என்ன?? என அதிர்வானவளுக்கு வார்த்தை வெளிவராமல் போக.. “என்ன பதிலைக் காணோம்?” என்றான் வான்முகிலன்.
மீண்டும் அமைதிதான் தேன்நிலாவிடம். “நிலாச்சோறுதான கேட்டேன்? என்னவோ நிலாவையே கேட்ட மாதிரி ஃப்ரீசாகிட்ட?” என வான்முகிலன் மந்தகாசமாய் சிரிக்க..
இரண்டு குடும்பத்துக்குள்ளயும் எந்த பகையுமில்லாம கல்யாணம் செய்துக்கிட்ட மாதிரி இப்படி பேசறான்? என தேன்நிலா நினைத்திருக்க.. வான்முகிலனிற்கு வேறொரு அழைப்பு வரவும்.. “ஒரு முக்கியமான கால் வருது, நான் அப்புறம் பேசறேன்.” என தேன்நிலாவின் இணைப்பை துண்டித்து, லாரி டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
தமிழரசனிற்கு அழைப்பு வரவும்.. எழுந்து வாசற்படிக்கு வந்தவள்… “தமிழ்.. உனக்கு போன்.” என நீட்டினாள்.
“ப்ச்.. எனக்கு ஃபோன் வரவும் மாமா ஃபோனை கட் பண்ணிட்டியா?” என வாங்கினான்.
தேன்நிலா ஆமாம் என்பதாய் தலையசைக்க.. திருமண விசயமாய் வான்முகிலன் வீட்டினில் என்ன நடந்திருக்கும்? என அறிய ஆவல் கொண்டு.. “இப்போ வராராமா?” என்றார்.
“த்.. தெரியலப்பா..” என்றாள் திணறலாக.
“சரி போய் முகம் கழுவிட்டு டிரஸ் மாத்து.” என மங்களம் சொல்ல, ஈவ்னிங் வரேன்னானே? வந்திடுவானோ என்ற பதட்டத்தோடு உள்ளே சென்றாள் தேன்நிலா.
“சரிங்க, நான் போய் சமைக்கிறேன், முகிலன் தம்பி வந்தா சாப்பாடு கொடுக்கனும், இப்போ செய்தாதான் அத்தை மாமாக்கு கொடுத்தனுப்பவும் சரியா இருக்கும்.” என கிச்சன் சென்றார்.
*** *** *** *** ***
“மாமா இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாம்.” என்க.. “இல்லடா, மாமக்கு வெளில போகனும். நாம நாளைக்கு விளையாடலாம்.” என ப்ரவீனை சமாதானம் செய்தபடி வீட்டிற்குள் வந்தான் வான்முகிலன்.
நரேந்திரன்.. “முகிலன், ப்ரவீனுக்கு அடுத்த வாரம் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது, இன்னைக்கு லீவ்க்கே அவங்க மிஸ் கால் பண்ணிட்டாங்க, நாங்க கிளம்பறோம், எக்ஸாம் முடிச்சதும் வரோம்.” என்றான்.
“ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்தான் படிக்கிறான், ஒரு நாள் லீவ் போட்டதுக்கு கால் பண்ணிட்டாங்களா?” என வியந்து, “சரிங்க மாமா, கிளம்புங்க.” என்றான்.
“ஏங்க, கல்யாணம் முடிஞ்சி அவ அங்க இருக்கா, இப்படியே விட்டுட்டு நான் எப்படி வருவேன்? நீங்க போங்க, நான் ஒருவாரம் கழிச்சி வரேன்.” என்றாள் ரேவதி.
“ம்ஹும்.. அம்மாவும் வரனும்.” என்றான் ப்ரவீன்.
“டேய்.. உனக்கு ஸ்கூல் போகனும்ல?அப்பாவோட கிளம்பு.” என அதட்டினாள் மகனை.
“அம்மா எங்கயிருக்காங்களோ அங்கதான் இருக்கனும்னு மாமா சொல்லியிருக்காங்க, நான் ஸ்கூல் போகனும்னா நீயும் வரனும், இல்ல நானும் இங்கதான் இருப்பேன்.” என்றான் பிடிவாதமாக.
“எங்களுக்குள்ள இருக்க பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன், உன் குடும்பத்தையும், குழந்தையையும் பாரு ரேவாக்கா.” என்றான் தன்மையாகவே.
“என்னடா உன் குடும்பம், என் குடும்பம்னு பிரிச்சி பேசிட்டு?நீ இப்படி இருக்கும்போது என் வீட்டுக்கு போனாலும் என்னால எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்?” என்றாள் ஆற்றாமையாக.
“சரி இங்கயிருந்து என்ன பண்ண போற?” என்றான்.
“அது..” என்றவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. “சொல்லுக்கா.. என ஊக்க.. “உங்களை எப்படியாவது சேர்த்து வைப்பேன்.” என்றாள்.
“அதான் எப்படின்றேன்?”
“நிலா நமக்கு எதிரியில்ல, இனி அவ உன் மருமகனு அம்மாக்கு எடுத்து சொல்லி, அம்மாக்கு நிலாமேல உள்ள கோபத்தை குறைப்பேன்.”
“நீ எடுத்து சொல்லி அம்மா அவளை கூப்பிட வேணாம், அம்மாக்கு எப்போ தோணுதோ அப்போ கூப்பிடட்டும்.”
“ஏன்டா? நான் சொல்லி கூப்பிட்டா என்னவாகிடும்?” என்றாள் ஆற்றாமையாக.
“ரேவாக்கா.. நான் சொல்ல வரதை சரியா புரிஞ்சிக்கனும்,” என பொறுமையாய் சொன்னவன்.. “உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு, என் சக்திக்கு உட்பட்டு நீயும் பிருந்தாவும் என்ன கேட்டாலும் செய்வேன்..
ஆனா எனக்கும் நிலாவுக்குமான பிரச்சனை என் பர்சனல். அதுல நீ தலையிடாத.” என்றதும் ரேவதி கண்கலங்கினாள்.
“இப்போ எதுக்கு அழற?என் விருப்பம் சொல்லி எவ்வளோ நாளாகுது, முகிலனுக்கு பிடிச்ச மாதிரியே கல்யாணத்தை பண்ணிடலாம்னு இவ்வளோ நாளா அம்மாகிட்ட எடுத்து சொல்ல தோணல? இப்போ மட்டும் தோணுதா?” என கடுகடுத்தவன்..
“தாலி கட்டின எனக்கு சேர்ந்து வாழத்தெரியாதா? எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ உன் குடும்பத்தை பாரு.” என்றான்.
அதிர்வான சுப்புலஷ்மி.. “அப்போ அவளோட அங்கதான் இருக்கப்போறியா?” என்றார்.
பதறியவராய்.. “மார்கழி முடிஞ்சதும் பேசலாம்னு நினைச்சேன்டா, இந்த மாசத்துல நம்மள்ல கல்யாணம் பண்றதென்ன? பேசக்கூட மாட்டாங்க.” என இறங்கிவந்தார் சுப்புலஷ்மி.
மார்கழி முடிந்தாலும் அன்னை நிச்சயம் பேசியிருக்கமாட்டார்கள், தற்போது சமாளிக்க இப்படி சொல்கிறார்கள் என அறிந்தபோதும், “அதையாவது என்கிட்ட சொல்லியிருக்கனும்ல? சொல்லியிருந்தா வெய்ட் பண்ணியிருப்பேன்..” என்றான் அசால்ட்டாக.
“யாரையும் மதிக்காம நீ இப்படி திடீர் முடிவெடுப்பனு கண்டேனா? அப்படித்தான் கல்யாணம் செய்தியே, பேசாம வீட்டுக்கு வந்திருந்தாலாவது பரவாயில்ல, பொங்கல் முடிஞ்சதும் ஒரு ரிசப்ஷன் வச்சி, கல்யாணத்தை கௌரவப்படுத்தியிருக்கலாம்.
மாலையோட விநாயகர் கோவிலுக்கு போகவும் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி. என்ன இந்த மாசத்துல உங்க மகனுக்கு கல்யாணம் செய்துருக்கிங்கனு என்னவோ இரண்டு குடும்பமும் சேர்ந்து விருப்பத்தோட செய்து வச்ச கல்யாணம் மாதிரி கேக்குறாங்க..” என்றார் கோபத்தோடு.
வான்முகிலன்.. “அப்போ மார்கழியில பண்ணினது பிரச்சனையில்ல? எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் பிரச்சனையா?” என்க, சுபாஷ் மௌனமாய் சிரிக்க, வான்முகிலன் முகத்திலும் கோபம் குறைந்தது.
“ம்மா… லவ் மேரேஜ் பண்ணிக்கிறவங்களுக்கு மார்கழியாவது ஒன்னாவது.கண்டவங்க பேசுறதுக்கெல்லாம் நீ கவலைப்படாத. அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்க இஷ்டம்.” என்றான்.
“மத்தவங்களை விடுடா, பொண்ணு கொடுத்த சம்மந்திங்களை கூட கூப்பிடல, ரேவா மாமியாரும், பிருந்தா மாமியாரும் என்ன நினைப்பாங்க?” என்றார் ஆதங்கமாக.
“இதுதான் உன் பிரச்சனையா?” என உடனே நரேந்திரனின் அன்னைக்கு அழைத்து, “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிங்க, தவறா நினைக்கவேணாம், இது திடீர் கல்யாணம். தேன்நிலாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மாகிட்ட சொன்னா ஜாதகம் அது இதுனு எங்கே வேணாம்னு சொல்லிடுவாங்களோனு, இப்படி கல்யாணம் செய்துட்டேன்.” என்று அவர்களின் வாழ்த்தையும் கேட்டு இணைப்பை துண்டித்தவன்,
சுபாஷ் வீட்டிற்கும் அழைத்து இதையே சொன்னான். சுபாஷின் தாய்தந்தை மாறி மாறி வாழ்த்தி, “காலைலயே சுபாஷ் சொல்லிட்டான் தம்பி, சுபாஷ் சொல்லும் முன்னவே என் மருமக சொல்லிட்டா, எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல, எல்லாரும் சமாதானம் ஆனபின்ன வீட்டுக்கு நிலாவை அழைச்சிட்டு வாங்க.” என வாழ்த்தினர்.
“போதுமா? உன் பிரச்சனை தீர்ந்ததா? யாரும் எதுவும் நினைக்கல, நீயா எதையாவது நினைச்சிட்டு புலம்பாத. இந்த காலத்துல அவங்கவங்க வாழ்க்கையை பார்க்கவே நேரம் பத்தல, இதுல மத்தவங்க பிரச்சனையை எத்தனை நாளைக்கு பேசிடுவாங்க?” என எடுத்துரைத்தான்.
சம்மந்திகள் தவறாய் நினைக்கவில்லை என்றதும் சுப்புலஷ்மியின் முகம் சற்று நிம்மதியை காட்ட, இந்துபிருந்தா.. “அப்போ தை மாசம் ரிசப்ஷன் இருக்காம்மா?” என்றாள் ஆர்வத்தோடு.
ரேவதி நிலாவை பேசியது அதிகப்படிதான் எனப்புரிந்தபோதும், தேன்நிலா எத்தனை நல்ல குணமுடையவள் என அறிந்திருந்தும், அன்று குடும்ப மானம் காக்க கேட்டபோது திருமணத்திற்கு சம்மதிக்காததால் இன்று இத்திருமணத்தையும் மனம் முழுமையாய் ஏற்க மறுத்தது.
ஆனால் மகன் இத்தனை உறுதியாய் இருப்பான் என நினைக்கவில்லை சுப்புலஷ்மி.. தற்போதும் கூட திருமணம் முடிந்து அவள் அங்கு இருந்தால், தாம் எதோ கொடுமைகாரியாய் சித்தரிதிக்கப்படுவோம் என்பதாலும், திருமணம் முடிந்தும் தம்பதி தனித்திருந்தால் மகனிடம் தன்மீதான பாசம் குறைந்திடும் என்ற பயமும் இருந்தது.
அனைத்திற்கும் மேலாக, நிலாவை அழைத்து வர தான் போய் மங்களத்திடம் நிற்கும் நிலை வராமல் இருக்கவேண்டுமானால், இன்றே அவளை இங்கு வர அனுமதிப்பதுதான் சரி என நினைத்துதான், பிருந்தா ஆரத்தி எடுக்க கேட்டபோது சம்மதித்தார்.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் தேன்நிலா அவள் வீட்டில்தான் இருப்பாள் என முகிலன் சொல்லியதில், அதிலும் தோல்வியே கண்ட சுப்புலஷ்மிக்கு என்ன செய்வதென புரியாமல் தவித்திருந்தார்.
தற்போதும் இளைய மகளும் அவளின் அண்ணன் மற்றும் தோழிக்கே பரிந்து பேசவும் கோபம் வர.. “எத்தனை கேட்டும் நீயும் என்கிட்ட மறைச்சிட்டல்ல?” என முறைத்தார் மகளை.
“ம்மா.. இதையே எத்தனை முறை சொல்லுவ?” என பாவமாக சொல்லி, “என்னதான் நிலாவை பிடிச்சிருந்தபோதும், பெத்தவங்களும் கூடப்பிறந்தவங்களும் இல்லாம கல்யாணம் நடக்கக்கூடாதுனு அண்ணன் நமக்காக எவ்வளோ பார்த்திருக்கு.. அதை நினைக்காம சும்மா திட்டிட்டே இருக்க. நானே பாவம்.” என்றாள் சிறுமிபோல் முகத்தை வைத்தபடி.
“போடி..” என்றார் ஆற்றாமையாக.
நரேந்திரன் வேறு வீட்டிற்கு செல்ல தயாராக இருக்கவும்.. “ரேவாக்கா, நீ இருந்துதான் எங்களை சேர்த்து வைக்கனும்னு இல்ல, கட்டிக்கிட்டவளை பிரிஞ்சிருக்கிற எண்ணமெல்லாம் எனக்கில்ல, ஆனாலும் இந்த திடீர் கல்யாணத்தை ஏத்துக்க அம்மாக்கு மார்கழி முடியும் வரை டைம் கொடுக்கலாம்னு இருக்கேன்..
“வர வர இப்போலாம் என்னை நிறைய பொய் பேச வைக்கிற..” என முறைப்போடு முனுமுனுத்தாலும், காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டான் என அண்ணனின் கண்டிஷனிற்கு சம்மதித்து, தேன்நிலா வீட்டின் கேட்டினைத் திறந்தாள் பிருந்தா.