“எங்கம்மாக்கு நிலாவை பிடிச்சதாலதான் எனக்கு கேட்டுருக்காங்க.. அப்போ பிரச்சனையானதுனால இப்போ கேட்க தயங்கறாங்க..
உங்க சம்மதம் வேண்டித்தான் தனியா வந்தேன், நீங்க சம்மதிச்சா என் அம்மாவோட முறைப்படி பொண்ணு கேட்க வருவேன்.” என்றான்.
சுப்புலஷ்மியின் மீது நம்பிக்கையில்லையென்றாலும் வான்முகிலன் மீதுள்ள நம்பிக்கையில் லிங்கேசன் முகம் சம்மதத்தை தெரிவிக்க, அதில் திருப்தியான வான்முகிலன் மங்களத்தை பார்க்க, அவரின் முகம் அதிருப்தியை காட்டியது.
“எங்கம்மாக்குள்ள ஈகோ இருக்குதுதான்.. சரியா சொல்லனும்னா இந்த கல்யாணத்துல விருப்பமும் இல்ல.. அதுக்கு காரணம் முன்ன நடந்த சம்பவம்தானே தவிர, நிலாவை பிடிக்காம இல்ல. அம்மா பிடிவாதம்லாம் என் விருப்பத்துக்கு முன்ன காணாம போய்டும்.” என்றான்.
நிலா மறுக்கவும் ரேவாக்கா தேவையில்லாம பேசிடுச்சி.. இரண்டு பேர் பேசினதும் தப்புதான்.. அதிலும் ரேவாக்கா பேசியது ரொம்ப ரொம்ப தப்பு.. நான் சொன்னா என் ரோவக்கா உங்ககிட்ட மட்டுமில்ல, நிலாகிட்டயும் மன்னிப்பு கேட்பாங்க.
முன்ன அம்மா மன்னிப்பு கேட்டப்போ நிலாவை கல்யாணம் செய்துக்கிற எண்ணம் எனக்கும் இல்ல, நிலாக்கும் இல்ல, ஆனா இப்போ அப்படி இல்ல, எங்க இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு.
இந்த நேரம் அம்மாவையோ, ரேவாக்காவையோ மன்னிப்பு கேட்க சொன்னா.. அவங்க பேசினதை மறந்துட்டு, நம்மளை மன்னிப்பு கேட்க வச்சிட்டாளேனு மட்டுமே யோசிப்பாங்க, எதோ ஜென்ம விரோதியை விருந்தாளியாக்கிக்கிட்ட மாதிரி ஃபீல் பண்ணுவாங்க.. மாமியார் மருமக உறவு இப்படி வேண்டாமே..” என்றான் மங்களத்திடம்.
மங்களம் பதிலளிக்கவில்லையென்றாலும் லிங்கேசன் வான்முகிலன்தான் தனது மருமகன் என முடிவே செய்துவிட்டார். ஆனாலும் மகளின் விருப்பமும் மங்களத்தின் சம்மதமும் அவர்களின் வாய்மொழியாக சொல்லும்வரை தான் தன் விருப்பத்தை சொல்லக்கூடாதென அமைதி காத்தார்.
மங்களம்.. “எங்க சம்மதம் இல்லாம மருமகள்னு முடிவே பண்ணிட்டிங்களா?” என்றார்.
“ஆமாம்.. ஆனா பண்ணிட்டேன் இல்ல, பண்ணிட்டோம்..” என்க.. மங்களம் புரியாமல் பார்க்க, “முதல்ல எனக்கு மட்டும்தான் பிடிச்சிருக்குனு நினைச்சேன், என் தங்கையோட போய் என் விருப்பத்தை சொல்லும்போதுதான் எனக்கு அவளை பிடிக்கும் முன்னவே அவளுக்கும் என்னை பிடிச்சிருக்குனு புரிஞ்சது.
அதனாலதான் சரண்ராஜை வேணாம்னு சொல்லியிருக்கா.. என் தங்கை மாப்பிள்ளை பார்த்ததுக்கும் திட்டியிருக்கா.
அதுமட்டுமில்ல, இனி நீங்க எப்படிபட்ட மாப்பிள்ளை பார்தாலும் பிடிக்கலனுதான் சொல்வா.. என்னைத்தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்கமாட்டா.” என்றான் உறுதியான குரலில்.
அதிர்வான மங்களம்.. எதோ சொல்லவர, மங்களத்தின் கைப்பிடித்து அழுத்தம் கொடுத்து தடுத்த லிங்கேஷ்வரன்.. “என் பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்றார்.
சரியென்பதாய் வான்முகிலன் எழ, லிங்கேஷ்வரன்.. “ஆனா ஒரு விசயம்.. என் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாள்னா என்னால வற்புறுத்த முடியாது, நீங்களும் வற்புறுத்தக்கூடாது.” என்றார் கண்டிப்போடு.
“அப்போ நீங்களும் உங்க வீட்டுக்குள்ள வச்சி கேட்கக்கூடாது, எதாவது கோவில்ல வச்சி கேளுங்க. அவ என்ன சொல்றானு எனக்கு தெரியனும்.”
தங்கள் மேல் நம்பிக்கையில்லாமல்தான் வான்முகிலன் இப்படி சொல்கிறான் என நினைத்த லிங்கேசன்.. “என் மக விருப்பத்துக்கு மாறா கண்டிப்பா நான் மட்டுமில்ல, அவ அம்மாவையும் எதுவும் செய்யமாட்டேன். என்னை நம்புங்க.” என்றார்.
வான்முகிலன் சொல்வதுபோல்தான் மகள் யோசிப்பாள் என்றுணர்ந்தபோதும்.. “அப்படியேன்னாலும் உங்க முன்னாடி என் மகளை கைதி மாதிரி விசாரிக்க முடியாது.” என மறுத்தார் மங்களம்.
வான்முகிலன்.. “சரி நான் வரல.. நீங்களே கேட்டு சொல்லுங்க.” என விட்டுக்கொடுத்து, லிங்கேசனிடம்.. “கோவிலுக்கு போகும்போது அவ தம்பியையும் கூட்டிட்டு போங்க, தமிழரசு மேல அவளுக்கு பாசம் அதிகம்.. அவனுக்கும் நிலாவோட நல்ல புரிதல் இருக்கு. மகன் சொன்னாலாவது மகளோட விருப்பத்தை புரிஞ்சிப்பாங்களா பார்க்கலாம்.” என எடுத்துரைத்து விடைபெற்றான்.
வான்முகிலன் கிளம்பியதும்.. “ப்ச்.. ஒரு டீ கூட வச்சி கொடுக்காம விட்டுட்டோம்.” என லிங்கேசன் வருந்த.. “அந்த ரேவதி நம்மளை எவ்வளவு கேவலமா பேசியிருக்கா, இப்போ இவனுக்கு டீ வச்சி கொடுக்காததுதான் பெரிய குறையா போச்சா?” என்றார் கடுப்பாக.
“அதுக்குத்தான் முகிலன் மன்னிப்பு கேட்டுட்டாரில்ல?” என தன்மையாய் எடுத்துரைத்து, “பொண்ணு கேட்டு வரவங்களுக்கு பொண்ணு கொடுக்குறோமோ இல்லையோ? குறைஞ்சபட்சம் டீயாவது கொடுக்கனுமில்ல? அதான முறை?” என்றார் இலகுவாக.
மங்களம்.. “இல்லைங்க, நம்மளை இப்படி பேசினவன் குடும்பத்துல வாக்கப்பட நிச்சயம் நிலா விரும்பமாட்டா, எனக்கும் இந்த சம்மந்தம் பிடிக்கல.
முகிலன் சொன்னதுக்காகலாம் நம்ம பொண்ணை விசாரிக்க வேண்டாம். இரண்டு நாள் கழிச்சி, இந்த கல்யாணத்துல நிலாக்கு விருப்பமில்லையாம்னு சொல்லிடலாம்.” என்றார் முடிவாக.
“அது ஈசியா சொல்லிடலாம், அதுக்கப்புறம் நிலா வேற பையனை கல்யாணம் செய்துப்பாளானு தெரிய வேணாமா? அந்த சரண்ராஜை பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு காரணமே இல்லாம நிராகரிச்ச மாதிரி, முகிலனை மனசுல வச்சிக்கிட்டு எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டாள்னா என்ன செய்வ?” என்றார் சற்று அதட்டலாக.
உன் முதல் கல்யாணமும் பெரியவங்க விருப்பப்படிதான் நடந்தது. நம்ம கல்யாணமும் என் விருப்பத்துலயும், உன் அப்பாம்மா சொன்னதாலயும்தான் நடந்தது.
ஆனா எனக்கு அப்படியில்ல, நிலா என் பொண்ணு.. நீ எனக்கானவனு மனசுல பதிஞ்சதுக்கப்புறம், எப்படி உன்னை சம்மதிக்க வைக்கிறதுனும், எங்கப்பாம்மாவும், உங்கப்பாம்மாவும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களானு மனசுக்குள்ள அவ்வளோ போராட்டம்..
ஆனாலும் எப்படி சம்மதிக்க வைக்கிறதுனு யோசிச்சனே தவிர, நீ சம்மதிக்கலனா விட்டுடனும்னு தோணவேயில்ல.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன்னோட மட்டும்தான்னு தான் தோணுச்சு. கல்யாணத்துக்கு முன்னாடியான உண்மைக் காதல் இப்படித்தான் யோசிக்க வைக்கும்.
நம்ம பொண்ணுக்கு விருப்பமா இல்லையானு தெரியல.. ஆனா முகிலனுக்கு நம்ம பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னை கல்யாணம் செய்துக்க நான் காட்டின வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்துல இருக்கான்.
அவங்கம்மாக்கு விருப்பம் இல்லனு தெரிஞ்சும் நம்மகிட்ட பொண்ணு கேட்டு வந்தவன், நாம மறுத்தா மட்டும் விட்டுடவா போறான்.? முகிலன் கேட்கும்போதே சம்மதிச்சாதான் நமக்கு மரியாதை.
அதோட, முகிலன் சொல்றது உண்மையா இருந்து, ரேவதி பேசினதுக்காக இப்போ முகிலனை வேணாம்னு சொல்லிட்டு, நாளைக்கு அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணம் ஆகும்போது நிலா வேதனைப்பட்டா நம்மளால நிம்மதியா இருக்க முடியுமா?” என மகளின் மீதுள்ள அக்கறையில் மிகப் பொறுமையாய் எடுத்துரைத்தார் லிங்கேசன்.
மங்களத்திற்கு தன் திருமணத்தை இழிவாய் பேசிவிட்டார்கள் என்ற கோபத்தோடு, இதையே காரணம் காட்டி திருமணத்திற்கு பிறகும் சொல்லி காட்டினார்கள் என்றால், தன்னிடமும் பகிராமல் மனதோடு மருகுவாள்.. கணவனோடும் சந்தோசமாய் வாழமாட்டாள்.. மகளின் வாழ்வே வேதனையாகிவிடும் என்ற பயமிருக்க, கணவன் எப்படி எடுத்துரைத்தபோதும் மங்களத்திற்கு இத்திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை.
ஆனாலும் கணவனின் பேச்சை மீற முடியாமல்.. “சரி.. நிலாகிட்ட கேட்கலாம்.. அவ மறுத்துட்டான்னா விட்டுடனும்.” என அரைமனதாய் சம்மதித்தார்.
“என் பொண்ணுக்கு விருப்பமில்லனா நான் மட்டும் சம்மதிப்பேனா?” என மனைவிமீது குறைபட்டு, “என் பொண்ணுக்காகத்தான் முகிலன் சொன்னதுக்கு சம்மதிச்சிருக்கேன். நம்ம பொண்ணு மனசுல முகிலன் இருக்கிறான்னா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சுதான் ஆகனும்..
அதே நேரம் நிலாக்கு விருப்பமில்லனு தெரிஞ்சிடுச்சினா என் பொண்ணை விட்டுடுங்கனு முகிலன்கிட்ட நானே சொல்லிடுவேன்.” என சமாதானம் செய்து.. “சாயங்காலம் நிலாக்கு போன் செய்து, வர வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போலாமானு நிலாகிட்ட கேட்கலாம்.” என்றார் லிங்கேசன்.
** ** ** ** ** ** **
வீட்டிற்கு வந்த வான்முகிலன் மாடிக்கு சென்று சுபாஷிற்கு அழைத்தான். சுபாஷ் அழைப்பை ஏற்க.. “முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலம் இல்ல நாளைக்கு காலைல பிருந்தாவை கூட்டிட்டு வா.” என தேன்நிலாவின் தாய்தந்தையிடம் பேசியதை சொன்னவன்.. “அவ கோவில்ல சம்மதம் சொல்லிட்டாள்னா அப்போவே கல்யாணம் செய்துக்க போறேன். பிருந்தாகிட்ட இப்படினு சொல்லாதிங்க, அவளோட உயிர் தோழிகிட்ட உளறிடுவா.” என்றான்.
சுபாஷ் சம்மதம் தெரிவிக்க, அடுத்து நரேந்திரனுக்கு அழைத்தான். தன் மாமாவிடத்தும் சுபாஷிடம் சொன்னதையே சொல்ல.. “ப்ரவீனுக்கு ஸ்கூல் லீவ் போட்டுட்டு திடீர்னு அங்க வரோம்னா உங்கக்கா துருவி துருவி கேள்வி கேட்பாளே.” என நரேந்திரன் யோசனையோடு சொல்ல..
“சரி அப்போ நாளைக்கு வரவேணாம், நிலா என்னைக்கு கோவிலுக்கு போறானு தெரிஞ்சதும் சொல்றேன், எதையாவது சொல்லி..” என்றவன் சற்று நிதானித்து.. “உன் தம்பிதான் கோவிலுக்கு வர சொன்னான்னு சொல்லி கூட்டிட்டு வாங்க மாமா.” என இணைப்பை துண்டித்தான்.
அடுத்து தமிழரசனிற்கு அழைத்தான். ட்ரூ காலரில் வான்முகிலன் பெயர் வர, இவர் எதுக்கு கூப்பிடறார் என்ற யோசனை இருந்தபோதும், கல்லூரியில் இருப்பதால் அழைப்பை ஏற்கவில்லை தமிழரசன்.
ஒரு மணி நேரம் கழித்து வான்முகிலனிற்கு அழைத்தான் தமிழரசன். அழைப்பை ஏற்ற வான்முகிலன்.. “நான் வான்முகிலன் பேசுறேன் தமிழ்.. உங்கக்காவை எனக்கு பிடிச்சிருக்கு, உங்கம்மாப்பாகிட்ட கேட்டுருக்கேன், கோவில்ல வச்சு நிலாகிட்ட சம்மதம் கேட்க போறாங்க, உன்னையும் கூப்பிடுவாங்க, நீ இரண்டு நாளைக்கு முடியாது, காலேஜ்ல எக்ஸாம் இருக்குனு சொல்லி வெள்ளிக்கிழமை போலாம்னு சொல்லு.. சரியா?” என்றான் கட்டளையாக.
தயக்கம் என்றாலும்.. “நான் ஏன் அப்படி சொல்லனும்? நிலாக்காக்கு தெரியாம நீங்க எதோ ப்ளான் பண்ற மாதிரி தெரியுது..” என்றான் தமிழரசன்.
“அப்படி ப்ளான் செய்தா எப்போவே என் பொண்டாட்டி ஆகியிருப்பா. எதுக்கு உன் அம்மாப்பாகிட்ட வந்து பொண்ணு கேட்கபோறேன்? வெள்ளிக்கிழமை நாள் நல்லாயிருக்குனுதான் சொல்றேன்..
அப்புறம் முக்கியமான விசயம்.. என்னைக்கானாலும் நான்தான் உன் அக்காவை கட்டிக்கப்போறேன். இந்த ஒரே ஒரு உதவியை செய்தினா, உங்கக்காக்கு எப்படி நீ செல்ல தம்பியோ.. அதே போல எனக்கும் செல்ல மச்சானாகுவ.. இப்படி உறவு வேணாம், டெரராவே இருந்துக்கிறேன்னா உன் விருப்பம்.” என்று செல்ல மிரட்டலோடு இணைப்பை துண்டித்து கீழே வந்தான்.