பின்னே வெளிப்படையாய் சந்தோசிக்க முடியாதே. வான்முகிலன்தான் தேன்நிலா பேச்செடுத்தால் தன் உறவை இழந்திடுவ.. என மிரட்டியிருக்கிறானே. “மாமா உனக்கு சூப்பர் கிளி வாங்கி தருவாங்க.” என தேற்றி உள்ளே போனாள்.
“ம்மா.. முகிலன் ப்ரவீனோட விளையாண்டுட்டு இருக்கும்போதே சொல்லிடு. அந்த மேயர் சம்மந்தம் எப்படி வந்தது? அவங்களுக்கு இதுல சம்மதமா?” என விசாரிக்க, நடந்ததை விளக்கினார் சுப்புலஷ்மி.
வான்முகிலன் திருமணம் நின்றபின்னே.. மேயர் அவரின் மகளை முகிலனிற்கு தருவார்களா? பெண் கேட்டு பார்ப்போமோ என யோசித்திருந்தவளுக்கு, தற்போது அவர்களே முன்வந்து விருப்பம் தெரிவித்தது பெரும் சந்தோசத்தை கொடுக்க.. “அப்புறமென்ன? முகிலன் கல்யாணம் அந்த பொண்ணோடதான்.
மகள் சொன்னதை போலவே, பதினொரு மணிபோல் தன் மருமகனோடு வான்முகிலன் கிளம்பிட, பிருந்தாவிற்கு அழைத்து விசயத்தை சொன்னார்கள். ஆனால் வான்முகிலனிற்கு மேயரின் மகளை திருமணம் செய்ய பிடிக்கவில்லை என்று சொல்லாமல், உன் அண்ணன் இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் வேணாம்ன்றான்.
மேயர் பொண்ணு டாக்டருக்கு படிச்சிருக்கா, அழகா இருக்கா, பொண்ணு கொடுக்க அவங்க ரெடியா இருக்காங்க.. உன் அண்ணன் சம்மதத்துக்காகத்தான் காத்திருக்கிறோம். நீ சொன்ன உன் அண்ணன் கல்யாணம் செய்துப்பான்.
அதுக்காக இப்போ உடனே போன் செய்துடாத, நானும் உன் அக்காவும் சொல்லி கொடுத்தோம்னு நினைச்சிப்பான். நாளைக்கு போல பேசு.” என அரைமணி நேரம் வரை எடுத்துரைத்தார் சுப்புலஷ்மி.
பிருந்தாவிற்கும் சந்தோசமாகிட.. “சரிம்மா நான் சொல்றேன்.” என்றாள் சந்தோசத்தோடு.
இணைப்பை துண்டித்ததும், அண்ணனிற்கு நாளை சொல்லலாம், அதற்கு முன் தோழியிடம் தன் சந்தோசத்தை பகிரலாம் என தோழிக்கு அழைத்தாள் இந்துபிருந்தா.
அழைப்பை ஏற்ற தேன்நிலா.. நலம் விசாரித்ததும்.. “பிருந்தா நம்மூர்ல பண்டிகை போடுறாங்களாம்டி. இந்த வருசம் என்ன கோலம் போடலாம்?” என்றாள் சந்தோசத்தோடு.
“ம்.. பண்டிகை போடப்போறாங்கனு இரண்டு நாள் முன்னவே அம்மா சொன்னாங்க.. உன்னை மாதிரி பழைய விசயத்தை சொல்லாம வேற ஒரு சந்தோசமான விசயம் சொல்லட்டுமா?” என்றாள்.
எங்கே தனக்கு மாப்பிள்ளை என ஆரம்பித்திடுவாளோ என யோசித்து.. “ம் சொல்லு.” என்றாள் சுரத்தின்றி.
“நம்ம பக்கத்து தெருவில பழைய மேயர் இருக்காரில்ல? அவர் பொண்ணை எங்கண்ணாக்கு கொடுக்க சம்மதிச்சிருக்காங்ளாம்.” என்றாள் சந்தோசத்தோடு.
தேன்நிலாவிடமிருந்து பதிலில்லாமல் போக.. “நிலா.. நிலா.. லைன்ல இருக்கியா?” என்றாள் சற்று உயர்ந்த குரலில்.
தன் தாய் தந்தையை இழிவு படுத்தி பேசியதால் அவனை வேணாம் எனதானே நானே நினைத்தேன்? தற்போது அவன் திருமணத்திற்கு நாம் ஏன் வருந்தவேண்டும்? மாட்டேன்.. அவன் கல்யாணத்தால எனகொன்னும் இல்ல.. என தன்னைதானே சமாதானம் செய்தவள்.. “ம்.. இ.. இ.. இருக்கேன்.. ரொம்ப சந்தோசம் பிருந்தா.” என்றாள் சிறு திணறலோடும்.
அதீத சந்தோசம் என்றாலும் நிலா திக்கித்தான் பேசுவாள் என்பதால் தேன்நிலாவின் திணறலை சந்தோசமாய் ஏற்றவளின் மனம் சட்டென வாடியது.
தன் திணறலை கண்டுகொண்டாளோ? என்ன பேச்சை காணோம் என.. “ப்..ப்.. பிருந்தா..” என்றாள்.
“ம்.. என் அண்ணன் கல்யாணத்தை நினைச்சி சந்தோசம்தான். ஆனா அவர் கல்யாணம் முடிஞ்சிட்டா உனக்கெதாவது அவசர தேவைனா எப்படி நிலா அவரால வர முடியும்? என் நிம்மதிக்காகவாவது கல்யாணம் செய்துக்கோயேன்.” என்றாள் கெஞ்சலாகவும் கவலையாகவும்.
என்ன சொல்வதென அறியாமல்.. “அ..அ..ம்மாப்பா வந்துருக்காங்க. நான் ஈவ்னிங் பேசுறேன் பிருந்தா.” என இணைப்பை துண்டித்தாள் தேன்நிலா.
இன்று ஞாயிற்று கிழமையாதலால் மங்களமும் லிங்கேசனும் இங்குதான் இருந்தனர். “பிருந்தா பொண்ணு நல்லா இருக்குதாம்மா?” என மங்களம் விசாரிக்க.. “ம் நல்லா இருக்காம்மா.” என்றவளின் குரலும் முகமும் வாடிட.. தோழியின் பிரிவை தாளாமல் இப்படி சொல்கிறாள் என நினைத்தனர் பெற்றோர்.
மதியம் போல் வான்முகிலன் வர.. தம்பியின் கையிலிருந்த கூண்டுக்கிளியைப் பார்த்ததும்.. “வாடா.. நினைச்சதை சாதிச்சுட்டியா? அப்புறம் எப்படி என் நியாபகம் வரும்?” என மகனிடம் பெருமையாய் ரேவதி சொல்ல… “ம்.. உன் மாமாக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ஜோடி வந்திடும்.. ஆனாலும் கூட உன் உரிமையை விட்டுக்கொடுத்துடாதடா மகனே.” என திருமண பேச்சை ஆரம்பித்தான் நரேந்திரன்.
“கிளிதான ஜோஷ்யம் சொல்லும்? எப்படி மாமா கிளியைப் பார்த்ததும் நீங்க ஜோஸியம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க? பொண்ணு ஏது பார்த்து வச்சிருக்கிங்களா?” என்றான் சிரிப்போடு.
அன்னையைப் பார்த்தவன்.. “அதுக்குள்ள சொல்லிட்டிங்களா?” என முறைத்து.. “மாமா அந்த மேயர் பொண்ணைத்தான சொல்றிங்க? அவ எனக்கு செட் ஆகமாட்டா மாமா.” என்றான்.
ரேவதி.. “ஏன் முகிலா?” என்றாள் கவலையோடு.
“அந்த மேயர் எனக்கு போன் செய்தான் ரேவா.. என்ன பேசினான் தெரியுமா.? என் பொண்ணெல்லாம் நான் கிழிச்ச கோட்டை தாண்டாது, கடைசி நேரத்துல கல்யாணம் நின்னுடுமோன்ற கவலை இல்லாம தாராளமா கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்..
பொதுவாவே லாரி டிரைவர்னா பொண்ணுங்க விசயத்துல மோசமா இருப்பாங்கனுதான் எல்லாரும் நினைப்பாங்க, ஆனா நான் அப்படி நினைக்கமாட்டேன். என் பொண்ணும் டாக்டருக்கு படிச்சிருந்தாலும் நீ படிக்கல அப்படி இப்படிலாம் ஃபார்ஷியாலிட்டி பார்க்காதுனு என்னவோ எனக்கு வாழ்க்கை கொடுக்குற மாதிரி பேசறான்.
என்னயிருந்தாலும் தரகர் பேச்சு கேட்டு அம்மா போகவும்தான இவன் பேசுறானு கோபத்தை கட்டுபடுத்திக்கிட்டு, எதுக்கு இவ்வளோ ரிஸ்க் எடுத்து எனக்கு பொண்ணும் கொடுத்து வாழ்க்கையும் கொடுக்க நினைக்கிறிங்க? நல்லா படிச்சவனா பார்த்து உன் பொண்ணை கட்டி கொடுங்கனு சொல்லி கட் பண்ணிட்டேன்.” என்றான் கோபத்தோடு.
நரேந்திரனும் ரேவதியும் அதிர்வாய் பார்க்க, இப்படியெல்லாம் பேசினானா? நம்மகிட்ட எப்படி தன்மையா பேசினான்? என சுப்புலஷ்மியும் அதிர்ந்தார்.
“அப்போ இந்த இடம் சரிவராதுதான்.” என நரேந்திரன் சொல்ல, “ஆமாம் மாமா, அம்மாக்கு அவனைப்பத்தி தெரியாது. என்னை உயர்த்தி இனிக்க இனிக்க பேசவும் நம்பிட்டாங்க.” என்றான்.
“அப்போ வேற இடம் பார்க்கறேன்.” என சுப்புலஷ்மி சொல்ல.. “ம்மா.. கல்யாணம் பண்ணாமலேவா இருந்துடப்போறேன்? இப்போதான பிருந்தா கல்யாணம் முடிஞ்சிருக்கு.. ஒரு அஞ்சாறு மாசம் போகட்டும். அப்புறம் பொண்ணு பார்க்கலாம்.
முதல்ல திருவிழாவை என்ஜோய் பண்ணுவோம். ஆமாம்தான மருமகனே?” என ப்ரவீனிடம் கேட்க, மாமன் சொன்னதை கவனிக்கவில்லையென்ற போதும் “ஆமாம்.. ஆமாம்.” என்றான் ப்ரவீன்.
** ** ** ** ** ** **
இரண்டு நாள் கழித்து மாலை ஏழு மணிபோல் மாடிக்கு வந்தவன் தேன்நிலா வீட்டினை நோட்டமிட்டான். அவளின் ஸ்கூட்டி நின்றுகொண்டிருக்க, வேலைக்கு போய்ட்டு வந்துட்டா, ஆனா செடிக்கு தண்ணி விடல போலயே.. உடம்பேது சரியில்லையோ என யோசித்தபடி போனை ஆராய்ந்துகொண்டிருந்தான் வான்முகிலன்.
அடுத்த நாள் மாலையும் பார்த்தான். காலையிலேயே தண்ணீர் விட்டுருந்தாள் போல, செடிகளில் ஈரப்பதம் இருந்தது. அன்று மட்டுமல்ல, அந்த வாரம் முழுதும் தேன்நிலாவை பார்க்க நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்தநாள்.. மாலையில் பணி முடித்து, அவள் வரும் சாலையில் நடந்து கொண்டிருந்தவனுக்கு இத்தனை தேடுறோமா அவளை என வியப்பாக கூட இருந்தது.
அவளின் ஸ்கூட்டி வழக்கத்தை விட வேகமாய் அவனை கடந்து செல்ல, நூறுமீட்டர் தூரம் வரை சென்ற பின்னேதான் அவளை கவனித்தான்.
கூப்பிடலாம் என நினைத்தாலும், அழைத்து என்ன பேசுவது என்றும், அருகில் உள்ள கடைக்காரர்கள் தவறாக நினைப்பார்கள் என்றும் யோசித்தவன்.. ப்ச் பைக்ல வந்துருக்கலாம். என தன்னை தானே நொந்துகொண்டான்.
** ** ***
பத்து நாட்களுக்குப் பிறகு இன்னும் நான்கு நாளில் பொங்கல் வைப்பது, அலகு குத்துதல் போன்ற வைபவங்கள் இருக்க.. எக்காரணம் கொண்டும் இனி வான்முகிலன் முகத்தினில் விழிக்கக்கூடாதென, தாய் தந்தையை இன்றே வர சொல்லியிருந்தாள் தேன்நிலா.
வயோதிகர்களை தனியே விட்டு ஒருவாரம் அங்கிருப்பதா என தடுமாறினாலும், மகளும் இப்படி ஒருநாளும் கேட்டதில்லையே, என தேன்நிலா விருப்பத்திற்கு சம்மதித்தனர் மங்களமும் லிங்கேசனும்.
தாய் தந்தையின் தடுமாற்றம் உணர்ந்து.. “கவலைப்படாதிங்கப்பா, தமிழை ஒரு வாரத்துக்கு லீவ் போட சொல்லியிருக்கேன், தினமும் தாத்தா பாட்டிக்கு இங்கயிருந்து சாப்பாடு கொடுத்தனுப்பிக்கலாம்.
அம்மா இங்கையே இருந்தாலும், நீங்களும் தழிழும் நைட் அங்க தூங்கி, காலைல வந்துடுங்க. பண்டிகை முடியும் வரை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.” என்றாள்.
“அட்ஜஸ்ட் பண்ற அளவுக்கு ஒரு நாளும் நீ எனக்கு கஷ்டம் கொடுத்த்தில்ல நிலாம்மா. நீ சொன்னமாதிரியே வந்துடறோம்.” என்றார் நிறைவாக.
திருவிழாவிற்கு இரண்டு நாட்களே இருக்க.. இந்துபிருந்தா வந்திருந்தாள். தேன்நிலா பணிமுடித்து வரும் நேரம் வரை காத்திருந்தவள் ஏழு மணிபோல் தோழிக்கு அழைத்தாள்.
“ம் பிருந்தா.” என்றாள் உற்சாகமின்றி.
“நல்லாயிருக்கேனானு கூட கேட்கமாட்டியா?” என்றாள் ஏமாற்றத்தோடு.
“ப்ச்..” என சன்னமாய் அலுத்துக்கொண்டவள்.. “நல்லாயிருக்கியா?” என்றாள்.
“அப்படியொன்னும் சலிப்போட என்னை விசாரிக்க வேணாம்.” என்றாள் கோபத்தோடு.
“கொஞ்சம் உடம்புக்கு முடியல பிருந்தா. நான் அப்புறம் பேசவா?” என்றாள்.
“ம்.. வைரல் ஃபீவர்… நீயேது என்னை பார்க்க வந்துடாத.” என்று பொய்யுரைத்ததோடு, “கண்டிப்பா கதவை திறக்கமாட்டேன்.” என உண்மையையும் சொல்லி இணைப்பை துண்டித்தாள்.
தேன்நிலாவை தன் அம்மா அக்காவிற்கு பிடிக்காதென்பதால், கணவனிடமும் அண்ணனிடம் சொல்லி புலம்பினாள் இந்துபிருந்தா.
ஓ.. அதுதான் அவங்கம்மா செடிக்கு தண்ணி விட்டாங்களா? தானே செல்ல வேண்டாம் என பிருந்தாவிடம் சொல்லிவிட்டு தற்போது எப்படி போய் பார்க்கச் சொல்வது? என தவித்துப்போனான் வான்முகிலன்.
இரண்டு நாள் முடிந்திருக்க.. கோலம் போடவாவது வெளியே வருவாளா என தங்கையிடம் பேச்சு வளர்த்தவாறு வான்முகிலனும் வாசலுக்கு வர.. தேன்நிலா வீட்டினில் மங்களம்தான் வாசல் பெருக்கிக்கொண்டிருந்தார்.
“ஆன்ட்டி, நிலாக்கு எப்படியிருக்கு?” என பிருந்தா விசாரிக்க.. “நல்லாயிருக்கா பிருந்தாம்மா, கோலம் போட தெம்பில்லைன்னு சொன்னா. அதான் நான் போடுறேன்.” என்றார்.
அண்ணன் அவளின் வீட்டிற்கு செல்லக்கூடாதென சொன்னதை நேற்று வரை கடைபிடித்தவளுக்கு தற்போது முடியாமல் போக.. சட்டென தேன்நிலாவின் வீட்டிற்குள் சென்றாள் இந்துபிருந்தா.