தேன்நிலாவிற்கு பிருந்தா மீது கோபம் இருந்தபோதும், கர்பமாய் இருக்கும் நேரத்தில் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கிறாளே, மயக்கம் ஏது வந்திடுமோ என்ற பதைப்பும் இருக்கத்தான் செய்தது.
அதோடு பிருந்தாவை அழைத்துக்கொண்டு சுபாஷ் சென்றுவிட்டால் வான்முகிலனுக்கு தன்னோடு தனிமை கிடைக்கும், கண்டிப்பாக அவனோடான பேச்சு சண்டையில்தான் முடியும்..
அதனால் தந்தையும் தமிழும் வேதனையடைவார், அனைவரும் சென்ற பின்னே வான்முகிலனோடு தனியே சண்டை போட்டுக்கலாம் என்ற எண்ணமும் இருக்க.. வான்முகிலன் கிளம்பும்வரை சுபாஷையும் இங்கிருக்க செய்ய அவனோடு பேசினாள்.
ஆனால் பிருந்தாவிற்கு தோழியை தெரியாதா என்ன? அண்ணன் நிலாவோடு சமாதானம் ஆகாமல் தன்னோடு மலையிறங்கமாட்டாள் என்றும், லிங்கேசன் இங்கிருக்கும்போதே இருவரையும் சமாதானம் செய்வது சற்று எளிது, தாய்தந்தையர் மனம் வேதனையடைக் கூடாதென்பதற்காகவே சங்கடங்களை சகிப்பாள்..
அதோடு நாம் சென்றால்தான் அண்ணனிற்கும் நிலாவிற்கும் தனிமை கிடைக்கும் என்றும்.. “அண்ணா.. நீ நிலாவை சமாதானம் செய்துட்டு வா. அம்மா கஞ்சி செய்திருப்பாங்க, குடிச்சிட்டு, டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு கொஞ்சநேரம் படுக்கறேன், அப்போதான் நல்லாயிருக்கும்.” என்றாள்.
வான்முகிலன் சரியென்பதாய் தலையசைக்க.. எங்கே சென்றிடுவார்களோ என சுபாஷைப் பார்த்து “அண்ணா..” என பரிதவித்தாள் தேன்நிலா.
“அவங்க இருப்பாங்க நிலா, நீ பதறாத.” என்ற மங்களம்.. “இதைக் குடி பிருந்தா. வாமிட் வராது.” என கஞ்சியை கொடுத்தார்.
“ஆன்ட்டி வாமிட் வந்திடும்.” என பிருந்தா மறுக்க.. “இந்த கஞ்சி வராது, அப்படியே வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். எனக்கு உங்களோட பேசனும்.” என்றார் வான்முகிலனைப் பார்த்தவாறு.
பேச வேண்டும் என்றதும் மறுக்காமல் பிருந்தா கஞ்சியை வாங்கி பருக, சுபாஷ் வான்முகிலனோடு அமர்ந்தான்.
மங்களம் ஏதேனும் கேட்டு சங்கடம் பெரிதாகிடக்கூடாதென. “நம்ம பொண்ணுக்கும் விருப்பம் இருந்திருக்கு, கல்யாணமும் முடிஞ்சிடுச்சி, இனி நடந்ததை பேசக்கூடாது மங்களம்.” என கண்டித்தார் லிங்கேசன்.
“நம்ம பொண்ணுக்கு விருப்பம்னு தெரிஞ்சதாலதான் முகிலனும் தாலி கட்டினார், நானும் அமைதியா இருந்தேன், நடந்து முடிஞ்சதைப் பத்தி பேசல, கல்யாணத்துக்கு முன்ன நடந்த பிரச்சனைக்கு கொஞ்சம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு.
“எல்லாரும் பசியில இருக்காங்க மங்களம், எதாவது செய். அப்புறம் பேசலாம்.” என மீண்டும் மறுக்க..
“இல்லைங்க இத்தனை பேருக்கு டிபன் செய்யிற அளவுக்கு மாவு இல்லை, நிலாக்கு தேவையான அளவுக்குத்தான் காய்கறியும் இருக்கு, தமிழ்கிட்ட டிபன் வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன். அவன் வரதுக்குள்ள பேசிடறேன்.”
ஒரு ஆம்பிளை இரண்டாவது கல்யாணம் செய்தா அவனோட முதல் தாரத்து குழந்தைகளை கொடுமை செய்யிறாளானு பார்ப்பாங்க. முதல்தாரத்து குழந்தைகளை நல்ல படியா பார்த்துக்கிட்டாலும் கூட அக்கம்பக்கம் இருக்கவங்களும் சொந்தபந்தங்களும் முதல் தாரத்து குழந்தைகளை தாயத்த பிள்ளைனு பாவமா பார்ப்பாங்க.
ஆனா இரண்டாந்தாரமா ஒரு பொண்ணு கல்யாணம் செய்துக்கிட்டு ஒரு பொண்ணு, அதுவும் கூட்டுக்குடும்பத்துல வாழ்றது சாதாரண விசயமில்லை தம்பி.
குழந்தைகளை பார்த்துக்கிறதுக்காகத்தான் இரண்டாங்கல்யாணம்னு ஆம்பிளைங்க சுலபமா காரணத்தை சொல்லிடுவாங்க,
ஆனா என்னை என்ன சொன்னாங்க தெரியுங்களா? புருசன் செத்து ஒருவருசம்தான் ஆச்சு, அதுக்குள்ள ஆம்பிளை கேக்குதுனு சொன்னாங்க, என்னை சொல்றதை கூட இந்த நல்ல மனுசனுக்காக சகிச்சிக்கிட்டேன்.” என கணவனை பார்த்தவர்..
“தமிழ் அப்பாவை தவிர, மற்ற எல்லாருமே என் பொண்ணை எதோ தவறான உறவுல பிறந்த குழந்தை மாதிரிதான் பார்ப்பாங்க. அதைத்தான் என்னால தாங்கவே முடியாது,
என் புருசன் இல்லாத நேரம், என்மாமனாரும் மாமியாரும் தினம் தினம் ஒரு பிரச்சனையை பண்ணுவாங்க, ஒரு நாள் இவங்களும் காலைலயே சவாரிக்கு போய்ட்டாங்க, அன்னைக்குனு பார்த்து எட்டு மணிக்கே நிலா பசிக்குதுனு சொன்னா,
தமிழ் அப்போ கை குழந்தை, அவனுக்கு ஊட்டிட்டிருந்ததால பத்து நிமிஷம்டானு சொன்னேன். நிலா முகம் சுருக்கவும் தமிழை கீழ படுக்க வச்சிட்டு நிலாக்கு சாப்பாடு போட்டுட்டு வரதுக்குள்ள என்ன சொன்னாங்களோ தெரியல, எனக்கு பசிக்கலம்மானுட்டா.
என்ன சொல்லியும் நிலா சமாதானமே ஆகல, என்ன சொன்னாங்கனு கேட்டாலும் சொல்லல, இவர் மதிய சாப்பாட்டுக்கு வந்தார். இவர்கிட்டயும் எனக்கு பசிக்கலப்பானு சொன்னாலே தவிர என் மாமியார் என்ன சொன்னாங்கனு சொல்லவேயில்ல.
சின்ன பிள்ளையை அப்படி என்னதான் திட்டுனிங்கனு அவங்கம்மாவை கேட்க, அவங்க பதிலுக்கு கத்த.. நீங்களலாம் மனுச ஜென்மமானு இவர் அவங்கப்பாம்மாவை திட்டவும், கண்டவன் பெத்த பிள்ளைக்காக பெத்தவங்களை திட்டுறியாடானு பிரச்சனை பெருசாகிடுச்சி.
நம்மளாலதான பிரச்சனைனு நினைச்சி ஃபினாயிலை எடுத்து குடிச்சிட்டா, ஒரு பாட்டில் ஃபினாயில்.. அதுவே ஆசிட் பாட்டிலா இருந்திருந்தா என்னாகியிருக்கும்னு ரொம்ப பயந்துட்டோம்.”
“ஆமாம் பிருந்தா, இந்த ஒரு விசயம் மட்டும் எங்க குடும்பம் தவிர வேற யாருக்கும் தெரியாது, சின்ன பிள்ளை இப்படி பண்ணியிருக்கான்னா என்ன நடந்திருக்கும்னு வாய்க்கு வந்தமாதிரி பேசிடுவாங்க, என் பொண்ணை பெத்த பொண்ணுக்கும் மேலா நினைக்கிற அவங்கப்பாக்கு அது அசிங்கமாகிடும்னு என் அப்பாம்மாகிட்ட நான்தான் யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன்.
அதுக்கப்புறம், இப்படிலாம் பண்ணக்கூடாதுனு எடுத்து சொல்லுங்கப்பானு எங்கப்பாம்மாகிட்ட விட்டேன். இங்க வந்து பத்து நாள் இருந்தவ, அதுக்கப்புறம் அங்க வரவேமாட்டனுட்டா.
இவ்வளோ அடம் பிடிக்கிற அளவுக்கு அப்படி என்னதான் என் மாமியார் சொன்னாங்கனு எவ்வளோ கேட்டும் இப்போ வரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்ல.
இப்போ இரண்டு வருசம் முன்ன, அப்போ எதோ புத்திகெட்டுப் போய் பேசிட்டேனு என் மாமியாரே சொல்லவும்தான் என்ன சொன்னாங்கனு எனக்கே தெரிஞ்சது.” என கண்கலங்கியவர்..
“சின்ன பிள்ளைனு கூட பார்க்காம பேசக்கூடாத விசயத்தை பேசியிருக்காங்க, அப்படி பேசினது எனக்கும் அன்னைக்கே தெரிஞ்சிருந்தா என் மகனுக்கு அம்மா இல்லாம போனாலும் போயிருக்கும்..” என கண்கலங்கியவர்..
“அதுக்கப்புறம் நானே நிலாவை அங்க கூப்பிடறதில்ல, நிலா ஃபினாயில் குடிச்சதை தவிர மத்த எல்லாமும் உங்கம்மாக்கு நல்லாவே தெரியும், தெரிஞ்சும் ரேவதியை பேச விட்டுருக்காங்க. ” என வருந்தி..
“என் மகளுக்கு உங்களை பிடிச்சிருந்தாலும் உங்களோட கல்யாணம் வேணாம்னுதான் நானும் நினைச்சேன், ஏன்னா, கல்யாணத்துக்கப்புறம் ரேவதி இதுமாதிரி பேசினாள்னா என் பொண்ணை இழந்திடுவனோனு எனக்கு பயம். அப்போ அறியாத வயசு, ஃபினாயில் குடிச்சா, பிழைக்க வச்சிட்டோம், இப்போ..” என கண்ணீர் விட..
வான்முகிலன்.. “கவலைப்படாதிங்க. ரேவாக்கா இனி அப்படி பேசாது.” என்றான் ஆதரவாக.
“சின்ன வயசுலயிருந்து உன்னை பார்க்குறேன், உன் குணம், உழைப்பு, நேர்மை, ஒழுக்கம்னு உன்கிட்ட எல்லாமும் எனக்கு பிடிக்கும். உன்னை மாதிரி ஒரு மருமகன் கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கனும்.
என் அப்பாம்மா இறந்தபின்னயும் உங்கம்மாவும், நீயும் இருக்கும் தைரியத்துலதான் நிலாவை இங்க விட்டுட்டு நாங்க பயமில்லாம இருந்தோம்.
ஆனா உங்கம்மா பொண்ணு கேட்டு பிரச்சனை ஆனதுலயிருந்து என் பொண்ணை எங்கையோ தனியா விட்டுட்ட மாதிரி இருந்தது. அதனாலதான் அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைச்சேன்,
இப்போ கல்யாணம் நடந்தாலும், நீ என் பொண்ணை நல்லா பார்த்துப்பனு நம்பிக்கை இருக்குன்னாலும், என் பொண்ணு உங்க வீட்டுல நிம்மதியா வாழுவாளானு பயமா இருக்கு..
அது என்ன பழக்கமோ.? மனசுல ஆழமா ஒன்னு பதிஞ்சிடுச்சினா இடியே விழுந்தாலும் ஒருத்தர்கிட்டயும் சொல்லி தொலைக்கமாட்டா, மனசுக்குள்ளயே வச்சி மருகுவா.” என மகளை ஆற்றாமையோடு நொடிக்க..
நிலாவிற்குள் இத்தனை அழுத்தமா என பிருந்தா சுபாசும் கூட சற்றே பயந்தனர்.
உணவோடு உள்ளே வந்த தமிழரசன்.. “அதைப் பத்தில்லாம் இனி நீ கவலைப்படாதம்மா, நிலாக்கா ஒன்னொன்னும் சொல்லனும்னு அவசியமேயில்ல, மனசுல இருக்கிறதை அக்கா பார்வையை வச்சும், முக பாவனையை வச்சுமே மாமா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவார். மாமாகிட்ட இருந்து இனி அக்கா தப்பிக்கவே முடியாது,
அக்காக்கு மாமாமேல உள்ள விருப்பத்தை கூட மாமா அப்படித்தான் கண்டுபிடிச்சார். ஆமாதானே மாமா?” என்றான் இன்முகத்தோடு.
“டேய்..” என சிறு வெக்கத்தோடு சிரித்த வான்முகிலன்.. “அவளை பத்தின கவலையை விடுங்க. என்னை மீறி நிலாவை யாரும் ஒன்னும் சொல்லிட மாட்டாங்க.” என்றான் உறுதியாக.
லிங்கேசன் மறுப்பாரா? மகனையும் தன்னோடு அமர்த்திக்கொண்டார். பின்னே அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. “வீட்டுக்கு போய்ட்டு வரேன் மாமா.” என வான்முகிலன் எழ..
மங்களம்.. “முகிலன்.” என்றார் தவிப்போடு.
“இரண்டு நாள் முன்ன சொன்னதேதான் இன்னைக்கும் சொல்றேன், யாரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் எண்ணம் எனக்கில்ல, மன்னிப்பு கேட்டாலும் நடந்தது இல்லைனு ஆகிடாது, ஆனா இனி அவ மனசு கஷ்டப்படற மாதிரி எதுவும் நடக்காத மாதிரி பார்த்துப்பேன்.
“அங்க வீட்டுல வயசானவங்க இருக்காங்க, உங்களுக்கு அவங்களை பார்க்கனும். வீட்டுக்கு போறதுனா போங்க. இன்னைக்கு தமிழ் லீவ் போட்டது போட்டதுதான்.. அடுத்த இரண்டு நாள் சனி, ஞாயிறு காலேஜ் லீவ்தான? தமிழ் வேணும்னா இரண்டு நாள் அவன் அக்காவோட இருக்கட்டும்.” என்றெழுந்தவன்..
தேன்நிலாவிடம் சென்று.. “நான் ஈவ்னிங் வரேன்.” என வெளியேறினான்.
“சாப்பிடற அளவுக்கு ஆகிடுச்சினா, உன் ஃப்ரண்டையும் அழைச்சிட்டு வந்திடவேண்டியதுதானே?” என மகளிடம் முனுமுனுத்தார் சுப்புலஷ்மி.
“அண்ணாதான்ம்மா நிலா அங்கையே இருக்கட்டும்னுட்டார்.” என பிருந்தா சொல்ல, அப்போ மங்களம் அழைச்சிட்டு போக சொல்லியும் இவன் விட்டுட்டு வந்துட்டானா?என சுப்புலஷ்மி மகனை முறைக்க..
சுப்புலஷ்மியின் எண்ணம் புரிந்தவன்.. “சொல்றதை தெளிவா சொல்லமாட்டியா பிருந்தா.” என தங்கையை அதட்டி, அன்னையிடம்.. “அத்தை நிலாவை கூட்டிட்டும் போக சொல்லல, விட்டுட்டும் போக சொல்லல.. நான்தான் நிலா அங்கையே இருக்கட்டும்ன்னேன்.” என்றான் வான்முகிலன்.
“ஏன்டா? அங்க கோவில்ல வச்சி எத்தனை பேர் எப்படி பார்த்தாங்க தெரியுமா? உன் மகனுக்கு கல்யாணம் ஆகிடுச்சானு இதுவரைக்கும் அம்பது போனுக்கு மேல பேசிட்டேன்.
எல்லார்கிட்டயும் கல்யாணம் ஆகிடுச்சினு சொல்லிட்டேன், இப்போ அவ அங்க இருந்து, நீ இங்க இருந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்றார் கோபத்தோடு.
“உங்களுக்கு விருப்பமில்லாம நான் செய்துகிட்ட கல்யாணம்னு நினைப்பாங்க, அவ்வளோதான். வேற என்ன நினைச்சிடுவாங்க?” என்றான் தானும் கோபத்தோடு.
“டேய்.. நீ செய்தது திடீர் கல்யாணம், ஒத்த பையனுக்கு இப்படி கல்யாணம் நடந்துடுச்சேனு நியாயமா பார்த்தா நான்தான் உன்மேல கோபப்படனும். உன் விருப்பப்படி எல்லாத்தையும் நடத்தினதும் இல்லாம கோபம் வேற படுறியா?” என்றார் கோபமாகவே.
“என் விருப்பப்படி கல்யாணம்ன்றதாலதான் அவளை அங்கையே விட்டுட்டு வந்துருக்கேன். என் விருப்பம் சொன்னப்பவே நீ சம்மதிச்சிருந்தா இப்படி கல்யாணம் நடந்திருக்குமா? இப்படி கல்யாணத்துக்கு காரணமே நீங்கதான்.” என ரேவதியையும் பார்த்தவன்.. “அவளை அவமதிச்ச உங்களுக்கே இவ்வளோ கோபம் இருக்குதுனா, அவமானப்பட்ட அவளுக்கு எப்படியிருக்கும்?
உங்களுக்கு மட்டுமில்ல, இந்த கல்யாணத்துல அவளுக்கும் விருப்பமில்ல, அப்போ என்ன சொல்லி அழைச்சிட்டு வருவேன்?” என்றான்.
மகனின் பேச்சில் சுப்புலஷ்மி ஸ்தம்பித்திட.. “என் விருப்பத்துல உங்களுக்கு எப்போ விருப்பம் வருதோ அப்போ சொல்லுங்க, நாம போய் அழைச்சிட்டு வரலாம். அதுவரை அவ அங்கதான் இருப்பா.” என முடிவாக சொல்லி தனதறைக்குள் புகுந்தான்.
அறைக்குள் வந்த வான்முகிலனிற்கு தேன்நிலாவைப் பற்றி மங்களம் சொன்னதே வலம் வர, இப்படி பாசம் காட்டும் வளர்ப்பு அப்பா கிடைத்தது அவளின் வரம் என தான் நினைத்திருக்க, லிங்கேசனின் குடும்பமே இவளிற்கு சாபமாகவும் இருந்திருப்பதை நினைத்தவன்.. “அம்மாவின் திருமணத்தால் சிறு வயதிலிருந்து எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாள் என மனைவியை வருந்தினான்.
மாலை ஆறு மணிபோல் ப்ரவீன் வான்முகிலனை விளையாட அழைக்க, “மேல போய் விளையாடலாமா ப்ரவீன்.” என்றான் இன்முகமாக.
“ம்.. கிளி எடுத்துட்டு போலாம்.” என சிறுவன் சொல்ல, “சரி வா.” என மாடிக்கு சென்றான்.
தேன்நிலா வீட்டினில் அனைவரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஓ.. இவர்கள் போகலயா? என நினைத்தவன் தேன்நிலாவிற்கு அழைத்தான். தேன்நிலா அழைப்பை ஏற்கவில்லை என்றதும் தமிழரசனிற்கு அழைத்து நிலாவிடம் கொடுக்க சொல்ல, வான்முகிலன் சொன்னதை தமிழ் செய்ய.. “போன் செய்தா எடுக்கமாட்டியா? மேல மாடிக்கு வா.” என்றான் சற்றே உயர்ந்த குரலில்.