சிறு வயதில் பள்ளிக்கு செல்லும்போது வழியில் அவ்வப்போது தென்படுவாள். அப்பொழுதெல்லாம், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண், பாவம் நன்றாக பேச வராது, நடையும் வராது என்ற நினைப்பு, பரிதாபம் மட்டுமே அவள் மீது.
தேன்நிலாவை வான்முகிலன் நன்றாக பார்த்தது அவளின் தாத்தா இறப்பில்தான். அழுது அழுது ஓய்ந்த முகத்தோடு வீங்கிச் சிவந்திருந்தவளை பார்த்த வான்முகிலனுக்கு, தன் தந்தை இறந்தபோது இந்த வேதனையை அனுபவித்த காரணத்தால் தேன்நிலாவின் நிலையறிந்து அவளையே வைத்த கண் வாங்காமல் வேதனையோடு பார்த்திருந்ததெல்லாம் தேன்நிலாவிற்கு தெரியாது.
அவளின் அழுகையை தணிக்க, ஆறுதல் சொல்ல நினைத்தாலும், முன்பின் பேசியிராதவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது எனத்தெரியவில்லை. அதோடு ஆறுதலடையும் விசயமா இது? என வருந்தினான்.
நம்ம வீட்டுலயாவது மூனு பேர் இருக்கோம், தேன்நிலா தனியா இருக்கா, நான் அங்க போறேன் என இந்துபிருந்தா கேட்கும்போதெல்லாம் சுப்புலஷ்மி மறுத்தாலும், போகட்டும் விடும்மா, அவ மட்டும்தானே இருக்கா என அன்னையிடம் தங்கைக்கு அனுமதி வாங்கி கொடுப்பான் வான்முகிலன்.
விடுமுறை நாட்களில் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரத்தில் தேன்நிலாவோடுதான் இருப்பாள் இந்துபிருந்தா.
சிறு வயதிலிருந்தே இவர்களுள் சண்டை என ஒருநாளும் தங்கை சொன்னதில்லை. தற்போது திருமணம் முடித்து போனபின்னும் கூட தோழி மீது பாசம், அக்கறை காட்டும் தங்கையை நினைத்தவன்.. ம்.. அவ்வளோ ஆழமான நட்பா உங்களுது? எனக்கு கூட இப்படி யாரும் இல்லை என பெருமையாய் நினைத்திருந்த நேரம்.. டீ யை நீட்டினார் சுப்புலஷ்மி.
டீயை வாங்கிப் பருக, அவளின் பழைய நினைப்பிலிருந்து மீண்டு, தற்போதைய முகம் கண்முன் வர.. ம்.. அழகிதான் என நினைத்தான் மைய்யலாக.
** ** ** ** ** ** ** **
மாலை ஆறு மணிபோல் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த தேன்நிலா நினைவினுள் வான்முகிலன்தான் நிறைந்திருந்தான்.
எப்படியெல்லாம் படிக்க வைக்கனும்.. என் மகன் பெரிய ஆபீசராவான்னு அவங்கப்பா கனவு கண்டார், ஆனா இன்னைக்கு என் மகன் படிப்பை கூட தொடர முடியாம ஆகிடுச்சி.
எல்லா பாரத்தையும் அவன்மேல இறக்கிட்டு அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டார். என வான்முகிலன் தந்தை இறந்த புதிதில் சுப்புலஷ்மி தன் தாத்தாவிடம் வேதனையோடு சொன்னதெல்லாம் நினைவிற்கு வந்தது தேன்நிலாவிற்கு.
சரக்கு ஏற்றிக்கொண்டு லாரிக்கு சென்றால் வீடு திரும்ப பத்தில் இருந்து பதினைந்து நாட்களாவது ஆகும். மகன் வரும்வரை மனம் நிலைகொள்ளாது சுப்புலஷ்மிக்கு.
பதினேழு வயதென்பதாலும், லாரி ஓட்டத்தெரியாது என்பதாலும் முதலில் க்ளீனராகத்தான் சென்றான் வான்முகிலன். சின்ன பையனை வேலைக்கு வைக்கிறது சட்டப்படி குற்றம்னு முதலாளி வேலைக்கு வரவேணாம்னு சொன்னாங்களாம்.
அப்படி எதாவது பிரச்சனை வந்தாலும், என் குடும்ப சூழலுக்காக நானாத்தான் வந்தேனு சொல்லிக்கிறேனு அவன் முதலாளிகிட்ட கெஞ்சி வேலைக்கு போயிருக்கான். என தன் பாட்டியிடம் புலம்பித் தீர்ப்பார் சுப்புலஷ்மி.
பின்னே ஒரு வருடம் கழித்து ஒரே வாரத்தில் லாரி ஓட்டிக் கத்துக்கிட்டேன்ம்மா, நாளைக்கு லைசன்ஸ் எடுக்கப்போறேன் என மகன் சந்தோஷித்தது, முதன் முதலாய் மாநிலம் விட்டு மாநிலாம் தானே லாரி ஓட்டிச்சென்றது, மகனின் சம்பாதியத்தில் இம்மாதம் மீதம் செய்தது என சுப்புலஷ்மி தன் பாட்டியிடம் சொல்லி சந்தோஷித்தது,
இனி உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சி என தன் பாட்டியும் அவர்களின் சந்தோசத்தில் பங்கெடுத்துக்கொண்டதென அனைத்தையும் நினைத்துப் பார்த்திருந்தாள் தேன்நிலா.
அப்போதெல்லாம் வான்முகிலன் வீட்டிற்கு இத்தனை பெரிய மதில்சுவர் இல்லை, அவர்களின் இடத்தை சுற்றி கம்பியாலான வேலிதான் போட்டிருந்தனர்.
இங்கிருந்து பார்த்தாலே அவர்களின் வீடு தெரியும். இந்து பிருந்தாதான் சிறு வயதிலிருந்தே தன்னோடு அதிகம் இருப்பாள்.
அப்பொழுதுதான் தேன்நிலா தனது ஆறாம் வகுப்பில் இருக்க, எதோ தன்னை விட மிகவும் பெரியவன் என்ற எண்ணம்தான் தேன்நிலாவிற்கு.
அவனின் தந்தையோடு நிறைய பேசுவதை பார்த்திருக்கிறாள். அவர் சென்ற பின்னே வான்முகிலனின் பொறுப்புகள் அதிகமாகிட, வருடத்திற்கு இரு முறை பார்ப்பதே அரிது.
லாரி ஓட்டுவதை தற்போது நான்கைந்து வருடமாய் நிறுத்திய பின்னேதான் நடைப்பயிற்சியினை துவக்கியிருந்தான். அதன் பின்னேதான் எப்போதாவது பள்ளி விட்டு வரும் வழியில் வான்முகிலனை காண்பாள்.
பக்கத்து வீட்டுப்பெண் என்ற முறையில் தன்னை கூட பார்க்கமாட்டான். எதோ நினைவோடு அவன் பாட்டிற்கு நடந்துகொண்டிருப்பான்.
தனக்கு விபரமறிந்த நாளிலிருந்து பெரியவன் என்ற பிம்பம்த்திலிருந்தவளுக்கு, எப்பொழுதும் சிவப்பேறியிருக்கும் பெரிய கண்கள்.. அடர்ந்த மீசை, டிரிம் செய்திருந்தாலும் கன்னத்தை முழுதாய் மறைத்திருக்கும் தாடி.. நெடுநெடு உயரம் என தற்போதைய தோற்றத்தில் முழு ஆண்மகனிற்கான கம்பீரம் தெரிய.. சொக்கித்தான் போனாள் தேன்நிலா.
கிளியின் ஓயாத கத்தலில் கவனம் கலைந்தவள்.. அச்சோ என பைப்பை நிறுத்தினாள். வான்முகிலனின் நினைப்போடு இவளிருக்க.. செடிக்கு போகவேண்டிய தண்ணீரெல்லாம் வாசலில் வழிந்தோடியது.
“இதுக்குத்தான் கத்துனியா கர்ணா? நீ கத்தவும் எனக்கு புரியல பாரு. இதுக்குத்தான் பேசிப்பழகுனு சொல்றேன். கேக்குறியா?” என கிளியை செல்லமாய் அதட்டியவள் செவிகளை கூசச்செய்தது வான்முகிலனின் வார்த்தைகள்.
இப்படியெல்லாம் பேசுவானா? தமிழில் இப்படி மோசமான வார்த்தை கூட இருக்கா? என வியந்தவள், இப்படி பேச்சு பேசி சரண்ராஜை திட்டத்தான் தன்னை கிளம்பச் சொன்னானா என நினைக்க இனம்புரியா பயம் வந்தது தேன்நிலாவிற்கு.
லாரி டிரைவரிடம்தான் பேசிக்கொண்டிருந்தான் வான்முகிலன். ஆனால் டிரைவரை திட்டவில்லை. தனது டிரைவரோடு வம்பளப்பவனை இப்படியெல்லாம் திட்டு என கொல்கத்தாவில் இருக்கும் டிரைவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.
கொல்கத்தாவில் சரக்கை இறக்கியதும், அங்கிருந்து வரும்போதும் சரக்கு ஏற்றிக்கொண்டுதான் வருவார்கள். ஆனால் அவனின் அவசரத்திற்கு ஓரிரவு கூட ஓய்வெடுக்காமல் வண்டி கிளம்ப வேண்டுமென்றால் எப்படி ஆவது? என்ற கோபமும்..
சரக்கு ஏற்றாமல் வந்தால் நஷ்டம் எனத் தெரிந்தே நன்கு பழகியவனே இப்படி பேசுகிறான் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள.. உன் இஷ்டத்துக்கு ஓட்ட முடியாதுனு சொல்லு என்பதை ஆத்திரத்தோடு பச்சை தமிழில் திட்டிக்கொண்டிருந்தான்.
“ண்ணா நான் பேசுறது புரியாத மாதிரியே நடிக்கிறான். நீங்களே பேசுங்க.” என அவன் சொல்ல, எதிரிருந்தவனிடம் ஹிந்தியில் பேசினான்.
என்ன திட்டினான் எனப்புரியாமல் போனாலும் அவனின் குரல் த்வணியில் பயந்துபோனாள் தேன்நிலா.
பத்து நிமிடம் வரை பேசிமுடித்து, கோபத்தோடே திரும்ப.. மேலே பார்த்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்தவன்.. அச்சோ கேட்டிருப்பாளோ? ஹிந்தி புரியாது, ஆனா அதுக்கு முன்ன தமிழ்ல.. என தான் பேசியதை நினைத்தவனுக்கு வெக்கமாகிப் போனது.
அந்த நேரம் இந்துபிருந்தா தேன்நிலாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றவள்.. “ப்.. ப்.. பிருந்தா..” என திணறியபடி உள்ளே போனாள்.
தன் கணவரின் தோழனைப் பற்றி சொல்லி “பொண்ணு பார்த்திட்டிருக்காங்கனு சுபாஷ் சொன்னார். உன் போட்டோவை காட்டினேன்.. உன்னை ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க நிலா. வாட்ஸாப்ல போட்டோ அனுப்பறேன், பிடிச்சிருக்கா சொல்றியா?” என்றாள் ஆவலோடு.
“யாரை கேட்டு என் போட்டோவை காட்டின? யார் போட்டோவும் எனக்கு அனுப்பாத.” என கத்தினாள் கோபத்தோடு.
“ஏய்.. இப்போ நான் என்ன பண்ணிட்டேனு இந்த கத்து கத்தற?” என இந்துபிருந்தா அதிர்வோடு கேட்க.. சற்று நிதானமானவள்.. “அன்னைக்கு எதோ நினைப்புல சத்தியம் செய்துட்டேன், ஆனா இப்போதைக்கு எனக்கு கல்யாணம் செய்யிற ஐடியா இல்ல, என் தம்பி படிப்பு முடியனும். எனக்கு மாப்பிள்ளை பார்க்குற வேலையை விட்டுடு.” என்றாள் தன்மையாக.
“என்ன இரண்டு வருசமா? அதுவரைக்கும் யார் உன்னை பார்த்துக்கிறது? என் அண்ணனுக்கு கல்யாணம் செய்ய வேணாவா? அவருக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன்னை காவல் காத்திட்டிருந்தா குடும்பத்துல பிரச்சனை ஆகும். என் அண்ணன் கல்யாணம் முடியறதுக்குள்ள ஒழுங்கா நீ கல்யாணம் செய்துக்கிற வழியைப் பாரு.” என அதட்டினாள் இந்துபிருந்தா.
வான்முகிலனின் திருமணம் என்றதும் தேன்நிலா பேச்சு நின்றிட.. “என்னாச்சு டி.?” என்றாள் சலிப்பாக.
வான்முகிலனின் சற்று முந்தைய பேச்சை நினைத்தவளுக்கு வான்முகிலனோடு திருமணம் வேணவே வேணாம் என நினைத்ததெல்லாம் மறந்தே போக.. “பிருந்தா.. எனக்கு கல்யாணம் செய்துக்க பயமாயிருக்குடி.” என்றாள் கவலையாக.
அச்சோ என தன் தலையில் அடித்துக்கொண்டு.. “நானொன்னும் பச்ச பிள்ளை இல்ல, அந்த சரண்ராஜ் டீசன்ட்டாதான் பொண்ணு கேட்டு வந்தான், நான் மறுக்கவும் ரௌடி மாதிரி மிரட்டினான்ல?
இப்படி எல்லாருக்கும் இரண்டு முகமிருக்குமோனு கொஞ்சூண்டு பயமாயிருக்கு.. அவ்வளோதான்.” என்றாள் பாவமாக.
தோழியின் பயம் புரிந்து.. “இது எல்லாருக்கும் இருக்கும் பயம்தான் நிலா. போகப்போக சரியாகிடும். என்னை கேட்டு வரவரைக்கும் சுபாஷை யாருனே தெரியாது, இப்போ கல்யாணம் செய்துட்டு நாங்க நல்லபடியா இல்லையா? என தேற்றினாள்.
“சரி.. சரி.. நீ லெக்ஷர் அடிக்காத.” என சலிப்போடு சொல்லி, “இன்னும் ஒரு வருசமாவது ஆகட்டும், அதுக்கப்புறம் பார்க்கலாம், அதுக்கு முன்ன என்னை கேட்காம யாரையாவது அனுப்பி வச்ச அவ்வளோதான் பார்த்துக்க..” என எச்சரித்து இணைப்பை துண்டித்தாள்.