“அட என்னம்மா நீ?” என சலித்தவன்.. “காளானாவது இருக்கா?” என ஆராய, அது இருந்தது.
வான்முகிலனிற்கு தோசை, சப்பாத்தியோடு, காளான் மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை எப்பொழுதும் வாங்கி வைப்பார் சுப்புலஷ்மி.
இரவில் தானும் அன்னையும் சப்பாத்தி உண்ணமாட்டோம் என்பதால் தமிழரசனிற்கு மட்டும் சப்பாத்தி செய்ய திட்டமிட்டு சமைக்க ஆரம்பித்தான்.
“சாப்பிட்டதும் மங்களம் வீட்டுக்கு போலாமானு கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல.” என குறை கூற.. ரிசப்ஷன் பற்றி தேன்நிலாவிடம் கேட்டறிந்த பின்னே அத்தையிடம் கேட்க முடிவெடுத்து.. “நாளைக்கு போலாம்மா..” என்றுவிட்டான்.
பிறகு அரை மணிநேரத்தில் காளான் கிரேவியும், சப்பாத்தியும் செய்து முடித்தவன்.. “ம்மா தமிழ் வந்தபின்ன தோசை மட்டும் ஊத்து.” என மச்சானிற்கு அழைத்தான்.
“மாமா..” என தமிழரசன் தடுமாற.. “சரி பிடிக்கலனா விடு.” என இணைப்பை துண்டித்து, “ம்மா அவன் வரமாட்டான் போல, நீ தோசை ஊத்து. நாம சாப்பிடலாம்.” என டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான்.
சற்று நேரத்தில் கேட் திறக்கும் சத்தம் கேட்கவும், வரான் போல, என நினைத்த நேரம் தமிழரசன் வந்தான்.
“வாடா..எத்தனை பிரச்சனை வந்தப்போவும் உன் அக்காவை பார்க்க பிருந்தா வராம இருக்காளா? உனக்கேன் இவ்வளோ தயக்கம்?” என்றான் கோபப் பார்வையோடு.
“முதல்ல தயங்கினேன்தான் மாமா, வரமாட்டியானு நீங்க கேட்கவும் என் தயக்கமெல்லாம் போய்டுச்சி.. ஆனா அக்காதான்..” என இழுத்தான்.
தோசை வார்த்து எடுத்து வந்த சுப்புலஷ்மி.. “வா தமிழா. அங்க கை கழுவிட்டு வா.” என வாஷ்பேஷினை காண்பித்தார் நல்லவிதமாக.
ஆன்ட்டிக்கு பயந்துதான் அக்கா இங்கே போகவேண்டாம் என்றார்கள். ஆனால் இவர்கள் இயல்பாய் பேசுகிறார்களே என்ற ஆச்சர்யத்தோடு கை கழுவி வந்தமர்ந்தான்..
தானே எழுந்து சப்பாத்தி எடுத்து வந்து பரிமாறி, அவனும் சாப்பிட அமர்ந்தவன்.. “ஏன் நீ இங்க வந்தா உன் அக்காக்கு என்னவாம்?” என்றான் முறைப்பாக.
தான் நினைத்தது போலவே அன்னையும் தமிழும் இயல்பாய் பேசியது நிம்மதியை தர, இதமான மன நிலையில் உண்டு முடித்தான். பிறகு தமிழரசு கிளம்ப.. “ம்மா ஃபோன் பேசிட்டு வரேன்.” என வெளியேறினான்.
நாளை அன்னை அத்தையை சந்திக்கும் முன்னே தேன்நிலாவிடம் ரிசப்ஷன் பற்றி கேட்பதற்காக மாடிக்கு வந்தான். அங்கே தேன்நிலா வீட்டு மாடியின் ஒரு அறையில் லைட் எரிய, சந்தோசம் கொண்டது வான்முகிலன் மனம்.
மேலே யார் இருக்காங்க.? அப்போ அவ தனியா இருக்காளா என யோசித்தவாறு தேன்நிலாவிற்கு அழைத்தான்.
அவளின் மொபைல் அழைப்பு ஒலி மாடியறையில் இருந்து கேட்கவும், வான்முகிலன் மனம் பொலிவானது. ஆனால் தேன்நிலா அழைப்பை ஏற்காமலிருக்கவும் கோபம் வர, வேகமாய் இறங்கியவன் இரண்டு நிமிடத்தில் தேன்நிலா வீட்டின் மாடியில் ஏறினான்.
“அக்கா மாமா போன் பண்ணாங்க.. ஏன் எடுக்கல? தப்பா நினைக்கப் போறார்க்கா.” என தமிழரசன் சொல்ல, “எனக்கு தூக்கம் வருதுடா, உனக்கு ஃபோன் செய்தார்னா தூங்கிட்டேன்னு சொல்லிடு.
கதவை தாழ் போட்டுட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு நீயும் படு.. ரொம்ப குளிருது.” என அங்கே போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் படுத்து, தமையன் மீண்டும் கேள்வி கேட்காமலிருப்பதற்காக பெட்சீட்டால் முகத்தை மூடினாள்.
“மாமா..” என தமிழரசன் அழைக்க, வான்முகிலனைப் பற்றி பேச நினைக்கிறான் என.. “டேய்.. உன் மாமா சமையலை பாராட்டினதை கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது.. தயவு செய்து என்னை தூங்க விடு.” என போர்வைக்குள்ளிருந்து தேன்நிலா அதட்ட,
சிரித்த தமிழரசன் “நிலாக்கா, என் மொபைல் சார்ஜ் டவுன் ஆகிடுச்சி, கீழ போய் சார்ஜர் எடுத்துட்டு வந்துடறேன்.” என வெளியேற எத்தனிக்க,
“ரிசப்ஷன் பத்தி கேட்கத்தான் தமிழா வந்தேன். அரைமணி நேரத்துல கிளம்பிடுவேன்.” என்க.. “கிளம்பும் போது கால் பண்ணுங்க மாமா.” என கீழறங்க.. போர்வைக்குள் இருந்தவளிற்கு பக்கென்றானது.
வான்முகிலன் மகளிடம் பேச நினைத்தால், தான் இருப்பது சங்கடத்தை கொடுக்கும் என லிங்கேசனும் மங்களமும்தான் மேல படுக்க திட்டமிட்டனர்.
மாடியறையை சுத்தம் செய்கிறார்கள் என்றதுமே, இங்கே வருவதாய் தந்தையிடம் சொல்லியிருப்பானோ? அதனால்தான் மாடியறையை சுத்தம் செய்கிறார்களோ? என பக்கென்றானது தேன்நிலாவிற்கு.
தமிழரசன் இங்கே தங்கினால் எப்பொழுதும் ஹாலில் உள்ள சோபாவில்தான் படுப்பான் என்பதால் இவனிற்கு வசதியாய் போய்விடும்.
தான் மேலே செல்லாவிட்டால் தாய் தந்தை நிச்சயம் மேலே படுக்க போவார்கள்.. அதற்கு நாமே மேலே சென்றிடலாம், மேலே சென்ற பத்து நிமிடத்திற்குள் விளக்கை அணைத்து விட்டால் நாம் மேலே இருக்கிறோம் என அவனிற்கு தெரியாது.. என பலவாறு திட்டமிட்டு மேலே வந்தால் இப்படி ஆகிவிட்டதே என நொந்தவளுக்கு மார்கழி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.
“சாயங்காலம் கூப்பிட்டதுக்கு என்னால ஏற முடியாதுன்ன? இப்போ மட்டும் எப்படி மேல வர முடிஞ்சது?” என அதட்ட, தேன்நிலா போர்வையை விலக்காமலிருக்க..
“என் பொறுமையை சோதிக்காதடி.” என வான்முகிலன் அதட்ட.. “ந்..ந்.. நிஜமாவே எனக்கு தூக்கம் வருது.” என்றாள் மெல்லிய குரலில்.
“முதல்ல இதை எடு..” போர்வையை இழுக்க.. தானே விலக்கி எழுந்தமர்ந்தாள்.
“தூக்கம் வருதுனா, நீயா எனக்கு கால் பண்ணி ரிசப்ஷன் பத்தின முடிவை சொல்லியிருக்கனும். முழிச்சிருந்தும் அட்டன் பண்ணலனா என்ன அர்த்தம்?” என்க.. தேன்நிலா வாயே திறக்கவில்லை.
வான்முகிலனை பிடித்திருந்த போதும் எப்படியாவது மறக்கத்தான் நினைத்தாள். ஆனால் இவனிற்கு மேயர் பொண்ணை பார்க்கிறார்கள் என பிருந்தா சொன்ன பிறகுதானே இவன்மீதான காதலை மறப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தாள்..
தன் காதலை இவனிடம் உணர்த்தவும் முடியாமல், மொத்தமாய் விலகவும் முடியாமல், தொடரவும் முடியாமல், கொள்ளவும் முடியாமல், இழக்கவும் முடியாமல் தான் தவித்திருந்த நேரம், தன்னை மனைவியாக்கினான்.
தான் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கை கண்முன்னே நிற்கிறது. ஆனால் ஏற்கத்தான் மனம் முரண்டுகிறது.
வான்முகிலன் சொன்னதுபோல் ரேவதியிடமிருந்து விலகியிருக்கலாம்தான்.. இனி தன் அன்னை திருமணம் குறித்து பேச யாரையும் அனுமதிக்கமாட்டான் என்ற நம்பிக்கையும் இருந்ததுதான்..
ஆனாலும் இவனின் விருப்பத்திற்குத்தானே திருமணம் நடந்திருக்கிறது. ஆன்ட்டிக்கும் ரேவதிக்கும் தன்னை பிடிக்காத போது அவ்வீட்டினில் எப்படி வாழ்வது? என்ற அச்சமும், அவர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு ரேவதியை தவிர்ப்பது சுலபம்தானா என்ற அச்சமும் இருக்க, இந்நிலையில் ரிசப்ஷன் குறித்து வான்முகிலனிற்கு என்ன பதில் சொல்வது என்றுதான் அழைப்பை ஏற்கவில்லை தேன்நிலா.
ரேவதி அவமானம் செய்திருக்க, திருமணம் அவசரமாய் செய்தாலும், அன்னைக்கும் ரேவாவிற்கும் எடுத்துரைத்து, முறையாய் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பின்னேதான் இவளோடான வாழ்வை துவக்க வேண்டும் என நினைத்திருந்தான்.
ஆனால் தேன்நிலாவின் செயல்கள் தன் நினைப்பை மாற்றிவிடுமோ என்ற கோபம் வர.. “உன்னை என்ன செய்திடுவேனு இத்தனை பொய் சொல்ற?” என முறைக்க.. பொய்யா? என அதிர்ந்தபோதும் வாய் திறக்கவில்லை தேன்நிலா.
“அதுக்கு கால் அட்டன் பண்ணாம இருப்பியா?” என முறைத்தவன்.. “ஊர் உலகத்துல எல்லாருக்கும் காலைல கல்யாணம் நடந்தா.. நைட் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும். இங்க உனக்கு பேசக்கூட வலிக்குதா?” என முறைத்தான்.
என்ன சொல்வாள் இதற்கு? நேரடியாக முதலிரவு பற்றி பேசியதும் தேன்நிலாவின் முகம் சிவக்க, பிறகுதான் கோபத்தில் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தான் வான்முகிலன்.
புது மஞ்சள் கயிறோடு, நெற்றிக்கிட்டிருந்த குங்குமத்தை ரசனையாய் பார்த்திருந்தவன்.. தன் முழு கனத்தையும் கட்டிலில் இறக்க.. கயிற்றுக் கட்டில் என்பதால் வான்முகிலன் அமர்ந்திருந்த இடம் கீழே போக, கட்டிலில் போட்டிருந்த போர்வையின் சறுக்கலால் தேன்நிலா வான்முகிலனை நெருங்கினாள்.
வான்முகிலன் சிரிக்க, தேன்நிலா பின்னே நகர முற்பட, அவளை தடுத்தவன்.. “ஏன் ரிசப்சன் வேண்டாம்?” என்றான் தன்மையாக.
காரணம் சொன்னால் தன் மீது நம்பிக்கையில்லையா என அதட்டுவான்.. சொல்லாமல் விடவும்மாட்டான் போலயே என அவனின் அருகாமையில் அவஸ்த்தையோடு அமர்ந்திருந்தாள்.
அவளின் தாடை தொட்டு முகம் நிமிர்த்த, கண்கள் கலக்கம் கொண்டது. “என்ன காரணமாயிருந்தாலும் சொல்லு, உன் பக்கம் நியாயம் இருந்தா ரிசப்ஷன் வேணாம்.” என ஊக்க..
“இல்ல.. எனக்கு இந்த கல்யாணமே பிடிச்சிருக்கு.”
“அப்படியா? பார்டா?” என வான்முகிலன் நம்பாமல் பார்க்க.. “இல்ல உண்மையாதான் சொல்றேன்.” என்றாள்.
“அப்போ ஃபோன் அட்டன் பண்ணி இந்த காரணத்தையே சொல்ல வேண்டியதுதான?” என்றான்.
“சொன்னா நம்ப மாட்டிங்க.”
முன்னால் ஏற்பட்ட மனக்கசப்போடு, வேறு எதோ காரணமும் இருப்பதாய் அவள் முகமொழி காட்டிக்கொடுக்க.. “இப்போ மட்டும் நம்பிட்டனா?” என்றான் நம்பாப் பார்வையோடு.
“நிஜமா இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு.” என்றாள் மீண்டும்.
“இல்ல, எங்கம்மாக்கும் ரேவாக்கும் உன்னை பிடிக்காததால இந்த கல்யாணமும் உனக்கு பிடிக்கலனு எனக்கு நல்லா தெரியும். அதனாலதான் எல்லாரோட சம்மதத்தோட ரிசப்ஷன் வைக்கலாம்ன்றேன்.” என்றான் பொறுமையாக.
“இல்ல வேணாம்.” என மீண்டும் மறுக்க, வான்முகிலனிற்கு கோபம் வர, உண்மையை வரவழைக்க.. “கல்யாணம் பிடிச்சிருக்குனா இப்போவே நம்ம வீட்டுக்கு போலாம் வா.” என்றான்.
அச்சோ என தலை கவிழ்ந்தவள்.. “அ.. அது… எ..எனக்கு சரியா நடக்கவும் பேசவும் வராதில்லையா? உ.. உங்களுக்கு எந்த க்..குறையும் இல்ல, அதனால ரிசப்ஷன் வச்சா எல்லாரும் நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பார்ப்பாங்க. அது எனக்கு பிடிக்கல,
என்னை விரும்பி க்.. க..கட்டிக்கிட்டிங்கனு இப்படி கல்யாணம்தான் எல்லாரையும் நினைக்க வைக்கும்.. எனக்கு இதான் பிடிச்சிருக்கு.” என்றதும்.. மொத்தமாய் கவிழ்ந்தவன் மனைவியை இறுக அணைத்திருந்தான்.
தன் அணைப்பில் தேன்நிலா முகத்தில் பதைப்பை பார்த்தவன்.. அவளை விடுவித்து எழுந்து கதவை தாழிட, அதிர்வாய் விழிவிரித்து, அவசரமாய் தடுமாறி எழுந்தவளை ஆதரவாய் சேர்த்தணைத்தவன் அணைப்பு.. சில நொடிகளிலேயே உரிமையாய் மாறியிருந்தது.
தேன்நிலா விடுபட போராட, “காதல் சொல்லியிருக்க, கொண்டாட வேண்டாமா?” என கிசுகிசுத்தவாறு தேன்நிலாவின் முகமெங்கும் முத்தமிட்டு இதழை சுவைக்க.. திணறியபடி இறுகக் கண் மூடினாள்.
சற்று நேரத்திலேயே அணைப்பை தளர்த்தி, கட்டிலில் அமர்த்தி தானும் அருகமர்ந்து.. “சின்னதா ஒரு முத்தம்.. இதுக்கே இத்தனை ஆர்பாட்டமா? என்னை பார்த்தா பாவமா இல்லையா?” என்றான் கெஞ்சலாக.
தவித்தாலும், மனம் முரண்ட.. மனைவியைப் புரிந்தவனாய்.. “இப்போதைக்கு தேன் மட்டும் போதும். நிலாவை எல்லார் சம்மதத்தோடவும்.. நம்ம ரூம்ல வச்சி எடுத்துக்கிறேன் சரியா?” என சமாதானம் செய்து இதழை ஆக்ரமிக்க…
இம்முறை மூடாத தேன்நிலாவின் விழிகள் வேண்டாம் என்பதாய் கெஞ்சினாலும்.. வான்முகிலன் மீதான காதலை நிறம் மாறிய அவளின் முகம் சொல்ல, இதழை விடுவித்தவன்.. “கண்ணை மூடிக்கோ நிலா.. உன் கண் மொழி என்னை பித்தனாக்கிடும் போல..” என கிசுகிசுத்தவன் முத்தத்தில் தேன்நிலாவின் இமைகள் சில நொடிகளிலேயே தன்போல் மூடியது.
மனைவியின் சுவாசத்திற்கு அவ்வப்போது இடைவெளி விட்டு, மென்மையாக, ஆதரவாக, காதலாக, வன்மையாக என மீண்டும் மீண்டும் இதழை சுவைக்க.. இருவரின் உடல்களும் மொத்தமாய் உரசியிருக்க, கூடல் நடைபெறாத போதும், வான்முகிலனின் காதலில் கரைந்த தேன்நிலா.. வான்நிலாவாகியிருந்தாள்.