“வா பிருந்தாம்மா.. வாங்க தம்பி.” என அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றனர் லிங்கேசனும் மங்களமும்.
வான்முகிலனிடம் கேட்பதை விட, சுப்புலஷ்மி என்ன சொன்னார் என பிருந்தாவிடம் சங்கடமில்லாமல் கேட்டறியலாம் என்பதால் அவளின் வரவு இருவருக்கும் சந்தோசத்தை கொடுத்தது.
“நிலாவைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ஆன்ட்டி.” என்க.. “என்னம்மா? உனக்கு இங்க வர காரணம் வேணுமா என்ன?” என இன்பமாய் சலித்தார் லிங்கேசன்.
பிருந்தா.. “ப்ச்.. அண்ணா ஒரு பூகூட வாங்காம வந்துட்டோம்.” என வருந்த.. “பூதான? இந்தா.. இதை உன் ஃப்ரண்டு தலைல வச்சிவிடு பார்க்கலாம்.” என்றார் மங்களம்.
அவர் சொன்ன தோரணை, இன்னும் கோபத்தில்தான் இருக்கிறாள் எனப்புரிந்து.. “ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க, பேசிட்டு வந்திடறேன்.” என கணவனிடம் சொல்லி தேன்நிலா அறைக்குள் சென்றாள் இந்துபிருந்தா.
தோழி மீது கோபமிருந்த போதும், தடாலடியாக திருமணத்தை நடத்தியதை போல் எங்கே வீட்டிற்கும் இழுத்துச் சென்றிடுவானோ என்ற பயமே இன்றெல்லாம் ஆட்கொள்ள.. “நா.. நா.. நான் எப்படி பிருந்தா உங்க வீட்டுக்கு.?” என கண்கலங்கினாள் தேன்நிலா.
ஷப்பா.. முகத்தை திருப்பாம பேசினாளே.. அதுவரை சந்தோசம் என நிம்மதிகொண்டவள்.. “பழசை யோசிக்காத நிலா.” என கெஞ்சலாய் சொல்லி, “எல்லாம் அண்ணன் பார்த்துக்கும், அண்ணா உன்னை எங்கையும் விட்டுக்கொடுக்கமாட்டாங்க.” என்றாள் நம்பிக்கையோடு.
“அப்போ வீட்டுக்கு கூப்பிடுவானா?” என நிலா வாய்விட்டே கேட்டிட.. என்ன? கூப்பிடுவா.. னா.. வா?” என உள்ளுக்குள் சந்தோசித்தவள்.. “அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா உன் மனசு நோகாம பார்த்துக்கும்.” என தேற்றி.. “எங்கண்ணனை பிடிக்கும்னு என்கிட்ட கூட ஏன்டி சொல்லல?” என்றாள் உரிமையோடு.
முறைத்தவள்… “உண்மையா பிடிச்சாதான சொல்ல முடியும்? எனக்கு பிடிக்கும்னு உங்கண்ணனா நினைச்சிக்கிட்டு அராஜகம் பண்ணிட்டாங்க.” என்றாள் கோபமாக.
ஆனால் அப்படி செய்தால், அண்ணனிற்கே சாதகமாய் பேசுவதாக தன்னை தவறாய் நினைப்பாள் என யோசித்தவள்.. “உனக்கு எங்கண்ணனை பிடிக்கலன்னாலும், அவருக்கு இந்த பேரழகியைத்தான் ரொம்ப ரொம்ப பிடிச்சதாம்.
ஆனா என்ன..? கொஞ்சம் சீக்கிரம் பிடிச்சிருக்கலாம்.. பக்கத்து வீட்டுலயே இருந்துட்டு, இத்தனை வருசம் தத்தியா இருந்துடுச்சி.” என வான்முகிலனை சலித்தவள்..
“ஆமா.. எங்கண்ணனை பிடிக்காம போற அளவுக்கு என்ன குறையா இருக்காரு?” என முறைத்தாள் தோழியை.
“இப்படி என் சம்மதமில்லாம தாலி கட்டிருக்காரே.. அது ஒன்னு போதாதா?” என கோபத்தில் தேன்நிலாவின் குரல் உயர்ந்து ஒலிக்க, அவளின் அறையருகே சென்றான் வான்முகிலன்.
“ஹே.. நிலா.. அது உன்னை பிடிச்சதுனால பண்ணுனதுடி.” என்றாள் சிரிப்போடு.
“இளிக்காத.. அண்ணனா ஃப்ரண்டானு வரும்போது என்னை விட்டுக்கொடுத்திட்டல்ல?” என்றாள் ஏமாற்றமாக.
“அது அப்படியில்ல.. உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதுனு பிருந்தா என் பேச்சை கேட்டா.” என்ற வான்முகிலன் குரலில் அதிர்வாய் திரும்பிப் பார்க்க.. அறை வாயிலில் நின்றிருந்தான்.
இவனும் வந்திருப்பான்னு தெரிஞ்சிருந்தா வாயே திறக்காம இருந்திருப்பேனே என நினைத்தபடி தேன்நிலா திரும்பி நின்று கொள்ள.. “பிருந்தா உனக்கு டைம் ஆகுது, சுபாஷ் வெய்ட் பண்ணிட்டிருக்கான், கிளம்பு.” என்றவன், “உன்னோட பேசனும், வெளில வா.” என தங்கையோடு ஹாலுக்கு வந்தான்.
சுபாஷ் வந்திருக்கிறார் என்பதாலும், கர்பவதி தோழியை வழியனுப்பவும் வெளியே வந்த தேன்நிலா.. “வ்வா.. வாங்கண்ணா.” என்றாள்.
ஆதரவான பார்வை பார்த்த சுபாஷ்.. “உன் பர்சனாலிட்டிக்கு முகிலன் கொஞ்சம் சுமார்தான். ஆனா என்ன பண்றது? உள்ள இருக்க சரக்கு நல்லதா இருக்கே. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இந்த கல்யாணத்தை ஏத்துக்க பாரு நிலாம்மா.” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
“ஹலோ..உன் கண்ணுல ஏதும் கோளாறு இல்லையே?” என வான்முகிலன் முறைக்க.. “ஒரு கோளாறும் இல்ல முகிலன். அதனாலதான் பிருந்தாவை கட்டிக்கிட்டேன்.” என பெருமையாய் சொன்னவன்..
“நாங்க கிளம்பறோம் நிலா, என் மச்சானை ரொம்ப நாள் காக்க வச்சிடாத, சீக்கிரம் வாழ்க்கை கொடு. டைம் இருக்கும்போது இரண்டு பேரும் வீட்டுக்கு வாங்க.” என்று மனைவியை பார்த்தான் சுபாஷ்.
நிலாவை விட்டுக்கொடுக்காத சுபாஷின் பேச்சு வான்முகிலனோடு சேர்த்து மங்களம் லிங்கேசனிற்கும் மிகவும் பிடித்தது.
“ஆமாம் ஆன்ட்டி, இவருக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகனும். அதைவிட முக்க்கியமா இவரோட தாத்தாக்கு நான் இல்லனா பொழுதே போகாது. அம்மாவை பார்க்க வரனும்னா கூட குழந்தையை விட்டுட்டு வரமாதிரி ரொம்ப கஷ்டமாயிருக்கும், அதனாலதான் அடிக்கடி வரதில்ல.” என்றாள்.
புகுந்த வீட்டின் பெரியவர்களை விருப்பத்தோடு கவனிக்கும் பிருந்தாவை லிங்கேசன் பெருமையாய் பார்த்தார்..
ஆனால் மங்களம் முகம் தவிப்பிலிருக்க.. அதனை கண்டுகொண்டு.. “கவலைப்படாதிங்க ஆன்ட்டி, இனி நிலாவை அண்ணன் பார்த்துப்பார். ஊருக்கு போய்ட்டு கால் பண்றேன்.” என தைரியமளித்து, தேன்நிலா தன்னோடு பேசிவிட்ட சந்தோசத்தோடு விடைபெற்றாள் இந்துபிருந்தா.
** ** **
தேன்நிலா உள்ளே செல்ல எத்தனிக்க, “வந்து உக்காரு, பேசனும்.” என்றான்.
தேன்நிலா நிற்க.. “வந்து உக்காரு நிலா, நான் போய் டீ போட்டுட்டு வரேன்.” என கிச்சன் சென்றார் மங்களம்.
“நீ பேசு முகிலா, நான் வெளில இருக்கேன்.” என வெளியே போக, தேன்நிலாவின் தவிப்பறிந்து.. “நீங்களும் இருங்க மாமா.” என்றான்.
“அதை யாரு இல்லைனு சொன்னா? நான் கேட்டது ரிசப்ஷன்..” என்றான்.
“உள்ள வெறுப்பை வச்சிக்கிட்டு, என்னால எல்லார் முன்னாடியும் சாதாரணமா இருக்க முடியாது. என் முகம் இது பிடிக்காத கல்யாணம்னு காட்டி கொடுத்துடும்.. அப்புறம் எல்லாருக்கும் கஷ்டமாகிடும்..” என்றாள்.
“அப்படியா? உனக்கு இது பிடிக்காத கல்யாணமா?” என உயர்த்திய புருவத்தோடு அழுத்தமாய் கேட்க.. மேலும் தடுமாறினாள் தேன்நிலா.
தேன்நிலாவின் முகவாட்டத்தில், தன் எஜமானி சங்கடத்தில் இருக்கிறாள் என கிளிக்கு தெரிந்ததோ..? “நிலா..” என அழகாய் சொல்லிய கர்ணன் அவளின் தோளில் அமர.. “க..கர்ணா..” என கிளியை எடுத்து அறைக்குள் விட, மீண்டும் அவளிடமே வந்தமர்ந்தது.
“கர்ணாக்கு பசி, நான் பழம் கொடுக்கறேன்ப்பா.” என கிளியோடு உள்ளே போனாள் தேன்நிலா.
மங்களம் டீ கொடுக்க, வாங்கியவன்.. “நிலாக்கும் கொடுங்க, நான் கொடுக்கறேன்.” என்றான் மங்களம் முகம் பாராமல்.
மகளிடம் தனியே பேச நினைக்கிறான் எனப்புரிந்த லிங்கேசன்.. “நிலாக்கு டீ கொடுத்துட்டு, எனக்கும் எடுத்துட்டு வா மங்களம்.” என வெளியேற, கணவன் சொன்னதுபோல செய்து, டீ யோடு வெளியேறினார் மங்களம்.
அச்சோ.. வெளியிலேயே இருந்திருக்கலாமோ என தேன்நிலா தவித்திருக்க.. டீயோடு அறைக்குள் வந்தான் வான்முகிலன்.
கதவை பாதிவரை சாற்றி, அவளின் கட்டிலில் அமர்ந்தவன்.. “இந்தா.” என டீ யை நீட்டினான்.
திக்கித்திணறி கூட வார்த்தை வெளிவர மறுத்தது தேன்நிலாவிற்கு. தலைகுனிந்திருந்தவளின் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கீழே விழவா வேண்டாமா என அனுமதி கேட்டுக்கொண்டிருக்க, மூச்சையும், கண்ணீரையும் உள்ளிழுத்து விழுங்கியதை, சத்தமில்லாமல் மேலேறி இறங்கிய தேன்நிலாவின் தொண்டைக் குழி சொல்ல..
“காலைல, உன்னோட சின்னவயசு அனுபவத்தை உங்கம்மா சொல்லும்போதும் இப்படித்தான் நின்னுட்டிருந்த.. இப்போ என் முன்னயும் இப்படி நின்னு என்னை தோற்கடிக்காதடி.” என்றான் தவிப்பாக.
மாலை நிலாச்சோறு கேட்டவன், தற்போது கணவன் உரிமை எடுப்பானோ என்ற பயத்திலிருந்தவளுக்கு.. தன்மீதான வான்முகிலனின் புரிதலில் பேச்சற்று போனாள்.
“ஒரு சில நேரங்கள்ல மௌனம் கத்தி கூச்சலிடும் பதில்.. பல பேருக்கு அது கேட்குறதில்ல. ஆனா, உன் மௌனத்தோட குரல் எனக்கு கேக்குது தேனம்மா.. என் காதும் மனசும் அதிரும் அளவுக்கு கேக்குது.
உன் லிங்கேசப்பாவோட அம்மா, உன்கிட்ட என்ன சொல்லியிருப்பாங்கனு என்னால புரிஞ்சிக்க முடியுது.
ஒரு மிலிட்டரி மேனோட வாரிசுடி நீ.. இப்படி கலங்கி நிற்கலாமா?” என்றான் ஆழ்ந்த பார்வையோடு.
கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க, அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல்.. தன்னிரு கால்களின் பெரு விரல்களை ஒன்றோடொன்றாக அழுத்தமாய் உரசிக்கொண்டிருந்தாள் தேன்நிலா.
எழுந்து அவளருகே சென்று.. தன்னிரு கைகளால் அவளின் கன்னம் ஏந்தி.. “உன் கண்ணீரை துடைக்க நான் விரும்பல, அதை வர விடாம பார்த்துக்கனும்னு ஆசைப்படுறேன்.. என் ஆசை நிறைவேறுமா?” என்றான் ஈரப்பார்வையோடு.
வான்முகிலன் பேச்சினில் கரைந்த தேன்நிலாவின் கண்கள் தவிப்பில் சதிராட.. “நேர்ல பேசினா ரொம்ப அழுதுடுவியோனுதான் சாயங்காலம் கால் பண்ணினேன். நீ என்ன விசயம்னு கேட்கவும், புருசன்கிட்ட கேக்குற கேள்வியைப் பாருனு கோபம் வந்துடுச்சி, அதான் நிலாச்சோறு கேட்டேன்.” என்றான் கண்ணிமைத்து.
தலைகுனிய முயற்சித்தவளுக்கு தோல்வியளித்து, இன்னும் திடமாய் அவள் முகத்தை பற்றியவன்.. “தமிழ் பாட்டி பேசுனது, ரேவாக்கா பேசினது எல்லாத்தையும் முடிஞ்சா மறக்கப் பாரு.. மறக்க முடியலனா சம்மதப்பட்டவங்ககிட்டயிருந்து ஒதுங்கி இரு.. அதுக்காக உன் வாழ்க்கையை தொலைக்காத..
உன் புருசன் நான் சொல்றேன்.. உன் அம்மா கல்யாணம் தப்பே இல்ல, லிங்கேஷ் மாமா உனக்கு அப்பாவா கிடைச்சது உன் வரம்.. அவருக்கும் நீ அப்படித்தான்..
மத்தவங்க சொல்றதுக்காக உன் வாழ்க்கையை நீ வாழலைன்னா, உன் அம்மா கல்யாணம் தப்புனு நீயே ஒப்புக்கிறதுக்கு சமமாகிடும். நான் என்ன சொல்றேனு கொஞ்சமாவது புரியுதா?” என்றான் பொறுமையாக.
வான்முகிலனிடம் எதையும் பகிராமலே தனது மனபாரம் குறைந்தது போல் தோன்ற.. வியந்த தேன்நிலா.. கன்னத்திலிருந்து அவனின் கையை விலக்க முயற்சித்தபடி.. “ட்.. ட்.. டீ குடிங்க.” என திணறினாள்.
தேன்நிலாவின் சில்லிட்ட கைகள் அவளின் நிலையை சொல்ல, இன்று இது போதுமென.. “ஆறின டீ எனக்கு பிடிக்காது. போய் வேற வச்சிட்டு வா.” என கன்னப் பிடியிலிருந்து விடுவித்து, கதவை நன்றாக திறந்து விட, அடுத்த நொடியே வெளியேறினாள் தேன்நிலா.
ஹாலுக்கு வந்து கிச்சனில் நின்றிருந்தவளைப் பார்த்தவன்.. “டீ கூட அப்புறம் வைக்கலாம், முதல்ல போய் முகம் கழுவு.. உன் அழுமூஞ்சை பார்த்துகிட்டு என்னால டீ குடிக்க முடியாது.
இந்த மணிரத்தினம் படத்துல விக்ரம் சொன்ன மாதிரி.. நீ கெட்ட வார்த்தை பேசினா கூட சகிச்சிக்குவேன்.. ஆனா அழுமூஞ்சை என்னால சகிக்க முடியாது.” என்றான் புன்னகை முகத்தோடு.
பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்க.. அவளின் தடுமாற்றத்தை உணர்ந்து.. “ரொம்ப கஷ்டப்பட்டு டீ வைக்க வேணாம். நைட் கால் பண்றேன், ரிசப்ஷன் பத்தி யோசிச்சி வை.. ரிசப்ஷன் வேணாம்னா சரியான காரணம் சொல்லனும்..” என கட்டளைபோல் சொல்லி வெளியேறினான் வான்முகிலன்.