“அவளால அதை மறக்க முடியாதுனுதான் இப்படி கல்யாணம்… இதுல பாவ புன்னியம் பார்த்திட்டிருந்தா எனக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது.
அவ சமாதானம் ஆகும்வரை அவ முன்னாடி அவளுக்காக பேசின பிச்சிடுவேன் பிச்சி.” என செல்லமாய் மிரட்டியவாறு மனைவியிடம் வந்தான்.
சிலையாய் அமர்ந்திருந்தவளிடம், “தியானம் செய்தது போதும்.. மணி ஒன்பதரை, பசி வயித்தை கிள்ளுது, கிளம்பலாம்.” என்றான் வான்முகிலன்.
தேன்நிலா தமிழரசனைப் பார்க்க, “தமிழ் பைக்ல வருவான், நீ வா.” என வான்முகிலன் கை நீட்ட.. இவனின் வீட்டிற்கு அழைத்து.. இல்லையில்லை இழுத்துச் சென்றிடுவானோ என தேன்நிலா முகம் தவிப்பிற்குள்ளாக, மனைவியின் எண்ணம் புரிந்து.. “உன் வீட்டுக்குத்தான் போறோம், ஆனா என்னோடதான் வரனும்.” என்றான்.
“நா.. நான்..” என ஆரம்பிக்கும்போதே, “நாங்க கிளம்பறோம் , நிலாவை கூட்டிட்டு வாங்க.” என மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு லிங்கேசன் கிளம்ப..
மாமனாரை மெச்சுதலாய் பார்த்தவன்.. “கூட்டிட்டு வா பிருந்தா.. நான் வெளிலபோய் ஆட்டோ ஏற்பாடு செய்யிறேன்.” என வெளியேறினான்.
“மாமா..நானு..உங்ககூட.” என காரினுள் இருந்தபடி ப்ரவீன் கத்த.. “அவனை இறக்கி விடுங்க மாமா.” என ப்ரவீனை தன்னோடு நிறுத்திக்கொண்டு, சவாரியின்றி வந்த ஆட்டோவை நிறுத்தி, “பிருந்தா.” என குரல் கொடுக்க.. “தோ வரேன்ண்ணா.” என்க.. அருகிலுள்ள தூணை பிடித்து எழுந்தாள் தேன்நிலா.
மாலையோடு இருக்கிறாளே, நடக்க சிரமப்படுவாள் என.. என தோழியின் கைப்பிடிக்க எத்தனிக்க, ஏதும் பேசாமல் முன்னே நடந்தாள் தேன்நிலா.
“உன் கோபம் நியாயமானதுதான் நிலா..என்னோட இரண்டு நாள் கழிச்சி கூட பேசிக்கலாம், உன் கோபத்தை நடையில காட்டாம மெதுவா போ..” என அவளோடு இணைய, ஆட்டோ வரவும்.. “ஏறு பிருந்தா.” என்றவன், பிறகு தேன்நிலாவை ஏற சொல்லி, தானும் அருகமர்ந்து, மருமகனை மடிமீது அமரவைத்து, மொபைலில் அவனிற்கு பிடித்த கார்ட்டூன் வைத்து, அவனோடு பேசியபடி பயணித்தான்.
ஆனாலும் மாலையை இந்தபக்கமும் அந்தபக்கமும் சரி செய்து கொண்டிருந்த மனைவியை கவனித்தவன்.. அவளின் மாலையை பின்னே இழுத்து விட, தேன்நிலா அன்னிச்சையாய் பதற.. “இப்போ அழுந்தாது.” என அக்கறையாய் சொல்லி, மருமகனோடு ஐக்கியமானான்.
தேன்நிலா பிருந்தாவை புறக்கணித்தபோதே அவளோடு பேசாமல் இருக்க மாட்டாள். அண்ணனோடு திருமணம் நிலாவோடான நட்பினை இன்னும் வலுவூட்டியிருக்க, தேன்நிலாவின் பாராமுகம் தாளமுடியாமலும், அவளின் மனநிலையை நினைத்தும், தேன்நிலாவின் கையை ஆதரவாய் பிடித்து, தன் மடிமீது வைத்தாள் இந்துபிருந்தா.
கையை எடுத்தால் உரிமையாய் கேள்வி கேட்பாள், தான் பதில் பேசவேண்டியிருக்குமென கையை உருவாமல் அமைதிகாத்தாள் தேன்நிலா.
அதோடு, முதலில் தன்வீட்டிற்கு சென்றுவிட்டு, சற்று நேரத்தில் அவனின் வீட்டிற்கு அழைப்பானோ என்ற பதட்டம் வேறு இருக்க, சிந்தனையிலேயே பயணித்தாள் தேன்நிலா.
** ** ** **
வான்முகிலன் குடும்பம் காரில் முன்னே சென்று கொண்டிருக்க, இவர்கள் நால்வரும் ஆட்டோவில் பின்தொடர்ந்தனர்.
தேன்நிலாவின் தாய்தந்தையும் தமிழரசனும் இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்துகொண்டிருந்தனர்.
சுப்புலஷ்மியின் முகம் நிலைகொள்ளாமல் இருக்க.. “இனி நீ யோசிச்சி ஒரு பிரியோஜனமும் இல்ல, எல்லாத்தையும்தான் முடிச்சிட்டானே.. கூடவே இருந்துட்டு பெத்த மகன் மனசுல என்ன இருக்குனு கூடவா கண்டுபிடிக்க முடியாது உன்னால?” என காய்ந்தாள் ரேவதி.
“ரேவா… அத்தையை சமாதானம் செய்யிறதை விட்டுட்டு எதுக்கு கடுப்பேத்திட்டிருக்க?” என நரேந்திரன் அதட்ட, “உங்கம்மாகிட்டதான் வாயே திறக்கக்கூடாது, எங்கம்மாகிட்ட பேசினா உங்களுக்கென்ன?” என கணவனிடம் காய்ந்தாள் ரேவதி.
தன் முன்னே மருமகனோடு சண்டை வேணாம் என.. “ப்ச்.. நானே அவன் நம்ம வீட்டுக்கு வருவானா? இல்ல அவ வீட்டுக்கு போவானானு டென்சன்ல இருக்கேன்.. நீ வேற தொணதொணத்திட்டு..” என அதட்டினார் மகளை.
“ஆமாம் ரேவா.. நீயா பார்த்து கல்யாணம் செய்து வச்சா ஆச்சு, நானா செய்துக்கிட்டா அவளோட அங்க போய்டுவேன், பக்கத்துலயிருந்து என்னை பார்த்துக்குவேனு சொன்னான்.” என வான்முகிலன் அன்று சொன்னதை நினைவூட்டினார் சுப்புலஷ்மி.
“அவனே மறந்தாலும் நீ நியாபகப்படுத்திடுவ போல.” என அன்னையை நொடித்து.. “அப்படிலாம் பண்ணமாட்டான். அவன் விருப்பத்துக்கு உன்னை சம்மதிக்க வைக்க அப்படி பேசியிருப்பான், லாரிக்கு போறதுனாலே அத்தனை பத்திரம் சொல்லி கிளம்புவான். உன்னை தனியா விடமாட்டான்.” என்றாள் தன்னைத்தானே தேற்றியவாறு.
பிருந்தாவிற்கு முன்பே சொல்லியிருக்கிறான், அதனால்தான் மெட்டி போன்றவைகளோடு தயாராக வந்திருக்கிறாள். ஆனால் நம்மிடம் மறைத்துவிட்டாள் என தங்கை மீதும் கோபத்தில்தான் இருந்தாள் ரேவதி. ஆனால் சுபாஷ் அருகிலிருப்பதால் அவளை திட்ட முடியாமல் அமர்ந்திருந்தாள்.
சுபாஷிற்கு அழைப்பு வர.. பேசி முடித்தவன்.. வான்முகிலன் சொன்னது போலவே தெரு முனையிலுள்ள விநாயகர் கோவிலுக்கருகே காரை நிறுத்திய சுபாஷ்.. “முகிலன் இங்க சாமி கும்பிட்டு போலாம்னு சொன்னார்.” என இறங்கினான்.
முகிலன் சொன்ன கோவில் பெயருக்குத்தான் விநாயகர் கோவில். ஆனால் விநாயகர் மட்டுமன்றி, நவ கிரகங்களோடு முருகன், துர்கை, மஹாலஷ்மி என அனைத்து தெய்வங்களும் இருக்கும் கோவில்.
மார்கழி மாத பஜனை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் கோவிலில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்க.. “மாலையும் கழுத்துமா வந்து நின்னான்னா எல்லாருக்கும் தெரிஞ்சிடும், ஏன் இப்படி திடீர் கல்யாணம்னு கேட்குறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என புலம்பினார் சுப்புலஷ்மி.
பின்னே தொடர்ந்த தமிழரசனிற்கு இங்கு நிற்கும்படி செய்கை செய்ய, தமிழரசனின் பைக்கோடு லிங்கேசனின் பைக்கும் நின்றது.
“உள்ள போய் சாமி கும்பிட்டு போய்டலாம் மாமா.” என்றவன், “வெளில வா.” என்றான்.
வேண்டாம் என்பதாய் தேன்நிலா மறுக்க.. “உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனது எல்லாருக்கும் தெரிய வேணாவா? இறங்கு.” என்றான் சற்று குரலுயர்த்தி.
தான் எதை நினைத்து புலம்புகிறோமோ அதையேதான் செய்கிறான் என சுப்புலஷ்மி மகனை கோபத்தோடு பார்க்க.. “இனி முகிலனைப் பார்த்து ஒன்னும் லாபமில்லை. அவன் எல்லாத்தையும் தெளிவா பண்றான்.” என முனுமுனுத்தாள் ரேவதி.
“முகிலன் சொல்றதை கேளும்மா..” என லிங்கேசன் மகளுக்கு சொல்ல, மேலும் தாமதித்தால் ஒவ்வொருவராக ஆரம்பிப்பார்கள் என வேறு வழியின்றி இறங்கினாள் தேன்நிலா.
ப்ரவீனை சுபாஷிடம் கொடுத்து தேன்நிலாவின் கையைப் பிடித்தவன், யாரையும் அழைக்காமல் நடந்தான் கோவிலுக்குள்.
“ம்மா.. நாம போய் ஆரத்தி ரெடி பண்ணலாமா?” என பிருந்தா கேட்க, அப்படி செய்தாலாவது நிலாவை அழைத்துக்கொண்டு தன் வீடு வந்திடுவான். இல்லையேல் அவளின் வீட்டிற்கு சென்று நாம் அழைத்து வர வேண்டும் என.. சரி என்பதாய் சுப்புலஷ்மி தலையசைக்க.. “பிருந்தா..” என உள்ளிருந்து குரல் கொடுத்தான் வான்முகிலன்.
பிருந்தா உள்ளே சென்றதும், கோவிலுள் செல்லவில்லை என்றால் திட்டுவானோ? என சுப்புலஷ்மி யோசனையிலிருக்க, “உள்ள போலாங்கத்தை.” என்றான் சுபாஷ்.
அனைவரும் உள்ளே செல்ல.. பின்னோடே லிங்கேசன் மங்களமும் சென்றனர்.
இந்த பெண்கள் மனதில் நினைப்பதை கேட்டுவிட்டால்தான் பல பிரச்சனைகளை தவிர்க்கலாமே.. ஆனால் செய்திடுவார்களா என்ன? வழக்கம்போல்தான் இங்கும்.. வான்முகிலனை நேரடியாக கேட்போர் யாருமில்லை என்றாலும், அங்கு பஜனையில் கலந்திருந்த தெரு வாசிகள் அனைவரின் கவனமும் பஜனையை விடுத்து தன்மீது இருப்பதை உணர்ந்தவன்..
ஹப்பா.. வந்த வேலை முடிந்ததென.. இரண்டு நிமிடம் கடவுளை வணங்கி.. “போலாம் பிருந்தா.” என்றான்.
“அண்ணா.. இன்னும் யாரும் சாமி கும்பிடல.” என பிருந்தா சொல்ல.. மணி பத்தாகுது.. இன்னும் அரைமணி நேரத்துல ராகுகாலம் வந்திடும்.
எனக்குத்தான கல்யாணம்? நான் கும்பிட்டுட்டேன், உங்களுக்கு வேணும்னா நாளைக்கு வந்து நல்லா கும்பிட்டுக்கோங்க.. இப்போ கிளம்பலாம்.” என தேன்நிலாவோடு வெளியே வந்தான்.
இம்முறை வான்முகிலன் பயணித்த ஆட்டோ முன்னே செல்ல, மற்றவர் பின் தொடர்ந்தனர். தேன்நிலா வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தச் சொன்னவன், மனைவியோடு கேட்டினுள் நுழையப்போக, “அண்ணா இரு, அங்கிள் ஆன்ட்டி வந்திடட்டும். ஆரத்தி எடுக்கனும்.” என்றாள் பிருந்தா.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீ எதாவது ஆரம்பிக்காத.” என அதட்ட, லிங்கேசன் வந்திருந்தார். மனைவியிடம் ஆரத்தி எடுக்க சொல்லவேண்டி அவசரமாய் கதவை திறக்க.. இவன் பாட்டிற்கு தேன்நிலாவோடு உள்ளே போனான்.
“பரவால்ல மாமா.. ஆரத்தி எடுக்காததால நடந்த கல்யாணம் இல்லனு ஆகிடாது.” என இலகுவாகவே சொல்லி,
தேன்நிலாவிடம்.. “நீ இப்படி உம்முனு இருக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கல. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சி. இனி எவனும் உன்னை பொண்ணு பார்க்க வரமாட்டான், நீ ஃப்ரீயா இருக்கலாம்.” என கனிவாகவே தேற்றி.. “போலாம் பிருந்தா.” என வெளியேற எத்தணிக்க.. “மாமா..” என தண்ணீரை நீட்டினான் தமிழரசன்.
தமிழரசனின் மாமா என்ற அழைப்பில் நின்றவன், தண்ணீரை வாங்கிக் கொண்டு, “உன் அக்கா சம்மதமில்லாம கல்யாணம் நடந்துச்சிதான், ஆனா அவ விருப்பமில்லாம நடக்கல..” என மங்களத்திற்கும் சேர்த்தே சொல்லி தண்ணீரைப் பருகி கிளம்பப்பார்க்க..
தேன்நிலா வீட்டில் தனியாக பூஜையறை இல்லை, ஹாலில் ஒரு செல்ஃபில் சுவாமிப் படங்கள் இருந்தது. அங்கே சென்ற மங்களம்.. “இரண்டு பேரும் வந்து வணங்கிக்கோங்க.” என்றார் வான்முகிலனைப் பார்த்து.
வான்முகிலன் தேன்நிலாவைப் பார்க்க.. அவளருகே சென்ற பிருந்தா.. “நிலா வா.” என அவளின் கைப்பிடித்து வந்தாள்.
விளக்கிற்கு எண்ணை ஊற்றி, தீப்பெட்டியை மகளிடம் நீட்டிய மங்களம்.. “இரண்டு பேரும் சாமி கும்பிட்டு, மாலையை இங்கையே கழட்டி வச்சிட்டு வாங்க..” என்று, “பார்த்துக்கோ பிருந்தா.. நான் போய் பால் பழம் எடுத்துட்டு வரேன்.” என கிச்சன் சென்றார்.
“நிலா ப்ளீஸ்.. சீக்கிரம் விளக்கேத்து, இன்னும் பத்து நிமிஷத்துல ராகுகாலம் ஆரம்பிச்சிடும், அதோட எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.” என்றாள் சோர்வாக.
பிருந்தா கர்பமாய் இருப்பது தற்போதுதான் நினைவு வர, சட்டென பார்த்தாள் தோழியை. நிலாவின் பார்வையில் அதீத அக்கறை இருக்க.. அதில் மனம் குளிர்ந்த பிருந்தா.. “ம்.. ரொம்ப ரெஸ்ட்லசா இருக்கு. சீக்கிரம்.” என்றாள் பாவமாக.
தேன்நிலா விளக்கேற்ற, இரு நொடியிலேயே அங்கிருந்த திருநீரை எடுத்து வைத்துக்கொண்டவன், மாலையையும் கழற்றி வைத்து, “வா பிருந்தா.” என தங்கையை அழைத்து வர, மங்களம் பால் பழத்தோடு தயாராய் நின்றார்.
வாங்கி பருகியவன்.. “பிருந்தாக்கு முடியல, வீட்டுக்கு போய் சாப்பிட வைக்கனும்.” என வெளியேற எத்தனிக்க.. மகள் மீதான பிருந்தாவின் பாசம் அறிந்த மங்களம்.. “எங்க வீட்டுல சாப்பிடமாட்டியா பிருந்தா?” என்றார் அக்கறையாக.
ஹப்பா.. ஆன்ட்டி பேசிட்டாங்க என நிம்மதியானவள்.. “இல்ல ஆன்ட்டி, டேப்லட் போட்டுட்டுதான் சாப்பிடுவேன், இல்லனா சாப்பிட்டதும் வாமிட் வந்துடும்.” என்றவள் வான்முகிலனிடம்.. “அண்ணா நான் போய்க்கிறேன், நீ இங்க இரு.” என்ற நேரம் சுபாஷ் வந்தான்.
“வா சுபாஷ், நானே பிருந்தாவை கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்.” என வான்முகிலன் சொல்ல.. “பிருந்தா இன்னும் எதுவும சாப்பிடல, அதான் வந்தேன்.” என்றவன்.. “அம்மா கொஞ்சம் தண்ணி கொடுங்க.” என்றான்.
மங்களம் தண்ணீர் கொடுக்க, “மாத்திரை சாப்பிடு பிருந்தா.” என நீட்டினான். பிருந்தா மாத்திரையை முழுங்கவும், “கொஞ்ச நேரம் படு, அத்தை கஞ்சி செஞ்சிட்டிருக்காங்க, நான் எடுத்துட்டு வரேன்.” என வான்முகிலனிடம் கண்ணசைவில் விடைபெற்று கிளம்பவும்.. “அ.. அ.. ண்ணா..” என்றாள் தேன்நிலா.