“கண்டிப்பா முடியாதும்மா.லன்ச் போடுங்க.” என தனது பேகில் ஃபோன், தண்ணீர் என எடுத்து வைக்க.. “முகிலன்கிட்ட சொல்லிட்டியா?” என்றார்.
அது நிலாவிற்குள்ளும் இருக்கிறதுதான், ஆனால் எப்படி சொல்வது? அழைப்பு விடுக்க சங்கடம்.. சிறு யோசனைக்குப் பிறகு குறுஞ்செய்தி அனுப்பலாம் என நினைத்து, அவனின் எண்ணை சேமித்து வாட்ஸாப் பார்க்க, லாஸ்ட் சீன் அதிகாலை மூன்று மணி என காட்டவும், தன்னை போலவே தூக்கமில்லாமல் இருந்திருக்கிறான், தூங்கட்டும் எனத் தோன்ற குறுஞ்செய்தி அனுப்பவும் மனம் வரவில்லை.
ஆனாலும் அன்னையிடம் ஏதும் காட்டிக்கொள்ளாமல்.. “ம்மா.. இவ்வளோ நாளா அவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் வேலைக்கு போனேனா? போம்மா.” என கோபம்போல் சொல்லி, மதிய உணவை வாங்கிக்கொண்டு, தாய்தந்தையிடம் விடைபெற்று கிளம்பினாள்.
** ** ** **
காலை பத்து மணியாகியும் வான்முகிலன் எழாமல் போகவே, எழுப்பிவிட மகனின் அறையை தட்ட, பதிலில்லை. மகனிற்கு அழைக்க, மூன்றாம் முறைதான் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ..” என்க…. “டேய் நான் அம்மாடா. மணி பத்தாகுது, உடம்புக்கேது முடியலயா?” என்றார் பதட்டமாக.
“பத்து மணியா.?” என கண்ணைத் தேய்த்து மணியைப் பார்த்தவன்.. “வரேன் இரும்மா.” என்று குளித்து, மொபைலை பார்த்தபடி வெளியே வந்தான்.
“ப்ச்.. பாஸ் இரண்டுமுறை கால் பண்ணியிருக்கார், எப்படி இப்படி தூங்கினேன்?” என புலம்பியபடி.. “ம்மா டீ.” என சோபாவில் அமர்ந்து செந்தாமரைக்கு அழைத்தான்.
“வீட்டுக்குத்தான் முகிலா வந்துட்டிருக்கேன்.” என இணைப்பை துண்டித்தார்.
“ம்மா.. பாஸ் வரார்.” என்றான் டென்ஷனாக.
“அண்ணன்தானடா? அதுக்கேன் பதறுற?”
“ப்ச். ம்மா.. நீ சமாதானம் ஆகிட்டேனு சொல்லி வச்சிருக்கேன், நிலா வேற அவங்க வீட்டுல இருக்கா. அதான்.” என்றான் டென்ஷனாக.
அச்சோ என சுப்புலஷ்மியும் டென்ஷனாக.. “எதுவாயிருந்தாலும் நான் பேசிக்கிறேன், டீ, காபி கொடுத்து நீ பாஸை கவனிக்க மட்டும் செய்.” என்றவன்.. தேன்நிலாவிற்கு அழைத்தான்.
தேன்நிலா அழைப்பை ஏற்காமல் போக, “ம்மா.. அத்தை வீட்டுக்கு போய்ட்டு வந்திடறேன்.” என எழ.. “நிலா வேலைக்கு போய்ட்டா, காலைல பார்த்தேன்.” என டீயை கொடுத்தார்.
“வேலைக்கு போய்ட்டாளா? இன்னைக்கு சனிக்கிழமை லீவ்னு நினைச்சேன்.” என முணகியவன்.. மீண்டும் நிலாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றாள்.
“இன்னைக்கு எதுக்கு வேலைக்கு போன?” என்றான் கடுப்பாக.
“மன்த் எண்ட்ங்க, நிஜமா ஒர்க் அதிகம்.” என மிக மெல்லிய குரலில் சொன்னாள்.
“எப்போ வருவ?”
“ஈவ்னிங்தான்.”
“சரி..” என இணைப்பை துண்டித்தவனிற்கு, மனைவியின் பணிவான குரலில் கோபத்தை நீட்டிக்க முடியவில்லை.
செந்தாமரை அழைப்பு மணியை அடிக்க.. திரும்பிப்பார்த்தவன்.. “பாஸ் வாங்க வாங்க, திறந்திருக்க வீட்டுக்கு எதுக்கு பெல் அடிக்கிறிங்க?” என இன்முகத்தோடு வரவேற்றான்.
தன் மகள் மனைவியோடு உள்ளே வந்தவர்..“மத்த எதாவதுனா ஃபோன்ல பேசிக்கலாம், விருந்துக்கு அழைக்கிறது முறைப்படி வீட்டுலபோய்தான் அழைக்கனும்னு உன் அக்கா பிடிவாதம். அவங்க பேச்சை மீற முடியுமா?” என சிரிப்போடு சொன்னவர்..
தண்ணீர் கொடுத்த சுப்புலஷ்மியிடம், “முகிலன் மேல உள்ள கோபம் போய்டுச்சாம்மா?” என்றார்.
“நிலா நல்ல பொண்ணுதான்.. ஆனாலும் இவன் இப்படி கல்யாணம் செய்தது பிடிக்கலண்ணா, நடந்து முடிஞ்சபின்ன என்ன செய்யிறது? ஏத்துக்கிட்டுதான ஆகனும்?” என்றார் இயல்பாக.
“மருமகளை எங்க காணோம்.?” என்றார்.
“கல்யாணம்தான் மார்கழில பண்ணிட்ட.. ஆனா நல்ல நாள் பார்த்துதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரனும், மார்கழி முடியவும் அழைச்சிக்கலாம்னு அம்மா சொல்லிட்டாங்க பாஸ்..” என முகத்தை பாவமாய் வைத்து சோகம்போல் சொல்ல, மூவரும் சிரித்தனர்.
“அப்போ விருந்துக்கு?” என அதிர்வாய் கேட்டார் செந்தாமரையின் புதல்வி.
“அது கண்டிப்பா வரோம்க்கா, ஆனா ஈவ்னிங் இல்லனா நாளைக்கு காலைல வரேன்.” என்றான்.
“பாப்பா வீடு பக்கத்துலதான்னு அப்பா சொன்னார், நான் பார்க்கனும், வா போலாம்.” என்க.. “அவ ஆபீஸ் போய்ட்டாக்கா, இன்னைக்கு விருந்துக்கு போறோம்னு சொல்ல மறந்துட்டேன்.” என்றான் வான்முகிலன்.
“ப்ச்.. என்ன முகிலா?” என செந்தாமரையின் புதல்வி சலிக்க.. “கண்டிப்பா நாளைக்கு கூட்டிட்டு வரேன்.” என்றான்.
“வந்ததே வேஸ்ட்.” என செந்தாமரை மனைவி முகம் சுருக்க, “சாரிம்மா.. இன்னைக்கு அவளுக்கு லீவாயிருக்கும்னு நினைச்சேன், சொல்லியிருந்தா ஆபீஸ் போயிருக்கமாட்டா..” என்றான் தன்மையாக.
“நாளைக்கு காலைலயே அழைச்சிட்டு வந்திடனும்.” என அன்பு கட்டளையிட, வான்முகிலன் அதற்கு சம்மதிக்கவும் சமாதானமானார்கள் மூவரும்.
சுப்புலஷ்மி சாப்பிட அழைக்கவும், தன்மையாகவே மறுத்து சற்று நேரம் பேசியிருந்து மூவரும் கிளம்பினார்கள்.
டிபன் சாப்பிட்டு தனதறைக்கு செல்ல முயல.. “முகிலா, மங்களத்தை போய் பார்த்துட்டு வரலாம்.” என்றார் சுப்புலஷ்மி.
“இப்போவா? இப்போ நிலா வீட்டுல இல்லையே.” என யோசிக்க.. “நிலா பெரிய மனுசியை அப்புறம் சமாதானம் செய்துக்கலாம், முதல்ல பெரியவங்களை சமாதானம் செய்யலாம்.” என்றார்.
தேன்நிலா இல்லாத நேரம் அத்தையை பார்க்க முடிவு செய்திருக்கார் என அன்னை மனம்புரிய.. முதலில் அத்தையின் மனம் சமாதானமாகட்டும் என நினைத்து.. “சரி வா போலாம்.” என அழைத்துப்போனான்.
** ** **
“வா முகிலா.” என இன்முகத்தோடு வரவேற்ற லிங்கேசன்.. “வாங்க.” என் சற்றே தடுமாற்றத்தோடு வரவேற்றார் சுப்புலஷ்மியை.
லிங்கேஷ்வரனின் தடுமாற்றம் சுப்புலஷ்மியால் அல்ல, பொறுக்க முடியாமல் மனைவி ஏதேனும் சொல்லிடுவாரோ என்பதில்தான். இதற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் சுப்புலஷ்மி இங்கு வருவார், மகள் மருமகனிற்காக முடிந்தவரை சமாதானமாய் போக முயற்சி செய் என நேற்றிரவே மனைவிக்கு அறிவுருத்தியிருந்தார்.
பொதுவாக வாங்க என்றார் மங்களம்.
“போய் தண்ணி கொண்டு வா மங்களம்.” என்க தண்ணீர் கொண்டு வந்து அமைதியாக நீட்டினார் சுப்புலஷ்மியிடம்.
தண்ணீரை வாங்கி அருகே வைத்து.. மங்களத்தை பார்க்க, அமைதியாக நின்றிருந்தார். தான் எதாவது பேசலாம் என்றாலும் அன்று சுப்புலஷ்மி மன்னிப்பு கேட்ட விதத்தை நினைத்து, இவர்களே ஆரம்பிக்கட்டும் என.. “மாசக் கடைசின்றதால நிலாக்கு லீவ் போட முடியாதாம் முகிலா.வேலைக்கு போயிருக்கு.” என மருமகனிடம் பேசினார்.
முகம் திருப்பாமல் வாங்க என்றழைத்துவிட்டாள், தண்ணீரும் கொடுத்துவிட்டாள், இனி தான்தான் பேசியாகவேண்டும் என புரிந்த சுப்புலஷ்மிக்கு எப்படி ஆரம்பிப்பதென தெரியாமல் அமர்ந்திருக்க.. சற்று நேரம் அமைதிகாத்தவன்.. “கிளம்பலாமாம்மா?” என்றான்.
மகனை முறைத்து.. மங்ளத்தை பார்த்த சுப்புலஷ்மி, “உன் கல்யாணம் தப்புனு நான் நினைப்பேனா மங்களம்?” என்றார் வருத்தத்தோடு.
மங்களம் அமைதியாகவே இருக்க, “முகூர்த்தத்துக்கு இரண்டு நாள் இருக்க கல்யாணம் நிக்கவும், எனக்கு என்ன பண்றதுனே தெரியல, அந்த மஹிமா புள்ளைகிட்டயே பேசி பார்க்கலாம்ன்னா முகிலன் வேணாம்னுட்டான்..
எவ்வளோ இருந்து என்ன பிரியோஜனம்? என் மகன் கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்காம ஆகிடுச்சேனு ரொம்ப வேதனையாகிடுச்சி,
விருப்பம் இல்லாம இருந்திருந்தா, கல்யாணம் வேணாம்னு கண்டிப்பா திடமா சொல்லியிருப்பா.” என்றவர் சற்று நேர அமைதிக்குப் பின்னே, “என் கல்யாணத்தைப் பத்தி இன்னைக்கு நேத்தா பேசுறாங்க? இருபது வருசமா பேசிட்டுத்தான் இருக்காங்க.
என் கல்யாணத்தைப் பத்தி யார் என்ன சொன்னாலும் இப்போல்லாம் நான் பெருசா எடுத்துக்கிறதில்ல, ஆனா நிலாவால அப்படி இருக்க முடியாதுன்றதுதான் என் கவலை..
ரேவதி பேசுனதை நிலாவால அவ்வளோ சீக்கிரம் மறக்க முடியாது, இயல்பாவே பிருந்தாவை தவிர்த்து உங்க வீட்டுல வேற யாரோடவும் பேசமாட்டா, இந்த பிரச்சனைக்கப்புறம் ரேவதியோட நிலா பேசுறதுக்கு நிறைய காலம் தேவைப்படும்.
அதை மனசுல வச்சிக்கிட்டு திரும்பவும் என் கல்யாணத்தைப் பத்தி நிலாகிட்ட ரேவா பேசிடப்போறா.. அப்புறம் என் பொண்ணை என்னால உயிரோட பார்க்க முடியாது.” என கண்ணீர் வடித்தார் மங்களம்.
“பல வருசமா என் சுக துக்கங்கள்ல பங்கெடுத்திருக்கிங்க.. நான் பழசை மறக்கல.. ஆனாலும் நீங்க நிலாவை பொண்ணு கேட்ட விதமும், ரேவதி பேசின பேச்சும், அதுக்கு தமிழ் அப்பாகிட்ட நீங்க மன்னிப்பு கேட்ட விதமும், என்னை இப்படித்தான் யோசிக்க வைக்குது.
முகிலன்மேல பல மடங்கு நம்பிக்கை இருந்தாலும், என் அப்பாம்மா போனதுக்கப்புறம் என் பொண்ணுக்கு பாதுகாப்பா இருந்தவங்க, நிலாவைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்கன்னு என்னை நானே தேத்திக்கிட்டாலும், எப்படி வாழ்வாளோனு அடி மனசுல ஒரு பயம் இருந்துட்டேதான் இருக்கு.” என்றார் வேதனையோடு.
சுப்புலஷ்மி.. “மறு கல்யாணத்துக்கு நீ மறுத்தப்போ, இந்த கல்யாணம் செய்தே தீரனும்னு உன் அப்பாம்மாகிட்ட வற்புறுத்தினதே நானுன் என் புருசனும்தான்.
முகிலன் மேல உள்ள பாசத்துல, எப்படியாவது கல்யாணத்தை நடத்தியாகனும்னும் ரேவதி பேசிட்டா,
முகிலனுக்காகத்தான் பேசினான்னாலும், அவன் பேச்சை ரேவதி மீறமாட்டானு உனக்கு தெரியும்தான? உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே, இனி நிலாவைப் பத்தி பேசினா என் உறவை இழந்துடுவனு சொல்லி மிரட்டி வச்சிருந்தான்.
நிலா பக்கத்து வீட்டுப் பொண்ணா இருக்கும்போதே ரேவாவை மிரட்டி வச்சவன், இனி பொண்டாட்டியான பின்ன பேச விட்டுடுவானா?புருசன், பிள்ளையை விட ரேவதியும் முகிலனைத்தான் முக்கியமா நினைப்பானு உனக்கு தெரியும்தான?
ரேவாவும் யார் பேச்சை கேட்கலன்னாலும் முகிலன் பேச்சை மீறவேமாட்டா. நீ பயப்படாத.” என்றார் நம்பிக்கையோடு.
தேன்நிலா வான்முகிலன் இருவருக்கும் பிடித்தம் இருக்கும்போது, மங்களத்திற்கும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லையே..
அதோடு, அன்று பொய்யாய் மன்னிப்பு கேட்டதை நினைத்தவருக்கு இன்றைய பேச்சு அப்படியில்லை எனப்புரிய, மனக்கசப்பு குறைந்தது. நிம்மதியான பார்வை பார்த்தார் மங்களம்.