‘சாரி, மை பியாரி! துணைக்குனு யாருமில்லாத நேரத்துல, என் உணர்வுகளை.. என் புலம்பல்களை எல்லாம் குறையற கொட்டித் தீர்க்க உன்னை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.
ஆனா இப்போ கலாய்க்கவும், இடைக்கிட என் முறைப்பை பொருட்படுத்தாம புத்திமதியையோ, நிதர்சனத்தையோ எடுத்து சொல்லவும் பக்கத்துல என் நண்பன் இருக்குறப்போ உனக்காக நேரம் ஒதுக்க மறந்து போய்டறேன். அகைன், சாரி!
என்னனா, அம்மா சொன்ன மாதிரியே சித்து வீட்டுலேர்ந்து மைராவைப் பொண்ணு கேட்டு வந்து முடிவு பண்ணிட்டு போய்ட்டாங்க. ரெண்டு வீட்டாருக்கும் வசதிப்படற நேரத்துல கலியாணத்தை வைச்சுக்கலாம்னு பேச்சு!
இதெல்லாம் நடந்து ஒரு மாச காலம் கழிஞ்சிடுத்து.
இடைப்பட்ட காலத்துல – அமாவாசை ராத்திரியில, நான் வழமையைப் போல திரும்பவும் மோகனாவைப் பார்த்தேன். எப்போவும் கனவைப் பத்தியும், மோகனாவைப் பத்தியும் பகிர்ந்துக்க உன்னைத் தேடி ஓடி வந்த நான், இந்த வாட்டி சித்து கிட்ட இதைப்பத்தி சொன்னேன்.
வெயிட்! வெயிட்! பேசாம நீ எங்கிட்டயே எப்பவும் போல உன் ஃபீலிங்சை ஷேர் பண்ணி இருக்கலாம். ஆள் வந்ததும் பாதியில என்னை மறந்துட்ட, பார்த்தியா? உனக்கு இதுவும் வேணும், இன்னுமும் வேணும்னு நீ என்னை கழுவி ஊத்துறது தெரியுது, மை டயரி!
பட் வாட் கேன் ஐ டூ, ஹான்?
சித்து கூட சின்ன வயசுலேர்ந்து நல்ல பழக்கம். இதையெல்லாம் சொன்னா எப்படி திட்டுவான், சிரிப்பான், கலாய்ப்பான்னு எனக்கு தெரியாம இல்ல. இருந்தாலும் சொல்றேன்னா அதுக்கு ஒரே காரணம், என் நண்பன் இல்ல? அதான்!
சரி, அது எதுக்கு இப்போ? நான் என்னோட ஸ்வீட் மெமரிஸ் பத்தி உன்கிட்ட மனந்திறந்து பகிர்ந்துக்குறேன் என்ன..
ம்ம், வழமையை போல அதே அருவியோரம். அவ வீணை வாசிச்சிட்டு இருந்தா.. ஒரு பெஸ்ட் மூவியோட ஒலிப்பதிவு மட்டும் மிஸ் ஆகி போன மாதிரி காட்சியெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா.. மனசுக்கு இதமா இருந்துச்சு.
ஆனா இசையக் கேட்க கொடுத்து வைக்கல. இருந்தாலும் என்ன.. போகட்டும்! என் மோகனாவை பார்த்துட்டா, தினம் தினம் என் வாழ்க்கைல வீணை சத்தம் கேட்டுக்கிட்டே தான் இருக்கும்.
அவளை ஆடவிட்டு, பாடவிட்டு கன்னத்துல கை குத்தி கண்ணெடுக்காம ரசிக்கும் பொற்காலமெல்லாம் ஒருநாள் வராமலா போகும்?
வழமையை விட ரொம்ப அழகா இருந்தா. கை நிறைய பைந்தொடிகள் அணிந்து, காதுல பெரிய ஜிமிக்கி அசைந்தாட அழகுக்கே பொறாமை வரவழைக்கும்படி பேரழகியா இருந்தா!
இவ எனக்கே எனக்காக கடவுள் இந்த பூமிக்கு அனுப்பி வைச்ச தேவதைனு மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு. ஏதோவொரு சுகம்!
அவ கண்ணைப் பார்த்தேன். பிறை நெற்றிக்கும், முகத்தை பாதி மறையும்படி அவ கட்டியிருந்த மெல்லிய துணிக்கும் மத்தியில படபடத்த அஞ்சனம் தீட்டிய அவ நயனங்கள் என்னைப் பார்த்து அலைபாய்ந்து, வேறு பக்கமா தன் பார்வையை திருப்பிக்கிச்சு!
அடடே! என்ன இவ்ளோ அடர்த்தியா இருக்குனு வியக்க வைக்கும் கண்ணிமை மயிர்கள், வேகவேகமா சிறகடிச்சி பறக்குற வண்ணத்திகளைத் தான் நினைவூட்டிச்சு!
அந்த நிமிஷத்துல என்னைக்கோ ஒருநாள் சலிச்சிக்கிட்டே படிச்ச, ‘நன்னீரை வாழி அனிச்சமே..’னு ஆரம்பிக்கிற காமத்துப் பால் நலன் புனைந்துரைத்தல் வரிகள் தான் பளிச்சுனு நினைவுல உதித்தது.
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு!’
ஆஹா, அவளுக்காகவே எழுதப்பட்டு இருக்குமோ?! தெரியல. நான் திரும்பவும் அந்த குறட்பாக்களை மெனக்கெட்டு படிச்சுப் பார்த்தேன்.
அப்போல்லாம் கொஞ்சமும் சுவாரஷ்யம் இல்லாம சலிப்புத் தட்டுன வரிகள், இப்போ எனக்கு சிலிர்ப்பையும், ஒருவித வெட்கத்தையும் கொடுத்துச்சு. காலம் எவ்ளோ விசித்திரமானது இல்ல?
கூத்தும், ஆட்டமுமா என் வாழ்க்கையை என்ஜோய் பண்ணி வாழ்ந்துட்டு இருந்த என்னை பைத்தியக்காரன் போல நேரங்காலம் தெரியாம புலம்ப வைச்ச பெருமை அவளை மட்டுமே சாரும். அவளை நினைச்சு இந்தளவு உருக வைச்ச கை தட்டல், பாராட்டல்கள் கூட அவளுக்கு மட்டுமே சொந்தமானவை!
உன் இசையை நான் கேட்கல. இல்ல, இல்ல. அந்த இசை தான் என் காதுகளை எட்டாம போய்டுச்சு! எட்டியிருந்தா ரசிச்சிருப்பேன். கிஞ்சித்தும் சந்தேகமில்ல.
உன் விரல்கள் மெல்லமா அங்கிங்க அசைந்து, நரம்புக்கு வலிச்சிடுமோங்குற அச்சத்தோட.. வலிச்சிடக் கூடாதேங்குற கவனத்தோட வீணைய மீட்டின அந்த அழகை நான் மெய்மறந்து ரசிச்சேன்.
இப்போவும் மனக்கண்ணுல நிறுத்தி அடிக்கடி ரசிச்சி வியக்குறேன். உன் வீணை வாசிப்புக்கு நான் தீவிர ரசிகன் ஆகிட்டேன்! உனக்கும் தான், மோகனா.
ஒரு பெண்ணுக்குள்ள இத்தனை திறமைகள் ஒளிஞ்சிருக்குமா? ஆடுற! பாடுற! அசத்துற.. அசரடிக்கிற.. உன் அழகும், ஆற்றலும்.. ம்ம்கூம், வாய்ப்பே இல்ல!
நீ என் வாழ்க்கைல வெறும் கனவாவே போய்டுவியா? உன்னைத் தேடி அடையிறதுக்கான என் முயற்சிகள் ஒவ்வொன்னும் விழலுக்கு இறைத்த நீர் போல மண்ணோடு மண்ணாப் போன பிறகும், இதோ நான் எதிர்பார்ப்புகளுக்கு குறைவில்லாம உனக்காக காத்திருக்கேன்.
நீ என்கிட்ட வந்து சேர்ந்திடுவங்குற நம்பிக்கை மனசின் அடியாழத்துல பதிஞ்சி போயிருந்தாலும்.. கடவுள் உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்ப்பான்ங்குற நம்பிக்கை மலையளவு, கடலளவு, விண்ணளவு தான் இருந்தாலும்.. எனக்கு பயமாருக்கும்மா!
எப்போவாவது ஒருமுறை காணக்கூடிய கனா என்னை இந்தளவுக்கு கட்டிப் போடும்னு நான் நினைக்கல; என் சுயத்தை இழக்க செய்யும்னு நான் சிற்றளவும் நினைச்சு பார்த்திருக்கல.
நீ எங்கேம்மா இருக்க? எங்க போனாலும் பின்தொடர்ந்து வரும் நிழலா வேணாம்; உயிரை உருக்கிப் பிழியிற நினைவா கூட வேணாம். ஒரு வாட்டி என் கண்ணு முன்னாடி வா, மோகனா!
நீ என் மனசை சிறை பிடிச்சா மாதிரி, பொக்கிஷமா கருதி வாழ்நாள் பூரா உன்னை என் அணைப்புக்குள்ள பத்திரமா சிறை வைக்கிறேன்.
எவ்ளோ ஃபன்னி இல்ல?
கனவுல காணுற ஊர், விவரம் தெரியாத பெண்ணுக்காக நீ மெழுகா உருகுவனு சில மாதங்கள் முன்பு யாராவது சொல்லிருந்தா, உனக்கு காமெடி சென்ஸ் ஜாஸ்தினு ஹைபை போட்டு சிரிச்சிருப்பேன். விதி யாரை விட்டது?
ஆனா விதியை குறை சொல்லியும் பயனில்லை தானே? அந்த விதியே உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்ந்துடட்டும்! உடல் வெறும் கூடா போக முன்ன நீ என்கிட்ட வந்து சேர்ந்திடு!
அதுவரை காத்திருக்கிறேன், நெஞ்சம் நிறைந்த நேசத்தோடு..’
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
முந்தினம் சொன்னது போலவே மறுநாள் விடியலில்.. ஒன்பது மணியளவில் அமலேஷ் வந்து மனைவியாகப் போகிறவளைத் தன்னோடு அழைத்துச் சென்று விட,
கூடத்துக்கும், அறைக்குமாய் தவிப்புடன் நடை பயின்று வீட்டின் நீள அகலங்களை அளப்பதில் மும்முரமாகிப் போனான், செழியன்.
‘அவ போனா எனக்கென்ன?’ என கண்டுகொள்ளாமல் இருக்கத் தான் முயன்றான். ஆனால் முடியவில்லையே!
அடி வயிற்றில் சுரந்த ஏதோவொரு அமிலம், உடல் பூரா வியாபித்து பற்றி எரியச் செய்வதாய் உணர்ந்தவன், “உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, செழியா! அவ போனா போகட்டும்.. உனக்கென்ன வந்தது..”என தன்னைத் தானே திட்டியபடி கட்டிலில் முகம் குப்புற நெடுமரமாக வீழ்ந்தான்.
நேற்றிரவு முழுவதும் மாறி மாறி நெஞ்சில் மோதிச் சென்ற பெண் பாவையினரது நினைவுகளில், உறக்கம் தொலைத்து கொட்டக் கொட்ட விழித்திருந்தவனின் கண்கள் உறக்கத்துக்காக கெஞ்சினாலும், கண்மூடி படுத்துறங்க முடியவில்லை அவனால்!
சகலமும் வெறுத்துப் போனது.
மன அமைதிக்கென சித்தார்த்துக்கு அழைத்துப் பேச,
“மோகனாவைப் பார்த்தியா? கனவு கண்டாயா?” என ஆயிரம் வினாக்களை ஒருசேரத் தொடுத்து தலைவலியை மேலும் பெருக்கி விட்டான் அந்த புண்ணியவான்.
“போய் வேலைய பாரு!” என எரிந்து விழுந்தவன் அழைப்பைத் துண்டித்துக் கொண்டு, மோகனாவின் நினைவுகள் அளவுக்கதிகமாக நெஞ்சை வாட்டினால் உதவக் கூடுமென்ற எண்ணத்தோடு எங்கு சென்றாலும் தன் பைக்குள் பத்திரப்படுத்தப்படும் தூக்க மாத்திரைகளில் ஓரிரண்டை விழுங்கி விட்டு கட்டிலில் உருண்டான்.
தீரா வேதனையில் நெஞ்சம் தகிக்க, மனதை வதைத்த ஏமாற்ற ரேகைகளுடன் சற்று நேரத்துக்கெல்லாம் மருந்தின் வீரியத்தால் அவன் உறங்கிப் போக, இங்கே,
“வாவ்! செம்ம ப்ளேஸ் இல்ல?” என பரவசம் பொங்க கூவிக் கொண்டிருந்தாள், அவனை தவிக்க விட்டவள்!