‘ஒரு பாட்டைக் கூட நிம்மதியா கேட்க விட மாட்டேங்குறா! எப்போவும் போல, எதேச்சையா கேட்ட யுவன் ஷங்கரோட குரல் எனக்கு அவளைத் தான் நினைவூட்டிச்சு.
அந்தக் கண்ணப் பார்த்தாக்கா, லவ்வு தானா தோணாதா.. கேட்குறான் பாரு கேள்வி!
ஏன் தோணாது? ஏன் தோணாதுங்குறேன்! அந்த கண்ணுக்கு சொந்தக்காரி யார்னு தெரிஞ்சுக்க தோணுது.. அந்த கண்ணுக்குள்ள மொத்தமா தொலைஞ்சி போயிட தோணுது..
எதுக்கு, எப்போ பாரு என் கண்ணுக்குள்ள வந்து நின்னு சதி செய்றேனு கேட்க தோணுது. இப்படி படுத்துறியே, உனக்கு மனசாட்சியே இல்லையானு உரிமையா சண்டை போட தோணுது.
இத்தனைக்கும், நான் அவளைப் பார்த்ததெல்லாம் ஒரே ஒரு வாட்டி தான். அதுவும் கனவுல! அதுக்கே இப்படி புலம்ப வைச்சிட்டா, செல்ல ராட்சசி! எப்போ பாரு அவ நினைப்பு தான் மண்டையக் குடையுது.
கூப்பிட்டது யாருனு தெரியல. நல்ல ஆளுமையான கம்பீரக் குரல்! ஆனா அதுல கிஞ்சித்தும் அதிகாரம் இருக்கல. அன்பும், குழைவும் தான் நிறைஞ்சு வழிஞ்சாப்புல உணர்ந்தேன்.
ஒரேயொரு நொடிதான் அந்த கண்களை சந்திச்சேன். அதுக்குள்ள அநியாயமா என் தூக்கம் கெட்டு போகணுமா, கடவுளே! ஏன் உனக்கு என்மேல இவ்ளோ ஓரவஞ்சனை?
கனவாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? ஏன் தான் இப்படி மனசு தடுமாறி நிற்கிறேனோ.. எனக்கே இது சுத்த பைத்தியகாரத்தனம்னு புரியுது. ஆனா புடிச்சிருக்கே! அவ திரும்ப என் கனவுல வருவாளோ என்னவோனு நெஞ்சு படபடங்குது.
தெரிஞ்சவங்க யார்கிட்டயும் போய் இதைப்பத்தி பேசுனா சிரிப்பாங்க. சித்து கிட்ட கூட நான் எதையும் சொல்லி வைக்கல. அதுனால தான் என் பீலிங்ஸ்.. ப்ச், என் புலம்பல்ஸ் கொட்டித் தீர்க்க உன்னை நாடி வந்தேன் மிஸ் டயரி! சாரி..
எனக்கு இதைத் தவிர வேற என்ன பண்றதுனு தெரியல; புரியல. புலம்ப வைச்சுட்டா! நான் அந்த கண்களுக்குள்ள சறுக்கி விழுந்துட்டேன். இல்ல, இல்ல. அவ தான் என்னை வலுக்கட்டாயமா இழுத்து தனக்குள்ள வீழ்த்திக்கிட்டானு நினைக்கிறேன்.
ஐ காண்ட் வெயிட் டு சீ யூ அகைன், மோனா!‘
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
“நாளைக்கு மாப்பிள்ளையும், அவரோட பேமிலியும் இங்க வர்றாங்களாம். கலியாண பட்டெடுக்க போக நல்லநாள் பார்த்துட்டு இருந்திருப்பாங்க போல!” என வீட்டினுள் நுழைந்ததும், உற்சாகமாக மொழிந்தான் அறிவழகன்.
“அட, நிஜமாவா?” என சமையல் கட்டிலிருந்து ஓடி வந்தவள் சடேரென்று கால் தடுக்கி விழப் போக,
“ஹேய் பார்த்துடி..” எனப் பதறி அவளை இரண்டெட்டில் நெருங்கி தாங்கிப் பிடித்தவன், அருகே யோசனை முகமாய் நின்றிருந்த செழியனை ஏறிட்டான்.
‘பார்த்துட்டே இருக்கேன், காலையிலேர்ந்து இவன் முகம் சரியில்லையே..’ என யோசனை வயப்பட்டவனாக தொண்டையைச் செருமி, “செழியா!” என்று அழைக்க, சட்டென்று தெளிந்தவன்,
“சொல்லு மச்சான்!” தான் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றான்.
“என்னாச்சு? உன் மூஞ்செல்லாம் ஒரு மாதிரி டல்லாருக்கு..”
தலையை இருபுறமாக ஆட்டி, “நத்திங் சீரியஸ். ஏதோ சும்மா..” என மழுப்பியவன் இத்தோடு பேச்சு முடிந்ததென உணர்த்தும் விதமாக சட்டென நகர்ந்து அறைக்குள் புகுந்து கொண்டான்.
திருமண பந்தி ஏற்பாடுகளுக்கு ‘அட்வான்ஸ்’ கொடுக்கவென இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் தான், மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு வந்திருந்தது அழகனுக்கு.
சுகநல விசாரிப்புகளைத் தொடர்ந்து, ‘நாளைக்கு திருமண பட்டெடுக்க போக ஐடியா பண்ணோம்..’ என்ற தகவலைப் பகிர்ந்து சம்மதம் பெற்றுக் கொண்ட திருப்தியில் அமலேஷ் அழைப்பை துண்டித்து விட,
“திருமண பட்டா?” என முணுமுணுத்தவனுக்கு அப்போதிலிருந்தே மனம் சரியில்லை. அகத்தின் பிரதிபலிப்பாகத் தான் இதோ முகமும் காய்ந்த சருகாய் வாடிக் கிடக்கிறது.
உள்மனம் தன்னிடம் மிக முக்கியமான தகவலொன்றைத் தெரிவிக்க முயன்று கொண்டிருப்பதை அவன் உணர்ந்தாலும், அது என்னவாக இருக்குமென்பது பற்றி எந்தவொரு ஊகமுமின்றி தடுமாறி நின்றான்.
வலித்தது; இப்போதும் மனம் வலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு யோசித்தும் காரணம் தான் பிடிபடவில்லை.
குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவியவன், நீர் வழியும் முகத்தோடு கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.
‘இந்த ஊருக்கு வந்ததுலேர்ந்தே நீ ஒரு மாதிரியா தான் இருக்கே செழியா! என்னாச்சு உனக்கு? எதுக்கு டென்ஷன் ஆகறே.. ஏன் கவலைப்படறே..’ மனம் தொடுத்த கேள்வி அவனுக்கு தலைவலியைக் கிளப்பியது.
அகன்ற நெற்றியை பெருவிரல்களால் அழுந்த நீவிக் கொண்டவன், “செழியா! ரிலாக்ஸ்..” என தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்றான்.
திடீரென தன் மனதுக்கு என்னவாயிற்று என்று புரியவில்லை. சூறாவளியாய் சுழன்றடித்த மோகனாவின் நினைவுகள் வழமையைப் போல் இன்ப அலைகளை அல்லாமல், சோக விதைகளை தனக்குள் விதைத்து விடக் காரணம் என்னவெனக் குழம்பினான்.
ஆடவன் உளம்தனில் இத்தகைய பெரும் அதிர்வினை ஏற்படுத்திய மங்கை மோகனாவோ, அவன் மனக்கண்ணில் ஆங்காரத்துடன் வலம் வந்தாள்.
வலித்த தலையை இறுகப் பற்றிக் கொண்டு, “ஸ்ஸ்..” என்ற முனகலுடன் முகம் சுருக்கியவன்,
“நீ இந்த சென்னைல தான் இருக்கியாம்மா? இந்த ஊரு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா ஃபீல் ஆகுற அதேநேரம், ஏன்னே தெரியாத தவிப்பைக் கொடுக்குது. யாரைப் பார்த்தாலும் அது ஏன் நீயா இருக்க கூடாதுனு தோணுது.
ப்ளீஸ், எங்க இருந்தாலும் தயவு செய்து என் கண்ணு முன்னாடி வந்துரு. இதுக்கு மேல என்னால முடியலடி.” என புலம்பினான்.
ஹோட்டல் வளாகத்தில் அந்நீள்முடிப் பெண்ணைக் கடக்க நேர்ந்தபோது தடுமாற்றம் கொண்டதுவும், தமிழிசையின் குரல் கேட்ட நொடி மனம் ‘இந்தக் குரல் பழக்கப்பட்ட ஒன்றாயிற்றே..’ என தடுமாறி நின்றதுவும் மனச்சஞ்சலமே அன்றி வேறில்லை என தன் மீதே கோபம் கொண்டான் செழியன்.
ஏறி இறங்கிய நெஞ்சாங்கூட்டை உள்ளங்கையால் நீவி விட்டவன், “மிஸ் யூ மோகனா!” என ஆழ்ந்த குரலில், கண் மூடி முணுமுணுக்க,
“ஆஆ..” என அலறி அடித்துக் கொண்டு உறக்கத்திலிருந்து கண் விழித்தாள், தமிழிசை.
காதருகே மிக நெருக்கத்தில், ‘மிஸ் யூ தேவி..’ என ஒலித்த குரல் அவளின் நல்லுறக்கத்தை மொத்தமாக சூறையாடி விட்டிருக்க, இதயம் வேகமாகத் துடித்து ‘நானும் செவியேற்றேன்’ என்ற தகவலை அவளுக்கு உணர்த்த முயன்றது.
“என்னாச்சுடி?” என்னவோ ஏதோவென பதறிக் கொண்டு ஓடி வந்தாள், கார்த்திகா.
“இப்போ என்னோட ரூம்க்கு யாராவது வந்தாங்களா என்ன?”
“இதைக் கேட்க தான் இந்த மாதிரி கத்துனியா? பயந்தே போய்ட்டேன்..” என பற்களை நறநறத்தவள்,
“சொல்லுங்க அண்ணி..” என சிணுங்கியவளின் வதனம் கண்டு துளிர்த்த கோபம் சட்டென்று காலை நேரப் பனியாக மறைந்து போக,
“நவீ உன்னைத் தேடி வந்திருந்தான்டி.” என்றாள் முறுவலுடன்.
“ஓ.. அந்த வாண்டா?” எனப் பலமாகத் தலையை சிலுப்பிக் கொண்டவள், “ப்ச், வர வர நீ பைத்தியமாகுற தமிழ்..” என பற்களுக்கு இடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பி தன்னைத் தானே உரத்த குரலில் கடிந்து கொண்டாள்.
அவளின் முக மாற்றங்களையும், புலம்பலையும் கேட்ட கார்த்திகா, “என்னாச்சு?” என ஆதூரமான குரலில் வினவியபடி அவளருகே வந்தமர்ந்தாள்.
“என்னாச்சுனே தெரியல, அண்ணி!”
“என்ன பண்ணுதும்மா?”
“ப்ச், உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி! நான் தான் சும்மா குழம்பிக்கிட்டு இருக்கேன் போல..” என சலித்துக் கொண்டாள் தமிழிசை.
‘ட்விஸ்ட் வைக்காம மேட்டரை சொல்லுடி!” என அதட்டியவளை அப்பிராணியாய் ஏறிட்டவள்,
“அன்னைக்கு ஃபிரெண்ட்ஸ் கூட லஞ்ச் எடுக்க ரெஸ்டாரண்ட் போயிருந்தேன் இல்லையா? வாஷ்ரூம் போயிட்டு மேஜைக்கு திரும்பிட்டு இருந்த நேரத்துல, பின்னாடி நின்னு யாரோ கூப்பிடற மாதிரி கேட்டுச்சு. அதுவும் ஹஸ்கி வாய்ஸ்ல!” என்றாள், கண்களை உருட்டியபடி..
“என்னனு?”
“த்..தேவினு..”
“அதாரு தேவி?”
“ஹூ க்னோஸ் அண்ணி? இருங்க, நீங்க என்னைப் பைத்தியம்னு முடிவு பண்ணிட முன்ன நான் நடந்ததை மொத்தமா சொல்லிடறேன்..” என்றவள், கார்த்திகாவின் கேலிச் சிரிப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள்.
சரிதான், ஏதோ பிரமைனு நினைச்சி நானும் கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா இப்போவும் அதே குரல்! ம்..மிஸ் யூ தேவினு.. அந்த தேவி யாரா இருக்கும் அண்ணி? பயமாருக்கு.” என்றவளின் கடைசி வரி சற்று நடுங்கி வெளிவந்தது.
தியேட்டரில் பேய் படம் பார்க்கும் திக்திக் உணர்வால் ஆட்கொள்ளப்பட்ட கார்த்திகாவின் மேனி மயிர்கள் சட்டென்று நட்டுக்கொண்டன.
நாத்தியின் கை பற்றி, “என்னடி ஏதேதோ சொல்லுற?” என எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி வினவ,
“கேட்ட உங்களுக்கே இப்படினா, உணர்ந்த எனக்கு எப்படி இருக்கும்?” என மூக்கை உறிஞ்சினாள், தமிழிசை.
கட்டிலை விட்டு படக்கென்று எழுந்தவள், “இதுக்கு தான் நேரங்கெட்ட நேரத்துல தூங்காதனு தொண்டைல தண்ணி வத்துற அளவுக்கு கத்துறது. கேட்க மாட்டியே! இப்போ புலம்பு, போ!” அச்சத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு அதட்டியவள்,
“எழுந்து வா! நாளைக்கு வெட்டிங் ஷாப்பிங் பண்ண மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து வர்றதா சொல்லிருக்காங்க. வர்றவங்களை உபசரிக்க ஸ்வீட்ஸ் ஏதாவது ரெடி பண்ண வேணாம்?” என வினவி, பாவையை இயல்புக்கு மீட்டு வர முயன்றாள்.
நினைத்தது போலவே, “நாளைக்கேவா?” எனக் கட்டிலை விட்டு துள்ளி இறங்கி உற்சாகமாக கேட்டவளின் பட்டுக் கன்னத்தில் வெட்க ரோஜாக்கள் பூத்தன.
“ஆமாடி, நாளைக்கு தான்!”
“வாவ்!” என தன்னை மறந்து கூவியவள், “இதை ஏன் என்கிட்ட முன்னவே சொல்லாம விட்டிங்கண்ணி?” என்று குறைப்பட்டுக் கொள்ள,
“நீதான் தூங்கிட்டு இருந்தியேடி!” என சிரிப்புடன் குற்றத்தை அவளுக்கு உரித்தாக்கிய கார்த்திகா, “வந்து ஹெல்ப் பண்ணுடி. உன் ‘அவரும்’ வருவாரில்ல?” என்று கண் சிமிட்டினாள்.
“இதோ வர்றேன்!”
“வர்றப்போ உன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டுட்டு வா தமிழ். டவலையாவது சுத்திக்கோ.. பிறகு, வந்தவங்க பலகாரம், ஸ்வீட்ஸ்ல எல்லாம் ஏன் இவ்ளோ முடியா இருக்குனு கேட்க போறாங்க..” என கேலி செய்தவள் நகர்ந்து விட, மற்றது மறந்து,
“வெல்கம்!” என காற்றோடு தூதனுப்பி, துப்பட்டாவை தலைக்கு மேல் விரித்து சுற்றினாள், தமிழிசை.
அந்த ‘வெல்கம்’ யாருக்கானதோ.. விதி கைக் கொட்டிச் சிரித்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் நீள்முடியை துப்பட்டாவால் சுற்றிக் கொண்டு அறை விட்டு அவள் வெளியே வரும்போது, கூடத்தில் அமர்ந்திருந்தனர் செழியனும், அறிவும்.
“குட் ஈவினிங்!” என பொதுப்படையாக மொழிந்தவள் அவர்களைக் கடந்து செல்ல,
“ஏன் உன் தங்கச்சி எப்போ பாரு வித்தியாசமாவே இருக்கா? நேத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஃபேஸ் மாஸ்க் போட்டு நின்னுருந்தா! இன்னைக்கு துப்பட்டாவால முடியை..” சிரிப்புடன் செழியன் மேற்கொண்டு பேச முன்பே,
“ஹலோ மிஸ்டர்!” என சொடக்கிட்டு அழைத்தாள், தமிழிசை.
“ஆங்!” என திகைத்துத் திரும்பியவனை கொடூரமாக முறைத்தவள், “நான் எப்படி வேணா இருப்பேன். அதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்ன?” என்று கேட்டாளே பார்க்கலாம்,
“அடேய்! நான் உன் காதுக்குள்ள தானேடா கிசுகிசுச்சேன்?” என வாய்விட்டே புலம்பினான், ஆடவன்.