லிங்கேசன்.. “நாங்க வரும்முன்ன காய்ச்சல் இருந்துருக்கு, எங்ககிட்ட சொல்லவேயில்லம்மா, பண்டிகைக்கு வரவும்தான் தெரியுது. கண்ணெல்லாம் எப்படி உள்ள போயிருக்கு பாரும்மா..” என்றார் ஆற்றாமையாக.
“ஏன் நிலா இப்படி பண்ற?” என அதட்ட நினைத்து கமறியவள்.. “என்னையும் வரக்கூடாதுனுட்டா அங்கிள்.” என கண்கலங்கினாள்.
தேன்நிலா.. “ப்ச்.. பிருந்தா.. ஃபீவர் சரியாகிடுச்சி, நான் நல்லாதான் இருக்கேன், பேசிட்டிருந்தா லேட்டாகிடும், போய் கோலம் போடு. பத்து மணிக்கு மேல கால் பண்றேன், அப்போ பேசிக்கலாம்.” என்றாள் தன்மையாக.
“நீ ஒன்னும் ஃபோன் பண்ண வேணாம், உன்கிட்ட பேச ஒன்னுமில்ல.” என கோபித்தவள்.. தமிழரசன், லிங்கேசன் இருவரையும் பார்த்து.. “உங்ககிட்டயும், ஆன்ட்டிகிட்டயும் பேச வேண்டியிருக்கு, அம்மன் சித்தாபரணம் வந்து போனதும் வீட்டுக்கு வரேன்.” என்று வெளியேறினாள் இந்துபிருந்தா.
நிலாவைப் பற்றி விசாரிக்க முடியாமல் தங்கையின் தவித்த முகத்தையே பார்த்திருந்த வான்முகிலனின் மனமும் தவிப்பிற்குள்ளானது. ஆனால் அருகிலேயே மங்களம் கோலம் போட்டுக்கொண்டிருந்ததால் ஏதும் கேட்க இயலாதவனாய் அமைதியாய் நின்றிருந்தான்.
காய்ச்சல் வந்ததையே சொல்லல, திருவிழாக்கு நாலு நாள் முன்ன வர சொல்லமாட்டாளேனு யோசிச்சிட்டேதான் வந்தேன், அவ முகத்தை பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சி. அநாதை மாதிரி இருக்கனும்னு என்னயிருக்கு? ஒரு மாசத்துக்காவது என்னோட இருக்கசொல்லி நீயாவது எடுத்து சொல்லு பிருந்தாம்மா.” என்றார் மங்களம்.
“சொல்றேன் ஆன்ட்டி. அம்மன் ஊர்வலம் முடிஞ்சதும் வீட்டுக்கு வரேன். பேசலாம்.” என இந்துபிருந்தா ஆதரவாய் சொல்ல மங்களம் முகம் நிம்மதியானது.
உடல் இளைக்கும் அளவிற்கு காய்ச்சல் என்றால் எப்படி தனியாக சமாளித்திருப்பாள்? அப்படி என்ன வீம்பு? இப்போ வர காய்ச்சல் எல்லாம் உயிருக்கே ஆபத்தாகிடுது.. எதாவது ஆகியிருந்தா என்னாகுறது என கோபம்தான் வந்தது வான்முகிலனிற்கு.
ஆனால் தன்னால் என்ன செய்ய முடியும்? இரண்டு நாள் முன்பு தங்கையையே வரவேணாம் என சொல்லியிருக்கிறாள் என இயலாமையோடு வீட்டினுள் சென்றான்.
ஒன்பது மணிபோல் அம்மன் சித்தாபரணம் வான்முகிலனின் தெருவினுள் நுழைய.. “நிலா.. சாமிக்கு தண்ணீர் ஊத்தினதும், குடத்தை என்கிட்ட கொடுத்துட்டு, பூஜைக்கான தேய்ங்காய் பழத்தட்டையும் நீயே பூசாரிக்கிட்ட கொடு.. சரியா?” என்றார் மங்களம்.
“ம்மா.. உடம்புக்கு முடியலன்னு சொல்றேன், எத்தனை அடம் பண்றிங்க? ஏன் நீங்க கொடுத்தா ஆகாதா?” என்றாள் சலிப்பாக.
தேன்நிலா முறைக்க.. “என் செல்ல நிலாக்கா இல்ல? அம்மா ஆசையை நிறைவேத்தினா அந்த அம்மன் ஆசையையே நிறைவேத்தின மாதிரி.” என தமிழரசும் கெஞ்ச.. வேறு வழியின்றி சரி என்றனாள்.
“தமிழ்.. குடத்துல தண்ணி பிடிச்சி வச்சிருக்கேன், அதை எடுத்துட்டு போய் கேட்கிட்ட வச்சிட்டு வா.” என பணித்து பூஜைக்கான தட்டை கணவனை எடுக்க பணித்து, நிலா தலையினில் மல்லிகையை சூடிவிட, “ம்மா.. என்ன இது? தலை வலிக்கும்.” என தேன்நிலா மறுக்க.. “நீ இப்படி சொல்வனுதான் முன்னவே வச்சிவிடல, சாமியை பார்த்துட்டு வந்ததும் கழட்டிடலாம், நல்ல நாளதுவுமா வயசுபொண்ணு தலையில பூ இல்லைனா நல்லாவா இருக்கும்?” என சூடிவிட்டு மகளை அழைத்து வெளியே வந்தார் மங்களம்.
தங்க நிற சன்ன ஜரிகையில், மயில் பச்சை நிற பட்டுசாரி அணிந்திருந்தாள் தேன்நிலா. அவளிருக்கும் மனநிலையில் அணியமாட்டேன் எனத்தான் சொன்னாள். அப்போ எதுக்கு பண்டிகை கொண்டாடனும்? நான் கிளம்பறேன். என தமிழரசு சொல்லவும், இதற்குமேல் மறுத்தால் அனைவருக்கும் சங்கடப்படுவர் என வேறு வழியின்றி உடுத்தினாள் தேன்நிலா.
ஜிமிக்கி, டாலர்செயின், சிறிய நெக்லசை தேன்நிலாவிடம் கொடுத்து, உன் அம்மாக்காக பட்டுசாரி கட்டிக்கிட்ட, அப்பாக்காக இதை போட்டுக்கோடா.” என பாசத்தோடு கேட்க, மறுக்கமுடியாமல் லிங்கேசன் கொடுத்ததையும் போட்டிருந்தாள்.
எப்படியும் தன் வீட்டின்புறம் திரும்பமாட்டாள் என தேன்நிலாவை கணித்து மாடிக்கு சென்றிருந்தான் வான்முகிலன்.
அணிந்திருந்தது குறைவான நகைகள்தான் என்றபோதும், அவளின் பட்டுடையும், சிகையை நிறைத்திருந்த மல்லிகையும் என இதுவரை இப்படி கோணத்தில் தேன்நிலாவை கண்டிராத வான்முகிலனின் கண்களையும் மனதையும் நிறைத்திருந்தாள்.
வழக்கம்போல் அவளின் தொடையில் கை ஊன்றி அசைந்து நடக்க, இடையை தாண்டிய அவளின் பின்னலும், ஐந்து சரம் மல்லிகையும் அழகாய் அசைந்தாடியதை ரசித்து பார்த்திருந்தான்.
ரசித்தவன் கண்கள் அவளின் முகத்தை பார்க்க.. தமிழரசோடு எதையோ பேசிக்கொண்டு வந்தவளின் முகத்தில் இயல்பான சிரிப்பில்லை. வெகு சிரமப்பட்டு முகத்தில் புன்னகையை வரவழைத்திருந்தது அப்பட்டமாய் தெரிய, இது உடல் சோர்வினால் மட்டுமல்ல, மனதில் எதையோ உழட்டிக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் இணைபிரியா தோழியான தன் தங்கையையும் தவிர்க்கிறாள் என யோசனையோடு பார்த்திருந்தான் வான்முகிலன்.
“பிருந்தா.. உன் அண்ணனை எங்க காணோம்?” என்ற சுப்புலஷ்மியின் குரல் மேளச்சத்தத்தையும் தாண்டி தேன்நிலாவிற்கு கேட்டது.
ஹப்பா.. இல்லையா அவன் என சிறு ஆசுவாசம் பிறக்க.. “ஏன்ம்மா கத்துற? ஒரு முக்கியமான கால், மேளச்சத்ததுல பேச முடியாதுனு உள்ள பேசிட்டு வந்தேன்.” என்ற வான்முகிலன் குரல் கேட்கவும், ஆசுவாசப்பட்ட மனம் படபடப்பிற்குள்ளாக, பூஜை முடிஞ்சதும் உள்ளே சென்றிடவேண்டும் என ஐந்து வீட்டிற்கு முன்பாக வந்து கொண்டிருக்கும் அம்மனின் சித்தாபரணத்தையே சிரத்தையாய் பார்த்திருந்தாள் தேன்நிலா.
“அப்பா உங்களை விட மாமாதான் ஹைட்டா இருகாங்க, நான் மாமாகிட்ட போறேன்.” என்க.. ப்ரவீனை தூக்கி தன் தோள்மீது அமரச்செய்து.. “சாமி தெரியுதாடா.” என்றான் சத்தமாக.
தேன்நிலாவிற்கு தன் இருப்பை உணர்த்த வேண்டும் எனத் தோன்ற, மேளச்சத்ததை சாக்கிட்டு அக்காள் தங்கையிடமும் கூட சத்தமாகவே பேசினான் வான்முகிலன்.
இவனின் செயல்களுக்கு மாறாக, அவனின் கணீர் குரலுக்கு அசையாமல், தன் குடும்பத்தினரிடமும் கூட பேசாமல் அம்மனை மட்டுமே பார்த்திருந்தாள் தேன்நிலா.
சற்று நேரத்தில் அம்மன் இவர்களின் வீட்டருகே வர.. வான்முகிலன் வீட்டிற்கும் தேன்நிலா வீட்டிற்கும் நடுவில் நின்றது தேர்.
தெருவின் வலப்புறம் இடப்புறம் என்றும், இரண்டாம் தளத்தில் இருப்பவர்கள் என்றும் எழெட்டு குடும்பத்தினர் இங்கேதான் பூஜை செய்வார்கள்.
அது ஐந்து லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரம்பிய சிறிய குடம்தான். தேன்நிலாவால் குடத்தை இடுப்பில் வைத்து நடக்க முடியாதென்பதால் இந்த குடத்தில்தான் வழக்கமாய் பூஜைக்கு தண்ணீர் எடுப்பாள்.
“ப்ச்.. அக்கா, பொம்பளைங்க செய்ய வேண்டியதை எனக்கு சொல்ற. சின்ன குடம்தானே? நீயே எடுத்துட்டு போக்கா..” என்றான் பிடிவாதமாக.
“நிலா தண்ணி எடுத்து வா.” என மங்களத்தின் ஆணையை ஊரார் முன்னே தவிர்க்க முடியாமல் நிலா குடத்தை எடுத்துக்கொண்டு அம்மனை நெருங்கினாள்.
“பத்து நிமிஷம் சித்தாவோட இருடா. அவரும் ஹைட்டாதான் இருக்கார்.” என ப்ரவீனை சுபாஷிடம் கொடுத்தவன்.. “பிருந்தா.. உனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சில்ல? நீ உன் ஊர் அம்மனுக்கு தண்ணி ஊத்து, இங்க நான் ஊத்தறேன்.” என தங்கையிடமிருந்து குடத்தை வாங்கியவன்.. தேன்நிலாவின் அருகில் நின்றபடி, கொஞ்சமும் குனியாமல் தன் உயரத்திற்கு அப்படியே குடத்தை சாய்க்க,
“அண்ணா.. குனிஞ்சு ஊத்து.. நிலா சாரியெல்லாம் நனையுது பாரு.” என்ற தங்கையின் வார்த்தையை காதில் வாங்காதவனாய் அம்மனைப் பார்த்தவாறே தன் பணியினை தொடர, தேன்நிலாவின் முட்டி வரையிலும் புடவை நனைந்தது.
வான்முகிலனின் வெள்ளை பட்டு வேஷ்டியும் நனைந்திருப்பதால் சுற்றியுள்ளவர்களுக்கு இது இயல்பான நிகழ்வுபோல் தெரிந்தாலும், வேண்டுமென்றேதான் செய்கிறான் தேன்நிலாவிற்கு நன்றாக புரிய, கோபப்பட்டாளே தவிர அப்பொழுதும் வான்முகிலனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.
தண்ணீர் ஊற்றியதும், பூஜையின் போது அவளின் முகம் பார்க்கவேண்டி, தேரின் வலப்பக்கத்தில் தேன்நிலா நின்றிருக்க, தேருக்கு நேரே பழத்தட்டோடு நின்றிருந்தான் வான்முகிலன்.
“அக்கா குடத்தை கொடு.” என வாங்கிய தமிழரசு, தேங்காய் பழத்தட்டை நீட்ட.. வாங்கியவள் பூசாரியிடம் கொடுக்க சற்றே எம்பினாள்.
தேரினுள் அம்மனுக்கு வயதான பூசாரி பூஜைசெய்ய, கீழே நின்றிருப்பவர்களின் தட்டுகளை வாங்கி கொடுக்கும் பணியினை பூசாரியின் மகன் செய்ய, “எவ்வளோ நேரம்டா தட்டை நீட்டுவாங்க?” என தேன்நிலாவை கண்ஜாடையில் காண்பித்தபடி முறைப்போடு முனுமுனுக்க.. “இதோ ண்ணா.” என தேன்நிலாவிடமிருந்து தட்டை வாங்கினான் பூசாரி.
செய்வதறியாது தேன்நிலா கைகளை பிசைந்தாள். பின்னே.. இத்தனை பேர் முன்னே அவனை நிமிர்ந்து முறைத்தால் அனைவருக்கும் தெரிந்து, அதுவே ஒரு பிரச்சனையாக அல்லவா கிளம்பும் என கோபத்தோடு நினைத்திருக்க..
“ஆராதனை முடிஞ்சி பூசாரி தட்டை நீட்டிட்டிருக்கிறது கூட தெரியாதளவுக்கு அப்படியென்ன வேண்டுதல்க்கா?” என தமிழரசு சிரிப்போடு பழத்தட்டினை வாங்க.. அவளின் கோபமுகத்தை ரசித்தபடி தன் பழத்தட்டை வாங்கிக்கொண்டு தேன்நிலாவை கடந்தான் வான்முகிலன்.
தன்னுணர்வு பெற்று தேன்நிலா நிமிர.. “புடவையல்லாம் ஈரமாகிடுச்சி, தடுக்கிடாம மெல்ல வா நிலாம்மா..” என லிங்கேசன் மகளை கைப்பிடித்து அழைத்துப் போனார்.
ப்ரவீனிற்கு சாமியை காண்பிக்கும் சாக்கில்.. “சாமி அந்த லாஸ்ட் வரை போய்ட்டு திரும்ப நம்ம வீட்டு வழியாத்தான் போகும். சாமி போகும்வரை வேடிக்கை பார்க்கலாமா ப்ரவீன்.” என மருமகனிடம் பேசினாலும்..
இத்தனை நடந்தும் என்னை பார்க்க மாட்டியா? போடி.. போ.. மஞ்ச நீராட்டன்னைக்கு நல்லா பெரிய அண்டாவுல மஞ்சத்தண்ணி எடுத்து வந்து, உன் மேலயே ஊத்தி உன்னை மொத்தமா நனைத்து, என்னை பார்க்க வைக்கிறேன். என மனதினுள் நினைத்தபடி தன் கேட்டருகே நின்றிருந்தவன், தேன்நிலா அவளின் வீட்டினுள் நுழையும் வரை அவளையே பார்த்திருந்தான் வான்முகிலன்.
பதினொரு மணிபோல்.. “தேன்நிலாவை பார்த்திட்டு வரேன்.” என தன் கணவனிடமும் அண்ணனிடமும் சொல்லி இந்துபிருந்தா கிளம்ப.. “நாளுங் கிழமையுமா அங்க என்ன வேலை உனக்கு? (Alprazolam) மருமகனை கவனி.” என சுப்புலஷ்மி மறுக்க.. “பிருந்தா பொண்ணழைப்பப்போவே அந்த பொண்ணு அப்படி அழுதது.. போய் பார்த்துட்டு வரட்டும் அத்தை. என்கிட்ட முன்னவே கேட்டுட்டா.” என்றான் சுபாஷ்.
“இல்ல.. தம்பி..” என சுப்புலஷ்மி தயங்க.. வான்முகிலனிற்கு கேட்டு தேன்நிலா மறுத்ததை பிருந்தா சொல்லியிருக்க.. அதனால்தான் தயங்குகிறார்கள் என தெரிந்தாலும், இவ்விசயம் தன் குடும்பத்தாரை தவிர்த்து யாருக்கும் தெரியாது ஆதலால் நீங்களும் யாரிடமும் பகிர வேண்டாம், அது தேன்நிலாவின் எதிர்காலத்தை பாதிக்கும் என மனைவி வேண்டி கேட்டிருக்க, அவ்விசயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்..
“இவங்க ரெண்டுபேரும் சின்ன வயசுலயிருந்து ஃப்ரண்டாமே? அதுவும் அந்த பொண்ணோட குணம் பத்தி பிருந்தா சொல்லவும் எனக்கும் கூட பேசனும்னு தோணுச்சு. பிருந்தாதான் அந்த பொண்ணு கூச்ச சுபாவம்.. நீங்க வந்தா என்கிட்டயும் சரியா பேசமாட்டானு வேணாம்னுட்டா.. போய்ட்டு வரட்டும்த்தை..” என்றான் உறுதியான குரலில்.
மருமகன் இத்தனை சொல்லும்போது எப்படி மறுக்கமுடியும்? “சீக்கிரம் போய் வா.” என்றனுப்பினார் சுப்புலஷ்மி.
இந்துபிருந்தா தேன்நிலா வீட்டின் அழைப்பு மணியை அழுத்த.. லேசாய் சாற்றியிருந்த கதவை நன்றாக திறந்த தமிழரசு.. “வாங்கக்கா..” என்றான் இன்முகமாக.
“கதவு திறந்துதானம்மா இருந்தது? உள்ள வரவேண்டியதுதான? பிறத்தியாட்டம் எதுக்கு பெல்லை அடிச்ச?” என உரிமையாய் கேட்ட லிங்கேசன்.. “மங்களம்.. பிருந்தாம்மா வந்திருக்கு.. வந்து சாப்பிடக்கொடு.” என்றார்.
தன் மாமனார் மாமியாருக்கு சாப்பாடு பேக் செய்துகொண்டிருந்த மங்களம்.. உண்மையில் வந்துவிட்டாளா என இன்முகத்தோடு வெளியே வந்தார்.
“ஆன்ட்டி நிலா எங்க?” என்றாள்.
“டையர்டா இருக்குனு படுத்தா, அப்படியே தூங்கிட்டாம்மா..” என அவளின் அறையை காண்பித்தார் மங்களம்.
“ஓ..” என்றவளுக்கு தற்போது சந்தேகம் வந்தது தோழிமீது. நான் வருவேன் என சொல்லியும் தூங்கிட்டாளா? என நம்பமுடியவில்லை பிருந்தாவால்.
உடல் அசதியில் உண்மையில் தூங்கியிருந்தாலும் இந்த சூழலில் அதுவும் நண்மைக்கே என எண்ணியவள்.. தனது கணவனின் தோழனிற்கு நிலாவை பிடித்திருந்ததையும், பெண்பார்க்க வரக்கூடாதென நிலா மறுத்தைதையும் லிங்கேசனிடம் சொல்லி,
“அவ ஒரு வருசத்துக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னா நீங்க விட்டுடுவிங்களா? அவளை சம்மதிக்க வைங்க.. திருவிழா முடியவும் அந்தண்ணாவை பொண்ணு பார்க்க வர சொல்றேன்.” என்றாள்.
கதவைத் திறந்து வாயிற்படியில் நின்றவாறு “உன் லிமிட் என்னவோ அதோட இரு பிருந்தா. என் அனுமதியில்லாம இங்க யாராவது வந்தாங்க.. அசிங்கப்படுவாங்க.” என கோபத்தோடு சொல்லி கதவை அடைத்தாள் அத்தனை வேகத்தோடு.
“அக்கா..” என பதறி எழுந்த தமிழரசன் தேன்நிலா அறைக்குள் செல்ல.. இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள் தேன்நிலா.