வான்முகிலன் இந்துபிருந்தா வரவால் வந்த கோபத்தை பிருந்தாவின் கர்ப செய்தி போக்கியிருக்க, மகிழ்ச்சியில் திளைத்த முகத்தோடு.. “ப்..ப்..பிருந்..தா.” ஆமாவா என்பதுபோல் கேள்வியாய் பார்த்தாள் உணர்ச்சிப்பெருக்கோடு.
“இதுல யாராவது பொய் சொல்வாங்களா? டாக்டர்கிட்ட கூட போய்ட்டு வந்துட்டோம். நீ அத்தையாகப்போற.” என்று.. “அந்த கேக்கை கொடு பிருந்தா.” என்றான் தங்கையிடம்.
அத்தையா? என தேன்நிலா அதிர்வாக.. அவளின் முகபாவனை புரிந்து.. “பின்ன அத்தையில்லாம? சுபாஷை நீ அண்ணனாவாதான நினைக்கிற? அப்போ இவ குழந்தைக்கு நீ அத்தைதான? என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
இவன் வேறு எதோ அர்த்ததில் பேசுகிறானோ என பதட்டமானாள் தேன்நிலா.
அன்று சரண்ராஜ் வழியில் வம்பளத்தபோது, தன்னை காக்க வந்ததை அக்கறை என்று மட்டுமே நினைத்தாள். அதன்பின்னே, தன் வீட்டின் முன் தனக்காகவே காத்திருந்து, தனக்கு சரண்ராஜை பிடிக்கவில்லை என்றது பெரும் தவறல்ல என தன் குற்றவுணர்வை போக்கியதும், தான் குற்றவுணர்வில் இருக்கிறேன் என எப்படி அறிந்தான் என அன்றே பயந்தாள் தேன்நிலா.
இனியும் தன் முகத்தை பார்த்தால் மனதிலுள்ளதை கண்டுபிடித்திடுவானோ என அஞ்சியே வான்முகிலன் தன்னை பார்த்திடக்கூடாதென்பதில் இத்தனை நாளாய் கவனமாய் இருந்தாள்.
இன்று தன்னை கண்டிடுவானோ என்ற பதட்டம் வர, சந்தோச செய்தியோடு தன்னை காண வந்திருக்கும் தோழியிடம் மேற்கொண்டு பேச முடியாதவளாய் நின்றிருந்தாள் தேன்நிலா.
நேற்று ஆசையாய் காணவந்த போது லிமிட்டைப் பற்றி பேசிய தேன்நிலா மீது அதீத கோபத்தோடுதான் இருந்தாள். ஆனால் தற்போது தோழி மட்டுமல்லாது அண்ணன் மனதில் இருக்கிறாள் என்றதும் தேன்நிலா மீதுள்ள கோபம் குறைந்திருக்க, தன்னை திட்டியதை மன்னித்து தேன்நிலாவிடம் சென்று கேக்கை நீட்டினாள் இந்துபிருந்தா.
நேற்று அத்தனை கடினமாய் பேசியும் அனைத்தும் மறந்து கனிந்த முகத்தோடு கேக்கை நீட்டும் தோழியை காலம் உள்ளவரை எப்படித்தான் தவிர்ப்பதென கலங்கி நின்றாள் தேன்நிலா.
தோழியிடமிருந்து கேக்கை வாங்கி அருகிலிருந்த டேபிளில் வைக்க.. “ம்ஹும்.. இப்போவே சாப்பிடு.” என பிருந்தா பிடிவாதம் செய்ய, “பிருந்தா..” என கட்டிக்கொண்டாள் தோழியை.
பிருந்தா.. “என்னை ஏன் நிலா அவாய்ட் பண்ற? உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலடி.” என்றாள் ஆற்றாமையாக.
தேன்நிலாவை பார்த்தவாறு.. “இவ ஏன் உன்னை அவாய்ட் பண்றானு எனக்கு தெரியும் பிருந்தா.” என்றான் வான்முகிலன்.
அச்சோ.. சந்தோச செய்தியை பகிர வந்தவர்களை தவறாய் நினைத்து, பெண்கேட்டு வந்திருக்கிறார் என தன் மனதிலுள்ளதை தாமே உளறிவிட்டோமே? தன்னை கண்டுகொண்டிருப்பானோ? என மிகுந்த சங்கடத்திற்குள்ளான தேன்நிலாவின் தொண்டைக்குழி பயத்தில் ஏறி இறங்கியது.
தன் உயிர் தோழியே அண்ணியாக வரப்போகிறாள் என்ற சந்தோசத்தில் இருந்த இந்துபிருந்தாவிற்கு, எதோ வேண்டாதவர்கள் வந்தது போலிருக்கும் தேன் நிலாவின் பாவனை, தன் அண்ணனிற்குத்தான் விருப்பம்.. தேன்நிலாவிற்கு அப்படியில்லையோ என மனதை கலங்கச்செய்தது.
தன் அன்னையும் அக்காவும் தேன்நிலாவை பெண்கேட்டதனால் வந்த பெரிய பிரச்சனைக்குப் பிறகும் கூட, மனம் நோகும்படி தன்னை பேசிவிடக்கூடாதென தன்னிடம் பேசாதிருந்தாளே தவிர்த்தாளே அன்றி அவர்கள் மீதுள்ள கோபத்தில் தன்னை வெறுக்கவில்லை.
தன் திருமணத்திற்கு பிறகு நன்றாக பேசிக்கொண்டிருந்தவள், தற்போது பத்து நாட்களாகத்தான் பேசுவதில்லை, அண்ணன் விருப்பம் நிலாவிற்கு தெரிந்திருக்குமோ? தன் அண்ணனை இவளிற்கு பிடிக்கலையோ? அதனால்தான் தன்னையும் வெறுக்கிறாளோ? என பயந்த இந்துபிருந்தா.. “என்னை ஏன் நிலா அவாய்ட் பண்ற? நான் என்ன தப்பு செய்தேன்.?” என்றாள் பரிதவிப்பாக.
வான்முகிலன் தன்னையே பார்த்திருப்பது புரிய.. “உன் அண்ணனுக்கு என்னை கேட்டு பிரச்சனையானதுக்கப்புறம் நாம இரண்டுபேருமே லிமிட்டை மெய்ண்ட்டைன் பண்றதுதான் சரி.
உன்மேல எனக்கு எந்த கோபமுமில்ல, ஆனாலும் உன்னை பார்க்கும்போதெல்லாம் உன் அக்கா பேசியதுதான் நியாபகம் வருது. என்னதான் நீ என் ஃப்ரண்டுன்னாலும், உன் குடும்பத்துக்கு அப்புறம்தான் நான்.. எனக்கும் நீ அப்படித்தான். அதனாலதான் முன்னபோல உன்னோட என்னால பேச முடியல..” என்றாள் வருத்தத்தோடு.
தான் தனியாக வந்திருந்தாளாவது தன் அண்ணனிற்கு உன்னை பிடித்திருக்கிறது.. என அண்ணனின் மனதை வெளிப்படுத்தி, பெண்கேட்டு வந்தால் சம்மதிப்பாயா? என கேட்டிருக்கலாம்..
ஆனால் தற்போது கேட்டு நிலா எதாவது சொல்லிவிட்டால் அண்ணன் மனம் வருந்தும் என்ற எண்ணம் ஓட, இவ்விசயத்திற்கு பதில் தெரியாது இங்கிருந்து கிளம்பவும் மனம் வராமல் போக, செய்வதறியாது நின்றிருந்தாள் இந்துபிருந்தா.
“அந்த மேயர் எனக்கு பொண்ணு கொடுக்க காத்திட்டிருக்கான், ஆனா எனக்குத்தான் அவன் பொண்ணை கட்டிக்க பிடிக்கல, உனக்கு சரண்ராஜை பிடிக்காததை போல.” என்றான் வான்முகிலன்.
“கல்யாணம் என் சொந்த விசயம். இதை எதுக்கு கேக்குறிங்க?” என்றாள் வெடுக்கென.
அடேங்கப்பா.. என அவளின் கோபத்தை ரசித்தவன்… “அந்த மேயர் பொண்ணுக்கு முன்னாடியே எனக்கு உன்னைத்தான் கேட்டாங்க. கேட்ட விதம் தப்புன்னாலும் கேட்டது கேட்டதுதான? உன் முடிவு தெரியாம வேற இடம் பார்க்க எனக்கு பிடிக்கல.
என்னைப் போலத்தான் உனக்கும் இருக்குமோனும், அதனாலத்தான் சரண்ராஜை வேணாம்னுட்டியோனும் எனக்கு தோனுது. எனக்கு உன்னை கேட்கும் முன்ன கூட இரண்டொரு முறைதான் உன்கிட்ட பேசியிருக்கேன், அப்போல்லாம் தயங்காம பேசுவ.
எங்கம்மா பிரச்சனை பண்ணினதுக்கப்புறம் கூட என் முகம் பார்த்து சண்டை போட்ட உனக்கு இப்போ ஏன் என் முகம் பார்க்க முடியல?
உனக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லாத போது என்னை நீ அவாய்ட் பண்றது.. உனக்கு என்னை பிடிச்சிருக்கிறது எனக்கு தெரியாம இருக்கத்தான் என்னோட சேர்த்து பிருந்தாவையும் அவாய்ட் பண்றியோனு தோனுது..
நான் நினைக்குறது சரிதானே..? என் அம்மாவை உங்கம்மாப்பாகிட்ட பேச சொல்லட்டா?” என்றான்.
எப்படித்தான் மனதிலுள்ளதை கண்டுபிடிக்கிறானோ என தேன்நிலா பேரதிர்ச்சியோடு விழிவிரிக்க.. “இருக்கவே இருக்கா இளிச்சவாய் நிலானெல்லாம் உன்னை நான் கேக்கல.. தேன்நிலாவை எனக்கு பிடிச்சிருக்கவும்தான் கேக்குறேன்.” என்றான் தேன்நிலாவை பார்த்தபடி.
வான்முகிலன் இப்படி பட்டென கேட்பானென தேன்நிலா இந்துபிருந்தா இருவருமே எதிர்பார்க்கவில்லை. பெருமகிழ்ச்சியடைந்த இந்துபிருந்தா.. தோழியை அவளறைக்குள் இழுத்துச்சென்று.. “சம்மதம்னு சொல்லு நிலா. என் அண்ணனைவிட வேற யாரும் உன்னை சரியா புரிஞ்சிக்கமாட்டாங்க.” என்றாள் கெஞ்சலாக.
“பி..ருந்தா..” என கலங்கியவள்.. “இது சரிவராது பிருந்தா.. உங்கண்ணனுக்கு நான் சரிப்பட மாட்டேன்.” என்றாள் வேதனையோடு.
“ஏன் சரிப்படமாட்ட?” என அதட்டியவள்.. “உன்னை விட வேற யாரும் என் அண்ணனுக்கு சரியா இருக்கமாட்டாங்க.. என் அண்ணன் குணத்துக்கு ஏற்ற சரியான ஆள் நீ மட்டும்தான்.
இப்போவே சொல்லனும்னு இல்ல, நிறைய டைம் எடுத்து நல்லா யோசிச்சி நல்ல பதிலா சொல்லு நிலா..” என வேண்டுதலாய் சொல்லி வெளியே வர..
“வா பிருந்தா போலாம்.” என்றான்.
தேன்நிலா மறுத்ததை நினைத்த பிருந்தா முகம் தவிப்பிற்குள்ளாக.. “பார்த்துக்கலாம் வா.” என இன்முகத்தோடு கிசுகிசுத்து, தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்..
வீட்டினுள் செல்லும் முன் வான்முகிலனின் கைப்பிடித்து.. “அண்ணா.. நிலா இது சரி வராதுனு சொன்னாண்ணா.. அதோட அம்மா சம்மதிப்பாங்களா? நிலா அம்மாகிட்ட பொண்ணு கேட்பாங்களா?” என்றாள் கவலையோடு.
“ரேவாக்கா பேசியதை நினைச்சி சொல்லியிருப்பா, இப்போதான சொல்லியிருக்கேன், ஒரு இரண்டு நாள் டைம் கொடுப்போம்.
அவளைப் பத்தின கவலையை விட்டுட்டு போய் ரெஸ்ட் எடு.. அம்மாகிட்ட நானே பேசிக்கிறேன்.” என தங்கையை தேற்றி, தனதறைக்குள் வந்தவன் இதமான மனநிலையோடு கட்டிலில் சரிந்தான்.
அன்று பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்க போனபோது ரேவதி பெரிதாய் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது வான்முகிலன் நிலா வீட்டிற்கு சென்றதை அப்படி சுலபமாய் நினைக்க முடியவில்லை.
ரேவதிக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என அறிய பேராவல். ஆனால் பிருந்தா வந்ததும் கைபிடித்து அரவணைப்பாய் சுபாஷ் அறைக்குள் அழைத்து செல்கையில் எப்படி அழைத்து பேசுவது? காலையில் பேசலாம் என நினைத்துக்கொண்டாள்.
அடுத்தநாள் காலை.. இன்று கிளம்பியாக வேண்டும் என்ற தந்தையிடம்.. “ஊருக்கு வர மாட்டேன், மாமாவோடதான் இருப்பேன்..” என்று பிடிவாதத்தோடு அழும் ப்ரவீனை சமாதானம் செய்துகொண்டிருந்தான் வான்முகிலன்.
இந்துபிருந்தாவிற்கு பதிலாக சுபாஷ்தான் வெளியே வர.. “பிருந்தா எழுந்துக்கலைங்களா?” என்றாள் ரேவதி.
“எழுந்துட்டா, குளிச்சிட்டிருக்கா.” என சுபாஷ் சொல்ல, வேறு வழியின்றி அமர்ந்தாள் ரேவதி.
அனைவருக்கும் சுப்புலஷ்மி டீ கொடுக்க.. “டீ குடிச்சதும் கிளம்பலாம் ரேவா.” என்றான் நரேந்திரன்.
“நீங்க போங்களேன், நான் பிருந்தா கூட இரண்டு நாள் இருந்துட்டு வரேன்.” என்க.. வான்முகலன் ரேவதியை முறைக்க.. “பிருந்தாக்கு முடியலடா, ஒரு இரண்டு நாள் அவளோட இருந்துட்டு போறேனே.. ப்ரவீனும் உன்னோட இருக்கேனு ரொம்ப ஆசைப்படுறான்.” என்றாள் கெஞ்சலாக.
“பிருந்தாவைப் பார்த்துக்க அம்மா இருக்காங்க, ஸ்கூல் லீவ் போடுறது ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்னு இப்போதான் ப்ரவீனுக்கு புரிய வச்சேன். நீ குழந்தையை கெடுக்காத. பிருந்தாவும் நாளைக்கே கிளம்புறா. மாமாவோட கிளம்புற வழியைப் பாரு.” என்றான் கட்டளையாக.
சுபாஷ் முகம் பொலிவாக.. “மச்சானுக்கு தெரிஞ்ச விசயம் மாமாக்கு தெரியலைன்னா அது மரியாதையா இருக்காதில்ல ரேவாக்கா, அதான் எல்லாரும் இருக்கும் போதே சொல்லிடலாம்னு..” என்றான் சிரிப்போடு.