‘அதன் பிறகான ஒரு வாரமும் ஏதோ ஒருமாதிரி இறுக்கமா தான் கழிந்து போச்சு! எதுலயும் நாட்டம் இல்ல. காலேஜ் போய் வந்ததோட படுத்து தூங்கினா, நள்ளிரவுல எழுந்து நானே எதையாவது சமைச்சி சாப்பிடறதோட நேரம் போய்டும்.
என் வாழ்க்கை இப்படி அசுவாரஷ்யமா போய்க்கிட்டு இருந்தப்ப மோகனாவை நான் திரும்பவும் என் கனவுல பார்த்தேன்.
ஏன்னு தெரியல, அழுதா! விடாம அழுதுட்டே இருந்தா! அழுகைல சோர்ந்த அவ கண்களும், தடிச்ச இமைக்குடைகளும் என் மனசை வருத்திச்சு. யாரோ என்னை நிராயுதபாணியா நிறுத்தி வைச்சு சாட்டையால அடிச்சி கதறக் கதற கொடுமைப்படுத்துற மாதிரி அதீத வேதனையை உணர்ந்தேன்.
வழமையான அதே அருவியோரத்துல, மழைல நனைஞ்சிட்டே விம்மி விம்மி அழுதுட்டு இருந்தா, என் மோகனா! அவ முகத்தை நான் பார்க்கல. அழுது சிவந்த கண்கள் மட்டும் எனக்கு சோக விருந்தாச்சு.
ரொம்ப மோசமான இரவு! மோகனாவை என் கனவுல வரவழைச்சி சந்தோசத்தை அள்ளிக் கொடுத்த அதே மறைமதி நாள் தான், வழமைக்கு மாற்றமா இந்த வாட்டி வேதனையையும், கண்ணீரையும் ஒருசேரக் கொடுத்தது.
சொர்க்கமா இனிச்ச கனாக்கள், எனக்கு பாகற்காயா கசந்தது. கவலையில் தோய்ந்த அவ முகம் என்னை உயிரோட வதைத்தது.
உஃப்! எவ்ளோ கஷ்டம்.. தாங்கிக்கவே முடியல.
எனக்கென்னவோ, வீட்டுல நடந்துட்டு இருந்த மைராவோட பிரச்சனைக்கு தீர்வு காணாம, அதை அப்படியே விட்டு வைச்சிட்டு நான் என் பாட்டுல சுத்தி திரியிறதை அவ எச்சரிக்கிறாப்ல ஒரு பிரமை!
ஒருவேளை அதனால தான் அவ அந்த அழுகை அழுதாவோ? முட்டாள்தனமா நான் எந்த முடிவும் எடுத்துடக்கூடாதுனு அந்த அழுகை மூலமா எனக்கு உணர்த்த வந்தாளோ! எனக்கு மனசே சரியில்ல.
எப்படி இருந்தவனை இப்படி ஆக்கி வைச்சிட்டிங்களே! கடவுளே, உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா? என்மேல கொஞ்சூண்டு இரக்கம் காட்டக் கூடாதா என்ன..
இதுக்கு மேலயும் என் மனசுல இருக்குறதை உள்ளுக்குள்ளயே பூட்டி வைச்சிட்டா, தாங்க முடியாம என் குட்டி ஹார்ட்டு வெடிச்சி போயிருமோனு ஒரு புது பயம் வேற என் மனசைத் தொத்திக்கிச்சு.
சிரிக்கிறதாவது! கலாய்ச்சு என் மானத்தைக் கப்பலேற்றித் தொலைக்கிறதாவது! ம்க்கும், எது நடந்தா என்னனு மோகனாவைப் பத்தி மொத்தத்தையும் மறுநாளே சித்து கிட்ட பகிர்ந்து கொண்டேன்.
இருந்தாலும் என்ன பண்ணுறது.. அதான் ஏதோவொரு குருட்டு நம்பிக்கைல எல்லாத்தையும் சொல்லிட்டேனே? இனி இதையெல்லாம் பொறுத்து தான் ஆகணும்னு வாயை மூடிட்டு சும்மாருந்தேன்.
ஆனாலும் ஒரு விஷயத்தை மறுக்கல; மறைக்க விரும்பவும் இல்ல. என் மனசை அழுத்திட்டு இருந்த பெரும்பாரம் முக்காவாசிக்கு மேல குறைஞ்சு போச்சு, துணைக்குனு பக்கத்துல ஒருத்தன் வந்துட்டதும்! ஓரளவு ரிலாக்ஸ் ஆகிட்டேன்.
இப்போ மைரா விஷயத்துக்கு வீட்டுல தடா போட வேண்டிய வேலை மட்டும் தான் பாக்கினு இருந்தப்ப அம்மா உனக்காக பார்த்து வைச்ச பொண்ணு யாருனு ரொம்ப ஆர்வமா கேட்டான் என் நண்பன்.
இதுல மறைக்கிறதுக்கு என்னருக்கு மைராவைக் கை காட்டிட்டேன்.
அடடா! அப்போ அவன் மூஞ்சிய பார்க்கணுமே! என் பிரச்சனைக்கான தீர்வு தொலைவுல இல்ல, என் பக்கத்துலயே தான் இருந்திருக்கு. நான் தான் புரிஞ்சிக்காம கவலைப்பட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சப்ப சிரிப்பு தான் வந்துச்சு.
சட்டுனு புஸ்வானமாகிப் போன அவன் முகத்தை சகல வர்ணனைகளோட உவமிக்க ரொம்ப ஆசையாருக்கு! இஞ்சி தின்ன மங்கினு ஒரே லைன்ல சொல்லிடலாம், தப்பில்ல!
ஆஹா! அடடா! இதுவல்லவா கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சினு சத்தம் போட்டு சிரிச்சேன்; அவனைப் போலவே வாய் வலிக்க சிரிச்சி கடுப்பேத்தி திருப்திப் பட்டுக்கிட்டேன்.
அட ஆமாங்க, இன்னுமேவா புரியல?
அவன் தவிச்ச தவிப்பைப் பார்த்தே மைராவைக் காதலிக்கிறான்னு புரிஞ்சிக்கிட்டேன். அவன் பேசுனதை வைச்சு அவளுக்குமே சித்து மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.
இதுக்கு மேல வேறென்ன வேணும்?
மத்த நாளே அம்மா கிட்ட விஷயத்தைப் போட்டு உடைச்சிட்டேனா.. அதுக்கு மேல அவங்களால வாயைத் திறக்கவே முடியல. அவளைப் படிக்க வைச்சு ஆளாக்கி விட்ட நன்றிக் கடனுக்காக தான், மறுத்துப் பேசாம வாயை மூடிட்டு நின்னுருக்கா போலனு ரொம்ப வருத்தப்பட்டாங்க.
இனி என்ன.. டும் டும் தான்!
சித்து கிட்ட உன் அம்மா அப்பாவை முறைப்படி பொண்ணு கேட்டு வர சொல்லுனு தலை வருடி சொன்னதோட அம்மா கப்சிப்; மேற்கொண்டு என்கிட்ட எதுவும் பேசல.
அவங்களும் பாவம் தான்! மருமகளைப் பார்க்க ஆசை இருக்காதா என்ன? ஆனா என்னாலயும் என்ன தான் பண்ணிட முடியும், சொல்லுங்க? மோகனா என் கண்ணு முன்னாடி வந்துட்டா நான் ஏன் கலியாணமே வேணாம்னு மறுக்க போறேனாம்..
வாய் கொடுத்து சிக்கலை விலைக்கு வாங்குவானேன்னு நானும் அமைதியாவே ஒதுங்கி நின்னுட்டேன். கூடவே, வீட்டுல இருக்க இருக்க.. என்னைக் காணக் காண அம்மா மனசுல மருமகளை பார்க்க வேணும்ங்குற ஆசை வந்துடக்கூடாது இல்லையா?
அதுனால இம்போர்ட்டண்ட் வொர்க்னு சொல்லிக்கிட்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளிய வரத் தொடங்கிட்டேன். தேவையைத் தவிர வீட்டு பக்கம் போறதையே குறைச்சிக்கிட்டேன்.
மைரா என்னைப் புரிஞ்சிக்கிட்டு அம்மாவுக்கு உதவியா நானே இருந்துக்குறேன்னு சொன்னதால, அம்மாவைத் தனியா விட்டுட்டு வெளிய வந்து தங்குறேனேனு கவலைப்பட வேண்டிய அவசியம் ஏற்படல!
ஷப்பா, ஒரு வழியா காளானா முளைச்ச புதுப் பிரச்சனை தீர்ந்து போய்டுச்சு! இப்போ நான் நிம்மதியா, சந்தோசமா இருக்கேன். மோகனாவோட நினைவுகள் சதா என் மனசைத் தாலாட்டுது!
மயக்குறா; நான் மதி மயங்கி நிற்கிறேன். சுத்தி சுழன்று நடனமாடறா; அந்த நளினப் பாதாளங்களில் நான் சறுக்கி விழுறேன். சிரிக்கிறா; பனிக்கட்டியா உறையிறேன். கண்ணை சுருக்கி முறைக்கிறா; நான் ரசிக்கிறேன். அழுறா; தவிக்கிறேன்.
இதென்ன பைத்தியகாரத்தனம்.. எங்கே அந்த செழியன்ங்குற அப்பாவி மானஸ்தன்? ஆளையே காணோமே.. இவ வருகையை அறிஞ்சு, பெட்டி படுக்கையைத் தூக்கிட்டு ஊரை விட்டு நீங்கிட்டானோ..
மோகன ஸ்பரிஷம் தென்றலா என்னைத் தீண்டிட்டு போகுது! நாற்றிசையிலும் அவளை மட்டுமே பார்க்குறேன்; ரசிக்கிறேன்; மயங்குறேன்.
மோகனா! இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாதா? மாதக்கணக்கா தொடர்கதையா நீளுதே கண்மணி!‘
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
நட்சத்திர விளக்குகளுக்கு நடுவே தேய்பிறை நிலவு காய்ந்து கொண்டிருந்த அவ்விராப் பொழுதில், நெற்றியை உள்ளங்கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்தான், செழியன்.
ஏதேதோ சிந்தனைகள் மனதை அலைக் கழித்துக் கொண்டிருக்க, உறக்கம் என்பது எட்டாக்கனியாய் போய்விட்டது ஆடவனுக்கு.
பஞ்சணையில் அங்குமிங்குமாய் உருண்டு உறங்க முற்பட்டவன் இறுதியில் தோல்வியைத் தன் வசமாக்கிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் கொட்டக்கொட்ட முழித்திருக்கிறான்.
இனிமேல் தமிழிசையை நேர்கொண்டு சந்திக்கவே கூடாது என வீராவேஷமாய் சபதம் எடுத்தாயிற்று! அதை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்லவெனத் தோன்றியது அவனுக்கு.
இரவுணவின் போது, “அண்ணா! அவரு கால் பண்ணி இருந்தாரு. நாளைக்கு ஒருநாள் மட்டும் ரெண்டு பேருமா டேட்டிங் போய் வரலாமானு கேட்குறாரு..” என அவள் கூறியது நினைவில் நிழலாடியது.
“நீ என்னனு சொன்ன?” என ஆர்வம் சொட்டு விழிகளோடு வினவிய அறிவழகனின் மீதேனோ உணவருந்திக் கொண்டிருந்தவனுக்கு அதீத கோபம் எழாமல் இல்லை.
“எதுக்கு இதுலாம்னு கேட்டேன். கலியாணத்துக்கு முன்ன ஒரு தடவையாவது வெளியே போய் வந்ததில்லயேனு பிறகொரு நாள் வருந்தக் கூடாதாம்னு சொல்லுறாருணா!”
“வாஸ்தவம் தான். உனக்கு ஓகேனா நீ போய் வாடியம்மா! நல்ல விஷயம் தானே?” என வினவியவன்,
‘உங்க ரெண்டு பேருக்குள்ள இண்டிமஸி க்ரியேட் பண்ண இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. உன்கிட்ட மாப்பிள்ளை மனசு விட்டுப் பேச ஆசைப்படறாரு போல!’ என மனதினுள் நினைத்துக் கொண்டது மற்றவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை தான்!
“அதான், வீண் விதண்டாவாதம் பண்ணாம நானும் சரினு சொல்லிட்டேன். ஒருநாள் தானே?” என பெண்ணவள் அலட்டிக் கொள்ளாமல் பதில் இயம்பி ஆடவனின் நிம்மதியை மொத்தமாக சூறையாடிக் கொண்டிருக்க,
‘அவன் கூடவா? அதுவும் டேட்..’ என உறக்கம் தொலைத்து அல்லாடிக் கொண்டிருக்கிறான், செழியன்.
‘அவ போறதுல என்ன தப்பிருக்கு? நீதானே சொன்ன செழியா! அவ அமலேஷின் உடைமை. அவனுக்கு நிச்சயிக்கப்பட்டவ.. ப்ளா.. ப்ளானு?’ என நேரம் பார்த்து வாரிய மனசாட்சியை ஓரங்கட்டியவன்,
“எனக்கேன் மனசு வலிக்குது? இத்தனைக்கும் அவ என் மோகனா இல்லைனு உறுதியாகிடுச்சே!” என புலம்பினான்; தவித்தான்.
அறைக்குள் வீசிய மின்விசிறிக் காற்று குளிர்மைக்குப் பதிலாக உஷ்ணத்தை வாரி இறைப்பதாய் உணர்ந்தவன், சட்டையின் மேலிரு பொத்தான்களைத் திறந்துவிட்டு அதிவேகமாக ஏறி இறங்கிய நெஞ்சாங்கூட்டை நீவியபடி பேல்கனிக்கு நடந்தான்.
சில்லென்று உடலைத் தழுவிச் சென்ற தென்றலோ, பரந்த வானில் கண் சிமிட்டிச் சிரித்த நிலாமகளோ, ஒளி பரப்பிக் கொண்டிருந்த அலங்கார நட்சத்திரங்களோ அவனின் கவனத்தை சிற்றறவும் கவரவில்லை.
பேல்கனியின் ஹாண்ட் ட்ரில்லை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு விழி மூடியவன், மனதினுள் புகுந்து திருட்டு வேலை புரிந்து கொண்டிருந்த நடன ஆசிரியையை தூக்கி வெளியே நிறுத்தி விட்டு, இருதயம் கவர்ந்தவளை அதற்குள் நிரப்ப முயன்றான்.
அவனது அரும்பெரும் முயற்சிக்கு தடை விதிக்கும் பொருட்டு அருகே ஒலித்தது, தமிழிசையின் குரல்!
“ஹேய், ஹாய்!”
மனதை இதமாய் வருடிச் சென்ற அக்குரலை அன்றி, அதன் வசீகரத்தில் மயங்கி நிற்கும் தன்னை நினைத்து வெறுப்புற்றவனாய் விழி திறவாமல் முயன்று மௌனம் சாதித்தான், செழியன்.
“மிஸ்டர் இளஞ்செழியன்! இருக்கீங்களா?”
ம்ம்கூம், அசையவில்லை. அவளின் விதவிதமான அழைப்புகளை உள்வாங்கிக் கொண்டு அவன் இறுகி நின்றிருக்க,
“என்னாச்சு இந்தாளுக்கு? மார்னிங்லேர்ந்தே வியர்ட்டா தான் நடந்துக்குறாரு! என்ன பிரச்சனையோ..” என அவள் புலம்புவது கேட்டது.
“பிரச்சனைனு சொல்லிக்க எதுவுமில்லைனு நான் தான் சொல்லிட்டேனே!” என கட்டிக்காத்த கட்டுப்பாடுகள், வரையறைகள் யாவும் ‘பாய், பாய்’ சொல்லிக்கொண்டு விடை பெற்றுக் கொண்டதில் சட்டென்று வாய் விட்டவன்,
‘முந்திரிக் கொட்டை!’ என கடுப்படித்த மனதைப் பின்னங்கால் பிடரியில் படும்படியாக விரட்டி விட்டான்.
“அட, விழிப்போட தான் இருக்கீங்களா சார்? அப்பறம் ஏன் நான் பேசப் பேச கேட்காத மாதிரியே இருந்துட்டிங்க?” என குறைப்பட்டுக் கொண்டவளைத் திரும்பிப் பாராமலே,
“எதையோ யோசிச்சிட்டு இருந்தேன்!” என்க,
“அப்போ நான் புலம்பினது மட்டும் எப்படி கேட்டுச்சாம்?” எனக் கேட்டு ‘எனக்கும் புத்தி இருக்கு’ என்பதை நிரூபிக்க முனைந்தாள், தமிழிசை.
“நீங்க என் பெயரை சத்தமா ஏலம் விட்டதும் தெளிஞ்சிட்டேன்..” என புத்தி சாதுர்யமான முறையில் விடை அளித்து சமாளித்தவன்,
“தூங்கலை?” என பேச்சு வளர்த்தான்.
“தூங்குறது இருக்கட்டும்! உங்களுக்காக தான் நான் இங்க காத்திருந்தேன்..”