புறமுதுகு காட்டி நின்னுட்டு இருந்தா! பார்த்ததுமே, முழங்காலைத் தாண்டி அலை அலையா வளர்ந்திருந்த அவளோட கருங்கூந்தல் தான் என் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துச்சு.
ஆற்றின் நீரோட்டத்தால வரி வரியாக் கருமணல் படிஞ்சிருக்குறதைப் போல அடர்த்தியா, மனசைக் கட்டியிழுக்குற மாதிரி அவ்ளோ அழகா இருந்துது. அந்த கூந்தல் அவளது தனித்துவமான அடையாளம். பார்த்த கணத்துல என்னைக் கட்டிப்போட்ட ஆயுதம்.
கரண்டைக் காலுக்கு மேலால சேலையை உயர்த்திக் கட்டி, முந்தானையை முறுக்கி இடுப்போரம் சொருகி இருந்தா! கதிரொளி பட்டு இடுப்புல ஏதோ ஒன்னு மினுமினுக்குறது தெரிஞ்சுது. அநேகமா அது பெல்லி செயினா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
திடீர்னு மோகனானு ஒரு அசரீரி! அப்போ தான் அவ பேர் என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். மோனானு செல்லமா கூப்பிட்டுக்கலாமேனு எனக்கு குஷியோ குஷி.
அழைப்பு கேட்டதும் சட்டுனு திடுக்கிட்டுத் திரும்பினா அவ! அவளோட பக்கத் தோற்றம் எனக்கு எதையோ நினைவூட்டிச்சு.
ம்ம், ஈஸியா சொல்லனும்னா நாட்டியம் ஆடற கிராமத்து பொண்ணு போல அம்சமா, அழகா இருந்தா. அருகுல இருந்த கல்லு மேல இளைப்பாறிக் கொண்டிருந்த வீணை, அவ ஆடலழகியாவோ, பாடலரசியாவோ இருப்பாங்குற என்னோட சந்தேகத்தை உறுதிப்படுத்திச்சு.
ப்பா, என்னா அழகுடா! என்னோட ரசனையெல்லாம் அவ காலுக்கு கீழ வெட்கமே இல்லாம மண்டியிட்டு விழுந்திடுச்சு. ஒரே நாள்ல நான் அவளுக்கு பெரிய ரசிகனாகிட்டேன்.
மாயக்காரி, என்னை வசியம் செய்து மொத்தமா மயக்கிட்டா..’
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
“எங்க அப்பாவுக்கு தமிழ் மீதான பற்று ரொம்ப அதிகம்! இசைனா மோகம்! ரெண்டையும் சேர்த்து என் தங்கச்சிக்கு தமிழிசைனு பேர் வைச்சிட்டாரு. அவருக்கு புடிச்சதுல இசையை அவ தேர்ந்தெடுக்க, தமிழை நான் எடுத்துக்கிட்டேன்!” தான் ஒரு தமிழ் வாத்தியார் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தான், அறிவழகன்.
ஏதோவொரு ‘கருத்தரங்கு’ விடயமாக மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றிருந்த நேரத்தில் தான், கல்லூரியில் இளஞ்செழியனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அவனுக்கு.
முதல் சந்திப்பிலே இருவரும் நட்புக்கரம் நீட்டி நெருங்கிய நண்பர்களாகிப் போனது கூட விதியின் செயலாக இருக்குமே அன்றி, வேறில்லை.
அவன் கூறியதை உள்வாங்கியபடி தேநீரில் ஒரு மிடறு இழுத்து விழுங்கிய செழியன், யோசனை தீராமலே, “இன்ட்ரெஸ்ட்டிங்!” என முணுமுணுக்க,
“அவருக்கு எப்போவுமே, தமிழையும் இசையையும் மாமா அவளுக்கே கொடுத்துட்டாருங்குற ஆதங்கம் இருந்துட்டே இருக்கும்ணா. அதனால தான், வாய் ஓயாம வீட்டுக்கு யார் வந்தாலும் முதல் விஷயமா இதைப் போட்டு உடைக்கிறாரு..” என நேரம் பார்த்து கணவனை வாரிய கார்த்திகா,
“இல்லையாங்க?” என அப்பிராணியாய் அவன் முகம் நோக்க, வெளிப்படையாகவே முன்நெற்றியில் அறைந்து கொண்டான், அறிவு.
‘அப்போ அந்த பொண்ணு யாரு?’ என ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த செழியன், கார்த்திகாவின் கேலி கண்டு, “இருந்தாலும் நீ அறிவை இந்தளவுக்கு கலாய்க்க கூடாதும்மா..” என மடக்க,
“அவர் எப்போ தான் என்னை விட்டு வைச்சிருக்காருனு கேளுங்களேன்..” என தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க விழைந்தாள், கார்த்திகா.
செழியனுடன் இதற்கு முன்பே பல தடவைகள் எதேச்சையாக அலைபேசி வழியே உரையாடிப் பழக்கப்பட்டு இருக்கின்றபடியால் தான் அவளிடம் இந்த சகஜம். இல்லையென்றால் அவளும் சொந்தங்களைக் காணின் அறைக்குள் ஓடி ஒழியும் ரகம் தான்.
தொட்டாற் சிணுங்கியாய் சுருங்கிப் போன அவளின் வதனம் கண்டு நண்பர்கள் இருவரும் சாவகாசமாய் சிரித்துக்கொள்ள,
‘எதை எடுத்தாலும் இவளுக்கு தமிழ்! எதிலும் தமிழ்!’ என இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு என்றும் போல் அறிவழகன் மனதில் வெண்சாமரம் வீசிக் குளிர்மை பரப்பியது.
“பார்றா! உன் தங்கச்சி பெரிய அப்பாட்டாக்கரா என்ன?” என சத்தம் போட்டு சிரித்தவனைப் பார்த்து தலையை சிலுப்பிக் கொண்டவன்,
“அதை இங்கிருந்து போக முன்ன நீயே சொல்லுவ செழியா! சேட்டைக்காரி! சரியான அராத்து அவ..” என மறைமுகமாக தங்கையை தாங்கிப் பேசி சிலாகித்தான்.
ஒரு கட்டத்தில் சலம்பல்கள் நிறைவுக்கு வர, கார்த்திகாவின் கைப்பக்குவத்தில் கமகமத்த மதிய விருந்தை வயிறார உட்கொண்ட செழியன்,
“என்னை உபசரித்த இந்த கைகளுக்கு தங்க வளையல் அணிவிக்கணும்..” என மிகையாகப் புகழ்ந்து விட்டு, ஓய்வுக்காக, தனக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
‘அறிவழகன் எதையாவது கார்த்திகா கிட்டேர்ந்து மறைக்கிறானா?’ என இத்துணை நேரம் குழம்பிப் போயிருந்தவன்,
‘ஹோட்டல் வளாகத்தில் நான் கடந்து வந்த பொண்ணு யாராருக்கும்? அவ கூந்தல் ஏன் எனக்கு என் மோகனாவை நினைவூட்டுது?’ என மரத்துக்கு மரம் தாவும் குரங்காய் மாறுபட்ட சிந்தனையுடன் கட்டிலில் சாய்ந்தான்.
‘ப்ச், என்னாச்சு உனக்கு? இதுக்கு முன்ன கூட லோங் ஹேர் இருக்குற பொண்ணுங்களைக் கடந்து வந்தவன் தானே நீ?’ என மனம் எழுப்பிய கேள்வியும் நியாயமாகவே பட்டது அவனுக்கு.
இவ்வூரில் காலடி எடுத்து வைத்த நொடி தொட்டு இழந்த எதையோ பெற்றுவிட்ட உணர்வு மின்னலென மனதைத் தாக்கிச் செல்கின்றதே! இத்தனை மாதங்களாக தொலைத்து அல்லல்பட்ட நிம்மதியை மனதார உணர்கிறேனே!
மனதை இதப்படுத்திய இனம்புரியா இந்த உணர்வுக்கும், தன்னைக் கடந்து சென்ற அப்பெண்ணுக்குமிடையே ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்ன..
யோசித்தான்; நேரம் கழிவது தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தான்.
ரயிலிலிருந்து இறங்கிக் கொண்டதும் தான் உணர்ந்தவை யாவும் இடமாற்றத்தின் காரணமாக உண்டானவையாக இருக்குமென்று வெகு சாதாரணமாகத் தான் நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது ஏனோ அப்படி யோசிக்கத் தோன்றவில்லை. இந்த ஊருக்கும்-தனக்கும் ஏதோவொரு பந்தம்; தொடர்பு; பிரிக்க முடியா பிணைப்பு இருப்பதாய் உணர்ந்தான்.
தீராத சிந்தனையூடே தன்னை அறியாமல் உறங்கிப் போனவன் மாலையில் அறிவழகனுடன் புறப்பட்டுச் சென்றான், ஊருக்குள் விடுபட்ட ஓரிருவருக்கு பத்திரிகை வைப்பதற்காக..
வேலையை முடித்துக் கொண்டு இருவரும் வீடு திரும்பும் போது, தோழியர் புடை சூழ ஓவியமாய் வானில் உலா வந்து கொண்டிருந்தாள் நிலாமகள்.
நேரம் ஒன்பதரை மணியென காட்டி நின்றன, கடிகார முட்கள்!
வழி நெடுகிலும் வளவளத்துக் கொண்டே வந்ததில் தொண்டைக் குழியில் நீர் வற்றிப் போயிருக்க, “கண்ணம்மா!” எனக் கூவிய வண்ணமே வீட்டினுள் நுழைந்தான் அறிவு.
“அண்ணி தூங்குது! கூவாத அண்ணா..” என உள்ளிருந்து குரல் கொடுத்தாள், தமிழிசை.
அவளின் கத்தல் இங்கு ஒருவனுக்கு வேறொரு உணர்வை ஏற்படுத்தியது என்ன விந்தையோ!
மெல்லிசை ராகம் காதோரம் ஒலிப்பதாய் உணர்ந்து, கண் சொக்கி, நினைவடுக்குகளில் இருந்து தலை தூக்கிய மோகனாவின் நினைவுகளுடன் மெல்ல சோபாவில் சாய்ந்தான்.
‘இந்தக் குரல்..’ நினைவூட்ட முயன்றான். ம்ம்கூம், எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. இதற்கு முன்பு செவியேற்றதாகக் கூட நியாபகம் இல்லை.
வீணாக குழம்பிக் கொண்டிருக்கிறேனே என மனம் நொந்தவனாய் மூச்சை வேகமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான்.
அமைதியடைய மறுத்து வெகு தீவிரமாக பிகு செய்தது அவன் மனம்!
“நான் சொன்னேனே! குட்டி சாத்தான் தான்டா..” என புன்னகை மாறா முகத்துடன் இயம்பியவன்,
“குட்டிமா, ஒரே தாகமா இருக்கு. டீ போட்டு கொடேன்..” என சமையலறை நோக்கி குரல் கொடுத்தான் மீண்டும்.
‘ஓ, தமிழிசையா..’ என மானசீகமாக கேட்டவன் கிடைத்த ஓரிரு நிமிட இடைவெளியை தன்னை இயல்புக்கு மீட்டு வர உபயோகப்படுத்திக் கொண்டான்.
ஆனால் மனம் என்னவோ இன்ப பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்து மோகன ராகத்தில் திளைத்திருந்தது, நேரம் காலம் தெரியாமல்.
ஊர் செய்த மாயமா.. இல்லையேல் வேறெதுவுமாக இருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் இங்கு வந்ததிலிருந்தே மோகனாவின் நினைவுகள் ஆடவனை அதிகளவு வாட்டிக் கொண்டிருக்கின்றன.
அப்போது, “டின்னெர் எடுத்திட்டியா?” என்று வினவியபடி கூடத்துக்கு வந்தாள், தமிழிசை.
குரல் வந்து திசை நோக்கி, ஏதோவொரு எதிர்பார்ப்புடன் சட்டென்று தன் பார்வையை ஓட்டிய செழியன், அடுத்த நொடியே, “அய்யே! பேயி!” என நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சோபாவோடு ஒன்ற,
“இதென்ன கோலம்?” – முகக் கவசம் அணிந்தாற்போல் அடையாளமே தெரியாமல் முகத்தில் எதையோ அப்பிக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான், அறிவழகன்.
இருவரையும் ஒருசேர முறைத்தவள், “நெஞ்சை பிடிச்சிக்கிட்டு ஒன்னும் சரிஞ்சிடாதீங்க ப்ரோ! வீட்டுலேர்ந்து ஹாஸ்பிடலுக்கு ரொம்ப தூரம்..” என செழியனைக் கலாய்க்க,
“எதே! ஹாஸ்பிடலா?” – பேயறைந்த முக பாவனையுடன் வெடுக்கென்று எழுந்து அமர்ந்தான், ஆடவன்.
“அஃப்கோர்சுங்க..” என ஏற்றத் தாழ்வுகளுடன் கிண்டலடித்தவள்,
“அண்ணி ரொம்ப டயர்டா இருந்தாங்க! தூங்க அனுப்பி வைச்சிட்டேன். ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கவாணா?” என்று அழகனிடம் வினவ,
“வைம்மா! பிரெஷ் ஆகிட்டு வர்றோம்..” என சிரிப்புடன் உரைத்தவன் எழுந்து அறை நோக்கி நடந்தான்.
இவளிடம் தனியாக சிக்கிக் கொண்டால் கேலி செய்து பெடல் எடுத்து விடுவாளோ என அஞ்சியவனாக சோபாவை விட்டு படக்கென்று எழுந்து நகர்ந்தவனை,
“எக்சியூஸ் மீ’ங்க..” என அழைத்து நிறுத்தினாள் தமிழ், தலையில் சுற்றியிருந்த ஈரத் துண்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஓரிரு கூந்தல் கற்றைகளை காதோரம் ஒதுக்கி விட்டபடி!
“ஆங்ங்!!” என திருதிரு முழியுடன் திரும்பிப் பார்த்தவனைப் பேசிப் பேசியே ஓடவிட்டால் என்ன என்ற குறும்புத்தனம் தலை தூக்கியது பெண்ணுக்கு. கூடவே ஒரு மெல்லிய ரசனையும்..
“பயணம் எப்படி?”
“பயணம் எப்படியா இருந்தா என்ன? ஊரு செம..” என முகம் விகசிக்க பதில் சொல்லியவன் அவளின் குறுகுறு பார்வையைக் கண்ணுற்று விட்டு,
“ஐ மீன்.. ஊரு சூப்பராருக்கு. ஊர்மக்கள் தான் கொஞ்சம் வாயாடியா இருக்காங்க. ஊரைப் பிடிச்சிருக்கு. ஊராரை..” மேற்கொண்டு பேச முன்பு,
“புடிக்கல..” முந்திக் கொண்டு அந்த வாக்கியத்தை முடித்து வைத்தாள், தமிழிசை.
“இல்லங்க, புடிச்சிருக்கு..”
“சம்திங் ராங்!” என மங்கை அழகாய் நகைக்க, செழியன் மனம் அவ்விதழ் விரியலில் தெய்வாதீனமாய் லயித்தது.
“நீங்க போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க. நான் டின்னெர் எடுத்து வைக்கிறேன்..” என்றவள் நகர்ந்து விட, சட்டென்று இயல்புக்கு மீண்டவனுக்கு தான் செய்த செயல் என்னவென்று சற்றுத் தாமதமாகத் தான் உறைத்தது.
‘எ..என்ன! நான் எதுக்கு இவ சிரிப்புல.. ஓ காட்! ஐ காண்ட் பிலீவ் திஸ்! என்னாச்சு செழியா உனக்கு? நீ ஏன் இப்படி நடந்துக்குற.. வாட் த ஹெல் ஈஸ் ஹப்பேண்ட் டு யூ?’ என தன்னையே கடிந்து கொண்டவன் நகராமல் அவ்விடத்திலே நின்றிருந்தான், சிலையாகி.
‘பதறுற அளவுக்கு எந்த பாதகமும் இங்க நடக்கல. நான் ரசனைவாதினு அப்பப்போ சொல்லிக்குவே இல்லையா? அவ அழகா இருந்தா, ஸோ நீ அவ சிரிப்பை ரசிச்ச. தட்ஸ் ஆல்!’ என தன் செயலை நியாயப்படுத்த முயன்றது உள்ளம்.
அதேநேரம், ‘ஆனா உன் மோனா இருக்கும் போது நீ எப்படி இன்னொரு பொண்ணை ரசிக்கலாம்?’ என குறுக்கு விசாரணை செய்தது, மோகன மங்கையின் பால் காதல் வயப்பட்டிருந்த மற்றொரு மனம்!
இரண்டுக்குமிடையில் சிக்கித் தவித்தவன், தமிழிசை கத்தி அழைக்கும் வரை இயல்புக்கு மீளவில்லை.
“ஹா..ல்..லோ!”
“ஆங்!” என தெளிந்து கண்களை உருட்டியவனை ‘என்ன ஜென்மமோ..’ எனும் ரீதியில் பார்த்து வைத்தவள்,
“இதோட நாலாவது வாட்டி..” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.
“என்ன?”
“கரம் கோர்க்க வாராய் மன்னவானு தொடங்கி இதோட நாலு பாட்டு பாடிட்டேன்..” என கடுப்புடன் வெளி வந்தது, பெண் குரல்.
“என்னது?” என தலை சொரிந்தவனை மேற்கொண்டு கலாய்க்க மனமின்றி,
“போய் பிரெஷ்’ஆகி வாங்க. இன்னும் எவ்ளோ நேரந்தான் கரண்ட் ஷாக் பட்ட மாதிரி ஒரே இடத்தில நின்னுட்டு இருக்க போறீங்க?” என்று வினவினாள், தாழ்ந்த குரலில்.
“இல்லங்க, ஏதோ யோசனைல..”
“அதுசரி, உங்க காதலியைப் பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பிங்க. இதை தவிர பெருசா வேறெதை யோசிச்சிருக்க போறீங்க?” என கேலி பேசியவளைப் பார்த்து மறுத்தவன்,
“இல்லங்க, உங்களைப் பத்தி தான்..” என தொடங்கி, “வாட்!” என அவள் கூவியதும் சடேரென்று சுதாரித்துக் கொண்டான்.
“இல்ல, ஐ மீன்.. உங்க கலியாணத்தைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்..” தன்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக வாயில் வந்ததை அடித்து விட்டு விளக்கம் அளிக்க முற்பட்டான் ஆடவன்.
“நீங்க ஏன் அதைப் பத்தி யோசிக்கணும்? விடுங்க, அண்ணன் பார்த்துப்பாரு..”
அவள் என்னவோ வெகு சாதாரணமாகத் தான் சொன்னாள். ஆனால் காரணமேயின்றி ஆடவன் மனம் தான் பெருமளவு நொந்து போனது.
‘கொஞ்சமும் யோசிக்காம முகத்துல அடிச்சாப்புல பேசுதே இந்த பொண்ணு..’ என அதிருப்திபட்டுக் கொண்டவன் மௌனமாக அவ்விடத்தினின்று நகரப் பார்க்க,
“அவ என்ன சொல்லுறானு சொல்லவே இல்லையே’ங்க..” – அண்ணனின் நண்பன் தானே என்ற நினைப்பில் சுவாரஷ்யமாக பேச்சு வளர்த்தாள், தமிழிசை.
“எவ?”
“உங்க காதலி..”
“வாட்!” என எரிச்சல்பட்டுக் கொண்டு திரும்பியவன் ஏதோ கூற வாயெடுப்பதற்குள்,
சிரித்துக் கொண்டே, “ஒருநாள் காத்திருக்குறதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அவ எனக்காக காலம் பூரா வேணா காத்திருப்பா! ஜென்மம் ஜென்மமா என்னை மட்டுமே நினைச்சிருப்பா!” என மனம் கொய்தவளின் நினைவில் காதல் கசிந்துருக, மந்தகாசப் புன்னகையுடன் செப்பினான் இளஞ்செழியன்.
திடீரென்று பெண்மேனி சிலிர்த்து அடங்கியதேனோ.. இருதயம் படபடத்து, தன் துடிப்பை வேகப்படுத்திக் கொண்டதன் காரணம் தான் என்னவோ..