அந்த காட்சியை மட்டும் ஒரு கவிஞன் பார்த்திருந்தா.. ஓ, இயற்கையேனு புத்தகமே எழுதி முடிச்சிருப்பான். சந்தேகமே இல்ல, வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட பேரழகு!
ஆனா இங்க வேடிக்கை என்ன தெரியுமா?
இவ்ளோ சுந்தரமும், செழிப்பும் கொட்டிக் கிடந்தும் இயற்கை அன்னையோட பாரிய ரசிகனான நான் அது எதையும் ரசிக்கலையே! என் மனசு அந்த அழகுல ரொம்ப நேரம் மெய் மறந்து லயிக்கலயே!
ஏன்?
ஏன்னா.. அந்த வனப்புக்கு மத்தியில தான், தலை தூக்கி, வானத்தைப் பார்த்து நடனமாடிட்டு நின்னவ என் மோகனா! கை விரிச்சு அவ உவகையோட ஆடிட்டு இருந்த காட்சி இப்போவும் என் கண்ணுக்குள்ள இருக்கு.
அட ஆமாங்க! நான் ஆசைப்பட்டபடியே, நான் எதிர்பார்த்துக் காத்திருந்த மாதிரியே அவ திரும்பவும் என் கனவுல வந்தா. இருள் சூழ்ந்த ஒரு அமாவாசை நாளன்று மூன்றாவது வாட்டி அவளைப் பார்த்தேன்.
ம்க்கும், அதான் மூணு மாசம் முன்னாடி ஏற்கனவே பறி போயாச்சே! இனி கொள்ளையடிக்கவும், சூறையாடவும் என்ன இருக்கு இந்த ஏழைக் காதலன் கிட்ட?
அருவியிலேர்ந்து கொட்டின நீர் பெரிய கருங்கற்களில் பட்டுத் தெறித்து, தனக்கு பக்கத்துல நின்னுட்டுருந்த என் மோகனாவைக் கொஞ்சமா தொட்டுப் பார்த்து வெட்கப்பட்டுட்டு இருந்துச்சு!
இயற்கையை ரசிச்சேனோ இல்லையோ.. ஆனா உதய சூரியன், நிலா, நட்சத்திரங்கள், உடுக்கள்னு எல்லாத்தோட வெளிச்சத்தையும் தனக்குள்ள சுருட்டிக்கிற மாதிரி அவளோட நடனம், நளினம்.. இதெல்லாம் என் ரசனையையும், கண்களையும் அவ பக்கம் ஈர்த்திடுச்சு!
எல்லாத்தையும் தாண்டி, ஒரேயொரு குறை!
மாயக்காரி, எப்போவும் போல இன்னைக்கும் முகத்தை ஒரு மெல்லிய துணி போட்டு மறைச்சிருந்தா! அவ நயனங்களும், கூந்தலும், விழியோர மச்சமும் தான் எப்போவும் போல என் கண்ணையும், கவனத்தையும் கவர்ந்திச்சு!
சும்மாவே மகுடிக்கு ஆடற பாம்பு போல மயங்கி நிற்கிற நான், அவ முகத்தை முழுமையா பார்த்திருந்தா என்னாகி இருப்பேனோ? மை கடவுளே! கற்பனை செய்து பார்க்கவும் கஷ்டமாருக்கே..
அதனால தான் அவ தன் முகத்தைக் காட்டாம இந்தளவுக்கு பிகு பண்ணி என்னைத் தவிக்க விட்டுட்டு இருக்காளோ! ம்க்கும், யாருக்கு தெரியும்?
சுத்தி சுழன்று ஆடினா! திடீர்திடீர்னு முகத்தை ரெண்டு கையால மூடிக்கிட்டு வெட்கப்பட்டா! கூடவே அவ்வப்போது கண்ணை மூடி இயற்கையையும், அந்த சூழலோட சப்தங்களையும் உள் வாங்கிக்கறதையும் கவனிச்சேன்.
கால் பெருவிரலை நிலத்துல ஊன்றி கைகளை விரிச்சி அவ உல்லாசமா ஆடறப்போ, அந்த ட்ரெஸ்சும் குடை போல விரிஞ்சி அவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்திச்சு.
எல்லாத்தைக் காட்டிலும் அவ காலுல ஆறாவதா இருந்த விரல்.. லக்கி சார்ம்! அது அவளுக்கே தனித்துவமானது. குட்டியா, அவளைப் போலவே ரொம்ப கியூட்டா இருந்துச்சு!
திரும்பவும், மோகனாங்குற அதே குரல்!
சட்டுனு தன் ஆட்டம் பாட்டத்தையெல்லாம் நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தவ, நாணத்தோட தலையை குனிச்சிக்கிட்டா! தரை நோக்கி தாழ்ந்த அவளோட நயனக் குடைகளுக்கு உலகத்துல இருந்த அனைத்து பூக்களும் சமர்ப்பணம்..
அவ பக்கத்துல வேறெந்த அழகும் என்னைக் கவரல; ஈர்க்கல; மயக்கல. இந்த உலகத்துல நானும், அவளும் மட்டும் தான் வாழ்ந்துட்டு இருக்கோம்ங்குற நினைப்புல சுற்றம் மறந்துட்டேன்; சகலமும் மறந்துட்டேன்.
இந்த மூணு மாசமாவே உன் நினைவுகளோட சுத்திட்டு இருக்கேன். ஐம் ரியல்லி கிரேஸி அபௌட் யூ மோகனா! யூ ஃபில் மை ஹார்ட் வித் லவ்.. ப்ளீஸ் என்கிட்ட வந்துடு. உன்னவனை ரொம்ப நாள் ஏங்க வைச்சிட மாட்டேல்ல?‘
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
வீட்டு தோட்டத்தில் காலாற நடந்து கொண்டிருந்தான், இளஞ்செழியன்.
காதில் சொருகப்பட்டிருந்த இயர்ஃபோனில்,
“நில்லென்று நீ சொன்னால், என் காலம் நகராதே..
நீ சூடும் பூவெல்லாம், ஒரு போதும் உதிராதே..
காதல் என்னை கேட்கவில்லை..
கேட்டால் அது காதலில்லை..” என்ற ஹரிஹரனின் குரல் குழைந்து கொண்டிருந்தது.
பார்வை செல்லும் இடமெங்கும் இயற்கையும், அதன் வனப்பும் தான்! மனம், செவியோரம் உருகிய குரலிலோ அல்லது சுற்றுப்புறத்தின் அழகிலோ லயிக்கவில்லை. சிந்தனை கடிவாளமில்லாக் குதிரையாய் தறிகெட்டு எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது.
முன்னைய நாள் இரவில், தமிழிசையோடு உரையாடிக் கொண்டிருந்த நினைவு ஆயிரமாவது முறையாக மனக்கண்ணில் ஊர்வலம் வந்தது.
‘அந்த லக்கி சார்ம்! எவ்ளோ அழகு.. என் மோகனாவுக்கும் இருக்குல்ல?’ என யோசித்தவனுக்கு ஏனோ அதை இலகுவாகக் கடந்து செல்ல முடியாதபடிக்கு மனதை ஏதோவொரு இனம்புரியா உணர்வொன்று அழுத்தியது.
“எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது!” என இயலாமையுடன் முணுமுணுத்தவனுக்கு,
‘நான் நலம்’ என கூறிக் கொண்டு அவள் அறை நோக்கி செல்லத் திரும்பிய கணத்தில் மீண்டுமொரு முறை தடுமாறி விழப் போனதும், பதறி ‘பத்திரம்’ கூறுவதற்கு பதிலாக ‘என்னவாயிற்று இவளுக்கு?’ என தான் திகைத்து நின்றதுவும் நினைவில் உதிக்க,
“அவ நல்லா தானே என்கிட்ட பேசிட்டு இருந்தா? திடீர்னு என்னாச்சு..” என தன்னிடமே கேள்வி எழுப்பிப் பார்த்தான். விடை தான் பிடிபடவில்லை.
முடிக்கற்றைகள் மோதி விளையாடிய அவள் முகத்தை தனக்கு அருகே பார்த்ததும், அவ்வளவு நேரமும் அவன் எதில் மோகன வதனம் தேடிக் கொண்டிருந்தானோ.. அந்த நிலவே புவியில் தரை இறங்கி விட்டதோ என வியந்து நின்றானே!
ஒருவேளை அலங்கோலமாக அவிழ்ந்து விழுந்த தன் கார்மேகக் குழலை மொத்தமாக அள்ளி தோளில் வழியவிட்டு முன்புறமாக அவள் எடுத்துவிட முன்பே ஆடவன் அதைப் பார்த்திருந்தால், அவன் நிலைமை?
ஏதேதோ சிந்தனையில் மூச்சடைத்தது, செழியனுக்கு!
தன்னைச் சுற்றி சகலத்தையும் வித்தியாசமாக உணர்ந்தான். மோகனாவை எண்ணி அலை பாய்ந்த தன்மனம், இப்போதெல்லாம் தமிழிசையின் அழகையும் ஆராய்ந்து தொலைக்கிறதே என அதிருப்தியுற்றான்.
காதோரம் ஒலித்த பாடல் வேறு இன்பத்தை அன்றி நிம்மதியின்மையை அள்ளிக் கொடுக்க, இயர்ஃபோனைக் கழற்றி கழுத்தை சுற்றி மாலையாக போட்டுக் கொண்டதோடு பாடலையும் அணைத்து வைத்தான்.
பறவைகளின் கீச்கீச் ஒலி காதை நிறைத்தது.
கண்களை மூடி அவற்றை உள்வாங்கியபடி நடந்தவனின் செவியில், இயற்கையின் சப்தங்களை கிழித்துக் கொண்டு கேட்டது அக்குரல்.
“ஐயோ, கேளுங்க அமலேஷ்! உங்களால முடியுமா முடியாதா?”
மேற்கொண்டு நகராமல் கால்கள் அதே இடத்தில் தேங்கிக நிற்க, சட்டென்று கறுத்துப் போன முகபாவனையோடு மெல்ல எட்டிப் பார்த்தான். இத்தனைக்கும் இருவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பது அநாகரிகமான செயல் என அவன் ஒன்றும் அறியாதவனல்லன்.
அழகுக்காக போடப்பட்டிருந்த தோட்டத்து சீமெந்து இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தனர் இருவரும்.
பார்வையைத் தழைத்து அசவுகரியமாக அமர்ந்திருந்த பாவையை விட்டு அமலேஷின் பார்வை நொடிப் பொழுதேனும் அகலவில்லை என்பதைக் கண்ணுற்றதும் செழியனின் முகம் சுணங்கியது.
தனக்கு உரிமையுள்ள ஒரு பொருள் மாற்றான் கரம் சேர்ந்தாற்போன்ற தவிப்பு அவனை ஆட்கொண்டது.
அந்தக் காட்சியைக் காண விரும்பாமல் அவ்வப்போது இமைகளால் தன் பார்வைக்கு தடை போட்டுக் கொண்டான்.
“என்னால முடியுமா முடியாதானு தானே கேட்குற.. நீ என்னனு நினைக்கிறே தமிழ்?” என சிரிப்பு இழையோடிய குரலில் வினவியவனை கீழே உருட்டி மிதித்தால் என்ன எனத் தோன்றியது, செழியனுக்கு.
தன் எண்ணப்போக்கைக் கண்டு மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டு அங்கிருந்து நகர முயன்றவன்,
“நான் என்ன நினைக்கிறேன்ங்குறது இங்க மேட்டரே இல்ல. என்னோட கண்டிஷனுக்கு உங்களால உடன்பட முடியுமா, முடியாதாங்குறது தான் கேள்வி!” என்ற குரலில்,
‘கண்டிஷனா?’ என்ற யோசனையோடு ஓடாத நீரோடையாய் மீண்டும் அவ்விடத்திலே தேங்கினான்.
“இதெல்லாம் அநியாயம்!” அவன் சலித்துக் கொள்ள,
“ப்ளீஸ், கலியாணம் வரைக்கும் தானே?” என அவள் எரிச்சல் பட, ஏனோ அந்தக் காட்சி ரசனையாய் போயிற்று ஆடவனுக்கு.
“பேசி முடிவு பண்ணியாச்சு! இன்னும் ஒன் வீக்ல கலியாணம்னு இருக்குறப்போ உன்னைத் தொடாம, க்லோஸா பேசிப் பழகாம தள்ளியே நிற்கணும்னு கண்டிஷன் போடறதுலாம் ஓவர்!”
“கேளுங்களேன்..”
“தமிழ்!” என அதட்டி இடை புகுந்த அமலேஷ்,
“லிஸ்ன்! நீ சொன்னதால தான் வீட்டுல ஓகே பண்ணி கலியாணத்துக்கு தேதி குறிச்ச பிறகும் கூட கால், மெசேஜஸ் பண்ணி உன்னைத் தொந்தரவு பண்ணாம அமைதியா இருந்தேன். நமக்குள்ள இன்டிமஸி கிரியேட் பண்ண நினைக்கிறேன், ஆனா நீ ஏதேதோ சொல்லுற!” என குறைபட்டுக் கொள்ள,
“ஆஃப்டர் மேரேஜ் லவ், சீண்டல்ஸ் தான் அழகுங்க. எனக்கு அதான் புடிக்கும்! அதுனால தான் அர்ரேன்ஞ் மேரேஜ் பண்ணிக்கலாம்னு, காலேஜ் டேஸ்ல எல்லாம் இடையிடைல முளைச்ச காளான்களைக் கண்டுக்காம வந்தேன்..” என தன்னிலை விளக்கம் கொடுத்தாள், தமிழிசை.
மறுப்பதற்கில்லை; அவளுக்கு அமலேஷைப் பிடித்திருக்கிறது தான். ஆனால் தொட்டுரசி நெருக்கமாக உரையாட வருவதும், உரிமை எடுத்துக் கொள்வதும் சில நேரங்களில் வெட்கத்தை அன்றி எரிச்சலையும், அசவுகரியத்தையும் கொடுக்கிறதே..
அதனால் தான் இந்த ‘ஆஃப்டர் மேரேஜ்’, நிபந்தனைகள் எல்லாம்! இத்தனைக்கும் காதலைப் பற்றி அவள் அறியாதவள் இல்லை.
‘என் இதயம் உனக்காக துடிக்கிறது; உன் பெயர் சொல்லி கூவிக்கூவி அழைக்கிறது..’ என்ற சிருங்கார உணர்ச்சி ததும்பிய வரிகளைப் படித்து சிலிர்ப்பவள் தான்!
‘நானும் என் புருஷனை இந்த மாதிரி காதலிக்கணும். கலியாணத்துக்கு அப்பறம் என் வாழ்க்கை அவரா மட்டுமே இருக்கணும்’ என சதா ஆயிரமாயிரம் கனாக்கள் கண்டு கொண்டிருக்கிறாள்.
ஆனால் ஏனோ ‘பிடித்தம்’ என்பதைத் தாண்டி, அமலேஷுடன் காதல் கன்றாவி என்ற நினைப்போடு ஒன்ற முடியவில்லை. அவ்வளவே!
மனதின் அடியாழத்திலிருந்து எழுந்த இன்னதென அறியா ஓருணர்வு, அவனைத் தனக்கு அருகே நெருங்க விடாமல் தடுக்குமாறு பெண்ணவளை அவ்வப்போது எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
கூடவே அடிக்கடி செவியோரம் ஒலிக்கும் கிசுகிசுப்புக் குரலும் அவளுக்குள் புதுவித தயக்கங்களை விதைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
“ப்ச், ஹவ் போரிங்!” என்ற சலிப்பின் மூலம் தன் விருப்பமின்மையை தெளிவுற உணர்த்திய அமலேஷின் எதிர்பார்ப்புகளிலும் குறை காண இயலாதே..
எண்ணி இன்னும் ஏழே நாட்களில் திருமணமென்று இருக்குமிடத்து, ‘நெருங்காதே! தொடாதே! உரிமை எடுத்துக் கொள்ளாதே!’ என விசித்திரமான நிபந்தனைகளை விதித்தால் அவனும் என்னதான் செய்ய?
“கலியாணத்துக்கு அப்பறம்..” என தயக்கத்தோடு ஏதோ கூற வாயெடுத்தவளைப் பார்த்து கை அமர்த்தியவன்,
“புரிஞ்சிது தமிழ்!” எனக் கூறிக் கொண்டே தலைகோதும் சாக்கில், தூக்கி கவர்ச்சியான முறையில் அவள் கொண்டையிட்டிருந்த கூந்தலின் ஹேர் கிளிப்பைக் கழற்றி விட,
‘மரமண்டை! அவ அவ்ளோ சொல்லுறா.. ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்..’ என்ற கடுப்பில் நின்றிருந்த செழியனின் விழிகள் காணாத அதிசயத்தைக் கண்டாற்போல் பெரிதாக விரிந்து கொண்டன.
“ஓ காட்! இந்த ஹேர் இப்போ காத்துல அங்கயும் இங்கயும் பறந்து அலங்கோலமாகிடும் அமலேஷ்..” என்ற சிணுங்கலுடன் சடேரென்று இருக்கையை விட்டு எழுந்து கொண்டாள், தமிழிசை.
நெடுநாளைய சிறை வாழ்க்கைக்குப் பிறகான விடுதலை போல், கிளிப்பிலிருந்து விடுபட்டுக் கொண்டு அழகாய் நர்த்தனமாடிய நீள்கூந்தலில் செழியனின் மனம் சறுக்கியது.
முழங்காலைத் தொட்ட முடிக் கற்றைகளை இமைக்க மறந்து பார்த்திருந்தவனின் கண்கள் மெல்ல கீழிறங்கி அவளது பாதங்களில் பதிந்தது.
வலது காலின் ஆறாவது ‘குட்டி விரல்’ அவனைப் பார்த்து உற்சாகமாய் பல்லிளித்தது.
நிகழ் உரைக்காமல், அருகே வீற்றிருந்த மாமரத்தின் தண்டில் முதுகு சாய்த்தவனிடமிருந்து அயர்ச்சியான பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
மனமெங்கும் மோகனமங்கை தரிசனம் கொடுத்து விட்டுச்சென்ற கனவுகளின் எச்சங்கள் உலா வந்து அவனைப் பாடாய்ப் படுத்தலாயின.
அவர்களது சம்பாஷைனைகள் எதுவும் காதில் ஏறவில்லை; அவளை விட்டு க்ஷணப் பொழுதேனும் பார்வையை விலக்கிக் கொள்ள மனமில்லை. அந்தோ, மன்னவன் நிலை படுபரிதாபம் தான்!
“ம்..மோகனா!” என தவிப்பு தீராமல் அழைத்துப் பார்த்தவன் ஏறி இறங்கிய நெஞ்சத்தோடு மெல்ல விழி மூடியதால், சட்டென்று அவள் துள்ளி விழுந்து பார்வையை 180°’க்கு சுழற்றிய காட்சியை துரதிஷ்டவசமாகத் தவற விட்டான்.
நிமிடங்கள் காற்றோடு கரைய, எவ்வளவு நேரம் தான் அப்படியே சிலையென நின்றிருந்தானோ..
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்ற குழைவோடு அமலேஷ் அவளை நோக்கி அடியெடுத்து வைத்ததும், “ஏய்ய்!!!” என தன்னை மறந்து குரலுயர்த்தி கத்தியிருந்தான்.
அமலேஷின் பார்வையில் கோபக்கனல் தெறிக்க, தம்மை நெருங்கி வந்த செழியனைக் கண்டுவிட்டு விழி தாழ்த்தினாள் மங்கை,
“இங்க என்ன பண்ணுறீங்க ப்ரோ?” என்ற வினாவோடு!
அதன் பிறகே சுயம் தெளிந்தது செழியனுக்கு. ‘என்ன பண்ணிட்ட செழி? பாரு, உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு!’ என அவசரப்பட்டு முந்திக் கொண்டதை சுட்டிக் காட்டி கடிந்து கொண்ட மனதை இரு குட்டு வைத்து அடக்கியவன்,
“அது..” என தயங்கி நிற்கும் போதே,
“வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங் ஹியர் மேன்?” என நேற்றைய கடுப்பையும் சேர்த்து வள்ளென விழுந்தான், அமலேஷ்.
“ஷ்ஷ், அமலேஷ்!” என பதறிக் கொண்டு அவனைத் தடுத்த தமிழிசை,
“தெரியாம வந்திருப்பாரு போல, ப்ளீஸ் கோபப்படாதிங்க..” என அண்ணனின் நண்பனுக்காக பரிந்து கொண்டு வந்தாள்.
தலைக்கு மேல் பூக்கூடை சொரிந்தாற்போல் மனம் குளிர்ந்து போனவன் அவளது கூற்றை ஆமோதிக்கும் விதமாக, “ஆக்சுவலி இதான் உண்மையும் கூட! நான் கால் பேசிட்டே உங்க ரெண்டு பேரையும் கவனிக்காம இங்க வந்துட்டேன்..” என்றான் கையிலிருந்த அலைபேசியைக் காட்டி!
என்னதான் என்றாலும், அவர்களை ஒட்டுக் கேட்டது நாகரிகமற்ற செயல் என மனம் வேறு நேரங்காலம் பாராமல் இடித்துரைத்து கடுப்பேற்றியது.
எரிச்சலை விழுங்கிக் கொண்டு சங்கடத்தில் நெளிய வேண்டிய நிர்ப்பந்தம்!
அமலேஷ் பற்களை நறநறக்க, தாடையைப் பறபறவென தேய்த்தபடி அங்கிருந்து விருட்டென்று நகர்ந்த செழியன், அதே மாமர நிழலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
“டேக் கேர்!” என்று கொண்டே குனிந்து, அவளின் அனுமதியை மீறி பட்டும்படாமலும் பாவையின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டவனது பார்வை செழியனில் சந்தேகமாய்ப் பதிந்தது.
திடீரென்று எங்கிருந்து வந்ததோ அவ்வளவு கோபம்! உடல் உஷ்ணமேறி, செந்நிறம் புரையோடிய கண்களோடு கை முஷ்டிகளை இறுக்கினான் செழியன்.
வெளித் தோற்றத்துக்கு மாற்றமாக உள்ளம் கிடந்து தவித்தது தான் அவலம்!