கோவிலுக்குள் நுழைந்த சுப்புலஷ்மி.. “ரேவதி.. நீ எப்போ வந்த? முகிலன் வர சொன்னானா? ப்ரவீனை கூட்டிக்கிட்டு எப்படி தனியா வந்த? மாப்பிள்ளையும் வந்துருக்காரா?” என்றார் பதட்டமாக.
“ஆமாம்மா.. முகிலன்தான் கூட்டிட்டு வர சொன்னானாம், சுபாசும் வந்துருக்கார், ப்ரவீனப்பாவும் சுபாசும் அங்க பேசிட்டிருக்காங்க.” என ஓரிடத்தை காண்பிக்க, அங்கே மகிழ்வோடு பேசிக்கொண்டிருந்தனர் மருமகன்கள் இருவரும்.
“ம்மா.. இங்கையே இருங்க, பாஸ் எங்க வந்துட்டிருக்காருனு போன் பண்ணிட்டு வரேன்.” என செந்தாமரைக்கு அழைத்துக் கொண்டே கோவிலை சுற்றி வர.. அங்கே சிவன் சந்நிதிக்கு முன்னே அமர்ந்திருந்தனர் தேன்நிலா குடும்பத்தினர்.
“பாஸ் எங்க வந்துட்டிருக்கிங்க?” என்ன மெல்லிய குரலில் கேட்க, “இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்துடுவேன் முகிலா.” என்கவும் இணைப்பை துண்டித்து தேன்நிலாவை பார்த்தான்.
இவர்கள் அரைமணி நேரத்திற்கு முன்பே வந்திருந்தனர். தமிழ் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்துக்கிறேன், இப்போ யாரையும் நான் பார்க்கமாட்டேன் என கெஞ்சலாய் வாதித்துக் கொண்டிருந்தாள்.
இது வேலைக்காகது என பொறுமையிழந்த லிங்கேசன்.. “முகிலனுக்கு உன்னை பிடிச்சதை போல உனக்கும் அவனை பிடிச்சிருக்குனு சொல்றார். அது உண்மையா?” என்றார்.
“அப்பா..” என நிலா தடுமாற.. “உன் மனசுல அப்படி ஏதும் இல்லைன்னா எதுக்கு இத்தனை தடுமாற்றம்?” என்றார் அர்த்தமாக.
“ஏங்க.. அவ மனசுல அப்படி இருக்காது, முகிலன் தப்பா புரிஞ்சிட்டிருக்கான், நீங்களும் அவளை சங்கடப்படுத்தாதிங்க.” என மங்களம் வாதிட.. “அப்படியா நிலாம்மா? நான் உன்னை கஷ்டப்படுத்துறேனா?” என லிங்கேசன் ஆழ்ந்து பார்க்க, தடுமாறி தலைகுனிந்தாள் தேன்நிலா.
அக்கா உண்மையை சொல்லிவிட்டால் அனைவருக்கும் நல்லதென.. “அக்கா முகிலன் மேலஉள்ள பயத்துலதான் அப்பா இத்தனை முறை கேட்குறார். உன் மனசுல உள்ளதை சொல்லிட்டினா மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.
இது உன் வாழ்க்கை, பிடிக்கலனா பிடிக்கலனு சொல்ற உரிமை உனக்கிருக்கு.” என ஊக்கினான்.
தமிழரசனும் மங்களமும் தன்னை பிடிக்கவில்லை என சொல்லவைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் எனப்புரிந்த வான்முகிலன் தங்கையை அழைத்து, “எல்லாரையும் கூட்டிட்டு இங்க சிவன் சந்நிதிக்கு வா.” என்றான்.
முயன்று தன்னை நிலைப்படுத்தியவள்.. “எனக்கு அவரை கல்யாணம் செய்துக்க பிடிக்கல.” என்றாள்.
“அப்போ இன்னும் இரண்டு மாசத்துல வேற பையனை கல்யாணம் செய்துப்பேனு எனக்கு சத்தியம் செய்.” என மகளின் கைப்பிடித்து தன் உள்ளங்கையோடு இணைத்தார் லிங்கேசன்.
“அப்பா..” என தேன்நிலா கண்ணீர் விட.. “உனக்கு முகிலனை பிடிச்சிருக்கு, ஆனா எங்களை அசிங்கப்படுத்திட்டாங்களேனு உன் விருப்பத்தை மறைக்கிற.. அதோட காலம் வரை கல்யாணமே செய்துக்க வேணாம்னு பெரிய தியாகி மாதிரி முடிவெடுத்திருக்க.. அப்படித்தான?” என முறைக்க.. “அப்பா..” என பதில் சொல்ல வார்த்தையின்றி திணறினாள் தேன்நிலா.
லிங்கேசன்.. “பரவால்லம்மா.. எங்களை நல்லா பெருமை படுத்த யோசிச்சிருக்க.. உங்கம்மாவை கல்யாணம் செய்த பின்ன எத்தனையோ பேர் எப்படிலாம் பேசியிருக்காங்க, அதெல்லாம் நான் பெருசா எடுக்கல..
ஆனா இப்போ நீ ஒரு முடிவெடுத்திருக்க பாரு.. ரொம்ப பெருமையா இருக்கு.. உன் விருப்பப்படி இரு.. ஊர் உலகம் எங்களை நல்லா மெச்சிக்குவாங்க.. உன் விருப்பத்தை நிறைவேத்தின சந்தோசத்துல நாங்களும் ரொம்ப சந்தோசமா இருப்போம்.” என்றார் ஆற்றாமையோடு.
தேன்நிலா செய்வதறியாது கண்ணீர் விட “அங்கே இந்துபிருந்தா வந்தாள்.
“அண்ணா சொன்னாங்க அங்கிள்.” என வான்முகிலனை காண்பிக்க, திருமணம் செய்ய திட்டமிட்டுட்டானோ? என பட்டு வேஷ்டியில் இருந்த வான்முகிலனைப் பார்த்து அதிர்ந்தார் லிங்கேசன்.
தேன்நிலாவை குடும்பத்தோடு கண்ட ரேவதியும் சுப்புலஷ்மியும் அதிர்ந்தனர்.
“வாங்க.. வாங்க.. பாஸ்.” என வான்முகிலனின் உற்சாக குரலுக்கு அவனின் பார்வை போன திசையைப் பாரக்க.. அங்கே செந்தாமரை குடும்பத்தோடு வந்துகொண்டிருந்தார்.
தேன்நிலாவை நெருங்கிய வான்முகிலன் அவளின் அப்பா கையிலிருந்து அவள் கையை விடுவித்து தன் கையோடு பிணைத்து.. “வா.” என அழைக்க, வான்முகிலனின் வரவில் அதிர்வான தேன்நிலா அவனிடமிருந்து கையை உருவ போராட.. “உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன், வா..” என்றான்.
வான்முகிலனின் செயல் பிடிக்காமல்.. “தம்பி… நிலாக்கு நானே சொல்லி புரிய வைக்கிறேன்.” என்றார் லிங்கேசன்.
“நீங்க எத்தனை சொன்னாலும், இவளுக்கு புரிஞ்சாலும், புரியாத மாதிரியேதான் பேசுவா மாமா.. நான் பார்த்துக்கிறேன் விடுங்க.” என இலகுவான குரலில் சொன்னாலும் அதில் அதட்டலும் உரிமையும் இருந்தது.
தேன்நிலாவின் மற்றொரு கையை பிடித்த பிருந்தா.. “வா நிலா..” என கர்பகிரகம் நோக்கி அழைத்துச் சென்றாள் தோழியை.
சுப்புலஷ்மியிடம் நலம் விசாரித்திருந்த செந்தாமரை.. “வாங்க முகிலன்கிட்ட போலாம்.” என்க.. அப்பொழுதும் கூட திருமணம் செய்வான் என எதிர்பார்க்கவில்லை சுப்புலஷ்மி.
செந்தாமரையை வைத்து தன்னை சம்மதிக்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிறானோ என யோசித்தபடி மெல்ல நடந்தவர் மகனை நெருங்க.. அங்கே பூஜை முடித்து வந்த ஐயர் மாலையை நீட்டினார்.
ஒன்றை எடுத்து தேன்நிலாவின் கழுத்தில் அணிவித்தவன், மற்றொன்றை தானே போட்டுக்கொள்ள.. சொன்னது போலவே தாலி கட்டிடுவானோ என நிலா கிரகிக்கும் முன்னரே அவளின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் வான்முகிலன்.
நரேந்திரன் முகம் சந்தோசம் கொள்ள, சுபாஷ் உற்சாக குரல் கொடுக்க.. “அண்ணா.. இதையும் போட்டு விடு. என் நிலாக்கு என்னோட கிஃப்ட்.” என கொலுசு, மெட்டி, கண்ணாடி வளையல், குங்குமம் அடங்கிய சிறு பெட்டியை திறந்தாள் மனம் கொள்ளா சந்தோசத்தோடு.
நீ கூட என்னை புரிஞ்சிக்கலையா என தோழியை இயலாமையோடு பார்த்தாள் தேன்நிலா. தங்கை மீதான மனைவியின் பார்வையில் அவளின் எண்ணம் புரிந்தாலும், பிருந்தாவிடமிருந்து பெட்டியை வாங்கி மண்டியிட்டவன்..
“இதெல்லாம் சரியாத்தான் செய்திருக்க, உன் ஃப்ரண்டை சாரி கட்டிட்டு வர ஏற்பாடு செய்யாம விட்டுட்ட பாரு. பட்டு வேஷ்டியில நான் பர்ஃபக்ட்டா இருக்கேன், இவ சுடிதார்ல இருக்கா..” என தங்கையை அதட்டியவாறு, தேன்நிலாவின் ஒரு கையை தன் தோள்பட்டை மீது வைத்து..
“பிடிச்சிக்கோ.” என அவளின் காலை ஏந்தி தன் தொடை மீது வைத்து மெட்டி அணிவித்து, “கோவிலுக்கு கூட்டிட்டு போறோமே.. அக்காக்கு பூ வாங்கி கொடுக்கலாம்னு தோணாதாடா உனக்கு?” என சிலையாய் நின்றிருந்த தமிழரசனை அதட்ட..
“அதை உன் அக்கா கொண்டு வந்துருக்கா முகிலா.” என்ற செந்தாமரை மனைவியை பார்க்க.. பையிலிருந்த மல்லி சரத்தை எடுத்து பிருந்தாவிடம் கொடுத்து, நகைப்பெட்டியை திறந்து, மோதிரத்தையும் செயினையும் கணவனிடம் கொடுத்தார்.
“பாஸ்.. நகையெல்லாம் எதுக்கு.?” என வான்முகிலன் மறுக்க.. “வாயே பேசக்கூடாது.” என வான்முகிலனுக்கு அணிவித்து, “இதை பாப்பாக்கு போட்டு விடு.” என ஆரத்தை நீட்டினார்.
செந்தாமரையின் அன்பை மறுக்க முடியாமல் வான்முகிலன் சொன்னதை செய்து முடிக்க.. “உன் ஃப்ரண்டுக்கு பூ வச்சு விடு பிருந்தா.” என பிருந்தா கையிலிருந்த பூவை காண்பித்து, மனைவியின் நெற்றியை குங்குமத்தால் அலங்கரித்தான் வான்முகிலன்.
வேண்டாமென மறுத்துவிட்டு இனி இவனோடு எப்படி வாழ்வது என்றும், தற்போதும் இவனின் அம்மாவிற்கு பிடிக்காமல்தான் திருமணத்தை நடத்தியிருக்கிறான் என்பதும் மனதை அழுத்த.. அதோடு ரேவதி பேசிய பேச்சுக்கள் காதில் ரீங்காரமிட, சூழலை தாள முடியாமல் தவித்து நின்றிருந்த மனைவியின் மனம் அறிந்து..
“தமிழ்..” என மச்சானை அழைத்தான். தமிழரசன் அருகே வர.. அடுத்த நொடி அருகில் நின்றிருந்த தமிழரசனின் கையை இறுகப் பற்றினாள் தேன்நிலா.
தன் அக்காவை இவ்வளவு புரிகிறதா இவருக்கு என தமிழரசன் வியக்க.. “உன் அக்கா பிருந்தா மேல கோபமா இருக்கா, இப்போ அவளுக்கு உன் துணைதான் தேவை.. உன் அக்கா பக்கத்துலயே இரு..” என கட்டளையிட்டு,
“ம்மா.. இங்க வா.” என்றழைத்தான் அன்னையை.
செந்தாமரை, மருமகன்கள் அனைவரும் இருக்க, திருமணமும் முடிந்தாயிற்று.. இனி எப்படி மறுப்பார் சுப்புலஷ்மி? தன் மரியாதையை காத்துக்கொள்ள மகனருகே செல்ல, அவரின் பாதம் பணிந்தான் வான்முகிலன்.