‘எங்கேயும் அவ; எதிலும் அவ! இப்படியே தான் இந்த ஒரு மாச காலமும் கழிஞ்சி போச்சு.
அன்னைக்கு நைட்டு கனவுல பார்த்ததுக்கு பிறகு நான் அவளைப் பார்க்கல. தேடி பார்த்தேன்; கிடைக்கல. அவ பேரு மோகனாங்குறதை தாண்டி எனக்கு வேறெதுவுமே தெரியல. அப்பறம் எப்படி?
பார்க்காத அவ முகத்தை நானாகவே கற்பனை பண்ணிக்கிட்டேன். அவ எப்படி இருந்தாலும், என் கண்ணுக்கு பேரழகா தான் தெரிவானு ஒரு அபார நம்பிக்கை!
அர்த்தமில்லாம காணுற ஆயிரம் கனாக்களில் ஒன்னை மட்டும் இவ ஆட்கொண்டுட்டானு என்னால அலட்சியமா இருக்க முடியல! மனசு அவளைத் தேடிச்சு.
சின்ன வயசா இருக்கறப்ப பாடப் புத்தகத்துல தத்தை விடு தூது, நெஞ்சு விடு தூதுனு பாடல் வரிகளைக் கண்டு கேலி செஞ்சி சிரிச்ச எனக்கே ஒரு காலத்துல இந்த மாதிரி நிலைமை வரும்னு நான் நினைக்கல. தென்றல் காத்துல அவளுக்கு தூதனுப்பி வைச்சேன், திரும்ப என் கனவுல வா மோகனானு!
ஹாஹா, லூசு இல்ல நான்?
24*7 ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருந்த என்னைப் பார்த்து, நீ ஏண்டா இப்போல்லாம் வித்தியாசமா நடந்துக்குறனு என்கிட்ட பல தடவைகள் கேட்டுக் கேட்டு ஓய்ந்து போய்ட்டாங்க என்னோட ஃபிரெண்ட்ஸ்!
ப்ச், நான் எதையும் அவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கல. சும்மாவே கலாய்ச்சு கொல்லுவானுங்க, இதுல வேற நான் கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்; அவ என் வாழ்க்கையாகி போய்ட்டானு சொல்லிட்டா, சும்மா ஆடின பேய்க்கு சாம்பிராணி அடிச்ச கதை தான்!
ரொம்ப படுத்தி எடுத்துட்டா அவ! தவிப்பு தாங்காம, என் சோக கதைய கேளு தாய்குலமேனு நேத்து என் அம்மா மடியில தலை வைச்சு தூங்கிப் போனேன்.
என்னே அதிசயம்? ஐ காண்ட் பிலீவ் திஸ் மிராக்கில். நான் அவளை எதிர்பார்த்து காத்திருக்குற நேரத்துல என்னை ஏமாத்தக் கூடாதுனு நினைச்சிருப்பா போல.. திரும்பவும் அவ என் கனவுல வந்தா!
சந்தோசத்துல திக்குமுக்காடி போய்ட்டேன்ங்க. உலகமே என் காலுக்கு கீழ அடிபட்டாப்புல அப்படி ஒரு ஹாப்பி! களிப்பு மிகுதில என்னையே அறியாம அழுதுட்டேன் போலருக்கு.
நீ ஏண்டா உறக்கத்துல அழறே? கனவுல எதையாவது கண்டு பயந்துட்டியானு மார்னிங் அம்மா என் தலையை தடவி ஆதூரமா கேட்டதும் தான் நான் அழுதுருக்கேன்னு புரிஞ்சிது. சிரிச்சி சமாளிச்சிட்டேன்.
அவளை என் கனவுல திரும்பவும் கண்ட நொடி, இவ உனக்கானவனு விதி எனக்கு அவளை அடையாளம் காட்ட முயற்சி பண்ணுதுனு புரிஞ்சிக்கிட்டேன்.
அவ உலகத்துல எங்கேயோ இருக்கா.. எனக்காக தான் பிறந்திருக்கா! அண்ட் ஐ திங்க், என்னைப் போலவே அவளும் என்னைக் கனவுல கண்டுக்கிட்டு தான் இருப்பாளாருக்கும்! வாழ்க்க பூரா அவ எனக்காக காத்திருக்க போறா..
எவ்ளோ அழகு அவ! என் மோகனா! நான் கற்பனை பண்ணி வைச்சிருந்த அருவத்தை விட, அவ உருவம் அவ்ளோ அழகுனு நினைக்கிறேன். ப்ச், ஆனா முகத்தைப் பாதியா மறைச்சிருந்த துணியை அவ கட்டாம இருந்திருக்கலாம்.
அவ கண்களைப் பார்த்தேன். கண்ணா அது? தூண்டிலா என்னைக் கட்டி இழுத்துச்சு..
கயற்கண்ணு, குவளைக் கண்ணு.. இதெல்லாம் வெறும் வர்ணனைனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இல்ல, இது எல்லாத்தையும் விட வண்ணத்தியா சிறகடிச்சு படபடத்த இமைகளைக் கொண்ட அந்த கண்கள் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட அழகு! பேரழகு!
வலது கண்ணுக்கு பக்கத்துல ஒரு கறுப்பு மச்சம்! அது அவளோட வதன அழகை இன்னுமின்னும் மெருகூட்டுறாப்புல இருந்துச்சு. தொட்டுப் பார்த்தா தப்பில்லனு ஏதோவொரு உந்துதல்ல என் கையை நீட்டினேன். சட்டுனு அவ பின் நகர்ந்துட்டா!
எவ்ளோ அபாக்கியசாலி நான்? என் அவசரத்தால அவளோட தேவ தரிசனத்தை ஒரே நிமிஷத்துல இழந்துட்டேன். அவ மறைஞ்சி போயிட்டா! நான் திடுக்கிட்டு கண் விழிச்சிட்டேன்..
மிஸ் யூ, மோகனா!’
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
முன்தினம் அறிவித்தாற் போலவே காலை ஒன்பது மணியளவில் அமலேஷின் வீட்டிலிருந்து ஒரு மகிழுந்துக்கு ஆட்கள் வந்திறங்கினர்.
வந்தவர்களை நல்ல முறையில் வரவேற்று உபசரித்த கார்த்திகா, கூடத்தில் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது,
“அது வந்து.. தமிழ் எங்க?” என அன்னையின் கண்ணசைப்புக்காக காரணம் உணர்ந்து வினவினான், அமலேஷ்.
உதட்டில் வந்து போன தடயமின்றி மெலிதாக சிரித்துக் கொண்ட அறிவழகன், “அவ ரூம்ல இருக்கா! இருங்க கூப்பிடறேன் மாப்பிள்ளை..” என்று கூறிக் கொண்டு எழப் போக,
“இஃப் யூ டோன்ட் மைண்ட்! நானே போய் சர்ப்ரைஸ் கொடுக்கறதுல எதுவும் பிரச்சனை இல்லைல?” என்றான், அமலேஷ்.
அப்போது தான் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த செழியன், அதைக் கேட்டு விட்டு என்ன நினைத்தானோ, “அந்த மாதிரிலாம் சர்ப்ரைஸ் கொடுக்க தேவலை மாப்பிள்ளை. கூப்பிட்டா வந்துடப் போறா! நீங்க இங்க வந்ததுவே அவளுக்கு பெரிய சந்தோசம் தான்..” என வாய் முந்தினான்.
ஏனோ அமலேஷுடன் தமிழிசையைக் கற்பனை செய்து பார்க்கவும் மனம் ஒப்பவில்லை அவனுக்கு. இத்தனைக்கும், ஆறடியை எட்டிய உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கம்பீரமாகத் தான் காட்சி அளித்தான் புதியவனும்.
மாப்பிள்ளை வீட்டாருக்கு முகமே சரியில்லை. ‘யாரிவன் புதுசா!’ என்ற கேள்வியைத் தாங்கி அழகனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,
“பையன் யாரு தம்பி?” என மனதினுள் மறுகாமல் வாய் விட்டே கேட்டார் ரஞ்சனி. அமலேஷின் அன்னை!
அழகனுக்கும், நண்பன் சட்டென்று இடையிட்டுப் பேசியதில் சற்று அதிருப்தியே! அதற்கென்று தன் அழைப்பைப் புறக்கணிக்காமல் வீடு வந்தவனை அவமதிப்பானேன் என்ற எண்ணத்தில்,
பீடை பிடித்த பூசணி இலை போல் சட்டென்று கூம்பிற்று, செழியனின் முகம்!
இவ்விடத்தில் தன்னால் வேறேதும் குழப்பங்கள் நேர்ந்து விடுமோ என அஞ்சியவனாய், “சாரி!” என்ற பொதுப்படையான மொழிதலோடு,
“வந்திடறேன்டா.. ” என உதட்டசைவில் அழகனிடம் கூறிவிட்டு வெளியேற,
“எதுவும் நினைச்சுக்க வேண்டாம்மா! செழியன் தம்பிக்கு நம்ம குடும்பத்து மேல ரொம்ப அக்கறையும், அன்பும் இருக்கு. அதுனால தான் அப்படி சொல்லிட்டாரு! அதுவுமில்லாம கலியாணத்துக்கு முன்ன ரூம் வரை போறது..” என தயங்கி, முகம் கசங்கி வெளியேறியவனின் கருத்தை ஆதரித்தாள், கார்த்திகா.
அவளுக்குமே அமலேஷ் அவ்விதம் கேட்டது உவப்பைக் கொடுக்கவில்லை என்பது நிஜம்!
திருமணத்துக்கு முன் மணமக்கள் சந்தித்துக் கொள்வதை அனுமதிக்காத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளாயிற்றே! ஆதலால் அமலேஷின் கூற்று அவளுக்கும் பாகற்காயாய் கசந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
“கட்டிக்க போறவன் தானே?” என மகனுக்காக பரிந்து கொண்டு வந்த ரஞ்சனிக்கு பதிலிறுத்த வாய் திறந்த நேரத்தில், அறைக் கதவைத் திறந்து கொண்டு கூடத்தில் மெல்ல கால் பதித்தாள் தமிழிசை.
விரித்து விட்ட அவளின் நீள்கூந்தல் அலங்காரங்களும், உடலைத் தழுவியிருந்த மயில் கழுத்து வண்ண சேலையும் அங்கிருந்தோருக்கு தோகை மயிலைக் க்ஷணப் பொழுதில் நினைவூட்டிச் சென்றது.
மேற்கொண்டு பேச்சு வளராதபடிக்கு, தாம் அழைக்க முன்பே அவள் கூடத்துக்கு வருகை தந்திருக்கிறாள் என சரியாகவே ஊகித்த கார்த்திகா, அவளின் பக்குவத்தை மெச்சிக் கொள்ள மறக்கவில்லை.
சற்று நேரத்துக்கெல்லாம் வீட்டின் போர்ட்டிகோவிலிருந்து வழுக்கி சாலையில் மெல்ல வேகமெடுத்தது, அவர்கள் வந்திருந்த கார்.
“யூ லுக் கார்ஜியஸ்!” என காரில் வைத்து, தலை தாழ்த்தி நின்ற காந்தள் மெல்லியாளின் காதோரம் கிசுகிசுத்தான், அமலேஷ்.
கீழுதட்டைப் பற்களுக்குள் சிறைப்படுத்தியபடி அவஸ்தையாக நெளிந்தவளின், “நீங்களும்..” என்ற மென்குரல் மட்டும் அவனை வந்தடைந்தது.
“அதை அப்படியே என் முகத்தைப் பார்த்து சொல்லுறது..” என சீண்டியவன், ‘வெட்டிங் ஷாப்பிங்’ முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வரை தொட்டும் தொடாமலும் தீண்டி, பட்டும் படாமலும் உரசி பெண்ணவளை வம்பிழுத்துக் கொண்டே இருந்தான்.
அவற்றை எல்லாம் தான் சாதாரணமாக கடந்து வருவதாகக் காட்டிக் கொண்டாலும் அவளது உள்ளம் வேறெங்கோ தான் நிலை கொண்டிருந்தது.
ஜவுளிக் கடைக்குள் நுழையும் போதே, ‘எனக்காக தான் நீ பிறந்திருக்கே தேவி! உன்னைத் தேடி வருவேன், எனக்காக காத்திரு!’ என காதோடு காது வைத்தாற்போல் செவியோரம் கேட்ட மெலிதான கிசுகிசுப்பு அவளுக்குள் இன்னதெனத் தெரியாத அச்சத்தையும், பதற்றத்தையும் ஒருசேர விதைத்திருந்தது.
அந்த சிந்தனையில் நிம்மதியின்றி உலன்று கொண்டிருந்தவளுக்கு, அமலேஷின் செல்லச் சீண்டல்கள் தொடக்கத்தைப் போன்று நாணத்தை வரவழைப்பதற்குப் பதிலாக அளவு கடந்த எரிச்சலைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.
“ப்ச்!” என வெளிப்படையாக சலித்துக் கொண்டவள், முகம் மாறிப் போன அமலேஷை ஏறிட்டுப் பார்த்து,
“டயர்ட்டா இருக்கேன்ங்க. கொஞ்சம் சும்மா இருங்களேன்!” என அதட்டி விட, இன்றைய நாளில் அவள் பேசிய முதல் வாக்கியமே எரிச்சலை வாரி இறைப்பதாய் இருந்ததில் கார்மேகமாய் முகம் கறுத்துப் போனான், ஆடவன்.
‘என்ன உணருகிறேன்’ எனப் புரியாத நிலையில் அல்லாடிக் கொண்டிருந்தவனின் மனம் முழுவதும் மோகனா! அக்கனவு மங்கை ஆடவனை மொத்தமாக ஆக்கிரமித்து, அவனது சிந்தைதனில் இளவரசியாய் வலம் வந்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் ‘கிளை ஆகாயம் போனாலும் வேரென்றுமே.. இந்த மண்ணோடு தான் உள்ளது!
நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம்.. அடி உன்னோடுதான் உள்ளது!’ என செழியனின் அலைபேசி காதல் மயக்கத்தில் பிதற்றலானது.
யோசனை கலையப் பெற்றவனாக பாக்கெட்டினுள் கை விட்டு அலைபேசியை எடுத்துப் பார்த்தவன், திரையில் மின்னிய அறிவழகனின் பெயரை பார்த்து விட்டு அழைப்பேற்றான்.
“சொல்லு மச்சான்..”
“செழியா, எங்கேடா இருக்க?”
நெடு மூச்செறிந்தவன், “சும்மா காலாற நடக்கலாம்னு வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குற கார்டனுக்கு வந்தேன் அறிவு. அவங்க வந்துட்டாங்களா?” என்றான், அவர்கள் இந்நேரம் கடைக்கு கிளம்பிச் சென்றிருப்பார்கள் என்ற ஊகத்தில்..
தமிழிசையின் பால் அலைபாயும் தன் கண்களும், மனமும் அவனுக்கே அந்நியமாகத் தென்பட்டது. தன்னை மீறி தலைதூக்கும் அவள் மீதான ‘உரிமை உணர்வை’ அறவே வெறுத்தான்.
“திஸ் ஈஸ் நோட் ஃபேர்! நீ ஏன் இவ்ளோ பலவீனமா இருக்கே செழியா? தமிழிசைக்குக் கலியாணமாகப் போகுது. மோனா உன் மனசுல வாழ்ந்துட்டு இருக்குறப்போ நீ ஏன் இசை விஷயத்துல இவ்ளோ டென்ஷனாகுற? பதறுற.. கேர் எடுக்குற..
அவ உன் நண்பனுக்கு தங்கச்சி.. அதைத் தாண்டி உங்க ரெண்டு பேருக்கிடைல எந்த உறவும் இல்லையே! பிறகேன் நீ அவ விஷயத்துல அவசரப்பட்டு வாய்விட்ட?
இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல கலியாணம் பண்ணிக்க போறவங்களுக்கு தனியா பேசிக்க எவ்ளோ விஷயங்கள் இருக்கும்? நீ முந்திரிக் கொட்டையா இடையிட்டது.. ப்ச், வாட் ஹப்பெண்ட் டு யூ..” என ஆதங்கப்பட்டான்.
தன் காதல் பலவீனமானதா என மனம் சோர்ந்து நின்றவனின் குழப்பங்கள் தீரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சகலமும் தெளிவடையும் நாளில், பொக்கிஷம் கை சேரும் தூரத்தில் அதிஷ்டமாய் அவனுக்காக காத்திருக்குமா.. இன்றேல் அது எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில் வேறொருவனின் கரம் சேர்ந்திருக்குமா..