம் செய்துகொள்ள சொல்லி கார்த்திகேயன் வற்புறுத்தியபோது, ஆனந்தனாகவே வாய்விட்டான்.
“ஒரு துணை எவ்வளவு முக்கியம் சொல்றீங்களே, நீங்க உங்களுக்கு ஒரு துணை தேடிக்கிட்டாங்களாப்பா?” என்று ஆனந்தன் கேட்க
“எனக்கு நீ இருக்கியே டா” என்றார் சட்டென.
அதையே அவனும் பதிலாக சொல்ல,
“எனக்கு வயசாகுது ஆனந்தா, எனக்கு அப்புறம் உன்னை யார் பார்ப்பா?” கடினமான வார்த்தைகள் என்றாலும் அதனை கார்த்திகேயன் சொல்ல, மகன் அவரை விட எல்லாவற்றிலும் முன்னே திகழ்ந்தான்.
“ஆனந்த்!!!!!!!!!!!! ஷட் அப்” என்று கத்திவிட்டார் கார்த்திகேயன். அவரால் அதற்குமேல் பேசவே முடியவில்லை. கண்களில் வெள்ளம் மழைக்கான சிறு அறிகுறியுமின்றி பெருக்கெடுக்க, அறைக்குள் போய் அடைந்துகொண்டார்.
“அறிவிருக்கா தம்பி உனக்கு?” என்று முத்து மாமா கத்த
“ப்ச், மாமா. உண்மையைத்தானே சொன்னேன்.” என்ற ஆனந்தனின் பேச்சுக்கு
“இப்படியே பேசின தோசைக்கரண்டில சூடு வச்சிருவேன். என்ன பேசுற நீ? எங்களுக்கு அப்புறமும் நீ நல்லாயிருக்கணும்னு நாங்க நினைக்க மாட்டோமா? உனக்காக வாழ்ற மனுஷன் கிட்ட இப்படி பேசி அவரை நோகடிக்காதடா” என்று திட்டிவிட்டு அவர் சமையலறைக்குள் சென்றார்.
ஆனந்தன் அப்படியே ஹாலிலிருந்த சோஃபாவில் படுத்துவிட்டான். அப்பா அவனை எதற்குமே கட்டாயப்படுத்தியதில்லை, திருமணம், காதல் எல்லாம் அவன் இனி செய்துகொள்ளவே மாட்டான் என்ற பயம் பிறக்கவும் தான், அவனை ஓராண்டாக கட்டாயப்படுத்துகிறார். ஆனந்தன் அப்படி பேசிவிட, கார்த்திகேயன் வெகுவாகக் காயப்பட்டுப்போனார். ஒரு வாரம் ஆனந்தனிடம் முகம் காட்டவில்லை, ஆனந்தன் நொந்து போனான். காலில் விழுந்து, கட்டிப்பிடித்து அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆனது.
அப்போது அப்பாவும் மகனும் உடன்படிக்கை செய்தனர்.
“அப்பா! நீ இருக்கவரைக்கும் உனக்கு ஒரு துணை வேணும். இல்லைன்னா நான் கல்யாணம் பண்ண மாட்டேன்”
“டேய் இடியட்! இந்த வயசுக்கு மேல எனக்கு யார் பொண்ணு கொடுப்பா? கல்யாணம் பண்ணி என்ன செய்ய போறேன்? ஒருவாட்டி கிடைச்ச அனுபவமே போதும். நான் கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டேன்” என்றார் எரிச்சலாக. அவருக்கு இத்தனை வருடத்தில் எந்த பெண்ணின் மீதும் ஆர்வம் வந்ததில்லை, அப்பா, அம்மா மறுமணம் செய்ய சொன்னபோதும் மறுத்துவிட்டார்.
ஆனந்தனைப் பிடிப்பாகக் கொண்டே வாழ்க்கையைக் கடத்தியவருக்கு வேறு யாரும் துணையாகத் தேவைப்படவில்லை. ஆனந்தன் வேலை விஷயமாக சென்றபோதுதான் அவர் தனிமையுணர்ந்தார், அப்போதும் கூட வேலை, எழுத்து, நீச்சல், பேட்மிண்டன் பயிற்சி என்று நேரத்துக்குள் தன்னை தொலைத்துக்கொண்டார்.
“அப்போ நானும் அப்படி சொல்லவா? உங்களோட பிடிக்காத அனுபவம் பிடிச்சதை ஈசியா காட்டிக்கொடுக்கும்பா, சல்மான் கானை விட உனக்கு வயசு கம்மிப்பா, நம்ம ராகுல் மாதிரி நீயும் ஜம்முன்னு இருக்க, அவரை விட உனக்கு ஒரு வயசு கம்மி வேற, அவரே எலிஜிபில் பேச்சுலர் சொல்றாங்க. உனக்கென்ன? என்ன அப்படி காதலா வாழ்ந்துட்ட? என்னமோ மாஜி மனைவியை மறக்கவே முடியாம ஒரு வாழ்க்கை வாழ்ற மாதிரி என்ன பேச்சு? லவ் ஷுட் கம் இன் ரைட் டைம், வித் ரைட் பெர்சன், அட் ரைட் ப்ளேஸ்பா. இதுல ஒன்னு தப்பானாலும் காதலே தப்பாகிடும்” ஆனந்தன் உணர்ந்து சொன்னான்.
“இடியட்! இப்போ உனக்கென்னடா?” என்று எரிச்சலாகக் கேட்டார் கார்த்திகேயன். எத்தனை அறிவாக தன்னை திருமணம் செய்ய சொல்லி, பேச்சினை திசைத்திருப்பி விட்டான் என்று மனதில் நினைத்து மகன் முகம் பார்த்தார்.
“நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ, நானும் பண்ணிக்கிறேன்” என்றான் ஆனந்தன்.
ஆனந்தனுக்கு அப்பாவின் திருமண அனுபவம் தித்திக்காத ஒன்று என்று தெரியும், அதில் தித்தித்த ஒன்று அவன் மட்டுமே! ஆகையால் மீண்டும் நெருப்பில் கால் வைக்க மாட்டார் என்று புரிந்தாலும், ஒருவேளை சரியான துணை, இந்த நேரத்தில் அவருக்கு அமைந்தாலும் ஆனந்தனுக்கு ஆனந்தமே!
அப்படித்தான் அவர்களின் ஒப்பந்தம் இருக்க, இன்று அப்பா பெண் பார்க்க போகிறேன் என்றதும் அதிர்ந்தாலும் மீண்டான். அப்பா திருமணம் செய்தால், அவனும் செய்ய வேண்டும். உயிரைக் கேட்டாலும் அப்பாவிற்காக கொடுப்பவனால் உள்ளத்தை ஒருத்தியிடம் கொடுக்க மனமில்லை.
கொடுப்பதற்கு அவன் மனம் அவனிடமில்லை!
கார்த்திகேயன் அவன் கேட்கவும் அமைதியாக இருக்க, அப்பாவின் பக்கம் வந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
“சொல்லுங்க, யாரைப் பார்க்க போறோம்? எங்க பார்த்தீங்க? எப்படி தெரியும்?” விசாரிக்கத் துவங்க அவரும் ஒரு களவளாவல் செயலி(Dating App) பெயரை சொல்லி அது ஒற்றை பெற்றோர்(Single Parent) பயன்படுத்த வசதியானது என்றார்.
“வாட் டேட்டிங் ஆப் அஹ்? அறிவிருக்கா பா? டேட்டிங் ஆப் அஹ் பார்த்து ஒருத்தங்களை மீட் பண்ண போறோமா? எனக்கு வர கோவத்துக்கு? என்ன தெரியும் இண்டர்னெட் பத்தி? டெக்னாலஜி டெரரிஸம் அளவு மோசம். சைபர் டெரரரிஸம் தெரியுமா?” என்று ஆனந்தன் பதட்டமாகி எழுந்து கத்தத் தொடங்கிவிட்டான்.
“இடியட்! காது பக்கத்துல கத்தாதடா!” என்ற கார்த்திகேயன்
“அந்த ஆஃப் ரொம்ப ஸேஃப்.”
“வாட் தி ஹெல்?” என்ற ஆனந்தனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
“எப்படியெல்லாம் டேட்டிங் ஆப்ஸ்ல மிஸ் யூஸ் நடக்கும் தெரியுமா? பசங்க பொண்ணுங்களைப் ஃபோட்டோ வச்சு மிரட்டினதெல்லாம் போய், பொண்ணுங்களே அவங்களை போட்டோ எடுத்து சொசைட்டில நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்கவங்களுக்கு அனுப்பி காசு கறக்குறது, மிரட்டுறதெல்லாம் நியுஸ்ல பார்க்கல. காலையில ரெண்டு மூணு சேனல்ல மாத்தி மாத்தி நியுஸ்தானே பார்க்குறீங்க? சுகர் டாடி, ஹனி ட்ராப் அப்படின்னா என்னனு தெரியுமா? அதுவும் நீங்க ஒரு சயிண்டிஸ்ட், இப்படித்தான் இஸ்ரோ சயிண்ட்டிஸ்ட் ஒருத்தருக்கு நடந்தது. தெரியுமா?”
அப்பாவின் பெயருக்கு ஏதேனும் களங்கம் வந்துவிடுமோ என்ற அக்கறை அவனை நிலைகொள்ளாமல் செய்தது.
“எல்லாம் தெரியும்டா எனக்கு. நான் அந்த ஆப்ல பேசினது ஒரே ஒரு ஆள், அவங்களுக்கு நாற்பத்தாறு வயசு. நானும் பயந்துட்டுதான் இன்ஸ்டால் பண்ணினேன், என் நல்ல நேரம் முதல்ல பார்த்தவங்களே தமிழ்..”
“முகம் பார்க்காம பேசுறீங்களா? டேட்டிங் கேட்குதா இந்த வயசுல? வயசானவங்களையும் வெஸ்டர்ன் கல்ச்சர் கெடுத்து வச்சிருக்கு” என்று திட்ட
“அப்புறம் எங்கப்பாம்மாவா இந்த வயசுல எனக்குப் பொண்ணு பார்ப்பாங்க? இல்லை மேட்ரிமோனி வெப்சைட்ல மோசடியெல்லாம் நடக்குறது இல்லையா? அப்படி என்னை மிஸ்யூஸ் பண்ண நினைச்சா, நான் டைரக்டா சைபர் க்ரைம் போயிருக்க போறேன். அப்போ நீ சும்மா சொன்னியா? எனக்கு நீயாச்சும் ஒரு பொண்ணு பார்த்தியா? அப்புறம் டேட்டிங் சங்க காலத்துல இருந்தே இருக்குடா” என்றதும் ஆனந்தன் முறைத்தபடி கால் நீட்டி உட்கார்ந்திருந்த கார்த்திகேயனின் காலடியில் அமர்ந்தான்.
“உண்மைடா! களவளாவல் தெரியுமா? அதாவது களவு அளாவல், சங்க காலத்துல காதலை களவொழுக்கம் கற்பொழுக்கம்னு பிரிச்சாங்க, தெரியாம சைட் அடிக்கிறது, தலைவன் தலைவி மீட் பண்ணி பேசிக்கிறது எல்லாம் களவொழுக்கம், ஊரைக் கூட்டி கல்யாணம் பண்றதெல்லாம் கற்பொழுக்கம். ‘டேட்டிங்’ அப்படினாலே என்னமோ தப்பாவே பார்க்காதீங்கடா, வெஸ்டர்ன் கல்ச்சர்ல ரெண்டு பேர், பேசி, பழகி, ஒருத்தர் விருப்பம் தெரிஞ்சு பிடிச்சா மேற்கொண்டு பழகி, நல்ல விஷயம்டா அது. டேட்டிங் இஸ் நாட் மேட்டிங் டா” என்றார் கார்த்திகேயன் தெளிவாக.
மழை வெளியே கொட்டத்தொடங்கியிருக்க, ஆனந்தன் மழைக்காற்று அறைக்குள் நுழைய வேண்டி, ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைக்க, அறைக்குள் குளிர் மெல்ல பரவியது. மழை மந்தகாசமாக ஒரு புன்னகையையும் ஆனந்தனின் முகத்தில் மெல்ல கொண்டு வர, அப்பாவின் பேச்சு அதனை நீட்டித்தது.
சண்டையில் தொடங்கி சங்க காலம் வரை சென்ற பேச்சின் திசையை நினைத்தே அச்சிரிப்பு. உலகில் பேச, நம் உள்ளத்தைப் பேச ஒருவர் மட்டும் இருக்கையில், அதுவும் அவர்களோடு உளமாற பேச முடியுமெனில், உலகத்தைப் பற்றி அத்தனையும் அவர்களிடம் பேசிவிடுகிறோம் என்று உணர்ந்தான். அப்பா பேச்சின் அர்த்தமும் விளங்க,
“சரி, உங்க தலைவி கூட எப்படி போகுது களவு?” ஒற்றைக் கால் மெத்தையில் மடக்கி, ஒரு கால் தரையில் ஊன்றியபடி கார்த்திகேயனின் முகத்தை கவனித்தபடி கேட்டான் ஆனந்தன். அப்பாவை இத்தனை வருடங்களாகப் பார்க்கிறவனுக்கு, கார்த்திகேயனுக்குக் காதல் வந்தது போல் எல்லாம் தெரியவில்லை. இருந்தும் என்னதான் சொல்கிறார் என்று பார்க்கக் கேட்டான்.