பிருந்தாவிற்கும் இப்படி தோன்றியதுதான். ஆனால் அண்ணன் தன் மனதை தேன்நிலாவிடம் தெரிவித்திருக்க, நிலா மறுத்திருக்க, என்னவாகுமோ என மனம் தவிக்க.. இங்கிருந்து கிளம்பவும் மனமில்லாமல் தவிப்போடு அமர்ந்திருந்தாள்.
பின்னே சுபாசும் பிருந்தாவும் கிளம்பிதும்.. “அம்மா விசயத்துல நிலா ரொம்ப சென்ஸிடிவ்.. அவ்வளோ சீக்கிரம் உன்னை ஏத்துக்கமாட்டா.. கோபப்பட்டு அவளை திட்டவும் கூடாது, அதேநேரம் என் நிலாவை விட்டுடவும் கூடாது..” என கெஞ்சியே விடைபெற்றாள் இந்துபிருந்தா.
வான்முகிலனை கவனிக்க சொல்லி ரேவதி தினமும் அன்னைக்கு போன் செய்வாள். சுப்புலஷ்மியும் அந்த நிலா வேண்டாம், அவளை விட நல்ல பெண்ணாக பார்க்கலாம் என எத்தனையோ சொல்லிப்பார்த்தார்.
“நல்ல பொண்ணா இருக்கவும்தான என்னை கூட கேட்காம இரண்டு பேரும் போய் பொண்ணு கேட்டிங்க? இப்போ என்ன ஆச்சு? நான் அவளைத்தான் கட்டிக்குவேன்.” என தன் எண்ணத்திலிருந்து மாறவேயில்லை வான்முகிலன்.
“அவ ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவ?” என்க.. “அந்த கவலை உனக்கு வேணாம். கண்டிப்பா சம்மதிப்பா.” என்றான் உறுதியாக.
இத்தனை திடமாய் இருக்கிறானே, அந்த நிலாவை சந்தித்து பேச போவானோ? இல்லை போனில் பேசுவானோ? என தவித்த அன்னையின் எண்ணங்களை மொத்தமாய் பொய்யாக்கினான் வான்முகிலன்.
அடுத்து வந்த நாட்களில் வழக்கமாய் செல்லும் நடைபயிற்சிக்கு கூட செல்லவில்லை வான்முகிலன்.
ஒரு வாரம் கழித்து, ப்ரவீனை போய் பார்த்து வந்தவன், அடுத்தநாள்.. நிலா விசயத்தில் எதாவது தவறு நடந்தால் என்ன செய்வேன் என மிரட்டலாய் எடுத்துரைத்தும், அன்னைக்கு பத்திரம் சொல்லியும், லாரிக்கு கிளம்பியிருந்தான்.
ரேவதி சுப்புலஷ்மிக்கு அழைத்து.. “அம்மா முகிலன் வரதுக்கு பத்து நாளுக்கு மேல ஆகுமாம், அவன் வரதுக்குள்ள நிலாகிட்ட பேசிடலாமா?” என்றாள் அறிவாளியாக.
“அப்படியேது எனக்கு தெரியாம எதுவும் செய்து தொலைச்சிடாத..” என பயந்து சொன்னவர்.. “அவன் இல்லாத நேரம் நிலாகிட்ட போய் தவறா பேசுறதோ.. அவமானம் செய்யிறதோ நடந்த்துனா, நம்ம யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்குவானாம்.
அப்படியொரு கல்யாணம் நடந்தா, அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரமாட்டானாம். இவன் அவ வீட்டுக்கு போவானாம். அங்கயிருந்தே என்னை பார்த்துக்குவானாம்.” என வான்முகிலன் சொன்னதை தாளமுடியாமல் புலம்பித் தீர்த்தார் சுப்புலஷ்மி.
அப்படியொரு நிகழ்வு நடந்தால் தன் தம்பியை பார்க்க வேண்டுமானால் அவள் வீட்டிற்குபோய்த்தான் பார்க்கனுமா? என வான்முகிலனின் திட்டத்தில் ஆடிப்போனாள் ரேவதி.
முன்பானால் லாரிக்கு செல்லும் போதெல்லாம் சுப்புலஷ்மிக்கு துணையாக பிருந்தா இருப்பாள், போதாதற்கு இதையே காரணம் காட்டி ரேவதியும் வந்திடுவாள்.
தற்போது ரேவதியை தானே வரவேண்டாமென்றதாலும், பிருந்தாவிற்கு அலைச்சல் கூடாதென்பதாலும், வீடு சுத்தம் செய்ய வரும் பெண்ணை அன்னையோடு இருக்கப் பணித்து கிளம்பியிருந்தான்.
ஆனாலும் அக்கா தங்கை அருகிலிருப்பதுபோல் இருக்காது என மனம் கேளாமல், தினமும் காலை மாலை அன்னைக்கு அழைத்து நலம் விசாரித்தான்.
முன்பு லாரிக்கு செல்லும்போது இப்படி போன் செய்யமாட்டான், அத்தனை ஏன்? நான் போன் செய்தாலே, லாரி ஓட்டிட்டிருக்கும்போது போன் செய்யாதேனு கத்துவான்.
தற்போது நிலாவை ஏதும் சொல்லிவிடக் கூடாதென்பதால் ஒரு நாளைக்கு இருமுறை போன் செய்கிறான், அவளிற்காக எத்தனை பார்க்கிறான் எனப் பொறுமினார் சுப்புலஷ்மி.
உத்திரப் பிரதேசத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற வான்முகிலன் பதினைந்து நாட்கள் கழித்து காலை ஏழு மணிபோல் வந்தான்.
திருமணம் பற்றி பேசுவான் என சுப்புலஷ்மி எதிர்பார்த்திருக்க, அப்படி ஏதும் பேசாமல், குளித்து, உண்டு உறங்கப்போனவன் நான்கு மணி நேரம் ஆழ்ந்து உறங்கி எழுந்து வந்தான்.
“சாப்பிட எடுத்து வைக்கவா முகிலா?” என்றார்.
“பனெண்டு மணிதானம்மா ஆகுது? கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்றவன் பிருந்தாவிற்கு அழைத்து நலம் விசாரித்தான். பின்னே ரேவதிக்கும் அழைத்து, நரேந்திரன், ப்ரவீனின் நலத்தையும் விசாரித்தான்.
அதன்பின், தனது அலுவலகத்திற்கு அழைத்து, இன்று சரக்கு எடுத்துச்செல்லும் லாரிகளுக்கு டிரைவர், க்ளீனரை நியமித்து, அவர்களோடு ஒருமணி நேரம் வரை உரையாடிக்கொண்டிருந்தான்.
தேன்நிலா பற்றி பேசுவேன் என அன்னை தன்னையே பார்த்திருப்பது வான்முகிலனிற்கு புரிந்ததுதான்.. இவர்களை சம்மதிக்க வைத்து, பெண் கேட்க போன பின்னே அவள் சம்மதிக்கவில்லையென்றால் என்ன செய்வதென முதலில் தேன்நிலாவிடம் பேசிவிட முடிவெடுத்து தற்போது அமைதிகாத்தான்.
மாலை ஐந்து மணிவரை டி.வி பார்ப்பது, மொபைல் பார்ப்பதென போகாத பொழுதை சிரமப்பட்டு போக்கி, வாக்கிங் சென்றவன் அரைமணி நேரத்தில் வீடு திரும்பினான்.
ம்.. இவன் கிளம்பும்போதே தேன்நிலா தெருமுனையில் நுழைவதை பார்த்தே சென்றதால் சீக்கிரம் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவ வண்டி சத்தம் கேட்டும் வாக்கிங் போறான், ஒரு வேளை போனில் பேசுவானோ? என யோசித்த சுப்புலஷ்மி.. “இல்லை இல்லை அப்படிலாம் பேசமாட்டான்.. அவள் மீதான விருப்பம் சொல்லி இருபது நாளிற்கு மேலாகிறது. தனக்குத் தெரியாமல் அவளிடம் பேச நினைத்திருந்தால் லாரிக்கு சென்றிருக்கமாட்டான். மகன் தன் சம்மதத்திற்காக காத்திருக்கிறான்.” என்ற நம்பிக்கையோடு, வான்முகிலன் கேட்ட டீயை வைத்து கொடுத்தார்.
டீ யை வாங்கிக்கொண்டு வான்முகிலன் மாடிக்கு சென்றிட, தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென்றால்தான் வான்முகிலன் மாடிக்கு போவான்.
நிலாவை மணப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதால் அவளோடான திருமணத்தைப் பற்றி மகன் மேற்கொண்டு எதையும் யோசிக்கவில்லை என நிம்மதியடைந்தவராய்.. மாலை பூஜை, இரவு உணவு என தன் வழக்கப் பணிகளில் இறங்கினார் சுப்புலஷ்மி.
** ** ** ** **
அழைப்பு மணி ஒலிக்கவும் கதவை திறந்த தேன்நிலா ஸ்தம்பித்து நிற்க.. “நிறைய நேரம் வெளில நிக்க முடியாது, யாராவது பார்த்தா உன்னை தப்பா நினைச்சிடுவாங்க. ஒரு இரண்டு நிமிஷத்துல கிளம்பிடறேன்.. உள்ள வா.” என உள்ளே போய் அமர்ந்தான் வான்முகிலன்.
தேன்நிலா உள்ளே வர, சுற்றி வளைக்காமல்.. “என்ன முடிவு செய்திருக்க? எங்கம்மாவை எப்போ உங்கம்மாப்பாகிட்ட பேச சொல்லட்டும்?” என்றான்.
வான்முகிலன் விருப்பம் சொல்லி சென்றதிலிருந்து மிகுந்த வேதனையிலிருந்தாள் தேன்நிலா. அவனின் விருப்பம் நான் என்றாலும், தன் விருப்பம் அவன் என்றாலும், திருமணம் பந்தம் இரு குடும்பம் சம்மதப்பட்டது.
தன் ஊனத்தை குறையாக கூறியிருந்தால் கூட பரவாயில்லை, தன் அன்னையின் திருமணத்தை இழிவாய் பேசியதோடு, இன்று வரை அவர்கள் சந்தோசத்திற்காக தன்னை இங்கு தனியே விட்டுருக்கிறார்கள் என்ற ரேவதியின் தரமற்ற வார்த்தையை மன்னிக்கவோ மறக்கவோ இயலவேயில்லை தேன்நிலாவால்.
இத்திருமணம் நடந்தால், காலம் வரை ரேவதியின் பேச்சு செவிகளில் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இவனின் அக்காவாக இருப்பதால் இவனை திருமணம் செய்தால் அதன் பின்னே ரேவதியை ஒதுக்கவும் முடியாது.
ரேவதி மீதானா வெறுப்பு உயிருள்ளவரை போகாது என்பதால், எப்படி யோசித்தாலும் வான்முகிலன் தனக்கு வேண்டாம் என்றுதான் முடிவெடுக்க முடிந்தது. ஆனால் அதனை சொல்லும் தைரியமற்றவளாய் நின்றிருந்தாள் தேன்நிலா.
“உன்னோட ரொம்ப நேரம் தனியா இருக்கிறது தப்பு.. எங்கம்மாவை எப்போ வர சொல்லட்டும்? சீக்கிரம் பதில் சொல்லு.” என்றான் அதட்டலாக.
“வ்..வ்.. வேணாம்.” என்றாள் திணறலாக.
“என்ன வேணாம்?” என்றான் முறைப்போடு.
“இந்த கல்யாணம்.” என்றவளுக்கு குரல் உள்ளே போயிருக்க, கண்களும் கலக்கம் கொள்ள, தலைகுனிந்து நின்றிருந்தவள் தற்போது வான்முகிலனிற்கு முதுகுகாட்டி நின்றாள்.
“அதுக்கு எதுக்கு அந்த பக்கம் திரும்பற?” என அவளின் முன்னே போய் நிற்க.. குனிந்திருந்தாலும் அதிர்ந்து போனாள். உடலிலும் நடுக்கம் தோன்ற, அவளின் கண்ணீர் கன்னம் தாண்டியது.
தன்னை பிடித்திருக்கிறது.. ஆனால் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கிறாள் எனப்புரிந்த போதும்.. “நீயும் இந்த லாரி டிரைவரை வேணாம்னுட்டல்ல?” என வான்முகிலன் வெளியேறுவது போல் பாவனை செய்ய.. தவிப்பாய் பார்த்தாள் தேன்நிலா.
இனி இவளிடம் பேசி லாபமில்லை, எப்படி கேட்டாலும் மறுக்கத்தான் செய்வாள். இவளின் அப்பாம்மாவிடம் பேசுவதுதான் சரி என அடுத்தகட்ட முடிவை எடுத்தவன்..
“வேணாம்னா அதோட நிக்கனும். இப்படி பார்வை பார்த்த.. தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்.” என பொய்யாய் எச்சரித்து கோபம்போல் வெளியேறியவன், தேன்நிலா வீட்டு வாசலை தாண்டியதும் இன்முகத்தோடு நடந்தான்.
அடுத்த நாளே தேன்நிலாவின் தந்தை வீட்டிற்கு சென்றிருந்தான் வான்முகிலன்.
வான்முகிலனைக் கண்டதும் யோசனைக்குள்ளான லிங்கேசனும்.. பிருந்தா தன் வீட்டிற்கு வந்ததால் பிரச்சனையானதோ என தவித்த மங்களமும் பேச்சின்றி இருக்க.. “உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்களும் உங்க பொண்ணு மாதிரியே ரியாக்ஷன் கொடுத்தா பேச வந்ததை எப்படி பேச?” என்றான்.
ஓ.. அப்போ பிருந்தா நம்ம பொண்ணை பார்க்க வந்த்தால எந்த பிரச்சனையும் இல்ல போல என “வாங்க தம்பி.” என்றார் மங்களம்.
என்றும் வராதவன் மட்டுமல்ல, இதுவரை தன்னிடம் பேசியது கூட இல்லை. தற்போது தன்னைதான் பார்க்க வந்திருக்கிறான்.. அதோடு இங்கு வருவதற்கு முன் தன் மகளையும் பார்த்து பேசியிருக்கிறான்.. அப்படியானால்..? என்ற யோசனையோடே.. “உள்ள வா ப்பா..” என்றார் லிங்கேசன்.
உள்ளே சென்றவன்.. “உங்க பொண்ணை என் அம்மா எனக்கு கேட்டதை உங்ககிட்ட சொல்லியிருப்பானு நினைக்கிறேன்.” என்க.. “ஆமாம் சொன்னா.” என முகம் இறுகினார் மங்களம்.
“அன்னைக்கு அது மட்டும் நடக்கல..” என தன் அக்கா இவர்களின் திருமணத்தைப் பற்றி பேசியதையும் சொல்லி.. தன் அக்கா பேசியதற்கு மன்னிப்பும் கேட்டு, “எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு, அவளை மட்டும்தான் பிடிச்சிருக்கு.. ஆனா எங்கக்கா உங்களை பேசியதை மனசுல வச்சிட்டு அவ என்னை வேணாம்னுட்டா.. அவளுக்கு எடுத்து சொல்லி, எங்க கல்யாணத்தை உங்க ஆசிர்வதத்தோட நடத்தி கொடுப்பிங்களா?” என்றான் கனிவாகவும் மரியாதையாகவும்.
எப்படியெல்லாம் பேசியிருக்கிறாள் என ரேவதியை நினைத்து வெகுண்டவர்.. இத்தனையும் மனதில் வைத்து வருந்தியிருக்கிறாள்.. இத்தனை வருடத்திற்கு பிறகும் தன் திருமணம் விமர்சிக்கப்படுவதோடல்லாமல் தன் திருமணத்தை பணையமாய் வைத்து மகளை கேட்டிருக்கிறார்கள் என தாளமுடியவில்லை மங்களத்திற்கு.
மனைவிக்கு மாறாக வேறு மாதிரி யோசித்த லிங்கேசன்.. தன் திருமண விமர்சனத்தை புறம் தள்ளி, மகளின் வளமான எதிர்காலத்தை முன்னிருத்தி.. “உண்மையா என் பொண்ணை உங்களுக்கு பிடிச்சிருக்கா? அவளுக்கும் உங்களை பிடிக்கும்னு உறுதியா தெரியுமா? அப்படியேன்னாலும் உங்கம்மா சம்மதிப்பாங்களா? அவங்களுக்கு தெரியாம நீங்க வந்து பொண்ணு கேட்குறது முறையா?” என கேள்விகளை அடுக்கினார் லிங்கேசன்.