“உன் பாட்டிக்கு போன் பண்ணித் தரேன், மாமா ஏன் போன் எடுக்கலனு கேளு.” என குழந்தைக்கு சொல்லி தன் மாமியாருக்கு அழைத்தான் நரேந்திரன்.
மருமகனிடமிருந்து அழைப்பு என்றதும் சந்தோசத்தோடு அழைப்பை ஏற்ற சுப்புலஷ்மி, “நல்லாயிருக்கிங்களா மாப்பிள்ளை?” என்றார்.
“நல்லாயிருக்கேன்.” என்றவன், “ப்ரவீன் முகிலனோட பேசனும்னு ஒரே அழுகை, முகிலன் ஏன் போன் அட்டன் பண்ணல?” என்றான்.
“முகிலன் வீட்டுல இல்லைங்க தம்பி, யாரோடவாவது முக்கியமா பேசிட்டிருந்தா ஃபோனை சைலண்ட்ல போட்டுடுவான், இப்பவும் அப்படியாத்தான் இருக்கும், கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தான்னா உடனே போன் செய்வான்.” என்றார்.
“சரிங்க, மச்சான் வந்தா, ப்ரவீன் பேசனும்னு சொன்னான் சொல்லுங்க, நான் வைக்கிறேன்.” என்க..
“மாப்பிள்ளை..” என அவசரமாய் சுப்புலஷ்மி அழைக்க, “சொல்லுங்க.” என்றான்.
“முகிலனுக்கு இங்க நம்மூர்லயே ஒரு சம்மந்தம் வந்துருக்கு,” என மேயர் பற்றி சொல்லி, “இவன்தான் சம்மதிக்கமாட்டுறான், நீங்க கொஞ்சம் சொல்லிப் பாருங்களேன்.” என்றார்.
“முகிலன் வேணாம்னா எதாவது காரணம் இருக்கும், நான் எப்படி பேச?” என்றான் தயக்கத்தோடு.
“வர ஞாயித்துக்கிழமை பேரனை அழைச்சிட்டு வாங்களேன், ப்ரவீன் அவன் மாமனைப் பார்த்த மாதிரியும் இருக்கும். அப்படியே முகிலன்கிட்ட பேசினமாதிரியும் இருக்கும். இந்த வீட்டு மாப்பிள்ளை நீங்க, நீங்க சொன்னா கேட்பான்.” என நம்பிக்கையோடு சொல்ல..
“சரிங்க, ஞாயிற்றுக்கிழமை வரோம்.” என அரைமனதாக சொல்லி இணைப்பை துண்டித்தான்.
தன் அம்மாவோடு கணவன் இப்படியெல்லாம் பேசுபவன் இல்லையே என.. “அம்மா என்ன சொன்னாங்க? யார்கிட்ட பேச சொன்னாங்க?” என்றாள் ரேவதி.
தன் மாமியார் தனக்கு கொடுத்த உரிமையையும், அதனால் மனைவி தன்னோடு இயல்பாய் பேசியதையும் நினைத்தவனுக்கு மனம் சந்தோசமாக.. விசயத்தை சொன்னான் நரேந்திரன்.
“அப்படியா? அம்மா ஏன் என்கிட்ட சொல்லல?” என கோபித்தபடி உடனே அன்னைக்கு அழைத்தாள் ரேவதி.
“ஏய் ரேவா.. நான் கேட்டே முகிலன் ஒத்துக்கல, நீ சொன்னா மட்டும் கேட்டுடுவானா? அதான் மாப்பிள்ளையை இந்த வாரம் வர சொன்னேன். இரண்டு பேருமா சேர்ந்து சொல்லுங்க.” என்றார் சமாதானமாக.
“முக்கியமான விசயம் இல்லாம வரக்கூடாதாம். அப்படியேன்னாலும் உங்க மாப்பிள்ளையோடதான் வரனுமாம். எக்காரணம் கொண்டும் இனி தனியா வரக்கூடாதுனு சொல்லிட்டான். உன் மாப்பிள்ளை என்னை கூட்டிட்டு வந்துட்டாலும்.” என நொடித்தாள் ரேவதி.
வான்முகிலனிடமிருந்து நரேந்திரனுக்கு அழைப்பு வர, ஏற்றவன், பரஸ்பர விசாரிப்பிற்கு பிறகு.. “உங்க மாப்பிள்ளை உங்களை பார்த்தே ஆகனும்னு இரண்டு மணிநேரமா போராட்டாம் நடத்திட்டிருக்கான். நீங்க போன் அட்டன் பண்ணலனு சொன்னா நம்பமாட்டுக்கிறான்.” என்றான் நரேந்திரன்.
“ஹா..ஹா.. போராட்டம்லாம் நடத்துறானா?” என சந்தோசித்து, “லாரி உரிமையாளர் சங்கத்துல ஒரு மீட்டிங்ல இருந்தேன் மாமா, அதான் அட்டன் பண்ண முடியல.” என வருந்தி.. “என் மருமகன்கிட்ட போனை கொடுங்க.” என்றான் பெருமையோடு.
“ம்.. உன் மாமாட்ட பேசு.” என மகனிடம் கொடுக்க.. “மா..மா..” என தேம்பலோடு சொன்னவன், “ஊ..” என அழ ஆரம்பித்தான்.
“ப்ரவீன்குட்டி.. எக்ஸாம் முடிச்சிட்டு என்னை பார்க்க வருவியாம், நானும் என் ஒர்க்கெல்லாம் முடிச்சிட்டு உனக்காக காத்திருப்பேனாம். சரியா?” என்றான் கொஞ்சலாக.
“அம்மா வேணாம் சொல்றா.” என குழந்தை புகார் செய்ய.. “அப்பாக்கு டைம் இல்லாத்தால அம்மா அப்படி சொல்லியிருப்பாங்க, நீ அப்பாகிட்ட கேளு. உன் எக்ஸாம் முடியவும் அப்பா கூட்டிட்டு வருவார்.”
“அப்பா.. எக்ஸாம் முடிஞ்சதும் மாமா வீட்டுக்கு போலாமா?” என சிறுவன் கேட்க.. “ம் போலாம்.” என நரேந்திரன் சொல்ல, பிறகுதான் இயல்பானான் ப்ரவீன்.
ரேவதியிடம் கொடுக்க சொன்னவன்.. “அக்கா, வர சன்டே ப்ரவீனை அழைச்சிட்டு வா.” என்றான்.
“அவனுக்காகத்தான என்னை கூப்பிடற?” என்க.. சிரித்தவன்.. “மாமா, என் மருமகன் எல்லாரும் உனக்கப்புறம்தான்.” என பாசத்தோடு சொல்லி,
“பழசையே நினைச்சிட்டு எல்லாரோடவும் மல்லுகட்டிட்டே இருந்தா எப்படித்தான் ஆகுறது?” என கடிந்தவன்.. “மாமா மேல உன் கோபம் நியாயமானதுதான்.. அதுக்காக நீ பண்ற தப்பை ஏத்துக்க முடியாது.” என கண்டித்து,
“என் மருமகன் என்னை கேட்கலன்னாலும் நானே இநத் வாரம் அங்க வரலாம்னு இருந்தேன், இன்னும் இரண்டு வாரத்துல இங்க பண்டிகை போடுறாங்க, இந்த வருஷ பண்டிகையாவது குடும்பத்தோட சந்தோசமா கொண்டாடலாம்.” என்றான் சந்தோசமாக.
பூச்சாட்டிட்டா கல்யாணம் பேச்சு பேசக்கூடாது, இந்த வாரம் போய் எப்படியாவது அந்த மேயர் பொண்ணை கட்டிக்க தம்பியிடம் சம்மதம் வாங்கிட வேண்டும் என சந்தோசமாய் நினைத்த ரேவதி.. “ம்..” என்றாள் சந்தோசமாக.
இந்துபிருந்தாவிற்கு திருமணமான பின்னே இது முதல் திருவிழா என்பதாலும், ரேவதிக்கு திருமணமாகி பத்து வருடங்கள் முடிந்திருந்த போதும், அவளின் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் திருவிழாவின் போது ரேவதி திருமணத்திற்கு வாங்கிய கடன் காரணத்தால் பெரிதாய் திருவிழா கொண்டாடவில்லை.
இரண்டாம் வருட திருவிழா வருவதற்குள் தந்தை இறந்திட அவ்வருடம் திருவிழா கொண்டாடவில்லை.
அதன் பின்னே இரண்டு வருடம் கழித்து பொருளாதாரத்தில் சற்று தேறிவரும் நேரம் அக்கா மாமாவோடான கருத்து வேறுபாட்டால் நரேந்திரன் வரமாட்டான்.
நரேந்திரன் மீது தவறிருந்ததால் தானும் அக்காவிற்கு அதிக இடம் கொடுத்துவிட்டோம் என்பதை உணர்ந்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு நரேந்திரனோடு பேச ஆரம்பித்திருக்கிறான் வான்முகிலன்.
அதன் பலனாக மகனுக்காக என்றாலும் தனக்கு போன் செய்ததும், தான் சொன்னதும் ஞாயிற்றுகிழமை வீட்டிற்கு வரேன் என ஒப்புக்கொண்டதும், நரேந்திரனின் மாற்றத்தை வெளிப்படுத்தியது.
இந்துபிருந்தா திருமணம் முடிந்தபின்னே, மாமா இருந்தால் மட்டுமே அக்காவும் இருக்கனும் என ரேவதியிடம் பிடிவாதமாய் சொன்னதால்தான் நரேந்திரனுள் இம்மனமாற்றம் என்றும் புரிய.. இதை சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் தற்போது வருந்தினான்.
ரேவதியின் மனவாழ்வு என்னாகுமோ என்றிருந்த நிலையில், இனி அவர்களின் வாழ்வு சரியாகிடும் என்ற நம்பிக்கை பிறக்க, இந்த சந்தோசத்திற்கு சற்றும் குறையாத சந்தோசத்தை ப்ரவீன் கொடுத்திருந்தான்.
ஆறுவயது வரை தாய்மாமன் என்பதைவிட, தன் உறவுக்காரன் என்ற பிம்பம் கூட குழந்தையோடில்லாத நிலையில் பதினைந்து நாள் பழக்கத்தில் குழந்தை தன்னை தேடுகிறான் என்பது அளவில்லா சந்தோசத்தை கொடுத்தது.
குழந்தையின் மனதை வென்றது, பெரிதாய் சாதித்த இன்பத்தை கொடுக்க, வான்முகிலன் மனம் குடும்பங்கள் ஒன்றிணையும் திருவிழாவை ஆவலோடு எதிர்பார்த்தது.
** ** ** **
அவள் எப்படி என் மகனை வேணாம் என சொல்லலாம் என அன்னை தேன்நிலா மீது உரிமையாய் கோபப்பட்டதிலிருந்து அவளைப் பற்றிய நினைவு பலநேரம் பெருமையாகவும், சிலநேரம் ரசனையாகவும் வந்துபோனது.
ரசனை என்றால்.. அவளின் வடிவத்தில் இல்லை, யாருக்கும் பாரமில்லாமல் தனித்து தன்மானத்தோடு வாழும் அளவிற்கு பக்குவம் உள்ள தேன்நிலாவை நினைத்தால் பெருமை கொள்வான்..
அப்படி பக்குவமுள்ள பெண், தன்னை பார்க்க வந்த வரனிடம் தன் பிடித்தமின்மையை சொல்லத் தயங்கி எதோ பெரிய தவறிழைத்தவள் போல் பயத்தோடு, அந்த நேரம் சிறு பெண்ணைப் போல் பக்குவமற்று நின்றிருந்த தேன்நிலாவை தற்போது ரசனையாக நினைத்தான்.
இன்னும் பதினைந்து நாளில் பண்டிகை என்றதும், சென்ற வருடப் பண்டிகைக்கு வாசலில் அழகான வர்ணக்கோலமிட்டிருந்தது நினைவில் வந்தது.
அப்பொழுதெல்லாம் தேன்நிலாவை பெரிதாய் யோசித்திராததால், அவள் உடையலங்காரம் எல்லாம் நினைவில் இல்லை, ஆனால் அம்மன் ஊர்வலத்தின் போது அவள் போட்டிருந்த வர்ணக்கோலம் நினைவில் இருந்தது.
தங்கையும் அவளும் அதிகாலை நான்கு மணிக்கு கோலம் போட ஆரம்பித்தால் காலை ஏழுமணிக்கு மேல்தான் முடிப்பார்கள்.
சித்தாபரணம் வந்ததும் தண்ணீர் ஊற்றுவார்கள், சில மணித்துளிகளில் அழியும் கோலத்திற்கு எதற்கு இத்தனை சிரமப்படுற என தங்கையை கடிவான் வான்முகிலன்.
“சாமிக்காக போடுறது, அப்படில்லாம் சொல்லாதண்ணா.. சாமி நம்ம வாசல்தேடி வரும்போது கலர் கோலத்தால வரவேற்குறதுல எங்களுக்கு ஒரு சந்தோசம்.
அதோட ஆம்பிளைங்கள்லாம் வழுக்குமரம், சட்டி உடைக்கிறது, கபடி, அது இதுனு நிறைய விளையாட்டுல உங்க திறமையை காட்டுவிங்க, பொண்ணுங்க நாங்களும் திறமை காட்ட வேணாவா.?” என்பாள் இந்துபிருந்தா.
“பொண்ணுங்க கோலம் போடுறதுல மட்டும்தான் திறமையை காட்ட முடியுமா?” என கேட்டதற்கு, “அப்படிலாம் இல்லண்ணா, ஆனா நிலாக்கு விளையாட முடியாதில்ல? அதனாலதான் நாங்க இரண்டுபேரும் கோலம் போடுறதை சூஸ் பண்ணிக்கிட்டோம்.” என்றது நினைவு வர, அவளின் கோலம் நினைவு வந்தது.
இந்து பிருந்தா அழகான மயில் வரைந்திருக்க, தேன்நிலா அம்மனை வரைந்திருந்தாள். அத்தனை அழகாய் அவள் வரைந்த கோலம் இருக்கவே, வான்முகிலனிற்கு இன்றுவரை நினைவிருந்தது.
ப்ச்.. இன்னைக்கென்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றா? என நினைத்தபோதும் காதல் என்றெல்லாம் யோசிக்கவில்லை வான்முகிலன். ஆனால் மனதினுள் இம்சை செய்துகொண்டிருந்தாள். அதுவும் சுகமாய்தான் இருந்தது வான்முகிலனுக்கு.
** ** ** **
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கே கணவன், மற்றும் மகனோடு வந்திருந்தாள் ரேவதி. வந்ததும் மாமனோடு ஒட்டிக்கொண்ட ப்ரவீன், மாடிக்கு செல்ல வேண்டும் என அடம்பிடிக்க, “இப்போ வெயிலா இருக்கும்டா, நாம வாசல்ல விளையாடலாம் வா.” என வெளியே அழைத்து வந்து விளையாட ஆரம்பித்தான்.
தேன்நிலாவின் கிளி நியாபகத்திற்கு வர, “மாமா எனக்கு கிளி வேணும்.” என்றான்.
“அப்புறம் வாங்கித்தரேன்.” என்றான்.
“இப்பவே வேணும்.” என அழத்துவங்க, மகன் அழும் சத்தத்தில் வெளியே வந்த ரேவதி, “ஏண்டா?” என விசாரிக்க.. தேன்நிலா வீட்டிலிருக்கும் கிளியை ப்ரவீன் கேட்டதை விளக்கி, “அன்னைக்கு வேற வாங்கி தரேன்னு சொன்னதை நியாபகமா கேக்குறான் ரேவா.” என்றான்.
“அந்த அக்கா கொடுக்குறேனுதான் சொன்னாங்க, மாமாதான் வாங்கக்கூடாதுனு திட்டுனாங்க.” என ப்ரவீன் புகார் வாசிக்க, அன்றைய நினைவில் தேன்நிலாவை நினைத்தவன் முகம் பொலிவாக, ஹப்பாடா.. அவள் கொடுத்தும், அவகிட்ட கிளி வாங்கி கொடுக்கல, அப்போ அவமேல முகிலனுக்கும் கோபம் இருக்கிறது என மனதளவில் நிம்மதிகொண்டாள் ரேவதி.