ஷாப்பிங் மால், கடற்கரை, பூங்காவனங்களுக்கு மனைவியாகப் போகிறவளை முதன் முதலாக அழைத்துச் செல்வதை விடுத்து, அவளின் இணக்கத்துடன் தன் வேலையிடத்துக்கே அழைத்து வந்திருந்தான், அமலேஷ்.
பாவையின் பேருவகையைக் கண்ணுற்றவன், “கிபி பதிநான்கு, பதினைந்தாம் நூற்றாண்டளவுல, இந்த ஆத்தங்கரையை ஒட்டினாப்புல ஒரு சிற்றரசு இருந்திருக்கு. அந்தப் பகுதி தான்யதீரபுறம்னு அழைக்கப்பட்டிருக்கு..” என அதுபற்றி தான் அறிந்தவற்றைப் பகிர்ந்து கொண்டான்.
உடல் சிலிர்த்து நிற்க, வெகு ஆர்வத்தோடு தன் பார்வையை நாலாபுறமும் சுழற்றினாள் தமிழிசை.
உயர்ந்து தெரிந்த மலை உச்சிகளின் மத்தியிலிருந்து தெய்வாதீனமாக ஊற்றெடுத்து, பெருகியோடி வந்து பூமித் தாயை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் நீரருவியின் அழகில் மெய்மறந்தாள்.
தலை தூக்கிப் பார்த்தால், எந்த தடைகளுமின்றி மேகம் விலகிய நீலவானை நேரிடையாகவே பார்க்க முடிந்தது அவளால்.
பரந்து விரிந்த வெட்டவெளி அது! இவ்விடம் சில மாதங்களுக்கு முன்பு புற்றரையாக இருந்திருக்க வேண்டும், இப்போது முற்று முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு அகழ்வாராய்ச்சிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களின் பாவனைக்கு தடுக்கப்பட்ட பிரதேசம் என்பதை, ஆங்காங்கே நடப்பட்டிருந்த காம்பங்களில் சொருகப்பட்டிருந்த மஞ்சள் நிற பட்டி பறைசாற்றிக் கொண்டிருக்க,
“சூப்பர்ங்க!” என கைகளை விரித்து அவ்விடத்தின் குளிர்மையை உள்வாங்கிக் கொண்டாள் உற்சாகமாக.
சிரித்தவன், “இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தபடி வினவ,
“ஆமா ரொம்ப!” என குதூகலித்தவள், “ஆமா உங்களுக்கு எப்படி இந்த பழங்கதை எல்லாம் தெரிஞ்சுது?” என்று எதிர்கேள்வி எழுப்பினாள், பதில் அறியும் ஆர்வத்துடன்.
ஏனோ ‘ஷோ’வென்ற சத்தத்தோடு பாய்ந்தோடிக் கொண்டிருந்த அருவி மனதுக்கு சொல்லொணா இதத்தையும், நெடுநாள் பழகிய நெருக்கமான உணர்வையும் கொடுத்தது.
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென பரவசப்படும் அளவுக்கு இயற்கை எழிலோ, பச்சை மரங்கள் கொடுக்கும் பசுமையோ இல்லாவிட்டாலும், பிடித்திருந்தது. மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு.
“அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்னுல இந்த தகவல்கள் பொறிக்கப்பட்டு இருந்துச்சு! அதைத் தான் உன்கிட்ட சொன்னேன் தமிழ்..”
“ஓ.. வேறெந்த தகவலும் கிடைக்கலையா?” என சற்றும் குறையாத ஆவலுடன் கேட்டவள்,
“இல்லயே! இந்த இடத்துல கிடைச்ச ஒருசில கட்டட சிதைவுகளை வைச்சு தான், அகழ்வாராய்ச்சிக்காக ஆறேழு மாசம் முன்னால இங்க வாழ்ந்துட்டு இருந்த மக்களை வெளியேற்றினோம். பணம் படைச்ச ஒரு பெரும்புள்ளி பாதாள அறைக்காக நிலத்தை தோண்டின நேரத்துல அறுபதடி ஆழத்துல இந்த இடிபாடுகள் கிடைச்சிருக்கு..” என்றவனைப் பார்த்து புரிந்ததாகத் தலை அசைத்தாள்.
“தான்யதீரபுற ஆட்சி வீழ்ச்சி பத்தி ஏதாவது தெரிஞ்சு வைச்சிருக்கீங்களா.. அதைப் பத்தி எந்த தகவலும் கிடைக்கலையா அமலேஷ்?”
மறுப்பாகத் தலை அசைத்தவன், “இப்போதைக்கு இல்ல, இனிமே கிடைக்க வாய்ப்பிருக்கு. பெரும் மன்னர்களின் படையெடுப்பா இருக்கலாம்; ஆள வந்தவங்களோட அலட்சியப் போக்கே அதன் வீழ்ச்சிக்கு காரணமா போயிருக்கலாம். இல்லனா இதைப்போல வேறேதும் காரணங்கள் இருக்கலாம் தமிழ். ஏன் கேட்குற?” என்க,
“சும்மா தான், ஏதோவொரு ஆர்வம்!” என்றவளின் முகத்தில் வேதனையின் சாயல். மனதினுள் இன்னதென அறியா வலி சூழ, நேராக நிற்கக் கூட தெம்பின்றி கால்கள் தொய்ந்தன.
தடுமாறி நடந்தவளின் கை பற்றி நிறுத்தியவன், “ஆர் யூ ஓகே?” என யோசனையில் புருவம் நெறியக் கேட்க, முகம் சுணங்க ஆமெனும் விதமாகத் தலை ஆட்டியவள்,
“வெயில் அகோரத்தால தலை சுத்துறாப்ல இருக்கு. சீக்கிரம் இங்கேர்ந்து போய்டலாம் அமலேஷ், ப்ளீஸ்!” என கெஞ்சலாக உரைக்க,
“போற வழியில நல்ல ரெஸ்டாரண்ட்டா பார்த்து லன்ச்சை முடிச்சுக்கலாம்..” என்றான் அறிவிப்பாக.
அவசரமாக மறுத்தவள், “வேணாம், நான் வீட்டுல சொல்லல. அதுவுமில்லாம கண்ணைத் திறக்க முடியாதபடிக்கு தலைவலி உயிர் போகுது. வேறொரு நாள் போவோமே!” என தயக்கமாகக் கூற, அதற்கு மேல் அவனும் வா வாவென நச்சரிக்காமல் அமைதியாகிக் கொண்டான்.
“தேங்க்ஸ்..” என முகத்தில் இளமுறுவல் மின்ன நன்றி நவின்றவள் நாசுக்காக அவனின் கரத்துக்குள் புதைந்திருந்த தன்னுடைய கையை மெல்ல உருவிக் கொள்ள,
“நோ வொர்ரீஸ்!” என்றவனின் உதடு அசட்டு புன்னகையில் நெளிந்தது. அவளின் ஒட்டாத் தன்மையை உணராத அளவுக்கு விவரம் கெட்டவனல்லவே அவனும்?
இருவரும் வீடு வந்து சேரும் போது நேரம் இரண்டைத் தாண்டியிருக்க, வந்தவனை வரவேற்று, உபசரித்து, வற்புறுத்தி மதிய உணவருந்தச் செய்து தான் அனுப்பி வைத்தனர் அழகனும் -கார்த்திகாவும்!
உணவைக் கொறித்து விட்டு, வெளியே சென்று வந்ததால் தலை வலிக்கிறதெனக் காரணம் கூறிவி அறைக்குள் பதுங்கிக் கொண்டவளுக்கு ஏனென்றே தெரியாமல் மனம் வலித்துக் கொண்டிருந்தது.
இந்த தாள முடியாத வேதனைக்கான காரணம் என்னவென எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை பாவைக்கு. “ப்ச்!” என அவ்வப்போது நெற்றியை நீவியபடி சலித்துக் கொண்டாள்.
உணவு நேரங்களிலும் கூட, ‘பசிக்கல’, ‘லேட்டா சாப்பிடறேன்’ என பற்பல சாக்குப் போக்குகள் கூறி விலகிக் கொள்பவன், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த நேரிட்டாலும், ஊருலக் கதை எல்லாம் கிளறியெடுத்து அழகனுடன் வாய் வலிக்கும் வரை உரையாடித் தீர்ப்பான்.
இன்றேல் அமைதியே உருவாக உணவை முடித்துக் கொண்டு எழுந்து கொள்வான்.
சதா அவளைத் தேடித் தவிக்கும் மனதை கட்டுப்படுத்தி அடக்கி வைக்க வேண்டுமென்ற முனைப்புடன் அவன் உள்ளூர போராடிக் கொண்டிருக்க, அந்தப் பாராமுகத்துக்கு,
‘என்னாச்சு இவருக்கு? ஏன் இப்போல்லாம் ஒரு மாதிரியாவே நடந்துக்குறாரு. இங்க வரும்போது இருந்தவருக்கும், இப்போ இருக்குறவருக்கும் எத்தனை வித்தியாசம்.. காதலி படுத்தி எடுக்குறாவோ!’ என தானே சுயமாய் ஒரு காரணத்தை தேடிப் பிடித்துக் கொண்டு அவனுக்காக வருந்தினாள், தமிழிசை.
ஆடவனின் இந்த அவஸ்தைக்கும், கவலைக்கும் காரணமே தான்தான் என்பதை அவளறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இப்படி நாட்கள் கழிந்திருக்க, விடிந்தால் திருமணமென்று இருக்கும் நிலையில், மண்டையைக் குடைந்து கொண்டிருந்த அவனின் சகல கேள்விகளுக்கும் விடையிறுத்தும் முகமாய் கனவில் தோன்றினாள் பாவை!
அதே நீர்வீழ்ச்சி அருவியோரம்.. தலை தூக்கிப் பார்த்தால் கண்களை கூசச் செய்யும் நீலவானம்.. அங்கே அவள்!
சட்டென்று அதிர்ந்து, உடல் நடுங்கி, திடுக்கிட்டுப் போனதென்னவோ செழியன் தான்! காரணம்?!