மின்னல் தாக்கினாற்போல் சட்டென்று தன் அதிர்ந்த பார்வையை அவளில் நிலைக்க விட்ட செழியன், “எ.. எனக்காகவா?” என படபடக்கும் இதயத்தோடு கேட்க,
“அஃப்கோர்சுங்க! ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கேன். ஆனா உங்களைக் காணோம்! கத்திக் கூப்பிடலாம்னு பார்த்தா பேல்கனி டோர் வேற கிளோஸ் பண்ணி இருந்துச்சு. ஃபோனைச் சார்ஜ்ல போட நான் உள்ள போன கேப்ல நீங்க வந்திருக்கிங்க..” என்றாள், சிரிப்பினூடே!
அவள் கூறிய எதுவும் மனத்தில் பதியவில்லை. ‘எனக்காக காத்திருந்தாளா.. ஏன்? எதுக்காக..’ என்ற கேள்வி மட்டுமே மண்டைக்குள் சுத்திச் சுத்தி உலா வந்தது.
‘காத்திருப்பு!’ – இதையே தான் ஒருநாள் தன் மோகனாவும் உரைக்கப் போகிறாள் என நினைக்கும் போதே மனம் தித்தித்தது.
‘உங்களுக்காக தான் காத்திருந்தேன்..’ என அவள் கூறும்போது உடலோடு தன் அகமும் சிலிர்த்ததை சற்றுத் தாமதமாகவே உணர்ந்தவன் இயலாமையில் பற்களை நறநறக்க,
“ஏன்னு கேட்க மாட்டிங்களா?” என அவளே எடுத்துக் கொடுத்தாள்.
“ஏன்?”
குறும்பாய் கண் சிமிட்டியவள், “உங்களுக்கு சொந்தமான ஒரு பொருள் என் கைவசம் இருக்கு. அதை பத்திரமா உங்க கிட்ட ஒப்படைக்கத் தான்..” என்றிட,
“என்னுடய பொருளா?” என யோசனை வயப்பட்டான், செழியன்.
“ஆமா! ஆமா! ஈவினிங் உங்களைத் தேடி வந்தேன். ஆனா நீங்க வீட்டுல இருக்கல. பிறகு கொடுத்துக்கலாம்னு அமைதியா இருந்துட்டேன். அப்பறம் டின்னெரை முடிச்சிட்டு போய் அதை எடுத்துட்டு திரும்ப நான் ஹாலுக்கு வர்றதுக்குள்ள நீங்க மாயமாகிட்டிங்க.
நிலவுல நீங்க ‘அவ’ முகம் தேட வந்தாலும் வருவீங்கன்ற நம்பிக்கைல வெகு நேரமாக பெல்கனியில நின்னுட்டு இருக்க வேண்டியதாப் போச்சு!” என நீண்ட விளக்கம் அளித்தவள், புருவம் நெறிய நின்றிருந்தவனைக் கண்டு முகம் சுணங்கி,
“ரொம்ப பேசுறேன்ல?” என நுனிநாவைக் கடித்து விடுத்தபடி வெட்கப்பட்டு முகத்தை இருகைகளால் மூடினாள்.
“இங்க பாருங்க, உங்களுக்கு ரொம்ப அவசியப்பட்ட அந்த பொருள் என்கிட்ட தான் இருக்கு. இப்படிலாம் கேலி பண்ணினா அதை நான் கொடுக்காம விட்டிருவேன்..” என ஆள் காட்டி விரல் நீட்டி எச்சரித்தாள், பாவை.
அவனை முறைத்தவள், “ஒரு நிமிஷம் இருங்க!” என்று கூறிக் கொண்டு அறைக்கு ஓடிவிட, ஹேர் கிளிப்பின்றி வெறுமனே கொண்டையிடப்பட்டிருந்த கூந்தல் போராட்டத்தின் உக்கிரக் கட்டத்தை அடைந்து, இறுதியில் விடுதலையைப் பெற்றுக் கொண்டு காற்றிடைவெளியில் அங்குமிங்குமாய் அசைந்தாடியது.
அதன் வனப்பில் லயிக்க விரும்பாமல், இடுப்பு வரையிலான அந்தத் தடுப்பு சுவரில் சாய்ந்து இமைகள் மூலம் வலுக்கட்டாயமாக தன் பார்வைக்கு திரையிட்டுக் கொண்டவன், “மோனா!” என உதட்டுக்குள் மெல்லமாய் முணுமுணுக்க,
அறையின் பேல்கனி கதவு வரை ஓடியிருந்தவள் சடேரென்று உடல் அதிர அவ்விடத்திலே தேங்கினாள். தன்னை யாரோ அழைத்த பிரமை! ஆனால் அழைக்கப்பட்ட பெயரென்ன என்று கேட்டால் அவளுக்கே தெரியாது.
ஏதோவொரு உந்துதலில், “கூப்பிட்டிங்களா?” என்று திரும்பிப் பார்த்து வினவினாள், செழியனிடம்.
கண்களைத் திறக்காமலே மறுப்பாகத் தலை அசைத்தவன், “நான் எதுக்கு உங்களைக் கூப்பிட போறேன்?” என சலித்துக் கொண்டானே தவிர, தன் குறுகிய அழைப்பு அவளை சென்றடைகிறது என்பதைக் கவனிக்கத் தவறினான்.
சற்று நேரத்துக்கெல்லாம் உள்ளங்கைக்குள் எதையோ பத்திரப்படுத்திக் கொண்டு துள்ளலும் நடையுமாய் ஓடி வந்தவள், “என்கிட்ட என்ன இருக்குனு சொல்லுங்க..” என விளையாட்டுக் காட்ட,
“என்ன?” என்று கொண்டே அதைப் பெற்றுக் கொள்வதற்காக தன் வலக்கரம் நீட்டினான், செழியன்.
“தொலைஞ்சி போன உங்க பொருளைப் பத்தி எந்த கெஸ்ஸிங்சும் இல்லைங்களா?”
நெடிய மூச்சொன்றை வெளியேற்றியவன், “தொலைஞ்சி போனதைத் திரும்ப பெற்றுக் கொள்ள வழியில்லாம தான் இப்படி அல்லாடிட்டு இருக்கேன் இசை..” என இரட்டை அர்த்தத்தில் பதில் உகுந்தான்.
அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் அல்லவே!
சிரித்துக் கொண்டே, “ஓ, உங்க ஹார்ட்டைப் பத்தி சொல்லுறீங்களா? அது தொலைஞ்சு போனதை நினைச்சு கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. அவங்க அதைப் பத்திரப்படுத்தி வைச்சிருப்பாங்க!” என ஆறுதலளிக்க முற்பட,
“கொடுங்க!” என நீட்டிய கையைக் கண் காட்டினான், செழியன்.
“பத்திரமா பொறுக்கிட்டு வந்ததுக்கு எனக்கென்ன கொடுக்க போறீங்க?” என வம்பளந்தவள்,
“பொருளுக்கு சமமான தக்க சன்மானம் வழங்கப்படும் மஹாராணி! அதைத் தாரும்!” என நாடகபாணியில் மொழிந்தவனை ஏறிட்டுப் பார்த்து உல்லாசமாக நகைத்தாள்.
இதையே நல்ல சந்தர்ப்பமாகக் கருதியவன், சுவற்றில் முன்னோக்கி சாய்ந்தபடி வலக்கரத்தால் அவளின் மணிக்கட்டைப் பற்றி, மற்றொரு கையால் அவளின் உள்ளங்கைக்குள் பொத்திப் பிடிக்கப்பட்டிருந்ததைப் பறிக்க முயன்றான்.
சட்டென்று உடல் சிலிர்த்தவள், “என்ன பண்ணுறீங்க!” என நிலைக்குத்திய விழிகளோடு திக்கித் திணற, இறுகியிருந்த அவளின் மென்கரம் சட்டென்று தளர்ந்து போனது.
“இது எங்கேர்ந்து உங்களுக்கு கிடைச்சுது?” என குரலில் பதற்றம் தொனிக்க வினவினான்.
தொலைத்து விட்டு, அதைக் கூட அறியாதபடிக்கும் நின்றிருந்திருக்கிறேனே என அப்பட்டமான கலக்கம் அவனின் கண்களில்.
மூன்றாம் புது நிலவன்று மோகனாவைக் கனவில் கண்டு ரசித்தவன், அவளின் நினைவுகள் எந்நேரமும் நெஞ்சோடு உறவாடட்டும் என இருவரின் பெயர் பொறித்து கழுத்தில் மாலையாக கோர்த்திருந்தான்.
உள்ளம் மோகனாவை அளவுக்கு அதிகமாக தேடும் நேரங்களில், அதைத் தொட்டுப் பார்த்து.. முகர்ந்து பார்த்து.. அதில் பட்டும்படாமலும் சிறு முத்தம் பதித்து என ‘அவள் என்னோடு தான் இருக்கிறாள்!’ என திருப்திப்பட்டுக் கொண்டவனே, அது தொலைந்து போயிருப்பதைக் கூட அறியாமல் சுற்றித் திரிந்திருக்கிறான் என்றால்.. அவன் தமிழிசையின் நினைப்பில் எந்தளவுக்கு சுயம் தொலைந்திருக்கிறான் என ஊகித்தறிய முடியாதா என்ன..
தலையை சிலுப்பியபடி, “தாங்க் யூ ஸோ மச் தமிழிசை!” என மனதார கூறியவனின் விரல்கள் லேசான நடுக்கத்துடன் அந்தக் கனசதுரத்தின் ஒருபுறத்தில் பொறிக்கப்பட்டிருந்த ‘மோகனா’ என்ற கர்சீவ் எழுத்துக்களினாலான பெயரை மெல்ல வருடிக் கொடுத்தன.
“ம்ம், மோகனா யாரு?”
புருவங்கள் நெறிய, “யாருனு நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிருக்கேனே?” என்றவனை புரியாத பார்வை பார்த்தவள்,
“காதலினு சொன்னிங்களே.. அவங்களா?” என்று கேட்டாளே பார்க்கலாம்,
“இல்ல, இல்ல. நீங்க வேறேதோ நேம் இல்லையா சொன்னிங்க?” என்று வினவியவளுக்கு, நேற்றிரவு அவன் ‘அவளின்’ பெயர் தெரியப்படுத்திய நேரத்தில் தான், திடீரென ‘தேவி’ என காதோரம் க்ரீச்சிட்ட குரலில் தடுமாறி நின்றேன் எனப் புரியவே ஒருசில நிமிடங்கள் தேவைப்பட்டது.
“இல்ல, நான் மோ..”
“ஓ, சாரி சாரி! நான் தான் ஒழுங்கா காதுல வாங்கிக்காம விட்டேன் போல..” என இடையிட்டுப் பேசி மன்னிப்பு வேண்டியவள்,
“மோகனா! ஸ்வீட் நேம்..” ஏனென்றே தெரியாத ஒருவித சிலிர்ப்புடன் கமெண்ட் அடித்தாள்.
மெல்லமாக சிரித்துக் கொண்டவன், “பெயரைப் போலவே அவளும் ஸ்வீட் தான்! செம பொண்ணு..” என கண்களில் அருவியாய் வழிந்தோடிய நேசத்தோடு செப்ப,
“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே!” என பெரிதாக பீடிகை போட்டாள், திடுதிப்பென்று மனதில் துளிர்விட்ட ஆசையுடன்.
‘எதை வேண்டுமானாலும் கேள்!’ என பொய்யாக நம்பிக்கை கொடுத்து திணறி நிற்பவர்கள் மத்தியில், “அது நீங்க கேட்குறதைப் பொறுத்து தான்!” என சொல்லியவன் சற்றே வித்தியாசமாகத் தெரிந்தான், பாவையின் கண்களுக்கு.
“அது.. நீங்க இந்த காதல் கத்திரிக்காய், நேச நெல்லிக்காய் பத்தியெல்லாம் என்ன நினைக்கிறீங்க? உங்களைப் பார்க்குறப்போ ஏனோ என் குருவைப் போலவே ஃபீல் பண்ணுறேன்!”
“வாட்!!” என அதிர்ந்து கூவியவன் அவள் கேட்ட தோரணையில் கடைவாய் பற்கள் தெரியும்படி உரத்து சிரிக்கத் தொடங்கிவிட,
“தப்பா எதுவும் கேட்டுட்டேனா என்ன?” என தொங்கிப் போன முகத்தோடு வினவினாள், தமிழிசை.
“நோ! நோ! அந்த காதல் கத்திரிக்காய்.. நேச நெல்லிக்காய் அல்டிமேட்..” என சிரிப்பினூடே கேலி செய்தவன், பற்களை வாடகைக்கு விட்டு சமாளிப்பாக இளித்தவளிடம்,
“ஆமா யாரந்த குரு?” என்க,
“ஹிஹி, என் காலேஜ் மேட் ஸ்வாதி. எப்போ பாரு அவ காதலைப் பத்தி கிளாஸ் எடுக்குறதால, அந்த விஷயத்துல அவ தான் எல்லாருக்கும் குரு.. கலியாணமும் பண்ணிட்டா!” என்றாள், கண் சிமிட்டியபடி.
“அப்போ என்னையும் காதல் குருனு சொல்ல வர்றிங்களா மிஸ் தமிழிசை?”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவள், “நீங்க எப்போ அவங்களைப் பத்தி பேசினாலும், உங்க கண்ணுல ஒரு தவிப்பும், தேடலும் தெரியும்; ரசனை வழியும். இவ்ளோத்தையும் அப்பட்டமா பார்க்குறப்ப எனக்கு சீனியரான உங்களை அப்படி சொல்லுறதுல தப்பே இல்ல குருவே!” என்று இழுவையாய் நிறுத்த,
“கலாய்க்கிறிங்களா?” என்று கேட்டவனுக்கு ஏனோ வெட்கம் வந்தது. கூடவே மனதின் அடியாழத்தில் புதைந்து போயிருந்த மோகன மங்கை மீதான தேடல் அதிகரிக்கவும் செய்தது.
விம்மித் தணிந்த நெஞ்சை நீவியபடி உள்ளே பாடாய்படுத்திக் கொண்டிருந்த ஏக்கத்தையும் காற்றோடு சேர்த்து உதடு குவித்து வெளியேற்றியவன்,
“காதலைப் பத்தி என்ன நினைக்கிறீங்கனு ஒன் வர்ட்ல சொல்லுங்க!” என்றவளைப் பார்த்துக் கொண்டே கண் மூடினான்.
மூடிய விழிகளுக்குள் நடனமாது புன்னகைத்துச் செல்ல, அனிச்சையாய் விரிந்து கொண்ட இதழ்களைப் பிரித்து, “மனுஷனை உயிரோட கொல்லும் கூராயுதம்..” என முணுக்கென்று எட்டிப் பார்த்த கண்ணீரோடு நலிந்த குரலில் கூற,
“எதே!” என அலறியே விட்டாள் தமிழ்.
‘காதல் என்பது யாதெனின்..’ என தொடங்கி மனதுக்கு இதம் சேர்க்கும்படி எதையாவது சொல்லுவான் என அவள் எதிர்பார்த்திருக்க, அவன் சொன்னதோ முற்றிலும் வேறுபட்டு அல்லவா இருந்தது? பதறி விட்டாள்.
“ஆமா, அவங்களோட சின்ன சின்ன அசைவுகள் கூட மனசுல பூகம்பத்தை ஏற்படுத்தும்; அவங்களைக் காணாத தவிப்பு, எப்போ பார்ப்பேனோங்குற ஏக்கமெல்லாம் கொலையாக் கொல்லும்! அவங்களோட ஒரு சின்ன முகமாற்றம் கூட மனசுக்கு அவ்ளோ வேதனை கொடுக்கும். ப்ச், நன்ஸ்டாப்பா சொல்லிட்டே போகலாம் இசை!”
“வாவ்!” என வியந்தவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“நீங்களும் தான் காதலிக்கிறீங்க..” என பதிலறியும் ஆர்வத்தோடு பாதியிலே நிறுத்திக் கொள்ள,
“அவரைப் புடிச்சிருக்கு; ஆனா காதலானு சொல்ல தெரியல. இப்போ இல்லைனாலும் எதிர்காலத்துலயாவது வர வாய்ப்பிருக்கு இல்லயா? அதான் காதலுக்கான அறிகுறிகளை தெரிஞ்சி வைக்கலாம்னு உங்ககிட்ட கேட்டேன்..” என்றாள், முகம் விகசிக்க!
‘அப்போ லவ் இல்லையா?’ என குஷியோ குஷி, செழியனுக்கு.
அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “பட் மோகனா ஈஸ் அ லக்கி கேர்ள்!” என ஏதோவொரு உணர்வில் ஆட்கொள்ளப்பட்டு மெல்லமாய் முணுமுணுக்க,
‘சீரியஸ்லி?’ என மனதோடு கேட்டுக் கொண்டானே தவிர வாய் திறக்கவில்லை.
“எனக்கு இந்த காதலைப் பத்தியெல்லாம் தெரியாது. புக்ஸ்ல நிறைய படிச்சிருக்கேன்; ஆனா நான் இதுவரை அதை உணர்ந்ததில்ல. எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யிற அண்ணன்! அன்புக்கு மறு உருவமா அண்ணி! இவங்க இருக்குறப் நான் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு? அதான் பொறுப்பை அவங்க கைலயே ஒப்படைச்சிட்டேன். எல்லாத்தையும் பெஸ்ட்டா செய்து கொடுக்குற அண்ணன் தான் அமலேஷைக் கை காட்டுனாரு! மறுப்பேனா, சொல்லுங்க..”
“அப்போ அண்ணாவுக்கா..”
“நோ! எனக்கு அவரைப் புடிச்சிருக்கு..” என இடைபுகுந்து பதில் இயம்பியவள்,
“இங்க கேளுங்களேன், அவர் பொண்ணு பார்க்க வந்திருந்த நேரத்துல என்கிட்ட பேசின முதல் வார்த்தை என்ன தெரியுமா?” என புன்னகையுடன் வினாத் தொடுக்க,
“என்ன?” என எதிர்கேள்வி கேட்டான், அசுவாரஷ்யமாக!
“உனக்கு என்னைப் புடிச்சிருக்கானு அவர் என்கிட்ட கேட்கல; எனக்கு உன்னைப் புடிச்சிருக்குனு சொல்லவும் இல்ல. ஸ்வாதியோட திருமணத்துல நான் உன்னைப் பார்த்தேன்; நீ செமயா டேன்ஸ் பண்ணுறனு மனசார பாராட்டுனாரு!”
அவள் கூறியதில் அவனைப் பிடித்துப் போகும் அளவுக்கு என்ன இருக்கிறதெனப் புரியாமல் விழிகளை உருட்டியவன், “அவ்ளோ தானா?” என்று விழிக்க,
“புரியல இல்ல? அதுசரி! புரியாது தான்..” என சலித்துக் கொண்டவள்,
“எந்தவொரு பொண்ணுக்கும் தன்னை அணுவணுவா ரசிக்கிற.. தன்னுடைய திறமைகளை மனசு விட்டுப் பாராட்டுற.. எந்த விஷயத்துலயும் தன்கிட்ட கருத்து கேட்குற மாதிரியான கணவனோ, காதலனோ கிடைக்கணும்ங்குற ஆசை இருக்கும்.
அவரு தனக்கு தீவிர ரசிகனா இருக்கணும்னு நினைப்பாங்க; ஆசைப்படுவாங்க; ஒவ்வொரு விஷயத்துலயும் அப்ரீஷியேஷனை எதிர்பார்ப்பாங்க. தட்ஸ் இட்! என் ரசனையை அவர் பாராட்டுனாரு! ரசிச்சதா சொன்னாரு..
கூடவே, கலியாணம் வரைக்கும் இந்த கால், மெசேஜஸ், ஸ்வீட் டாக்ஸ்லாம் வேணாமேனு சொன்னதும் யோசிச்சி பார்க்காமலே உன் இஷ்டம்னு சொல்லிட்டாரு..” என மூச்சிறைக்க பேசினாள்.
செழியனுக்கு சிரிப்பு வந்தது. தன் பிடித்தத்துக்கு அவள் கூறிய காரணம் நியாயமாகப்பட்டது. ஆனால் இறுதி வரிகளை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.
வீட்டினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமென்று இருக்குமிடத்து மனைவியாக போகிறவளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று எந்த ஆண்மகனுக்காவது ஆர்வமில்லாமல் இருக்குமா என்ன..
கேட்டதும் சிந்திக்காமலே தலை அசைத்து விட்டானாமே! அதைப் பெருமையாக எடுத்துச் சொல்ல வேறு செய்கிறாளே என குறைபட்டுக் கொண்டவன் மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
“அவர் என்ன வேலை பார்க்குறாரு?” என பேச்சை லாவகமாக திசை திருப்பினான்.
“தொல்பொரு..” என ஏதோ கூற வந்தவள் தூரத்தில் உடுக்கை ஒலி கேட்டு தலையில் கை வைத்துக் கொள்ள,
“என்னாச்சு?” என புரியாத பார்வையோடு வினவினான் செழியன்.
குடுகுப்பைக்காரனின் வழமையான எதிர்வு கூறல்களை மேலோட்டமாய் விளக்கியவள், “இந்த இழவையெல்லாம் கேட்குறப்ப டக்குனு டென்ஷன் ஆகிடறேன்..” என நொந்து கொள்ள,
“சும்மா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க தமிழிசை!” என தாழ்ந்த குரலில் ஆறுதல் கூறியபடி கையிலிருந்த மாலையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டான்.
ஆனால் பாவையின் மன அச்சம் போக்குவதற்காக இன்று ஆறுதல் செப்பிய அவனே தான், பிறகொரு நாளில் அவற்றை நடைமுறைப்படுத்தி அவளை வேதனைக் கடலில் தள்ளப் போகிறான் என்பது உண்மை!
விதி செழியனின் தோற்றத்தில் உருவெடுத்திருப்பதை அறியாத தமிழிசை, மனம் இலேசாகி திருப்தியுடன், “ம்ம்..” என தலை அசைத்து முறுவலித்தாள், அப்பிராணியாய்.