‘மைரா! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்ததுலேருந்து அம்மாவுக்கு உதவியா இருக்குறவ..
பொம்பள புள்ள இல்லாத குறையை தீர்த்துக்க, அனாதை இல்லத்துல வளர்ந்தவளுக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்து படிக்க வைச்சதெல்லாம் என்னைப் பெத்தவங்க தானாம்னு, அப்பாவோட காரியம் அன்னைக்கு அவ சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன்.
அப்பாவோட மறைவுக்கு பிறகு அம்மாவும் அடிக்கடி நோய் வாய்ப்பட்டாங்க! நானும் அங்க இங்க வெளிய போறேன்; வரேன்.
அதனால அம்மாவுக்கு உதவியா எங்க வீட்டுலயே வந்து தங்கிக்கோனு வற்புறுத்தி அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன். அவ படிச்சவ! ஸோ சம்பளம் கொடுத்து வீட்டோட நர்ஸா வைச்சிருக்கேன்.
அம்மாவுக்கு அவள்னா ரொம்ப இஷ்டம். குற்றம் குறை சொல்றதுக்கு எதுவுமில்லை, நல்ல பண்பான, குணமான பொண்ணு.
இப்படியே, மோகனா நினைவுகளோட என் நாட்கள் கழிஞ்சிட்டு இருக்குறப்போ, அம்மா நேத்து திடீர்னு நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு தொப்புனு விழுந்துட்டாங்க.
பதறித் துடிச்சி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதோட எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னது மைரா தான்!
உடனே கிளம்பி அங்க போனேனா.. நீ ஒரு கலியாணம் பண்ணிக்கோடா! என் கட்டை நிம்மதியா வேகும்னு அம்மா ஒரே அழுகை. சட்டுனு மோனாவோட நினைவு தான் நெஞ்சுல ஊத்தெடுத்துச்சு.
என் சிரிப்புல மண்ணை அள்ளி போடறாப்புல நானே பொண்ணு பார்த்து வைச்சிருக்கேன், என் பையன் என் பேச்சைத் தட்ட மாட்டாங்குற நம்பிக்கை இருக்குனு வீட்டுக்கு வந்த கையோட தலைல பெரிய இடியா இறக்கி வைச்சிட்டாங்க, மாதாஜி!
உன் கலியாணத்தைப் பார்க்கணும்னு அப்பா ஆசைப்பட்டாரு. இப்போதைக்கு வேணாம்னு நீ தான் பிடிவாதமா மறுத்துட்ட! அவரு போய் சேர்ந்துட்டாரு. இப்போ என் நெஞ்சுல சுமை ஏறி அழுத்திட்டே இருக்குனு நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு குலுங்கி அழுத அம்மாவை என்ன சொல்லி சமாளிக்கிறதுனு புரியல.
நீ கட்டிக்கிட்டு தான் ஆகணும்னு அவங்க என்னை வற்புறுத்தல; நீ கட்டிக்கலேன்னா செத்து போய்டுவேன்னு மத்தவங்களைப் போலவே எமோஷனல் பிளாக்மெயில் பண்ணல. அழுதாங்க!
திடீர்னு அட்டாக் வந்ததும் அவங்க பயந்துட்டாங்க போல! என்னை இப்படி ஒண்டிக்கட்டையா விட்டுட்டு போய்டுவேனோனு ரொம்ப அழுதாங்க.
அம்மா மனசை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது! மறுக்கல, அந்த அழுகையோட என் மனசுமே மெல்ல மெல்ல மெழுகா உருகிப் போச்சு! அதுக்குனு வேற ஒருத்தங்களை கலியாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லற அளவுக்கு பலவீனமாகிடல.
என்னை மொத்தமா ஆக்கிரமிச்சி, என் இதயத்தை ஆட்சி செய்துட்டு இருக்குற மோகனாவோட நினைவுகளை சட்டுனு எப்படி ஓரம் தள்ள முடியும்?
ம்ம்கூம், வாய்ப்பில்லை; நான் அவளை மறக்குறதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பில்லை. அவ எனக்குள்ளயே ஊறிப் போயிட்டா! என் மனசை மொத்தமா கலைச்சி தன் வசப்படுத்திக்கிட்டா..
அம்மாவா, கனவுக் காதலியாங்குற விடை கண்டறிய முடியாத குழப்பத்துல வசமா சிக்கிக்கிட்டேன். இருதலைக் கொள்ளியா நிலைமையை சமாளிக்க முடியாம திணறி போய் நிற்கிறேன்.
அம்மா ஈஸ் மை பெஸ்டு ஃபிரெண்ட்! நான் இதுவரை அவங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்ல.
ச்சிச்சீ! புதுசா அறிமுகமான.. அதுவும் கனவுல கண்ட பெண்ணுக்காக அம்மா மனசை வருத்துறியா செழினு என் மனசே என்னைக் கேவலமா திட்டி காறி துப்பிச்சு!
இல்ல, இல்ல! கண்டிப்பா என்னால என் அம்மா மனசை வருத்த முடியாது. அப்படினா மோகனா?
ஓ மை கடவுளே! ஏன் உனக்கு என்மேல இவ்ளோ கொலைவெறி? அவளை நிஜத்துல இல்லாம, கனவுல வர வைச்சு வேடிக்கைப் பார்த்ததோட விட்டுடாம, அம்மா மனசுல இந்த மாதிரியான ஒரு ஆசையை விதைச்சுட்டியே!
அம்மா என் உயிரு! மோகனா? அவ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவ.. என்னோட நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே அவ ஒருத்தியா இருக்கணும்னு ரொம்ப ஆசைப்படறேன்; ஏங்கறேன்.
அம்மாவோட கதறல் என் காதுக்குள்ள இன்னும் கேட்டுட்டே இருக்கு! வேறு வழியில்லை. மனசை ஆறுதல் படுத்துறத்துக்காக நான் பொய்யாவாவது சம்மதிச்சி தான் ஆகணும்னு புரிஞ்சிக்கிட்டேன்.
சரி.. நான் கட்டிக்கிறேன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன். அவங்க சந்தோசம் இருக்கே! அவங்க முகம் மகிழ்ச்சியில் எப்படி ஜொலித்ததுனு வர்ணிக்க, ஐ ஹேவ் நோ வர்ட்ஸ்!
என் கண்ணுக்குட்டிடா நீயினு ஆறேழு வயசு வாண்டைக் கொஞ்சுறாப்ல என் கன்னத்தைத் தொட்டு கொஞ்சினதும், நெஞ்சே வெடிச்சி போறா மாதிரி வேதனையை உணர்ந்தேன்.
பொய்யான நம்பிக்கையைக் கொடுத்து, இப்போ நான் கொடுத்த சந்தோசத்துக்கு நிகரா கண்ணீரையும் வலியையும் கொடுத்துட போறேனோனு புதுவித அச்சம் என் மனசுக்குள்ள துளிர்விட்டுச்சு!
எல்லாம் சரிதான்! கடைசியா, நான் உனக்காக பார்த்து வைச்ச பொண்ணுனு சொல்லி அம்மா கை காட்டுனது யாரைத் தெரியுமா?
மைரா!
கூடவே, உன் அப்பாவும் இதைத் தான் விரும்பினாருனு எக்ஸ்ட்ரா தகவலை சொல்லி என்னை ஷாக் ஆக வைச்சிட்டாங்க. மைரா எனக்கு தங்கச்சியை ஒத்தவ! அவளைப் போய் எப்படி?
ப்ச், தலைக்குள்ள ஆயிரம் சிந்தனை மனுஷனைப்படுத்தி எடுக்குது!
மோகனா! மோனா! உன்னைக் கண்டு பிடிக்க நான் விரிச்ச வலைகளில் ஒன்னுலயாவது நீ சிக்கியிருக்க கூடாதா? நான் எடுக்குற முயற்சிகள் வீணாப் போகுறப்போ மனசுல உள்ள நம்பிக்கையும் தேயுது! வாழ்க்கையே வெறுத்து போகுது!
நான் உனக்கானவனு நம்பிக்கை கொடுத்தல்ல? ப்ளீஸ் எங்க இருந்தாலும் என் கண்ணு முன்னாடி வந்துடு! உனக்காக தான் நான் இங்க தனிமைல காத்திருக்கேன்.
வெயிட்டிங் டு சீ யூ, மோகனா!‘
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
‘வருகிறேன்’ என கூறிக் கொண்டு அமலேஷ் அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டான்.
அவன் சென்று மறைந்த திசையைப் பார்த்திருந்தவளின் முதுகை, இறுகிய கைகளை சற்றும் தளர்த்தாமல் சிவந்த கண்களும், வேக மூச்சுக்களை வெளியேற்றிய நாசியுமாய் வெறித்துப் பார்த்திருந்தான், செழியன்.
அமலேஷ் அவளை முத்தமிட்ட காட்சி மீண்டும் மீண்டும் நெஞ்சில் படமாய் ஓடி அவனை வெறியேற்றிக் கொண்டிருக்க,
‘அவன் தன்னோட வருங்கால மனைவியை முத்தமிட்டதுல என்ன தவறை கண்டுட்ட செழி? எதுக்கு நீ டென்ஷன் ஆகுற.. தமிழ் உன் நண்பனுக்கு தங்கச்சி எங்குறதைத் தாண்டி உனக்கும் அவளுக்குமான உறவுனு சொல்லிக்க எந்த மண்ணுமே இல்ல. புரிஞ்சிக்கோ!’ என மீண்டும் மீண்டும் நிதர்சனத்தை உணர்த்த விழைந்தது, சற்றே பக்குவப்பட்ட மனம்.
அந்த உண்மை ஏனோ கசந்தது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்களை இறுக மூடித் திறந்து ஆழ மூச்செறிந்தவனைப் பாடாய்ப்படுத்தியது, அசைந்தாடிக் கொண்டிருந்த அவளின் நீள்கூந்தல்.
மோகன மங்கையின் கருங்குழலையும், தமிழிசையின் கார்மேகக் கூந்தலையும் ஒப்பிட்டுப் பார்த்த மனம், இருவரது வலது காலின் ஆறாம் விரலில் வந்து கேள்வியோடு தொக்கி நின்றது.
‘ப்ச், இசைக்கு நீண்ட கூந்தல் இருக்குனு அவ என் மோகனா ஆகிடுவாளா? இதென்ன அநியாயமாருக்கு..’ என சாதாரணமாகக் கூறி ஆர்ப்பரித்த மனதை அமைதிப்படுத்தத் தான் முயன்றான்.
இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்து உள்ளுணர்வு தன்னிடம் உணர்த்த வரும் நற்சேதியைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறித் தவித்தவனை ஏதேதோ கற்பனைகள் சுயம் மறக்கச் செய்தன; மகிழ்ச்சிப்படுத்தின.
சற்று நேரத்துக்கு முன்பு வரை இடையுறாது புத்திமதி கூறிக் கொண்டிருந்த அவனது பக்குவப்பட்ட மனம்,
‘ஆமா, ஏன் இவ அவளா இருக்கக் கூடாது? ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ஒற்றுமைகள் இருக்கே செழி! அதோட, தமிழும் டேன்ஸ் டீச்சர் தான்..’ என அந்தர்பல்டி அடித்து சந்தேக விதைகளை அவனுக்குள் விதைத்து விட்டது.
ஏனோ, அந்த ஐயமே இனித்தது செழியனுக்கு.
“இருக்குமோ!?” என ஆர்வமிகுதியில் வாய் விட்டே முணுமுணுத்தவனுக்கு பரவசத்தில் இருதயம் படபடத்தது; கால்கள் துவண்டுன. நெஞ்சாங்கூடு தீரா தவிப்போடு விம்மித் தணிந்தது.
உலர்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பயணமான எச்சில் தொண்டைக் குழியைத் தாண்டி இறங்க மறுக்க, அடாம்ஸ் ஆப்பிள் அதிவேகமாக ஏறி இறங்கி அதை உள்ளே தள்ள முயன்றது.
“கடவுளே!” என அவஸ்தை தாளாமல் முனகியவனின் சந்தேகத்துக்கான விடை கிடைக்கப் பெற்றதோ இல்லையோ.. அவன் உற்சாகப்பட்டு, களித்து, மகிழ்ந்தே சோர்ந்து போனான்.
எண்ணம் முழுவதும் தமிழிசை நிறைந்தாள்.
அவள் மணமாக இருக்கும் மணப்பெண் என்பதை மறந்தான்! அமலேஷ் என்ற ஜீவன் பற்றி அம்னீஷியா பேசண்ட் போல் முற்று முழுதாக மறந்து, மகிழ்ந்து தொலைத்தான். இருவருக்கும் இன்னும் ஒரே வாரத்தில் திருமணம் நடந்தேற இருக்கிறதென தற்காலிகமாக மறந்து போனான்.
மதுவுண்ட வண்டாய், சந்தேக வினா கொடுத்த திந்திப்பில் மயங்கிக் கிடந்தான், கட்டிளங்காளை!
புறமுதுகு காட்டி நின்றவளை விட்டு விழி அகற்றாமல், சிந்தனைக் குதிரையே பல மைல்களுக்கு அப்பால் ஓட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்,
“தமிழிசை!” என்று அழைத்தான், ஆழ்ந்த குரலில்.
அந்த அழைப்பு, காதோர மர்மக் கிசுகிசுப்புகளுக்கான ரகசியம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் நின்றிருந்தவளை எட்டாமல் போகவே, அசையாமல் நின்றவளை வேக எட்டுக்களுடன் நெருங்கி வந்தவன்,
“இசை!!” என்றழைத்தான் மீண்டும், சற்றே குரலுயர்த்தி..
அவன் ‘மோகனா’ என்று அழைத்திருந்தால், துள்ளி விழும் அவளின் மேனியே அவனுக்கு உண்மையை உணர்த்தி இருக்க வாய்ப்புண்டு! ஆனால் அவன் அழைத்தது தமிழிசை என்றாயிற்றே!?
இனி எங்ஙனம் அவள் திடுக்கிடுவதும், அவன் உண்மையை ஊகித்து, ஒப்பிட்டு அறிந்து கொள்வதுவும்? எல்லாம் விதி விட்ட வழிதான்!
அவனின் உரத்த அழைப்பில், “அ..ஆங்!” என திடுக்கிட்டு இயல்புக்கு மீண்டவள் சிந்தை தெளியப் பெறாதவளாய் அருகே நின்றிருந்தவனைக் கவனியாமல் வீட்டை நோக்கி நடக்க எத்தனிக்க,
“தமிழிசை!” என விளித்து அவளின் இருபக்க தோள் பற்றி வேகமாக உலுக்கினான் செழியன்.
அந்தத் தொடுகை, பாவையின் மென்னுடலில் அதிகளவான மின்சாரத்தை ஒரே நேரத்தில் பாய்ச்சிச் செல்ல, “ஹக்” என்ற விக்கலோடு சடேரென்று துள்ளி விழுந்தவள் தனக்கு முன்னிருந்தவனின் நெஞ்சோடு மோதி நின்றாள்.
இனி கேட்கவா வேண்டும்? ஏற்கனவே அவளின் அருகாமையில் உருகி நின்றிருந்தவன், பூக்குவியலாய் நெஞ்சில் வந்து உரசி நின்றவளின் நெருக்கத்தில் மூச்சு முட்டிப் போனான்.
முகத்தை ஸ்பரிசித்துச் சென்ற அவளின் கூந்தல் கற்றைகள், ஆடவன் மனதை மயிலிறகால் வருடி இதப்படுத்தின; மெய்மறக்கச் செய்தன.
அவனின் உறைநிலையைக் கலைக்கும் விதமாக சட்டென்று சுதாரித்து விலகிய தமிழிசை, “ஸ்.. சாரி!” என மன்னிப்பு இறைஞ்சியதோடு,
“ப்.. பயத்துல தடுமாறி.. அப்படியே உங்க மேல விழுந்துட்டேன். சாரி!” என படபடத்த நெஞ்சத்தோடு திக்கித் திணறினாள்.
உதட்டில் நெளிந்த புன்னகை மாறாமல், “என்ன லோகத்துல இருந்திங்க மேடம்.. எந்த கோட்டையை முற்றுகை இடப் போறதா உத்தேசம்?” என்று கேலி வழிந்தோடிய குரலில் வினவியவனின் பார்வை அவளது நீள்வட்ட முகத்தை மிகத் தீவிரமாக வட்டமடித்தது.
மோகனாவின் கண்ணுக்குக் கீழே வீற்றிருக்கும் அந்த அசரடிக்கும் கருமச்சத்தைப் பாவையின் முகமதில் தேடிக் களைத்தவன் ஈற்றில் ஏமாற்றத்தைத் தழுவினான்.
விருந்து முடிந்த கையோடு, ‘எங்கே அந்த ஸ்வீட் பீடாவைக் காணோம்?’ என அலைபாயும் கண்களைப் போல் சந்தேகம் ஊர்ஜிதமாக முன்பே சந்தோசப்பட்டுக் களைத்திருந்தவன்,
‘எங்கே அந்த மச்சத்தைக் காணோம்!’ என ஒரு கணம் திகைத்தான். மறுகணம் நிதர்ஷனம் கொடுத்த செருப்படியில் அயர்வுற்றான்.
‘அவளா இருக்குமோனு நான் சந்தேகமா கேட்டேன் தான்! ஆனா நீதான் தேடிப் பார்க்காமலே சந்தோசப்பட்டு தொலைச்சிட்டே!’ என பூரா குற்றத்தையும் அவன் மீதே சுமத்தி திருப்திபட்டுக் கொண்டது மனம்.
நெடுநாட்களாய் ஆசைப்பட்டு அன்னையிடம் பிடிவாதம் பிடித்து வாங்கிக் பெற்றுக் கொண்ட பந்தை, ஒரே மேட்ச்சில் தொலைத்து விட்டு கைசேதப்பட்டு நிற்கும் சிறுவனைப் போல்,
‘மோகனா!’ என ஏங்கி நின்றான், ஆடவன்.
இவள் தன் மோகனாவாக இருக்குமென்று அதீத உவகை கொண்டிருந்த அவனின் உள்ளம், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் சிறு குழந்தையாய் விம்மியது.
அகத்தின் பிரதிபலிப்பாய் கண்களும் சட்டென்று கலங்கிப் போக, அந்நேரம் பார்த்து அவன் பார்வைக்கு முன்னால் பலமாகக் கை விசிறி, “ஹா..ல்..லோ!” என்று சத்தம் வைத்தாள் தமிழ்.
முதலில் தெளிந்தான்; பின் ஏமாற்றத்தைத் தனக்குள் புதைத்துக் கொள்ள முடியாமல் திருதிருத்தான். வில்லாய் வளைந்த புருவங்களுடன் தன்னைப் பார்த்திருந்தவளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினான்; இவை யாவும் ஒரே நொடியில் நடந்தேறியவை!
“என்னை சொல்லிட்டு நீங்க மட்டும் என்னவாம்.. எந்த உலகத்துக்கு ட்ராவெல் பண்ண போறீங்க?”
சற்றே பின்னகர்ந்து நின்று தன்னை நிதானப்படுத்திக் கொள்வதற்காக தலை கோதியவன், “அது வந்து, நான் ஏதோ யோசனைல இருந்துட்டேன்..” என சமாளிக்கப் பார்க்க,
“ரியல்லி?” என பொய்யாக வியந்தவள் சற்றுத் தயங்கி விட்டு,
“அது.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கும், உங்க காதலிக்குமிடைல ஏதாவது பிரச்சனையா என்ன?” என்று கேட்டாள், வாடிப் போயிருந்த அவனின் முகத்தைப் பார்த்து வருந்தியவளாய்!
சுருக்கென்று நெஞ்சில் ஒரு வலியை உணர்ந்தான், செழியன்.
‘பிரச்சனையா? இல்லையே! ஆனா அவளை மட்டுமே சுமந்துட்டு இருந்த என் இதயம் இப்போல்லாம் உன் பக்கத்துல உருகி நிற்கிறதை நினைச்சு வருந்துறேன். என்னை நினைச்சே ரொம்ப வெட்கப்படறேன், தமிழிசை!
எனக்கு என்னாச்சுனு புரியல. நான் நல்லாத் தான் இருந்தேன். எப்போ இந்த ஊருக்கு வந்தேனோ.. எப்போ உன்னைப் பார்த்தேனோ.. அப்போத்துல இருந்து என் உறுதி ஆட்டங்காணுது!
உன் கூந்தல்.. லக்கி சார்ம்.. உன் டேஸ்ட் எல்லாம் என் மோகனாவை ஒத்திருக்குது! அவை தான் மோனாவையும், உன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து எதை எதையோ யோசிக்க வைக்குது.
உன் தோற்றமும், டேஸ்டும் தான் உன்மேல எனக்கு ஈர்ப்பை உண்டு பண்ணி இருக்கணும். ஆனா இப்போ நான் புரிஞ்சிக்கிட்டேன் தமிழிசை. நீயும், என் மோகனாவும் என்னைக்கும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்ல.
எப்பவும் நீ, தமிழிசை தான்! என் மோகனாவாக முடியாது. நீ அமலேஷின் உடைமை! அவனுக்காக நிச்சயிக்கப்பட்டவ!
பாரு, இப்போ கூட இந்த உண்மையை ஏத்துக்க முடியாம மனசு கிடந்து தவிக்குது. உள்ளுக்குள்ள வலிக்குது. நீ என் மோகனா இல்லைங்குற வேதனை தான் என் முகத்துல அப்பட்டமா பிரதிபலிக்குது..’ என மனதினுள் கூறிக் கொண்டவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
இவள் தன் மோகனா இல்லையென்று உறுதியாகிற்று! இனி தவிர்க்க முடியாத தேவைகளின் நிமித்தமன்றி, இவளை சந்திப்பற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது என சபதம் எடுத்துக் கொண்டான் மனதினுள்!
மோகனாவைத் தேடித் தவிக்கும் அதே மனம் தான் தமிழிசையைக் காணும் நேரங்களில் மயங்கி நிற்கிறது. தன்னிலை மறக்கிறது.
‘ச்சீ, கேவலம்!’ என தன்னைத் தானே தூற்றிக் கொண்டவன் உணர்வின்றி அவளை வெறிக்க வெறிக்க நோக்கினான்.
பதில் எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்குள் அவனின் வெறித்த பார்வை குளிர் பரப்பிச் செல்ல, திடீரென உருவாகிய தடுமாற்றத்தை தனக்குள் விழுங்கிக் கொண்டு,
“சாரி, இதை நான் உங்ககிட்ட இதைக் கேட்டிருக்க கூடாது தான்! உ..உங்க பெர்சனல் இல்ல?” என சொற்களைக் கோர்த்தாள்.