இரவை கிழித்து நிலவின் வெளிச்சம் அந்த சாலையை மின்விளக்கின்றி ஒளிர செய்தது. எங்கு திரும்பினும் இருளின் மயமே இருக்க, தூரத்தில் தெரிந்த ஓரிரண்டு வீடுகள் இரவு எட்டு மணிக்கே அடங்கிவிட்டன.
“நான் எவ்வளவு நேரம் தான்யா இங்கையே நிக்கிறது?” தாமோதரன் வீட்டிற்கு எதிரே நின்ற ஸ்ரீனி ஹெட் போன் மூலம் மாமனிடம் காய்ந்தான்.
“அந்த ஆள் வர்ற வர இரு ஸ்ரீனி” என்றான் பார்த்திபன். அந்த நேரம் சரியாக கார் கதவை திறந்து இரண்டு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வந்த விஷ்ணு நண்பனிடம் ஒன்றை கொடுத்து, “போதும்லடா?” கேட்டான் பார்த்திபனிடம்.
“ம்ம்ம் போதும்டா” என்றான் இவனும்.
இதை கேட்ட ஸ்ரீனி, “ண்ணா என்ன விட்டு என்னயா சாப்பிடுற?” மாலை நான்கு மணிக்கு வந்தது, அதன் பிறகு தண்ணீர் மட்டுமே குடித்திருக்கிறான்.
“பக்கத்துல கே.எஃப்.சி இருந்ததுல அங்க பெரி பெரி ஸ்ட்ரிப்ஸ் எனக்கும், உன் மாமனுக்கு வெஜ் பர்கர் ஒன்னும் வாங்கிட்டு வந்தேன்” ஸ்ரீனியை கேலி செய்ய வேண்டும் என்றே பொய்யுரைத்தான் விஷ்ணு.
“அவன் அவன் கொசு கடில அஞ்சு மணி நேரமா பச்சை தண்ணி குடிக்காம நிக்கிறானேனு ஈவு இரக்கம் இல்லாம தனியா மொக்குறிங்களே”
அடக்கிய சிரிப்போடு, “விஷ்ணு அந்த டிப்ப இங்க தள்ளு” பசியெறிந்த வயிற்றினுள் ஒரு பிஸ்கட்டை தள்ளி பார்த்திபன் இன்னும் நெருப்பை மெருகேற்றினான் ஸ்ரீனியின் நெஞ்சினுள்.
“நல்லாவே இருக்க மாட்டீங்கயா ரெண்டு பேரும்” இருவரும் இந்த பக்கம் வாய்விட்டு சிரிக்க மீண்டும் அந்த வீட்டின் கேட்டினை திறந்து அனாயா வந்தாள். கையில் ஒரு பாத்திரம்.
“ப்ளீஸ் ஸ்ரீனி உள்ள வாங்களேன், தாத்தா இப்போ வந்துடுவார். அடலீஸ்ட் இந்த சப்பாத்தியாவது வந்து சாப்டுட்டு வெளிய வந்துடுங்களேன்”
அவளும் பலமுறை அவனை அழைத்து பார்த்து வீட்டிற்குள் செல்ல மனமே இல்லாமல் இத்தனை நேரம் அவனோடு தான் வெளியே நின்றது. சில நிமிடங்களுக்கு முன்பு தான் உள்ளே சென்றிருக்க அந்த இடைவேளையில் பார்த்திபனுக்கு அழைத்து பேசிவிட்டான் ஸ்ரீனி.
“சோத்துக்கு ஆசைப்பட்டு உள்ள போன மவனே மாவடு தான் நீ” பார்த்திபன் எச்சரிக்கை விடுத்து இணைப்பை துண்டிக்க போக விஷ்ணு தடுத்து, “இருடா” என்றான்.
“இல்ல நீ போ” ஸ்ரீனிக்கு கண்கள் அவள் கையிலிருந்த சப்பாத்தியை வாங்க துடித்தாலும் அவளை விரட்டுவதிலே குறியாக இருந்தான்.
“ப்ளீஸ் ஸ்ரீனி வாங்கிக்கோங்க” கெஞ்சினாள்.
“என்னமா நீ ஒரே அன்பு தொல்லையா பண்ற”
இவன் அலுத்துக்கொள்ள விஷ்ணு, “மிரட்டி அனுப்பு ஸ்ரீனி, இல்லனா அவ போக மாட்டா” என்றான் கோவமாக.
விஷ்ணு சொல்லவும் அவனை முறைத்த பார்த்திபன், “கொன்னுடுவேன் அவளை ஏதாவது சொன்னனா” ஸ்ரீனிக்கு ஆணையிட்டு, “வாங்கி வச்சுக்கோ ஸ்ரீனி”
ஸ்ரீனியும் அவ்வாறே செய்ய, “இப்டி உங்க நேரத்தை, ஒடம்ப வருத்தி நிக்கிற அளவு அவர் வொர்த் இல்ல ஸ்ரீனிவாசன். ப்ளீஸ் போங்க. அவர் வந்ததும் நானே சொல்றேன்” ஸ்ரீனி பிடிவாதமாக அவளை அனுப்பி வைத்தான்.
“நடிப்பு… எல்லாம் கூட்டு களவாணிகளா இருக்கும்”
விஷ்ணு கூறுவதை கேட்டு, “ண்ணா அப்டி எல்லாம் இல்ல. அந்த பொண்ணு நல்ல பொண்ணு. இப்டி என் கூடையே ரோடுல தவம் கெடக்குறான்னா என் மேல ஏதோ ஒரு இது இருக்குல அவளுக்கு” ஸ்ரீனிக்கு இன்னமும் விஷ்ணு மேல் அனாயா கொண்ட காதல் தெரியாது.
“மூடிட்டு அப்டியே எதார்த்தமா முன்னாடி வா. அந்த ஆள் சிக்னல் தாண்டிட்டான்” பேச்சை மாற்றி விஷ்ணு ஸ்ரீனியை இழுத்தான்.
அவனோ இரண்டு முறை அங்கும் இங்கும் நடந்து வாட்ச்மேன்னிடம் உண்டு வருவதாக கூறி வாகனத்தில் ஏறி வர, இந்த பக்கம் தாமோதரனின் வாகனம் பார்த்திபன் விஷ்ணுவை தாண்டி செல்ல உடனே அந்த தகவலும் ஸ்ரீனிக்கு சென்றது.
அவர்கள் குறித்து வைத்திருந்த இடத்தில் சரியாக ஸ்ரீனி தாமோதரனின் வாகனத்தை மரித்து வண்டியை நிறுத்தினான்.
“தம்பி யார் நீ எதுக்கு வண்டிய இப்டி நிறுத்திருக்க?” டிரைவர் ஸ்ரீனியை திட்ட, அவனோ அவரை சட்டையே செய்யாமல் வாகனத்தை அப்படியே நிறுத்தி தாமோரான் அமர்ந்திருந்த பக்கத்திற்கு மறுபக்கம் வந்து கதவை தட்டினான், “சார் ப்ளீஸ் உங்ககிட்ட பேசணும்” என்ற கெஞ்சலோடு.
உள்ளே அமர்ந்திருந்த தாமோதரன் அசையாதிருக்க அவருக்கு பயந்து டிரைவர் வாகனத்தை விட்டு கீழ இறங்கி அவனை அவ்விடத்தை விட்டு அகற்ற முயன்றார்.
“அண்ணா ப்ளீஸ் விடுங்க நான் சார்கிட்ட பேசியே ஆகணும்” நின்ற பிடியில் அவன் உறுதியாக பத்து நிமிடம் போராடி பார்த்தான்.
தாமோதரன் நேரம் விரயமாவதை உணர்ந்து அவன் நின்ற பக்கம் கார் கதவை திறந்துவிட, “சார் சார் என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்… அன்னைக்கு ஏதோ என் மாமா தெரியாம பண்ணிட்டார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” முகத்தை சுருக்கி கெஞ்சினான்.
“உன் மாமன் தப்பு பண்ணான் ஆனா நீ பண்ணது சரி தான் இல்ல?” தாமோதரன் சிரிப்போடு கேட்க மனதில் மூண்ட கோவத்தை சோகம் போர்த்திய நடிப்பில் மறைத்தான்.
“நான் பண்ணது தான் சார் ரொம்ப ரொம்ப பெரிய தப்பு. என்ன மன்னிச்சிடுங்க. கூட இருக்க பொண்ணோட பாதுகாப்பு முக்கியம்னு தோணுச்சு அதான் கோவத்துல என்னையும் மீறி ஏதோ பண்ணிட்டேன்”
தாமோதரன், “சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற?”
ஸ்ரீனிவாசன், “மன்னிச்சிடுங்க சார். நான் பண்ண தப்புக்கு என் குடும்பமே தண்டனை அனுபவிக்க வேணாம்னு தான் உங்கள பாக்க வந்துருக்கேன்”
அவர் அசைந்தபாடில்லை, “மாமா நீங்க யார் என்னனு தெரியாம பேசிடார். அவருக்கு பதிலை நான் மன்னிப்பு கேக்குறேன்” கை கூப்பி மன்னிப்பு வேண்டினான்.
தாமோதரனின் வக்கிர புன்னகை அந்த வாகனம் எங்கும் ஒழிக்க இதனை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவுக்கு கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து வெறி ஏறியது.
“அப்டி ஒன்னும் நீ அவனை தங்கணும்னு அவசியமில்லை, பார்த்தி அவனை வர சொல்லுடா” என்றான் கோவமாக.
பார்த்திபன் அமைதியாக நடப்பதை பார்த்திருக்க விஷ்ணுவுக்கு மேலும் கோவம் அதிகமாகியது, “ஸ்ரீனி கைய கீழ போடுடா” கத்தினான், “அவன்லாம் ஒரு ஆளுன்னு அவனை முன்னாடி தப்பு பண்ண மாதிரி இவன் நிக்கணுமா?” என்ற கோவம் விஷ்ணுவுக்கு.
“போதும் கைய கீழ விடுடா” பார்த்திபனும் கூறவும் தான் ஸ்ரீனி செய்தான். அதே நேரம் நண்பனை பார்த்த பார்த்திபன், “அமைதியா இருக்கனும் விஷ்ணு நாம. அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கன் மிஸ் ஆகிடுச்சுன்னு கம்ப்லைன் பண்ணிட்டா அவ்ளோ தான். பொறு” என்றான். தாமோதரன் கீழே இறங்கி ஸ்ரீனியை மறுபக்கம் வர செய்தார்.
“மன்னிப்பு கேக்கணும்னு சொன்னல? இப்போ கேளு” என்றார்.
“மன்னிச்சிடுங்க சார்” என்றான். அதே நேரம் மூடப்படாத காரின் மறுபக்கம் வந்திருந்த விஷ்ணு மெல்ல பதுங்கி தாமோதரனின் பையை தேடி கண்களை சுழற்றினான்.
“சரி தம்பி மன்னிக்கிறேன், என் கால்ல விழு” பையை எடுக்கப் போன விஷ்ணு கைகள் அந்தரத்தில் நின்றது.
“பார்த்தி..” அடித் தொண்டையிலிருந்து மெதுவாக அழைத்தான் விஷ்ணு.
“விஷ்ணு வெளிய செய். ஸ்ரீனி அந்த ஆள் சொல்றதை செய்” என்றான் பார்த்திபன்.
“எடு விஷ்ணு நேரமாச்சு, டம்மிய மறக்காம வச்சிட்டு” அமைதியாக வந்த வேலையை முடித்து எடுத்த இடத்திலே பையையும் வைத்து பூனையாக வெளியேறியிருந்தான் விஷ்ணு.
ஸ்ரீனி முகத்தில் தெரிந்த கோவத்தில், “காம் டௌன் ஸ்ரீனி. அவரோட வயசுக்கு தலை வணங்குறன்னு மட்டும் யோசிச்சு கால்ல விழு”
மாமன் பேச்சு மனதின் கோவத்தை கொஞ்சம் குறைக்க அவர் காலை தொட்டு நிமிர்ந்தவன், “உங்ககிட்ட சாரி கேக்குறதுக்கு காரணமே இனிமேல் என் குடும்பம் மேல நீங்க உங்க கோவத்தை காட்ட கூடாதுன்னு தான்” வேலை முடிந்த தைரியத்தில் ஸ்ரீனியின் பேச்சு சற்று மாறியிருந்தது.
அதை கவனிக்க தாமோதரனின் கர்வம் இடம்கொடுக்கவில்லை, முகம் எல்லாம் வெற்றி புன்னகை தான்.
“ஏன்டா நீங்க ஊர் முன்னாடி எல்லாம் வச்சு என்ன அசிங்கமா பேசிட்டு இப்டி ஆளே இல்லாத காட்டுல நின்னு மன்னிப்பு கேட்டுட்டு ஓடிருவிங்க, நான் ஒடனே எல்லாம் மறந்துட்டு மன்னிக்கனுமா? ஒரே அடிக்கே இப்டி பயந்து ஓடி வந்துட்ட? எங்க அவனுங்க?” புருவம் உயர்த்தி கேட்டார், “நீ எப்படி பதறி ஓடி வந்தியோ அதே மாதிரி அவனுங்களையும் வர வைப்பேன்” என்றவர், “டிரைவர் வண்டி எடு” கட்டளை பிறப்பித்து வாகனத்தில் பறந்தார்.
எரிமலையாக கொதித்துக்கொண்டிருந்த ஸ்ரீனியை வம்படியாக இழுத்து வந்தவர்கள் எடுத்த துப்பாக்கியை வேறு ஒருவரிடம் கை மாற்றி வீட்டிற்கு சென்றனர்.
விஷ்ணுவின் வாகனத்தை ஸ்ரீனி எடுத்து வந்திருக்க ஸ்ரீனியை அவன் வீட்டில் இறக்கிவிட போன பார்த்திபன் அப்பொழுது அங்கு இருந்த அவன் மாமாவை பார்த்து காரிலிருந்து கீழ் இறங்கினான். மகனை எதிர்பார்த்திருந்த ராஜ்கோபால் மருமகனும் வருவதை பார்த்து அவனை வரவேற்றார், “வாங்க மாப்பிள்ளை” என்று.
தலை அசைத்து சிரித்தவன், “அப்போ நான் கிளம்புறேன்” என்றான்.
“ஒரு நிமிஷம்” மருமகனை நிறுத்திய ராஜ் கோபால் மனைவியை அழைத்து அவனுக்கு தேநீரை எடுத்து வர கூற ஸ்ரீனி வீட்டினுள் சென்றுவிட்டான்.
மாமனார் மருமகன் இருவரும் அமைதியாக ஒரு வார்த்தை பரிமாற்றமின்றி இருந்தனர். இருவரும் எப்பொழுதும் இப்படி தான். அதிகம் பேசிக்கொள்வதில்லை. மனதில் மற்றவர் மேல் அளவுகடந்த மதிப்பு மரியாதை மனதளவில் இருந்தாலும் வெளியே இருவரும் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.
ஏனோ தொடக்கத்தில் தங்களது காதலை பற்றி அறிந்த நேரம் அவனது வேலையை பார்த்த ராஜ் கோபால் தன்னுடைய தொழிலை அவன் பொறுப்பில் ஒப்படைக்க போவதாக கூறியிருக்க அந்த வார்த்தைகள் பார்த்திபனை பெரிதாக ஆட்டியது.
தன்னால் எதுவும் செய்யவே முடியாது என்ற எண்ணமே இவருக்கு வந்து விட்டதா? தன்னை எப்படி அவர் குறைவாக இடை போடலாம், அதுவும் அவரை சார்ந்தே தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறாரா? அப்படியெனில் அவன் மேல் நம்பிக்கை இல்லாதது தானே காரணம் என்கிற கோவம் வர அவரிடமே இரண்டு வருடத்தில் வெற்றியோடு அவர் முன்பு நின்றான்.
அதற்கு முன்பு பார்த்து, கேட்ட பார்த்திபன் இல்லாது முற்றிலும் வேறாய் வந்தவனை பார்த்து தன்னாலே கர்வம் அவருக்கு. மருமகனின் நிலையில், அவனின் வைராக்கியத்தில். பார்த்திபன் அமைதியாக விலகி நிற்க அவரும் அந்த இடைவெளியிலே இன்று வரை நின்றுவிட்டார்.
“உக்காருங்க” வீட்டின் அந்த சிறிய தோட்டத்தில் இருந்த கல் மேடையை கை காட்டி அமர சொன்னார்.
“வேலை எல்லாம் நல்லா போகுதா?”
“ம்ம்ம் நல்லா போகுது”
“ஓ.. சரி சரி. அந்த கடை தான் வாங்க போறிங்களா?”
“ஆமா அந்த இடம் எனக்கு வசதியா இருக்கு. வாங்க ஒரு நாள் குடவுனுக்கு. வேலை ஆரமிச்ச புதுசுல வந்தது”
“ம்ம்ம் கண்டிப்பா வர்றேன்” தயங்கியவர், “கொஞ்ச நாள் கழிச்சு வாங்கலாமே. ஆரபி உங்ககிட்ட விஷயத்தை சொல்லலையா?” தயக்கத்தோடு தான் அவனிடம் கேட்டார்.
“அது மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. எனக்கு துணைக்கு தான் விஷ்ணு இருக்கானே. பாத்துக்குவேன்” என்றான் அத்தனை உறுதியாக.
இனி பேச எதுவுமில்லை என்ற பார்த்திபனின் அழுத்தமே அவரை அதற்கு மேல் பேச விடவில்லை. அவன் நம்பிக்கையையும் குலைக்க விருப்பமில்லாமல் தலையை ஆட்டி, “ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம கேளுங்க”
அவன் நிச்சயம் கேட்க மாட்டான் என தெரிந்தும் பெண்ணை பெற்றவராக ராஜ் கோபால் கூற, அவருக்கு மரியாதை கொடுக்கும் எண்ணத்தில் சரி என்றான். க்ரிஷ்ணாம்பாள் காபி எடுத்து வர அதனை குடித்து முடித்து அனைவரிடமிருந்தும் விடைபெற்று இல்லம் திரும்பினான்.
******
அறையின் கதவு அதிவேகத்தில் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த தாமோதரன் ஜன்னல் வழி பார்க்க இன்னும் வானம் தெளியவில்லை, நேரத்தை பார்க்க இன்னும் ஆறு கூட ஆகவில்லை.
“அப்பா… அப்பா” மகளின் கலங்கிய குரலை கேட்டு வேகமாக வந்த தாமோதரன் கதவினை திறக்க, முகம் எல்லாம் வியர்த்து பயம் அப்பி நின்றார்.
“என்ன மா?”
“அப்பா உங்கள பாக்க போலீஸ் வந்துருக்காங்க” மகள் பேசுவதை கேட்டு ஆசுவாசமானார், “போலீஸ் தானே ம்மா, அப்போ பயம் வேணாம்” நம்பிக்கை மலையளவு இருக்க கீழே வந்து பார்த்தவர் புருவங்கள் சுருங்கியது.
ஒருவன் சோபாவில் அமர்ந்து கருப்பு கண்ணாடி அணிந்து தாமோதரனை பார்வையாலே திமிராக தொடர, அதை கவனித்த தாமோதரன், “நீங்க??” என்றார் கேள்வியாக.
அவருக்கு எதிரில் மிடுக்காக இரண்டு அதிகாரிகள் சற்றும் தலையை தாழ்த்தாது நெஞ்சை நிமிர்த்தி, “பாரஸ்ட் டிபார்ட்மென்ட், உங்கள அர்ரெஸ்ட் பண்ண வந்துருக்கோம்” என்றார் ஒருவர்.
“பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இருந்து அர்ரெஸ்ட் பண்ற அளவுக்கு நான் எதுவும் பன்னலயே” – தாமோதரன்
“நீங்க ஒன்னும் பண்ணல ஆனா உங்க துப்பாக்கி கட்டுப்பன்னி, மானை எல்லாம் கொன்னுருகே” சாய்வாக அமர்ந்திருந்த அதிகாரி கூற உடனே மறுப்பு அவர் மகளிடமிருந்து தான் வந்தது.
“சார் ஏதோ தப்பு நடந்துருக்கு, அப்பா இந்த மாதிரி எல்லாம் பண்றவர் இல்ல”
“ம்மா ஒன்னும் தெரியாம இங்க வந்து நிக்கல உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க ஷெட்ல வேட்டையாடுற கன்ஸ், மான் தோல் எல்லாம் இருக்குது, செக் பண்ணிட்டு தான் வந்தோம்” என்றான் ஒருவன்.
“அது என்னோட அப்பா போனது தம்பி. எனக்கு அந்த பழக்கமில்லை”
“உங்க புல்லட், உங்க கன் தான் சிக்கிருக்கு” தாமோதரன் எண்ணம் நேற்று இரவு பையை எடுத்த பொழுது சென்றது. படுக்கும் பொழுது கூட அதனை பார்த்தாரே.
“சி.எம் பேசுனா கூட நீங்க வந்து தான் ஆகணும். அமைதியா வந்தா ஈஸி. இல்லையா இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு ஊரையே வீடு வாசல்ல நிக்க வச்சு இழுத்துட்டு போவேன்” நிதானமாக கூறியவன் எழுந்து நிற்க தன்னாலே தாமோதரனும் எழுந்து நின்றார்.
அனைத்தையும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்த அனாயாவிடம், “அனாயா ம்மா லாயர்க்கு வேகமா போன் பண்ணு… என்னங்க” மகளிடம் அவசரப்படுத்தி உறங்கிக்கொண்டிருந்த கணவனை உசுப்பினார்.
மகளோ சிறிதும் தனக்கு காத்து கேட்காதது போல் நிற்க அனாயாவின் தந்தை எழுந்தே வரவில்லை.
“யாரா இருந்தாலும் ஸ்டேஷன் வர சொல்லுங்க” மிடுக்காக வெளியே சென்றவன் பின்னே மற்ற இருவரும் நடக்க மகளுக்கு ஆறுதல் கூறிய பெரியவரிடம்,
“ஓ மனுசங்ககிட்ட மட்டும் தான் வீரத்தை காட்டுவீங்கனு நினைச்சா பரவால்ல மிருகத்துக்கிட்ட கூட வீரத்தை காட்டி பெரிய ஆளாகிட்டீங்க” அனாயா சீண்டினாள்.
“அனாயா…” அன்னை கடிய முகத்தை திருப்பி உறக்கத்தை தொடர சென்றாள்.
தாமோதரன் சிறைக்கு செல்வதை அவர் மகள் என்ன தடுத்தும் நிறுத்த இயலவில்லை.
மருதமலை காட்டையே தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்த அந்த காவல் நிலையத்தில் உள்ள ஒரு சாதாரண கோப்பை போல் ஓரமாக கிடந்தார். தாமோதரனை அங்கு அழைத்து வந்தே மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது.
அவருடைய மருமகனும் பி.எ-வும் வந்து காரணம் என்னவென கேட்டறிந்த பொழுது அவருடைய துப்பாக்கியை பயன்படுத்தி ஒருவன் காட்டு விலங்குகளை வேட்டையாடியதோடு இல்லாமல் தாமோதரன் தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறிவிட சிறுத்து போனது அவர் முகம்.
அவன் பயன்படுத்திய துப்பாக்கி முதல் எல்லாமே அவருடையாதாகி போக அவரை அவ்வளவு எளிதில் தாமோதரனால் வெளியே வர முடியவில்லை. அதோடு அந்த காவலதிகாரியின் ஒற்றை பார்வையிலே பேரம் பேச வந்த தாமோதரன் வக்கீல் முடிவை மாற்றிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
திடீரென அங்கு வந்த ஸ்ரீனிவாசன் காவலதிகாரியிடம் பேசிவிட்டு தன்னை நோக்கி எதையோ சாதித்த புன்னகையோடு வந்தவனை கண்கள் இடுங்க நோக்க, அவன் நெருங்க நெருங்க அவரது சந்தேகமும் உறுதியானது. பற்களை கடித்து முகம் சிவக்க தன்னை பார்ப்பவரிடம் கைபேசியை ஸ்ரீனி நீட்ட என்னவென்று பார்த்தார்.
“என் மாமாவ உங்கள்கிட்ட மன்னிப்பு கேக்க சொன்னிங்கள்ல? மன்னிப்பு கேக்கணுமாம்” மீசை துடிக்க சிரிப்பை மறைத்தவனை பார்வையாலே எரித்து கைபேசியை வாங்கி காதில் வைக்க அந்த பக்கம் ஏகத்திற்கும் அமைதி.
பொறுமை இழந்து, “ஹலோ” தாமோதரன் தான் முதலில் பேசியதே, அதுவும் அத்தனை கோவம்.
“ம்ம். நான் தான் சொன்னேன்ல மாப்பிள்ளை இந்த ஆளுக்கு கோவம் வரும்னு. நீ தான் அவன் சிரிச்சிட்டே இருப்பான்னு சொன்ன” கேலியாக நண்பனிடம் உரையாடிய விஷ்ணுவின் வார்த்தையை கேட்டு கண்களை மூடி பொறுமை காத்தார் தாமோதரன்.
“சுரனையே இருக்காதுன்னு நினைச்சது தப்பு தான் போல” கேலி இழையோடிய பார்த்திபனின் வார்த்தை சவுக்கால் அடிவாங்க வைத்தது அந்த பெரிய மனிதனை.
“உன்கிட்ட மன்னிப்பு வேற கேட்கணுமா?” பார்த்திபனின் சிரிப்பு சத்தம் தாமோதரனின் செவிப்பறையை அடையும் முன்பு கைபேசியை தள்ளி வைத்தார்.
பார்த்திபனின் சிரிப்பு ஓய்ந்த பிறகே காதில் வைக்க, “இவனுங்களாம் என்ன செஞ்சிடுவான்னு தான என் புள்ள மேல கை வச்ச? இனி இவனுங்க என்னென்ன செய்வானுங்களோனு நீ பயப்பிடனும். பயப்பிட வைப்பேன்” முகத்தில் அறைந்தது போல் தீயாய் தாமோதரனின் உடல் மொத்தமும் தகித்தது க்ரோதத்தாலும் வெறியாலும்.
ஒரு முக்கிய அறிவிப்பு… TNW சைட்ல நடக்க போற காம்படிஷன்ல நான் பங்கேற்க போறேன். உங்களுக்கே என்ன பத்தி தெரியும் ரொம்ப மெதுவா தான் அப்டேட் போடுவேன்னு. ஆனா போட்டிக்கு அப்டி பண்ணா நல்லா இருக்காதுல சோ வேகமா எழுதலாம்னு யோசிச்சேன். அதுனால இந்த கதையை கொஞ்சம் ஹோல்ட் பண்ணி வைக்க வேண்டிய கட்டாயம். யாரும் என்ன தப்பா நினைக்க வேணாம். டைம் இருந்தா கண்டிப்பா நாணல்க்கு அப்டேட் போடுவேன். எல்லாரும் என்ன ஜோரா ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க மக்களே… 🙏🏻🙏🏻🙏🏻