இந்துபிருந்தாவிடம் மகள் இப்படி பேசுவாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை லிங்கேசன். ஆனாலும் தற்போதைய தவறு மகள் மீதென்பதால், நிலாவின் பேச்சை தாளமுடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் பிருந்தாவை சமாதானம் செய்ய நினைத்து..
“பிருந்தாம்மா.. உன்கிட்ட கோவிக்காம நிலா வேற யார்கிட்ட கோபிக்கும்? நீ மாப்பிள்ளை பார்த்தா உன் அம்மா அக்காக்கு பிடிக்காதுனுயேது இப்படி பேசியிருக்கும்.
நிலாவை நிறைய இடத்துல கேக்குறாங்க, கல்யாணம் செய்துக்கிற மனநிலையில் இல்லாத மகளை எப்படி வற்புறுத்துறதுனுதான் அமைதியா இருக்கோம்.
அதுக்காக அப்படியே விட்டுடுவோமா? உனக்கு போலவே நிலாம்மாக்கு தங்கமான மாப்பிள்ளை கிடைப்பான்.. நிலா கல்யாணத்தைப் பத்தி கவலைப்படாம இரண்டு வாய் சாப்பிடு பிருந்தாம்மா.” என்றார் மிகவும் கனிந்த குரலில்.
“பரவால்ல அங்கிள்.. எனக்கு லிமிட் வச்சிருக்கானு இப்போதான் தெரிய வந்தது. இங்க சாப்பிட எனக்கு தகுதி இருக்கா இல்லையானு தெரியாம எப்படி சாப்பிடறது? நான் கிளம்பறேன்.” என கண்ணீரை துடைத்தபடி வெளியேறிய உயிர்தோழியை கண்ணீரோடு பார்த்திருந்தாள் தேன்நிலா.
“அ.. அ.. அப்பா..” என வெகுவாய் திணறியவள்.. சற்று நேர அழுகைக்குப் பிறகு, தண்ணீர் குடித்து.. தன்னை ஆசுவாசப்படுத்தி.. “அவ அம்மா அக்காக்கு நான் எதிரி.. இந்த நிலையில இவ எனக்கு மாப்பிள்ளை பார்க்கலாமாப்பா?
ஏற்கனவே என்னை கேவலமா நினைச்சவங்க.. இவ மாப்பிள்ளை பார்த்தா இன்னும்தான கேவலமா நினைப்பாங்க.. அவ ஃபோன்ல சொல்லும்போதே நான் வேணாம்னேன். அதோட விடனும்தானே? ஒவ்வொன்னும் விளக்கமா விளக்குறதுக்கு இவ என்ன சின்ன பிள்ளையா? இப்படி பேசினாதான்ப்பா என்னை நினைக்கமாட்டா..” என்றாள் வேதனையோடு.
மகளின் பக்கமும் நியாம் இருக்கும்போது என்ன சொல்வார் லிங்கேசன்.? சற்று நேர அமைதிக்குப் பிறகு.. “உன் மேல உள்ள அக்கறையிலதான சொல்லிருக்கு.? நீ கல்யாணம் செய்துகிட்டா எல்லாம் சரியாகிடும். நீ கேட்ட ஆறு மாசம் முடிய, இன்னும் இரண்டு மாசம்தான் இருக்கு.. இரண்டு மாசத்துக்கப்புறம் உன் கல்யாண செய்தி கேட்டதும் பிருந்தாம்மா சந்தோசமாகிடும்.” என மகளை தேற்ற.. கண்ணீரோடு வரவழைத்த புன்னகை புரிந்தாள் தேன்நிலா.
வான்முகிலனை தனக்கு பிடித்திருக்கிறதென்றாலும், மனம் முழுதும் அவனேதான் என்றாலும், தன் தாய்தந்தையை இழிவாய் பேசியவர்களின் தம்பியை திருமணம் செய்ய முடியாது,
தன் விருப்பம் பிருந்தாவிற்கு தெரிந்தால் அவளின் அன்னையிடமும் அண்ணனிடமும் நிச்சயம் பேசுவாள்.
அவர்களுக்கு தேவைப்படும் நேரம் நான் மறுத்துவிட்டேன், அவர்கள் கேட்ட விதத்தால்தான் என்றாலும் அன்று நான் மறுத்ததால் பிருந்தாவின் அன்னையும், அக்காவும் தன்னை ஏற்கமாட்டார்கள்..
தன் விருப்பம் அறிந்து வீட்டினர் சம்மதிக்கவில்லையென்றால் செய்வதறியாது தவிப்பாள்.. விசயம் தன் தாய்தந்தையருக்கு தெரிய வரும்.. மகள் ஏமாந்துவிட்டாளே என அவர்களும் வேதனையடைவார்கள்..
நடவாத விசயத்திற்கு எதற்கு அனைவரும் வேதனைப்படனும்? தன் ரகசிய ரணங்களை தான்தான் கடந்தாகனும் என தீர்மானித்திருந்தாள்.
மேயர் மகளை வான்முகிலனிற்கு பேசியிருக்கிறார்கள் என்ற செய்தி மனதை ரணமாக்க தன் தீர்மானங்கள் அவ்வளவு எளிதல்ல என தேன்நிலாவிற்கு புரிந்தது.
வான்முகிலனின் இயல்பான, சந்தோசமான விஷயங்களை நினைத்து நான் வருந்தக்கூடாது.. யாருக்கோ திருமணமாவதாய் நினைத்து கடந்து வரவேண்டும் என மனதை திடப்படுத்தினாள்..
இந்துபிருந்தாவோடு பேசினால் மனதில் உள்ளதை உளறிடுவோம் என்ற பயத்தில்தான் அவளை தவிர்த்தாள் தேன்நிலா.
இன்று மட்டுமல்ல, வாழ்நாள் முழுதிற்கும் இனி இந்துபிருந்தா உறவு வேணாம் என்பதில் உறுதியாய் இருக்க.. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பேசிவிட்டாள்.
வீட்டில் போய் அழுதுகொண்டிருப்பாள் என நினைத்தவளுக்கும் மனம் கனமானது.
** ** ** ** **
வாடிய முகத்தோடு வந்த மனைவியை பார்த்த சுபாஷ்.. “அதுக்குள்ள பேசிட்டியா?” என்றான் வியப்போடு.
“அவளுக்கு முடியல போல, அசந்து தூங்கிட்டிருக்கா, டிஸ்டர்ப் பண்ணவேணாம்னு வந்துட்டேன்.” என தனதறைக்குள் புகுந்தாள் இந்துபிருந்தா.
தங்கையின் முகம் அங்கு எதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்த.. தனதறைக்குள் சென்று, பிருந்தாவிற்கு அழைத்தான்.
அண்ணனின் அழைப்பென்றதும் ஏற்றவள்.. “அண்ணா..” என குரல் கமற.. “என்ன நடந்தது? ஏன் போனதும் வந்துட்ட?” என்றான் விசாரணையாக.
கதவை தாழிட்டு.. தான் பேசியதையும், அதற்கு தேன்நிலாவின் பதிலையும் அழுகையோடே விளக்கினாள் இந்துபிருந்தா.
“உன்னை யாரு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னது?” எனக்கடிந்து.. “சரி.. சரி.. அழாத.. சுபாஷ் உள்ள வர எழறான்.. நான் அப்புறம் பேசறேன். திருவிழா முடிஞ்சதும் அவகிட்டயும் பேசலாம். சரியா?” என கனிவாய் சொல்லி இணைப்பை துண்டித்தான் வான்முகிலன்.
இரண்டு நாள் கழித்து மஞ்சள் நீராட்டு வர, “ம்மா.. மஞ்சத்தண்ணியை தமிழை ஊத்த சொல்லுங்க.” என்றாள்.
மஞ்சள் நீராட்டின்போது தன் மீது ஊற்றாதே, கலர் பூசாதே என யாரையும் கண்டிக்க முடியாது ஆதலால் வழக்கமாகவே மஞ்சள் நீராட்டின்போது தேன்நிலா தன் கேட்டினுள்ளேயே நின்றிடுவாள் என்பதால் மங்களமும் மகளின் கூற்றே ஆமோதித்தார்.
வான்முகிலன் சுபாஷை அர்த்தமாய் பார்க்க.. “அன்னைக்கு பச்சைகலர் பட்டுசாரி கட்டிட்டு வந்த பக்கத்து வீட்டு பச்சைக்கிளியைத்தான் சொல்றேன்.” என கண்ணிமைக்க.. “ஹே.. சுபாஷ்.. அவ பிருந்தாவோட ஃப்ரண்ட்..” என வான்முகிலன் சமாளிக்க..
“அதுதான் இந்த ஊருக்கே தெரியுமே? அதனால என்ன?” என சுபாஷ் சிரிக்க.. அவனைவரும் அருகிலிருப்பதால் வான்முகிலன் முறைக்க..
“அன்னைக்கு வேணும்னே தண்ணியை ஊத்தி என் தங்கையோட பாதி டிரஸ்ஸை நனைக்கும்போதே சந்தேகம் வந்துடுச்சி, நிலா பழத்தட்டை நீட்டியதும் அந்த பூசாரி உடனே வாங்கலனு நீங்க முறைக்கவும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.
தண்ணி ஊத்தி நிலாம்மா கால்தான் நனைஞ்சது, ஊத்தின உங்களுக்குத்தான் மனசெல்லாம் நனைஞ்சிடுச்சி.. முழுசா நனைஞ்ச பின்ன முக்காடு எதுக்கு? அதுவும் சொந்த மச்சான்கிட்ட.?” என கண்ணிமைத்தவன்..
“மத்தவங்க எல்லாரும் சாமியை தரிசனம் பண்ணிட்டிருந்தாலும், நிலாம்மா தரிசனத்துக்காக அவங்களையே பார்த்திட்டிருந்த உங்களைத்தான் நான் பார்த்திட்டிருந்தேன்.. எல்லாம் எனக்கு தெரியும்.. சும்மா சும்மா முறைச்சிங்க பிருந்தாகிட்ட சொல்லிடுவேன்.” என சிரித்தான் சுபாஷ்.
அவ்வளவு அப்பட்டமாவா தெரிஞ்சது.? என நினைத்து சிரித்த வான்முகிலன்.. “சரி சரி.. எல்லாமும் தெரிஞ்சிடுச்சில்ல? அவளை பார்க்கப் போக எனக்கு பிருந்தா துணை தேவைப்படுது. இன்னைக்கே கிளம்பிடாதிங்க.” என்றான் கட்டளையாக.
“பாஸ்.. உதவி தேவைப்படுறவங்க கட்டளைலாம் போடக்கூடாது, பவ்யமா கேட்கனும்.” என கண்டிக்கும் த்வணியில் சொன்னவன்.. “எதோ திட்டிட்டாங்க போல, அன்னைக்கு பிருந்தா ரொம்ப அழுதுட்டா. நீங்க போய் பிரச்சனை பெருசாகிடப்போகுது. கொஞ்ச நாள் ஆகட்டுமே.” என்றான் நல் எண்ணத்தோடு.
“அவ்வளோ பொறுமையெல்லாம் எனக்கில்ல, என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம், அவங்கப்பாம்மா போனதும் அவளை மீட் பண்ணியாகனும்.” என்றான் உறுதியாக.
வான்முகிலனை மெச்சுதலாய் பார்த்தான் சுபாஷ்.
** ** ** ** ** **
திருவிழா முடிந்த அடுத்தநாள், காலை உணவு சமைத்து, தன் மாமியார் மாமனாருக்கு எடுத்துக்கொண்டு காலை எட்டு மணிக்கெல்லாம் மங்களம் கணவனோடு கிளம்பியிருந்தார்.
ப்ரவீனோடு மாடியில் விளையாடியபடி தேன்நிலாவின் பெற்றோர் கிளம்புவதைப் பார்த்திருந்த வான்முகிலன், அன்றே தேன்நிலாவை பார்க்க நினைத்து வீட்டிற்குள் சென்று குளித்து உண்டு வெளியே வந்து பார்க்க.. தேன்நிலாவின் ஸ்கூட்டி இல்லை. ப்ச்.. வேலைக்கு போய்ட்டாளா? என சலிப்போடு வீட்டினுள் வந்தான்.
டைனிங் டேபிளில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த இந்துபிருந்தாவிற்கு, பதார்த்தத்தின் வாசனை ஒவ்வாமல் போக, “ம்மா.. எனக்கு என்னவோ போல இருக்கு.” என எழுந்தவள் அப்படியே மயங்கிச் சரிய.. “ஏய்.. பிருந்தா..” என ஓடிவந்து தாங்கினான் தங்கையை.
பின்னே தண்ணீர் தெளிக்கவும், பத்து நிமிடம் கழித்து மயக்கம் தெளிந்தாள் இந்துபிருந்தா. மகளை தனதறைக்கு அழைத்துச்சென்ற சுப்புலஷ்மி ஆவலோடு விசாரிக்க.. “ஆமாம்மா, இந்த மாசம் ஆகல.” என தலைகுனிந்தாள் வெக்கத்தோடு.
பின்னே அனைவருக்கும் தெரிவிக்க மருத்துவமணை செல்ல அறிவுருத்தினர் வான்முகிலனும் சுபாசும். “ரொம்ப டையர்டா இருக்கு ண்ணா, மதியம் போல போலாம்.” என படுத்துக்கொண்டாள் இந்துபிருந்தா.
மதியம் போலாம் என்றவள் எழுந்து தயாராக நான்கு மணியாகியிருக்க, மருத்துவரை பார்த்து வர மாலை ஆறுமணியானது.
இக்குழந்தை பாக்கியம் உடனே கிட்டாமல் போனதால்தானே தன் வாழ்வில் அத்தனை பிரச்சனை.. வேதனை..
அப்படி வேதனை தன் தங்கைக்கு இல்லாமல்.. திருமணமாகி மூன்று மாதத்திற்குள் பிருந்தா கர்பமானது ரேவதிக்கு அதீத சந்தோசத்தை தர.. இன்முகமாக தங்கையிடமும் வான்முகிலனிடமும் பேசிக்கொண்டு வந்தாள் ரேவதி.
பணி முடித்து வந்துகொண்டிருந்த தேன்நிலா பெண்பார்க்க சென்றிருப்பார்களோ? முக்கிய விஷேசம் என்றால்தானே காரில் செல்வார்கள் என்ற தடுமாற்றத்தோடு வான்முகிலன் காரை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள் தேன்நிலா.
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த வான்முகிலன் அவள் செல்ல ஏதுவாக காரை ஓரமாய் ஓட்ட, பிருந்தாவை நேர்கொண்டு பார்க்கும் சக்தியற்றவளாய், அவர்கள் காரிலிருந்து இறங்கும் முன்னே நாம் வீட்டினுள் சென்றிடவேண்டுமென வான்முகிலன் காரினை வேகத்தோடு கடந்தாள் தேன்நிலா.
தேன்நிலா சென்று ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக வந்தவன், வீடு சாற்றியிருந்தபோதும், ஜன்னல் வழியாக தங்கள் குடும்பத்தை பார்த்திருப்பதை பார்த்தபடி தேன்நிலாவின் விட்டினை கடந்தான் வான்முகிலன்.
வீட்டிற்கு வந்ததும், “பிருந்தா.. அந்த கேக்குல இரண்டு பீஸ் பேக் பண்ணு.. உன் ஃப்ரண்டுக்கு கொடுத்துட்டு விசயத்தை சொல்லிட்டு வரலாம்.” என்றான் வான்முகிலன்.
தன் அண்ணன் விருப்பத்தை கணவன் சொல்லியிருக்க.. தேன்நிலா தன்னை புறக்கணித்த கோபத்தையெல்லாம் ஒதுக்கி.. அவளை காண சந்தோசத்தோடு சம்மதித்தாள் இந்துபிருந்தா.
“ஹாஸ்பிட்டல் போய் வந்தது டையர்டா இருக்கும்.. இப்போதைக்கு ஃபோன்ல சொல்லு, இன்னொரு நாளைக்கு நேர்ல சொல்லிக்கலாம்.” என வழக்கம்போல் சுப்புலஷ்மி மறுத்தார்தான்.
“நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேன்ம்மா. இப்போவே போய்ட்டு வந்துடறேன்.” என கிளம்ப.. வான்முகிலன் எதற்கு போகிறான் என கோபம் வந்தபோதும், அருகிலுள்ள வீடுதான் என்றாலும் ஓய்ந்திருக்கும் மகளை தனியே அனுப்ப மனமில்லாமலும், வான்முகிலன் நினைத்துவிட்டால் தடுக்க முடியாது என்பதாலும் அமைதியானார் சுப்புலஷ்மி.
என்ன முயன்றும் கண்ணீர் வந்துகொண்டேயிருக்க.. அழைப்பு மணி ஒலிக்கவே, இந்த நேரத்தில் நிச்சயம் பிருந்தாவை தவிர்த்து வேறு யாரும் தன்னை காண வரமாட்டார்கள் என, கண்களை துடைத்துக்கொண்டு, தன் குரலை சரி செய்து.. “எதுக்கு பிருந்தா வந்த?” என்றாள் உள்ளிருந்தபடியே.
“கதவை திற..” என்றாள் பிருந்தா.
இன்று இவளின் நட்பிற்கு ஒரு முடிவு கட்டிட வேண்டுமென கதவைத் திறக்க.. ஆழ்ந்த பார்வையோடு நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ந்தவளுக்கு பேச்சு வரவில்லை.
பிருந்தா.. “உள்ள வரலாமா?” என்றாள் அனுசரனையாக.
ஆமாம்.. தேன்நிலாவின் சிவந்த முகத்தையும், கலங்கிய கண்களையும் பார்த்ததும், இருவரின் சந்தோசமும் பரிபோய்விட, பிருந்தாவின் குரல் தன்போல் கெஞ்சலாய் வெளிவந்தது.
சந்தோசமாய்தானே காரினுள் பேசிக்கொண்டு போனார்கள்? ஒருவேளை வீட்டிற்கு வந்ததும் பெண் கொடுக்கமுடியாதென மேயர் சொல்லிட்டாரா? அதான் உர்ருனு இருக்கானா? என யோசித்திருக்க.. பிருந்தா.. “உன்கிட்ட கொஞ்சம் பேசனும் நிலா.” என்றாள் யாசகமாக.
இருவரின் முகபாவனையிலும்.. ஆம். அப்படியாகத்தான் இருக்கும் என நினைத்தவளுக்கு கோபம் தலைக்கேறியது. “ஓ.. அந்த மேயர் உங்கண்ணனுக்கு பொண்ணு கொடுக்கமாட்டனுட்டாரா? அதான் உடனே இங்க வந்திங்களா?
யாராவது வேணாம்னாதானே.. இருக்கவே இருக்கா இளிச்சவாய் நிலானு உங்க குடும்பத்துக்கு என் நினைப்பு வரும்?” என தேன்நிலா கோபத்தோடு திட்ட..
தேன்நிலாவின் மன மொழி புரிய.. இறுகிய முகம் மாறி, புன்னகைத்தான் வான்முகிலன். வான்முகிலனின் சிரிப்பு தேன்நிலாவிற்கு மேலும் கோபத்தை உண்டாக்க.. அவனை விடுத்து பிருந்தாவிடம்.. “இனி என் வீட்டுப்பக்கம் வந்த… அவ்வளோதான்.” என எச்சரித்து கதவை சாற்ற முயல,
தடுத்த வான்முகிலன்.. கதவை நன்றாக திறந்தபடி.. “பிருந்தா அம்மா ஆகப்போறா.. அதை சொல்லத்தான் வந்தா.. நீ என்னென்னவோ சொல்றியே.. எனக்கு புரியல.. கொஞ்சம் விளக்கமா சொல்லு..” என தேன்நிலாவின் அனுமதியில்லாமலே தங்கையோடு உள்ளே சென்று உரிமையாய் அமர்ந்தான் சோபாவில்.