“ஆமாம் மாமா.” என்றவன், எதற்கு வந்தார் என்று விளக்கி, நாளை அவர் வீட்டிற்கு விருந்துக்கு போகனும் என்ற செய்தியையும் சொன்னான்.
மங்களத்திடம் டீ யை வாங்கிக்கொண்டு.. “மார்கழி முடிஞ்சி, தையில நிலாவை அழைச்சிக்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற மங்களம்?” என்றார்.
மங்களம் கணவனைப் பார்க்க.. “சரிம்மா, உங்க விருப்பப்படியே செய்துடலாம்.. மனசளவுல நிலா தேறி வரதுக்கு இந்த பத்து நாள் உதவியா இருக்கும்.” என்றார் லிங்கேசன்.
ரிசப்ஷன் பற்றி பேசலாம் எனத்தான் நினைத்தான், ஆனால் தேன்நிலா வேண்டாமென்றிருக்க, முதலில் அவளிற்கு புரிய வைத்து பின்னர் இவர்களிடம் பேசலாம் என அமைதியானான் வான்முகிலன்.
** ** ** ** ** **
மாலை நான்கு மணிக்கு வேலை முடிய, தன்போல் கணவன் நினைவு வந்தது தேன்நிலாவிற்கு. இப்படி பொசுக்குனு இணங்கிட்டோமே என நேற்றிரவு நடந்ததை நினைத்தவளிற்கு வெக்கம்தான் வந்தது.
ரிசப்ஷன் வேண்டாமென சொல்ல வந்து, மனதில் உள்ளதை உளறியதோடு விட்டுருக்கலாம். முத்தமிட்ட பின்னே, நானொன்னும் உங்களை பிடிச்சிருக்குனு சொல்லல, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு, அது எனக்கு பிடிச்சிருக்குனுதான் சொன்னேன்..
என தன் மனதை மறைக்க முயற்சித்து மேலும் மேலும் அவனிடம் வசமாய் சிக்கிக்கொண்டதை நினைத்து, நீ சரியான கிறுக்கு நிலாடி.. அவனே கேடி, மனசுல உள்ளதையே கண்டுபிடிச்சிடறான், இதுல இப்படி உளறி கொட்டினா சும்மா விடுவானா? என வெக்கத்தோடு தன்னை தானே சலித்துக்கொண்டாள்.
தன் தெருவிற்குள் நுழைந்ததுமே வான்முகிலன் வீட்டினை பார்த்தவளிற்கு இத்தனை நேர இதமான மனநிலை மாறி, தான் எப்படி அவனின் வீட்டினில் வாழ்வது.? தன் தந்தை எதிர்பார்ப்பதை போல ஆன்ட்டி நம் வீட்டிற்கு வந்து முறையாய் பேசுவார்களா? ரேவதி மீண்டும் அன்னையின் திருமணத்தை பற்றி தவறாய் பேசாமல் இருப்பாங்களா? என்ற பதட்டத்தோடு தன் வீட்டை நெருங்க, அங்கே வான்முகிலனின் காலனியோடு, மற்றொன்றும் இருக்க, தேன்நிலாவின் பதட்டம் மேலும் அதிகமானது.
அவனின் அம்மாவாக இருக்குமோ என நினைத்தபடி, மிகுந்த பதட்டத்தோடு உள்ளே நுழைந்தாள் தேன்நிலா.
இந்த நேரத்திற்கே மகள் வந்திடுவாள் என எதிர்பார்க்காத லிங்கேசன்.. “வாம்மா.. ஆறு மணிக்கு மேலதான் வருவேனு நினைச்சேன், சீக்கிரம் வந்துட்ட.” என பாராட்ட, தன் அம்மாவின் வருகையை எப்படி எதிர்கொள்வாளோ என நினைத்த வான்முகிலன் தேன்நிலாவையே பார்த்திருந்தான்.
“அப்பா.. முகம் கழுவிட்டு வரேன்.” என தனதறைக்குள் புகுந்துகொண்டாள் தேன்நிலா.
பின்னோடு சென்ற லிங்கேசன், “வீட்டுக்கு வந்தவங்க யாராயிருந்தாலும் வாங்கனு சொல்லனும் நிலாம்மா.” என்றார்.
“அப்பா..” என தேன்நிலா தடுமாற.. சுப்புலஷ்மி பேசியதை எடுத்துரைத்து, “உங்கம்மா கூட சமாதானம் ஆகிட்டா, வந்திருக்கிறது பக்கத்து வீட்டுக்காரங்க இல்ல, உன் மாமியார், அதுவும் சமாதானம் பேச வந்திருக்காங்க. நீ அவங்களோட உடனே பேசிக்கனும்னு சொல்லல, ஆனா பழசையே பிடிச்சிட்டிருக்காம, முகம் கழுவிட்டு வந்து டீயாவது வச்சிக் கொடு. அதுதான் நாம முகிலனுக்கு கொடுக்குற மரியாதை.” என்றார்.
“அ.. அ.. ப்பா..” என தடுமாற, “உனக்காகத்தான முகிலன் அவங்கம்மாகிட்ட பேசி சமாதானம் பேச அழைச்சிட்டு வந்திருக்கார். அப்போ நீயும் கொஞ்சம் இறங்கி வரனும்தான?” என பொறுமையாய் மகளிற்கு எடுத்துரைத்தார்.
தேன்நிலா தவிப்பாய் பார்க்க.. “சீக்கிரம் வா. உன் மாமியாருக்கு உன் கையால டீ கொடுத்துட்டா முகிலன் சந்தோசப்படுவார்.” என மகளை தேற்றி வெளியே சென்றார் லிங்கேசன்.
பத்து நிமிடமாகியும் தேன்நிலா வராமல் போகவே.. “நிலா உள்ள என்ன பண்ற? முகம் கழுவ இவ்வளோ நேரமா?” என மங்களமே அழைக்கவும் வெளியே வந்தாள் தேன்நிலா.
சுப்புலஷ்மி நிலாவின் முகம் பார்க்க, நிச்சயம் வெறுப்போ, பிடித்தமின்மையோ இல்லை, ஆனால் என்ன நடக்குமோ என்ற பதட்டம் அப்பட்டமாக இருக்க.. “முன்ன நீ லிங்கேசன் மங்களத்தோட பொண்ணு மட்டும்தான்,
இனி அப்படியா? என் மருமகள்.. உன்னையோ உன் குடும்பத்தையோ இனி தவறா பேசினா அது நம்ம குடும்பத்துக்குத்தான அசிங்கம்? நீ பயப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்காது.
ரேவாவும் அவ்வளோ மோசமானவ இல்ல, உன்னைப்போல அவளும் பாசத்துக்கு கட்டுப்பட்டவதான், தக்க நேரத்துல அது கிடைக்காத போனதால எங்க எதை பேசனும்னு வரைமுறை தெரியாம பேசிட்டா, இனி கண்டிப்பா பேசமாட்டா, அதுக்கு நானும் என் மகனும் கியாரண்ட்டி, போய் டீ வச்சிட்டு வா.” என் தன்மையாகவே எடுத்துரைத்தார்.
ரேவதியின் பிரச்சனை அனைத்தும் பிருந்தா சொல்லியிருக்கிறாள்தான், அதற்காக நம் அன்னையை பேசுவது எவ்விதத்தில் நியாயம்? என மனதினுள் கேள்வி எழுந்தபோதும், நேற்று தந்தை அறிவுருத்தியது, இன்று அன்னை சமாதானம் ஆகியிருப்பது, தற்போது சுப்புலஷ்மியின் பேச்சின் தன்மை, முக்கியமாக தன் மீதான வான்முகிலனின் காதலுக்காகவே சுப்புலஷ்மியின் பேச்சில் நம்பிக்கை வைக்க முயன்றபடி வான்முகிலனைப் பார்க்க, அவனும் தேன்நிலாவை ஆழ்ந்து பார்க்க, ஏதும் பேசாமல் கிச்சனுள் நுழைந்தாள் தேன்நிலா.
இத்தனை சீக்கிரமாக சுப்புலஷ்மி தன் வீட்டிற்கு வருவார்கள் என நினைக்கவில்லை தேன்நிலா. இப்படி சமாதானத்தைத்தான் பெற்றோர் எதிர்பார்த்தனர்? அதிலும் அன்னையே சமாதானம் ஆகும் அளவிற்கு பேசியிருக்கிறார்கள் என்றால், தனக்காக இல்லையென்றாலும் மகனின் திருமண வாழ்வு குறித்து யோசித்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? என தன்னை சமாதானம் செய்தபடி டீ வைத்து எடுத்து வந்தாள்.
அன்று அத்தனை உக்கிரமாக தன்னை வீட்டை விட்டு போ என கத்தியவள், சமாதானம் பேச போனாலும் சிறு வாதத்தையாவது முன் வைப்பாள் என்று நினைத்துதான் தேன்நிலா இல்லாதபோதே இங்கு வர எண்ணினார் சுப்புலஷ்மி.
ஆனால் தான் நினைத்தது போல் அல்லாமல், பதுமையாய் வந்து நின்ற மருமகளிடம்.. “ம்.. தாலி கட்டின பின்ன பொண்ணு பார்க்குறதும் நல்லாத்தான் இருக்கு.” என இயல்பாய் சொன்னபடி டீயை எடுக்க, அதிர்வாய் கண்விழித்தாலும் தேன்நிலாவின் முகம் செம்மையாகிட, வான்முகிலனின் அருகே டீ யை வைத்து தனதறைநோக்கி நடக்க, “டீயை எடுத்து என் கையில குடு.” என்றான் கட்டளையாக.
சங்கடமாய் பார்த்தபடி தேன்நிலா நிற்க, “ம்.” என ஒற்றைப் புருவம் உயர்த்தி கண்களால் டீ யை காட்டினான்.
“வாம்மா..” என லிங்கேசனும் சொல்ல, வேறு வழியில்லாமல் வான்முகிலன் சொன்னதை செய்ய, டீ யை வாங்கியவன், “நாளைக்கு காலைல வெளில போகனும், மாமாகிட்ட சொல்லியிருக்கேன், எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகிடு.” என்று அன்னையைப் பார்த்தவன்.. “எனக்கு வெளில போகனும்மா, நீ வரியா? இல்ல இன்னும் பேசனுமா?” என்க,
காலை எட்டு மணிக்கு தேன்நிலாவிற்கு அழைக்க, “ரெடியாதான் இருக்கேன், ஆனா போயே ஆகனுமா?” என்றாள் சங்கடத்தோடு.
“வாசலுக்கு வா, நான் வரேன்.” என தன் வீட்டிலிருந்து வெளியேறியவன், தேன்நிலாவின் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்க, “மாமா பாய்..” என கையை உயர்த்தினான் தமிழரசன்.
“நேத்து எங்கடா ஆளையேக் காணோம்?” என இயல்பாக சில நொடி மச்சானிடம் உரையாடி, “அருகே வந்த மனையிடம், “ஏறு.” என கதவை திறந்துவிட்டு, தமிழனிற்கு கையசைவில் விடை கொடுத்து காரினுள் அமர்ந்தான்.
“என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமானவர், என்மேல உண்மையான அன்பு வச்சிருக்கிறவர், விருந்துக்கு கூப்பிட்டிருக்கார். எப்படி மறுக்க முடியும்?
பாஸைப் பத்தி சொல்ல்லாம்னு நேத்து நைட் கால் பண்ணினேன், ஏன் நீ எடுக்கல?” என்றான்.
“எப்படி தூங்கினேன்னே தெரியல, ஏழு மணிக்கு தூங்கினவ, காலைல ஆறு மணிக்குத்தான் எழுந்தேன்.” என்றாள் பாவமாய் முகம் சுருக்கி.
திருமண பேச்சு ஆரம்பித்த பின்னேதான் மகளை சேலை கட்ட வற்புறுத்தினார் மங்களம், அதனால் தேன்நிலாவிடம் நிறைய சேலைகள் இல்லை, அன்று திருவிழாவில் கட்டியிருந்த பச்சை வர்ண சேலையைதான் கட்டியிருந்தாள்.
தேன்நிலாவின் அழகும், தூங்கியதற்கு காரணம் சொன்ன பாவனையும் மனதை கொள்ளை கொள்ள, “ஏன்? முந்தின நைட் சரியா தூங்கலயா?” என்றான் சிரிப்போடு.
வெக்கத்தோடு முறைக்க முயன்று தோற்றவள்.. “காலைல வேலைக்கு போகும்போது சொல்லிட்டு போகலாம்னு வாட்ஸாப் பார்த்தா லாஸ்ட் சீன் மூனு மணி காட்டுச்சி. தூங்கட்டுமேனு மெசேஜ் போடல. நீங்களும்தான் தூங்கலனு எனக்கு தெரியும்.” என்றாள்
அங்கே மட்டும் என்னவாம் என்ற பாவனையோடு, பதில் கொடுத்து வெற்றிப் பார்வை பார்த்த மனைவியை ரசனையாய் பார்த்தவன்.. “ம்.. தூங்கலதான்..” என ஒப்புக்கொண்டு, “ஆனா ஒன்னுமே நடக்காம தூக்கம் கெட்டதை நினைச்சாதான் ஆம்பிளையாடா நீன்னு எனக்கே அசிங்கமா இருக்கு.” என்றான் சிரிப்போடு.
தேன்நிலா தலைகுனிய, சூடியிருந்த மல்லிகை கழுதில் உறவாடியது அத்தனை அழகாய் இருக்க, “ஹ்ம்..” என பெருமூச்சிழுத்தவன்.. “நேத்து என்ன பேசினோம்னு அத்தை மாமா சொன்னாங்களா?” என்றான்.
இல்லையென்பதாய் தலையசைக்க.. “என் தொழில்பத்தி.. எனக்கு பிடிச்சதை பத்தி.. இப்படி எதுவும் கேட்க தோணலையா?” என்றான்.
“ம்ஹும்.” என்றவள்.. “ஆமா.. எதுக்கு இனி நிலாவை மேல அனுப்பாதிங்க, எனக்கு பேசனும்னா ஃபோன்ல பேசிக்குவேனு அப்பாம்மாகிட்ட சொன்னிங்க? அதை என்கிட்டயே சொல்லியிருக்கலாமில்ல? அப்பா ரொம்ப சங்கடப்பட்டார்.” என குறைபட்டாள்.
“நீ சொன்னா மாமா உன்னை மேல அனுப்பாம இருப்பாரா?” என்க.. தேன்நிலா தடுமாற.. “மாமா சொல்லித்தான் நீ மேல வந்திருப்பனு எனக்கு தெரியும். மாமா சொல்லி தினமும் நீ மேல வரது உனக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம். அதான் மாமாகிட்ட அப்படி சொன்னேன்.” என்றான்.
“உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்றவள் அதற்கு விடையளிக்கும் முன்னே, “அன்னைக்கு நைட் எதுக்கு சடார்ன்னு வெளில போய்ட்டு டென்ஷனா நடந்துட்டிருந்திங்க?
தொழில்ல எதாவது பிரச்சனையானு அன்னைக்கே கேட்க நினைச்சேன், உங்க முகம் பார்க்க ஒருமாதிரி இருக்கவும், அந்த நேரம் கேட்டா தப்பாகிடுமோனு கேட்கல..” என்றாள் பரிதவிப்பாய்.
அன்று முத்தமிட்ட பின்னே உணர்வுகளை கட்டுப்படுத்த வான்முகிலன் போராடியது அவனிற்குத்தானே தெரியும்.. இனி தன் வீட்டிற்கு அழைத்து வரும்வரை இவளை நெருங்கவே கூடாது என அன்றே முடிவெடுத்ததால்தானே இனி நிலாவை மேலே அனுப்பாதீர்கள் என லிங்கேசனிடம் சொன்னான்.
தன் உணர்வறியாத மனைவியின் பரிதவிப்பு முகிலனிற்கு சிரிப்பை வரவழைக்க, “ம்.. உன் வீட்டு மாடியில வாக்கிங் போகனும்னு தோணுச்சு, அதான் நடந்துட்டிருந்தேன்.” என்றான் நக்கலாக.
பொய் சொல்கிறான் எனப்புரிய.. “சொல்லாட்டி போங்க.” என பழிப்போடு முணக, “ஏய்.. நீ பேசவே பேசாத.என்னை டிரைவ் பண்ண விடு.” என சிரிப்போடு சொல்லி காரோட்டுவதில் கவனமானான்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, செந்தாமரை வீட்டினை அடைய.. செந்தாமரை கொடுத்த வரவேற்பில் அசந்து போனாள் தேன்நிலா.
போறது எம்.பி வீடும்மா, பார்த்து கவனமா பேசனும். உன்னால வான்முகிலனுக்கு கெட்ட பேர் ஆகிடக்கூடாது என தந்தை அத்தனை முறை சொல்லியிருக்க, இங்கே வந்தபின்னே, இவர் உண்மையில் எம்.பி தானா? என்றிருந்தது தேன்நிலாவிற்கு.
வான்முகிலனை மகன்போல் பாவிப்பது மட்டுமல்லாமல் அவரின் மொத்த குடும்பமும் இத்தனை பாசமாய் இருக்கிறார்களே? என்னதான் லாரி ஓனர் என்றாலும், ஒரு எம்.பி இத்தனை பாசம் காட்டும் அளவிற்கு அப்படி என்னதான் இவர்களுள் பிணைப்பிருக்கும்?
செந்தாமரையை பலமுறை டி.வி சேனல்களில் பார்த்திருக்கிறாள். ஊழல் செய்யாத நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரெடுத்தவர். ஆனாலும் இவர்களுள் எப்படி தொடர்பு உண்டாகியிருக்கும்? என்ற எண்ணமும், வீட்டின் பிரம்மாண்டமும், ரௌடிகளைப் போல் காட்சியளிக்கும் பாதுகாவலர்களின் தோற்றமும், பயத்தை உண்டாக்க, தேன்நிலாவின் முகம் அதனை அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க..
மனைவிக்கு சொல்லி புரியவைக்க முடியாமல் வான்முகிலன் தவிக்க.. “பாப்பாகிட்ட நான் பேசுறேன் முகிலா.” என்றார் செந்தாமரை.