அழகான மாலை நேரம்.. ஆமாம்.. இன்று வழக்கத்திலில்லாமல் மிக மிக அழகாய்தான் காட்சியளித்தது தேன்நிலாவின் வீடு.
உயிரையே வைத்திருக்கும் அம்மா, ரத்த பந்தம் இல்லையென்றபோதும் மகனுக்கு இணையாக தன் மீதும் அதீத பாசம் வைத்திருக்கும் அப்பா, தாய் ஒன்று தந்தை வேறென்றபோதும், உடன் பிறந்த சகோதரிபோல் பாசம் வைத்திருக்கும் தம்பி என அனைவரும் பிறந்த நாளிற்கு வந்திருக்க, தேன்நிலா அதீத சந்தோசத்தில் இருந்தாள்.
எத்தனை அழைத்தாலும் தேவையின்றி வீட்டிற்கு வராத தேன்நிலா இன்று காலையில் கேக் மற்றும் கோவில் பிரசாதத்தோடு தன்னை காண வந்ததில் பெரு மகிழ்ச்சியடைந்தனர் மங்களமும் லிங்கேசனும்.
“ஹாப்பி பர்த் டே டூ யூ.. ஹேப்பி பர்த் டே டூ யூ டியர் நிலாக்கா..” என்று சந்தோசமாய் பாடினான் தமிழரசு.
“தமிழ்.. நானென்ன சின்ன குழந்தையா? பாட்டெல்லாம் பாடிகிட்டு.” என செல்லமாய் சலித்தபடி கேக்கை ஊட்டினாள் தம்பிக்கு.
“ஆமாம்மா.. நீ சின்ன குழந்தையில்ல, இன்னைலயிருந்து இருபத்திமூனு தொடங்கிடுச்சி, முன்னபோல இனி கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லக் கூடாது.” என உரிமையாய் தன் கோரிக்கையை வைத்தார் மங்களம்.
கடந்த ஒரு வருடமாக மகளுக்கு திருமணம் செய்தாக வேண்டுமென நினைத்திருந்த மங்களம் இரண்டு வரன்களை தேர்வு செய்து தேன்நிலாவிடம் புகைப்படத்தை காண்பித்தார்.
வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது.. அதற்குள் திருமணமா என அன்னையின் விருப்பத்தை மறுத்தாள் தேன்நிலா.
நல்ல வரன் அமையும்போதே கல்யாணத்தை முடிச்சிடனும், இல்லைன்னா இப்படி வரன் அமையாது என மங்களமும் லிங்கேசனும் எடுத்துரைத்தனர்.
இப்படித்தானே அன்னையின் முதல் திருமணத்திற்கு பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருப்பார்கள்? ஆனால் தன் தந்தை அன்னையோடு சொற்ப காலம்தானே வாழ்ந்தார் என நினைத்த தேன்நிலா.. அப்படில்லாம் இல்லம்மா, எனக்கானவன் எனக்காக காத்திருப்பான், தமிழ் படிப்பு முடிஞ்ச பின்ன கல்யாணம் செய்துக்கிறேன் என்றாள்.
வரன் நல்ல வேலையில் இருப்பதாலும், மகளின் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்திருக்கு என்று சொன்னதாலும், லட்சணமான தோற்றமுள்ள வரனை பார்த்ததும் மகளுக்கும் பிடித்திடும் என்ற நம்பிக்கையோடும், இப்படியான நல்ல வாய்ப்பை தவற விடக்கூடாதென நினைத்த மங்களமும் லிங்கேசனும் தேன்நிலாவின் மறுப்பையும் மீறி மகளை பெண்பார்க்க வர சொல்லியிருந்தனர்.
என்கிட்ட சொல்லிட்டு வர சொல்லியிருக்கலாமில்ல? என்ற முனுமுனுப்போடு தேன்நிலா வெளியே வர.. “பொண்ணு ஊனம்னு சொல்லவேயில்ல?” என மாப்பிள்ளையின் அம்மா முகத்தை சுழித்தனர்.
ஆனால் தேன்நிலாவின் அழகில் மயங்கியிருந்தவனோ.. “அம்மா ஊனம்லாம் இல்ல, லேசா சாய்ஞ்சாப்பில நடக்குறா, அவ்வளோதான்.. இப்படி பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறது எனக்கு பெருமையா இருக்கு.” என்று சொல்ல, இவனை பிடிக்கவில்லையென அன்னையிடம் பார்வையாலே உணர்த்தி உள்ளே சென்றிருந்தாள் தேன்நிலா.
மகளின் பார்வை புரிந்த லிங்கேசனிற்கு அவசரப்பட்டுவிட்டோமோ என மனம் வேதனையானது.. அவர்கள் சென்ற பின்னே, “மன்னிச்சிக்கோடா நிலாபொண்ணு.” என மிகுந்த வருத்தத்தோடு சொல்லி.. “உனக்கு அவன் வாழ்க்கை கொடுப்பானாமா? எழுந்து போடா நாயேனு திட்டியிருப்பேன்.. நல்லா விசாரிக்காம நானும் அவசரப்பட்டு வர சொல்லிட்டனேனு அமைதியாகிட்டேன்.” என்றார் ஆற்றாமையோடு.
“அந்தம்மாதான் அப்படி பேசினாங்க.. மத்தபடி மாப்பிள்ளை பிடிச்சிருக்குனுதானே சொன்னார்? என சமாளித்த மங்களம், “உன்னை கல்யாணம் செய்துக்க அவங்களுக்கு கொடுத்து வைக்கில நிலா.” என்றார் தேறுதலாக.
தன் ஊனத்தை சுட்டிக்காட்டிய குடும்பத்தின் மீது கோபம் இருந்த போதும்.. தாய் தந்தை வருந்துவதை சகிக்க முடியாமல்.. “எனக்கொன்னும் வருத்தமில்லப்பா..” என தேற்றினாள்.
அதன்பின் பெண்கேட்டவனிடம் மகளின் குறையை விளக்கி சம்மதமென்றால் மேற்கொண்டு பேசலாம் என்க.. ஊனம் பெரிய விசயமல்ல என பெருந்தன்மையோடு வந்தவர்களின் கவனம் தேன்நிலாவின் பென்ஷன் பணத்திலும், அவளின் சம்பாதனையிலும், தற்போது குடியிருக்கும் வீட்டிலும் இருக்க.. தேன்நிலா இவர்களை நேரடியாக மறுத்தாள்.
“பொண்ணு கொஞ்சம் திக்குவாய்னு சொன்னிங்க? ஆனா கொஞ்சம் கூட வச்சிப்பார்க்காம சரவெடியா வெடிக்கிறா.. இப்படி வாயாடி எங்க குடும்பத்துக்கு வேணாம்.” என்று கிளம்பினார்கள்.
அன்றிலிருந்து திருமணப் பேச்செடுத்தாலே ஆரம்பிச்சிட்டியாம்மா? என முறைக்கும் தேன்நிலா வழக்கத்திற்கு மாறாக இன்று அன்னையின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்றவளாய்.. “ம்.. கல்யாணம்.. அதையும் செய்துதான் பார்க்கலாமே.” என்றாள் சந்தோச மனநிலையில்.
இன்று இருபத்தி மூன்று வயதை எட்டும் தேன்நிலா இதுவரை இப்படி பிறந்தநாள் கொண்டாடியதில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும வான்முகிலனுக்கு ஒரு மாதம் முன்பு திருமணம் பேசி முடிவாகியிருந்தது.
வான்முகிலனின் திருமணத்தால் தேன்நிலாவிற்கு சிறு அச்சம் வந்திருந்தது. தேன்நிலா தைரியமான பெண்தான். இல்லையேல் பெற்ற அன்னையின் நிம்மதிக்காகவும், பெறாத தந்தைக்கு சுமையாய் இல்லாமலும் இப்படி தனித்திருப்பாளா?
தைரியமான பெண்ணானாலும் பண்பறியா ஆடவனின் வக்கிரப்பார்வைக்கு அன்று நடுநடுங்கிய நேரம் அவ்வழியாக வந்த வான்முகிலனின் வரவே அவளை காப்பாற்றியது.
அன்று பணி முடிந்து வந்து கொண்டிருந்த நேரம் மழை பெய்து கொண்டிருக்க, அந்த நேரம் தேன்நிலாவின் ஸ்கூட்டி மக்கர் செய்ய, முழுதாய் நனைந்த தேன்நிலாவின் வரிவடிவத்தில் மயங்கிய வழிபோக்கன், அவளை கொள்ளை கொள்ளும் ஆசையில் அவளருகே நெருங்கினான்.
முன்பின் அறியா ஆடவனின் வக்கிரப் பார்வையில் மிரண்ட தேன்நிலா பைக்கை விடுத்து வேகமாய் நடக்க எத்தணிக்க, ஈர உடையும், வலுவற்ற ஒரு காலும் அவளின் மன வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாட, தடுமாறி தடுக்கி விழுந்த நேரம் அவ்விடம் வந்தான் வான்முகிலன்.
தேன்நிலாவை பின்தொடர்ந்தவன் வான்முகிலன் வந்ததும் தெறித்து ஓட, மிகுந்த ஆசுவாசமடைந்த தேன்நிலா இரு கை கூப்பி வணங்கினாள்.
“நானொன்னும் பண்ணல, என்னை பார்த்ததும் ஓடிட்டான். எதுக்கு இவ்வளோ பயப்படற.? நாலு அப்பு கொடுத்து அவனை பயப்படுத்த வேண்டியதுதான?” என கடிந்தவாறு அவளின் ஸ்கூட்டியை சரி செய்து ஸ்டார்ட் செய்து.. “ம்.. போ.” என வீட்டிற்கு போக வேண்டிய திசை நோக்கி கையை காண்பித்தான்.
“நான் அரையிறவரை அவன் சும்மா இருப்பானா? தடிமாடாட்டம் இருக்கான்.” என முணங்கியவாறு வண்டியில் அமர.. அவளின் ஸ்கூட்டியில் கை வைத்தவன்.. “உடம்புல வலுயில்லனா என்ன? இங்க சுத்தியும் கேமரா இருக்கு, என்னை எதாவது செய்த கம்ப்ளைன் செய்தேன்னா நீ மாட்டிக்குவன்னு மிரட்டலாம்..
இல்ல உண்மையாவே போலீஸ்க்கு கால் பண்ணலாம், இல்ல போலீஸ்க்கு கால் பண்ணுறேன்ற மாதிரி ஆக்டிங் பண்ணிட்டு தெரிஞ்ச யாருக்காவது கால் பண்ணி நிலைமையை விளக்கலாம்..” என பல வழிகளை சொன்னவன்..
“ஆண்களைவிட பெண்களுக்கு மனபலம் ஜாஸ்தி.. ஆனா அதை சரியான நேரத்துல பல பேர் உபயோகிக்கிறதில்ல.. இனியாவது உன்கிட்ட இருக்க வீக்னசை சரிசெய்துக்கோ. சினிமா ஹுரோ மாதிரி எல்லா நேரமும் இப்படி என்னால வரமுடியாது. இன்னைக்கு எதோ எதேச்சையா வரவும் ஆச்சு.” என எடுத்துரைத்து, “கிளம்பு.” என அவளின் பைக்கிலிருந்து கையை எடுத்தான்.
“இதுவரை இப்படி யாரும் செய்ததில்ல, இதுதான் ஃபர்ஸ்ட் டைம். அதான் கொஞ்சம் பயந்துட்டேன், இனி தைரியமா பேசுறேன்.” என நன்றியோடு சொல்லி கிளம்பினாள் தேன்நிலா.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து, என்ன நிலா இப்படி ஆகிடுச்சாம் என பதட்டமாய் விசாரித்தார் லிங்கேஷ்வரன்.
இவள் நடந்ததை விளக்கி.. “உங்களுக்கு எப்படிப்பா தெரியும்.?” என கேட்க, “அந்த தம்பியே நேரடியா உன் விசயத்துல தலையிட்டு, அது பேசப்படலன்னாதான் ஆச்சர்ப்படனும்.” என வியப்போடு சொல்லி,
“தமிழரசுகிட்ட அவன் ஃப்ரண்டுங்க சொல்லியிருக்கானுங்க, தமிழ் என்கிட்ட சொன்னான்.” என்றார் சோர்வாக.
“நல்லாதானப்பா பேசிட்டிருந்திங்க? திடீர்னு ஏன் டல்லாகிட்டிங்க?” என்றாள் தேன்நிலா.
“இல்லடா, வான்முகிலன் நல்லமாதிரிதான், ஆனா அவர் உனக்கு ஹெல்ப் பண்ணவும் ஒரு சிலர் உன்னை அந்த தம்பியோடு சேர்த்து வச்சி தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு.” என்றார் கவலையாக.
“அப்பா.. யாரோ நினைக்கிறதுக்கெல்லாம் நாம பொறுப்பாக முடியுமா? விடுங்கப்பா.. நான் கூட என்னவோனு பயந்துட்டேன்.” என்றாள் இலகுவாக.
“உண்மையை சொல்லனும்னா.. வான்முகிலன் வீட்டுக்கு பக்கத்துல நீ இருக்கிறதாலதான் மத்த பசங்க உன்னை அண்டாம இருக்காங்க. அவர் தைரியத்துலதான் நானும் கொஞ்சம் பயமில்லாம இருக்கேன். ஆனாலும் இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா.” என்றார் அக்கறையாக.
“சரிப்பா.” என ஆமோதிக்க, இணைப்பை துண்டித்தார் லிங்கேஷ்வரன்.
இவ்வூரில் இருக்கும் ஒருசில ரௌடிகளும்கூட வான்முகிலனிற்கு பயந்தே தன்னிடம் தவறாக நடப்பதில்லையென்று தன் தமையன் தமிழரசு மூலம் தேன்நிலாவிற்கு பிறகுதான் தெரிய வந்தது.
ஆனால் பணபலம், அதிகாரபலம் மிகுந்தவன்போல் ஒருநாள் கூட தன்னிடம் காட்டியதில்லை என வான்முகிலனை நினைத்து அவ்வப்போது பெருமைகொள்வாள்.
தேன்நிலாவிடம் மட்டுமல்ல, வான்முகிலன் தன்னை தேடி வரும் வம்பைத் தவிர வேறு யாரிடமும் அவன் பலத்தை காட்டியதில்லை என்பதை தேன்நிலா அறிய வாயப்பில்லாமல் போனது.
கடந்த ஒரு வாரமாக சொந்தங்கள் ஒன்றிணைந்து கடைவீதிக்கு செல்வது.. மனமகனுக்கு நலங்கு வைப்பது, முகூர்த்தக்கால் நடுவது, என நாளுக்கொரு சுபநிகழ்வுகள் வான்முகிலன் வீட்டினில் நடக்க, தேன்நிலாவிற்கும் திருமணம் செய்யது கொள்ளும் ஆசை, அவளறியாமல் அவளுள் வந்திருந்ததை அறியவில்லையென்றாலும்..
தற்போது அவனிற்கு திருமணம் என்றதும் மனதினுள் பாதுகாப்பற்ற எண்ணம் வலுவாய் தோன்ற, தானும் திருமணம் செய்துகொள்ளும் முடிவிற்கு வந்தாள் தேன்நிலா.
அதன் காரணமாகவே அன்னையிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவள்.. எப்படிபட்டவனானாலும் தன்னை கீழாக நினைப்பவனை திருமணம் செய்யமாட்டேன் என்ற நிபந்தனையையும் விதித்து தன் பிறந்தநாளை இனிதே கொண்டாடினாள் தேன்நிலா.