மதியம் ஒரு மணி என்பதால்.. “வா முகிலா.. சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார் சுப்புலஷ்மி.
“இரண்டு மணிபோல சாப்பிடுறேன், இப்போ கொஞ்சம் டீ போடுங்க.” என்றான்.
சுப்புலஷ்மி டீ போட போக, தமிழரசன் தனக்கு உதவுவானா? இல்லை தேன்நிலாவை கண்காணிக்கலாமா? என்றைக்கு கோவிலுக்கு செல்கிறார்கள் என எப்படி தெரிந்துகொள்வது?
என்னை வரவேணானுட்டாங்க, என மங்களத்தை நினைத்தவன், அவங்க சொன்னதால மட்டுமில்ல, நம்மளை பார்த்தா தேன்நிலாவும் மனசுல இருக்கிறதை கண்டிப்பா சொல்லமாட்டா, அவளுக்கு தெரியாம போறதுதான் சரி.. என்ற யோசனையிலிருக்க சுப்புலஷ்மி டீ யை நீட்டினார்.
டீ யை வாங்கியவனுக்கு அழைப்பு வர, இன்முகத்தோடு மச்சானின் அழைப்பை ஏற்றான். “நான் தமிழ் பேசுறேன், நீங்க சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை காலைலயே கோவிலுக்கு வர மாதிரி பார்த்துக்கிறேன், ஆனா..” என தயக்கத்தோடு நிறுத்தினான்.
“நீ பயப்படுற மாதிரி ஏதும் நடக்காது, அங்க என்ன நடக்குதுனு எனக்கு தெரியனும், அதுக்காகத்தான் சொல்ல சொன்னேன்.மத்தபடி உங்கக்கா விருப்பம் இல்லாம அங்க எதுவும் நடக்காது.” என்றான் இலகுவாக.
வான்முகிலன் மீது நம்பிக்கை வைத்து, “சரி நான் வீட்டுக்கு போய்ட்டு அம்மா என்ன சொல்றாங்கனு தெரிஞ்சிட்டு கால் பண்றேன்.” என இணைப்பை துண்டிக்க.. மகனின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்தார் சுப்புலஷ்மி.
“யார்கிட்ட பேசுன?”
“தேன்நிலாவோட தம்பிகிட்டம்மா.” என்றான் அலட்டாமல்.
“அவன்கிட்டயா?” என பதட்டத்தோடு கேட்க.. “அவன்கிட்ட பேசினா நீ எதுக்கு பதட்டப்படுற.?” என்றான் இலகுவாக.
“உன் சம்மதம் முக்கியம்னுதான் உன்கிட்ட என் விருப்பத்தை சொன்னேன். ஆனா நீதான் அதுப்பத்தி பேசவேயில்லையே.. நான் என்ன செய்ய?” என்றான்.
“நான் பேசலைன்னா நீயா முடிவு செய்வியா?” என்றார் கோபமாக.
“நிலாவை நிறைய இடத்துல பொண்ணு கேட்கறாங்களாம், அவளை விட்டுக்கொடுக்க என்னால முடியாது. நீயும் சம்மதிக்கமாட்ற, அதான் அவளுக்கு வர மாப்பிள்ளையை விரட்ட முடிவு பண்ணிட்டேன். நீ சம்மதிக்கிற வரை இதுதான் தொடரப்போகுது.” என்றான்.
செய்வதறியாது தவித்தாரே அன்றி மகனின் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை சுப்புலஷ்மி.
“சங்கம் வரைக்கும் போகனும், சாப்பாடு அங்கையே பார்த்துக்கிறேன்.” என வெளியேறினான் வான்முகிலன்.
மகன் வெளியேறியதும் ரேவதிக்கு அழைத்து நடந்ததை சொல்ல.. “அந்த நிலா விசயத்துல தலையிட்டாதான் என் உறவையே இழந்துடுவனு சொல்லிட்டானேம்மா.. என்னை என்ன பண்ண சொல்ற?” என அங்கலாய்த்தாள் ரேவதி.
சுப்புலஷ்மி.. “இப்போ என்னடி பண்றது? இவன் அந்த நிலாவை விடற மாதிரி தெரியலை.” என்றார் தவிப்பாக.
“உன் மகன்தானே? என்னை மதிக்காதவ வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க என்னால முடியாது, அப்படியொரு நிலைமை வந்தா நீ என் உறவை இழந்துடுவனு, அவன் என்னை மிரட்டின மாதிரி நீ அவனை மிரட்டும்மா. எத்தனை சினிமா பார்க்குற? எதையாவது சொல்லி அவனுக்கு புரிய வை..” என்றாள் கோபமாக.
இணைப்பை துண்டித்ததும்.. அவ விருப்பம் இல்லாம எதுவும் நடக்காதுனு சொன்னானே, நம்மளை மிரட்டுற மாதிரியே நிலாவை மிரட்டி சம்மதிக்க வைப்பானோ? என பலவாறு யோசனை வர, அந்த நேரம் பிருந்தாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“பிருந்தா..” என தவிப்போடு அழைக்க.. “ம்மா.. நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன், இவருக்கு நம்மூர் பக்கம் யாரையோ பார்க்கனுமாம். என்னை கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டுட்டு, அவர் ஃப்ரண்டை பார்க்க போய்ட்டு வராராம்.” என தகவல் கொடுத்தாள்.
இருக்கும் மனநிலைக்கு இளைய மகளாவது வீட்டிற்கு வருகிறாளே என மகிழ்ந்தபோதும், ஏதோ நடப்பதாய் உள்மனது சொல்ல, சுப்புலஷ்மிக்கு மனம் நிலைகொள்ளவில்லை.
** ** ** ** **
மங்களத்திடமிருந்து அழைப்பு வரவும்.. “ம்.. வீட்டுக்கு வந்துட்டேன்ம்மா, கர்ணாவோட பேசிட்டிருக்கேன்.” என்றாள் தேன்நிலா.
வான்முகிலன் இங்கு வந்து போனது தெரிந்திருக்குமோ என்ற பயம் வர, “ம்மா.” என தடுமாறியவள்.. சற்று நேர மௌனத்திற்கு பிறகு.. வான்முகிலன் வீட்டிற்கு வந்ததையும் பேசியதையும் சொன்னாள்.
“நான் கேட்டாலொழிய எதையும் சொல்லமாட்டியா?” என கோபம் காட்ட.. “ஃபோன்ல சொன்னா பதறிடுவிங்கனு ஞாயித்துக்கிழமை நீங்க வரும்போது சொல்லலாம்னு இருந்தேன்ம்மா.” என சமாளிக்க..
மனைவியிடமிருந்து மொபைலை வாங்கிய லிங்கேசன்.. “வர வெள்ளிக்கிழமை அங்க பக்கத்துல இருக்க சிவன் கோவிலுக்கு போலாம் நிலாம்மா, ஆபீஸ்க்கு லீவ் சொல்லிடு.” என்றார்.
“எதுக்குடா பதறுற?” என தன்மையாய் தேற்றி, “லீவ் தரமாட்டாங்கனா ஒரு மணிநேரம் பர்மிசன் போடு நிலாம்மா.” என்றார்.
ஒரு நாளும் இப்படி பேசியிராத தந்தை எதற்கு பர்மிசன் போட சொல்றார் என யோசித்திருக்க.. “அந்த முகிலன் வீடேறி விருப்பத்தை சொன்ன பின்ன நாம அமைதியா இருக்கிறது நல்லதில்ல நிலாம்மா, இதுக்கு மேல உன்னை அங்க தனியா விட முடியாது..
இங்க கூப்பிட்டாலும் வரமாட்ட, இதுக்கு ஒரே வழி உனக்கு கல்யாணம் செய்யிறதுதான்.. ஒரு வரன் வந்துருக்கு, வீட்டுல வச்சி வேணாம்னு கோவிலுக்கு வர சொல்லிட்டேன், ஒரு கால் மணி நேரத்துல வேலை முடிஞ்ச பின்ன ஆபீஸ்க்கு கிளம்பிக்கலாம் சரியா?”
இந்த வரன் முன்னவே உன்னை கேட்டாங்க, நீ ஆறு மாசம் டைம் கேட்டதால அவங்களுக்கு தகவல் கொடுக்காம இருந்தேன், இனி அப்படி இருக்க முடியாது. முகிலன் உன்கிட்ட பேசினது காலைதான் தெரிஞ்சது, உடனே தரகருக்கு போன் செய்து வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வர சொல்லிட்டேன்.
இப்பவும் சொல்றேன், உனக்கு பிடிச்சிருந்தாதான் கல்யாணம்.. ஆனா கூடிய சீக்கிரம் உன் கல்யாணம் நடந்தாகனும்.” என்றார்.
நிலாவிற்கு கண்ணீர் வெளிவர.. “அப்பா சொல்றது சரிதான் நிலாக்கா.. முகிலன் சார் உங்களை விரும்பறார்னு தெரிஞ்ச பின்ன எதாவது ஒரு முடிவெடுத்துதான் ஆகனும்.
இல்லனா அவரும் ஆசையை வளர்த்துப்பார்.. அப்புறம் எல்லாருக்கும் கஷ்டமாகிடும்.. வெள்ளிக்கிழமை நாங்க அங்க வந்து உன்னை கோவிலுக்கு அழைச்சிட்டு போறோம்.” என்றான் தமிழரசன்.
என்ன சொல்வாள் இதற்கு? தேன்நிலா பேச்சின்றி இருக்க.. அதிலேயே லிங்கேசனிற்கு வான்முகிலன் சொன்னது சரி என்பது புரிய.. “சரிம்மா, சாப்பிட்டு ரெஸ்ட் எடு. வெள்ளிக்கிழமை ஒரு ஏழு மணிபோல வரோம்.” என்று இணைப்பை துண்டித்தார் லிங்கேசன்.
** ** ** ** ** ** **
தமிழரசனிமிருந்து தேன்நிலா கோவிலுக்கு செல்லும் கிழமை, நேரம் போன்ற விபரம் வர.. மகிழ்வோடு மச்சானிற்கு நன்றி சொல்லி, நரேந்திரன், சுபாஷிற்கு தகவல் தெரிவித்து… தனது பாஸ் செந்தாமரைக்கு அழைத்து தன் திருமண விபரம் சொல்லி, “நிலா அம்மாவையும், எங்கம்மா அக்காவையும் சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகிடும், என் கல்யாணம் இப்படித்தான் பண்ணியாகனும், ரிசப்ஷன் பெருசா பண்ணிக்கலாம் பாஸ்..” என்றான்.
“ரகசிய கல்யாணத்துக்கு என்னையே தைரியமா அழைக்கிற அளவுக்கு அந்த பொண்ணு மேல விருப்பம் வச்சிக்கிட்டு இத்தனை நாள் ஏன்டா தள்ளிப்போட்ட?” என உரிமையாய் கடிந்து.. “உன் விருப்பப்படியே யாருக்கும் சொல்லலை, ஆனா நான் தனியா வரமாட்டேன், குடும்பத்தோடதான் வருவேன்.” என சந்தோசத்தோடு இணைப்பை துண்டித்தார்.
** ** ** **
அடுத்த நாள் பிருந்தா வந்திருக்க, இரண்டு நாட்களாக வெவ்வேறு விதமாய் பேசிப்பார்த்தும் சுப்புலஷ்மிக்கு மகளிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை பூஜை முடித்து வந்த சுப்புலஷ்மியிடம், “ம்மா.. கோவிலுக்கு போலாம். பிருந்தா ரெடியாகிட்டிருக்கா, நீ வேற நல்ல சேலையா கட்டு.” என்றான்.
“ஏய் பிருந்தா.. என்ன பட்டு சேலையெல்லாம் கட்டிக்கிட்ட?” என பதட்டத்தோடு கேட்க, “அம்மா அண்ணாவோட பாஸ் வராராம், இந்த மீட்டிங்கை அட்டன் பண்ணினா லைஃப் செட்டில்னு அண்ணா சொன்னுச்சி, பெரியாளுங்கலாம் வராங்களாம், அப்போ நாம நல்லவிதமா போகலைன்னா அண்ணனுக்கு கௌரவக் குறைச்சலாகிடாதா? அதான் பட்டுசாரி கட்டினேன். நீயும் மாத்திக்கோ.” என பூஜையறைக்குள் புகுந்தாள்.
“ஒரு எட்டு மணிக்குள்ள அங்க இருக்கிற மாதிரி போகனும்.” என வான்முகிலன் அவசரப்படுத்த, நிலா வீட்டிற்கு நான் வரமாட்டேன் என கோவிலில் வைத்து பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்திருப்பானோ என.. “எனக்கு உடம்பு முடியல.. நீயும் பிருந்தாவும் போய்ட்டு வாங்க.” என்றார்.
“முக்கியமான ஆளுங்க எல்லாரும் ஃபேமலியோட வராங்க. அதனாலதான் பிருந்தாவையும் வர சொன்னேன், நீ வரலைன்னா என்னை தப்பா நினைப்பாங்கம்மா.” என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அண்ணன் சொன்ன பணியினை செய்து முடித்து பூஜைறையிலிருந்து வெளிவந்தவள்.. “ம்மா.. நீ இன்னும் ரெடியாகலையா?” என ஆர்ப்பரித்து தயாராக சொல்லி உள்ளே அனுப்பி வைத்து, “அண்ணா நீ போய் உன் கல்யாணத்துக்கு எடுத்தோம்ல? அந்த பட்டு வேஷ்டி சர்ட்டை போட்டுட்டு வா.” என்றாள்.
தங்கையின் ஆசை தனக்கும் பிடித்திருக்க, உடை மாற்றி வந்தவன்.. “நான் போய் காரை எடுக்கிறேன், சீக்கிரம் அம்மாவை கூட்டிட்டு வா.” என இன்முகத்தோடு சென்றான்.