“பாஸ்..நான் சொல்லிக்கிறேன்.” என தடுத்த வான்முகிலன்.. “நிலா என்மேல நம்பிக்கையிருக்கில்ல? எதுக்கு இவ்வளோ பயம்?” என அதட்டி, “விருந்துக்கு வந்த இடத்துல இப்படித்தான் நடந்துப்பியா?” என முனுமுனுத்தான் முறைப்பாக.
அச்சோ.. வந்த இடத்தில் இப்படி இருந்தால் கணவனிற்கு கெட்ட பெயராகிடுமே, என தன்னை சுதாரிக்க முயன்று.. “நா.. நா.. என்ன பண்ணினேன்?” என கலக்கமாய் சொன்னவள், “எனக்கு பயமில்லயே.” என்றாள் வரவழைத்த சிரிப்போடு.
“எம்.பி வீடுன்னா இவங்கள்லாம் இருப்பாங்கனு கூட தெரியாத பச்சபிள்ளையா நீ?” என முறைக்க.. “முகிலா.. நான் பேசிக்கிறேனு சொல்றேன்ல?” என அதட்டிய செந்தாமரை.. மகளைப் பார்க்க.. ஜுஸ்ஸை நீட்டவும், வாங்கியவர், “இப்படி வந்து உக்காரும்மா.” என சோபாவில் அமரவைத்து தானும் அருகமர்ந்து, ஜுஸை நீட்டி, “குடிம்மா.. முகிலன் எனக்கு எவ்வளோ முக்கியமானவன்னு சொல்றேன்.” என்றார் தன்மையாக.
“பாஸ்.. நாளைக்கு நானே சொல்லிக்கிறேன், இப்போ சாப்பிடலாம். எனக்கு பசிக்குது.” என்றான் வான்முகிலன்.
“என் வீட்டுக்கு வந்துட்டு கலக்கத்தோடயும், பயத்தோடயும் கிளம்பினா என்னால நிம்மதியா இருக்க முடியுமா? நீ வேற.. பாப்பா வேறையா? முகிலன் பொண்டாட்டிக்கு தெரியறதால எனக்கு எந்த பிரச்சனையும் வராது.” என வான்முகிலனை நம்பிக்கையோடு பார்த்து, பின்னே நிலாவைப் பார்த்தார்.
நிலா முகம் தயக்கம் கொள்ள, அங்கிருந்த வேலையாட்கள், பாதுகாவலர்கள் அனைவரையும் வெளியே போகப்பணித்து, அருகிலிருந்த மற்றொரு சிறிய ஹாலுக்கு அழைத்துப்போனார் செந்தாமரை.
மிகுந்த சங்கடத்தோடு தேன்நிலா அமர்ந்திருக்க, மகளையும் வர சொல்லி அருகே அமர்த்திக்கொண்டு, கனிவாய் தேன்நிலாவைப் பார்த்த செந்தாமரை.. “நான் நேர்மையான அரசியல்வாதிதான்ம்மா, ஆனா புள்ளைங்களுக்கு சரியான அப்பா இல்ல, இதுல பெரிய கொடுமை என்னனா.? அரசியல்ல நான் எப்படி கடமை தவறாதவனோ அதேபோலத்தான் வீட்டுக்கும் நல்ல குடும்பத் தலைவன்னு நினைச்சிட்டிருந்திருக்கேன்.”
வான்முகிலன் முகம் அதிருப்தியைக் காட்ட, “ச.. சார்.. நான் கொஞ்சம் பயந்துட்டேன்றது உண்மைதான். ஆனா உங்களை தவறா நினைக்கல.” என்றாள் திணறலாக.
“பயம் போனது சந்தேசம்தான். ஆனா முகிலன் பொண்டாட்டிகிட்ட எனக்கு கொஞ்சம் பேசனும்.” என்றார் தன்மையாகவே.
சற்றுமுன் வான்முகிலன் மிரட்டியதை நினைத்து.. “இல்ல.. எதோ நான் தெரிஞ்சிக்க கூடாத விசயம் போல.. எனக்கு தேவைன்னா அவங்களே சொல்லுவாங்க, நாம சாப்பிடலாம் சார்.” என்றாள் மறுப்பாக.
“ம்.. சரியான பொண்ணைத்தான் முகிலன் தேர்ந்தெடுத்திருக்கான்.” என முகம் மலர்ந்த செந்தாமரை.. “இந்த ஒரு விசயம் மட்டும் யார் எப்படி கேட்டாலும் முகிலன் சொல்லமாட்டான்ம்மா..” என பெருமையாய் சொல்லி,
“வீட்டைப் பார்த்து பயப்படாதம்மா, இந்த வீடு எங்க பரம்பரை சொத்து, அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் என் பரம்பரை சொத்துல கொஞ்சம் இழந்திருக்கேனே தவிர, புதுசா எந்த சொத்தும் வாங்கினதில்ல..
ஆறேழு தலைமுறையா விவசாயம்தான் எங்க பரம்பரை தொழில்.. கோடிக்கணக்குல சொத்திருந்தாலும் என் அப்பா தலைமுறை வரை அஞ்சாவதுக்கு மேல யாரும் படிச்சதில்ல, பரம்பரையிலயே நான்தான் காலேஜ் வரைக்கும் படிச்ச முதல் பட்டதாரி. சென்னை அம்பேத்கர் யுனிவர்சிட்டியில லா படிச்சேன்.
படிப்பு கொடுத்த பக்குவம்.. உக்கார்ந்து சாப்பிட்டாலும் பத்து தலைமுறைக்கு சொத்திருக்கும்போது, நாம ஏன் பொதுப்பணி செய்யக்கூடாதுனு தோணுச்சு. இருபத்து மூனு வயசுலயே கவுன்சிலர்க்கு நின்னேன், அப்போலாம் ஊருக்குள்ள யார்கிட்டயும் நான் பேசினது கூட கிடையாது, பலகுடும்பங்களுக்கு படியளக்குற முதலாளி பையன் கவுன்சிலர்க்கு நிக்குறானாம்னு எங்கப்பாவோட செல்வாக்கால மட்டும்தான் ஜெயிச்சேன்.
அஞ்சு வருசத்துக்கப்புறம் எம்.எல்.எ ஆனேன், கட்சி தொண்டுனு வீடே தங்கமாட்டுக்கிறேனு அப்பா கல்யாணம் ஏற்பாடு செய்துட்டார். பிள்ளைங்க காலேஜ் போற நேரம் எம்.பி ஆகிட்டேன், பொறுப்புகள் அதிகமாகவும் பிள்ளைகளோட ஒட்டுதலே இல்லாம ஆகிடுச்சி..
பாப்பா போக்கு சரியில்ல, இருபத்தி ஆறு வயசாகுது, கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கனு என் பொண்டாட்டி சொல்லிட்டேதான் இருந்தா, என் பொண்ணை கேட்டா அம்மா தேவையில்லாம பயந்துக்கிறாங்கப்பா, ஃப்ரண்ட்ஸோட கல்யாணம், பேச்சுலர்ஸ் பார்ட்டினு கிளம்பினாக் கூட பயந்துக்குறாங்கனு சொல்லவும், அவ பக்குவமாத்தான் இருக்கானு என் பொண்டாட்டியை அடக்கினேன்.
என் அப்பா என்னை சுதந்திரமா விட்டதை போல, என் பிள்ளைகள் விருப்பு வெறுப்பையும் மதிக்கனும்னு பொண்ணை அவ விருப்பத்துக்கு விட்டேன். சுதந்திரம் கொடுத்தது தப்பில்ல, ஆனா பொண்ணு எங்க போறா? அவளோட ஃப்ரண்ட்ஸ் யார்? கல்யாணம் ஏன் வேணாம்ன்றா? அவளோட நாட்டம் எதுல இருக்குனு கூட தெரிஞ்சிக்காத விட்டதுதான் பெரிய தப்பாகிடுச்சி..” என வேதனையடைந்து..
“எட்டு வருசம் முன்ன, ஒரு ஃபோன்.. நீ செந்தாமரையா? உன் பொண்ணு பேரு என்னனு அவ்வளோ கோபமா கேட்டான்.
என் பொண்ணு பேரு மகிழ்மதினு சொன்ன அடுத்த நிமிஷத்துலயிருந்து அஞ்சு நிமிசம் வரை அடைமழை பேய்ஞ்சமாதிரி திட்டி தீர்த்து, ஒரு ஹோட்டல் பேர் சொல்லி அங்க வரசொன்னான்.
அவன் சொன்னது சென்னையில இருக்க ஹோட்டல், நான் அப்போ டெல்லில இருந்தேன், என் பொண்ணு பேரை சரியா சொன்னதாலல்லாம் நீ சொல்ற இடத்துக்கு என்னால வரமுடியாது, போனை வைடானு திட்டிட்டு வச்சிட்டேன்.
ஆனாலும் உள்ளுக்குள்ள சின்ன நெருடல், என் பொண்டாட்டிக்கு போன் சேய்து மகிழ்மதி வீட்டுல இருக்காளானு கேட்டேன், அவ டூர் போயிருக்கா, வர இரண்டு நாளாகும்னு சொன்னானு வீட்டுல சொன்னாங்க.
திரும்பவும் முன்ன வந்த நம்பர்லயிருந்து போன்.. என் பொண்ணு டூர் போனதை தெரிஞ்சிக்கிட்டு யாரோ பணம் பறிக்க பேசுறானுங்கனு திரும்பும் கட் பண்ணிட்டேன்.
அடுத்த நாள் டெல்லியிலயிருந்து வீட்டுக்கு வந்ததும் அவ ஃப்ரண்ட்ஸ்க்கு போன் செய்து விசாரிச்சா, டூர் ஏதும் இப்போ போகலனு சொன்னாங்க, எனக்கு ரொம்ப பதட்டமாகிடுச்சி. மதியம் போல என் பொண்ணு நம்பர்லயிருந்து போன் வந்தது.
ஆனா என் பொண்ணு பேசல, ஒரு நாள் முன்ன பேசினவன்தான் பேசினான். கோபமா இல்லாம, சார் தயவு செய்து நான் சொல்ற இடத்துக்கு வாங்க, உங்க பொண்ணு என்னோடதான் இருக்காங்கனு தணிவா பேசினான்.உடனே சென்னைக்கு போனேன்.
அங்க முகிலன் ஜட்டி பனியனோட இருந்தான். என் பொண்ணு முகிலன் டிரஸ்ஸை போட்டுருந்தா.. ஃபோன் செய்தா என்ன ஏதுனு கேட்கமாட்டிங்களா? அவ்வளோ பெரிய புடுங்கியா நீங்கனு திட்டி, நேத்துலயிருந்து சோறு தண்ணியில்லாம இப்படித்தான் உக்கார்ந்துட்டிருக்கேன்னு கத்தினான்.
ஆனா என் பொண்ணு பேசவேயில்ல, மகிழம்மானு கன்னத்தை தட்டினேன்.. அவங்களுக்கு போதை இன்னும் தெளியல, அவங்க போன்லயிருந்து பேசினா நம்பரை வச்சி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுவாங்கனுதான் என் போன்லயிருந்து பேசினேன்.
நான் ஒரு லாரி டிரைவர்.. ஒன்பது மணிபோல சிட்டையை தாண்டி போய்ட்டிருந்தேன், அங்க ஒரு டீ கடையை க்ராஸ் பண்ணும்போது, ஹைவேல நின்னுட்டிருந்த காருக்குள்ள தொடை வரை துணியில்லாத உங்க பொண்ணோட கால் தெரிஞ்சது, லாரியை ரிவர்ஸ் எடுத்து உள்ள பார்க்கவும் மூனு பேர் இருந்தானுங்க..
கூட இருந்த டிரைவர்ககிட்ட, அந்த பொண்ணு தெரியாமத்தான் இவனுங்ககிட்ட மாட்டியிருக்கு, அவனுங்களும் போதையிலதான் இருக்கானுங்க, நாலு தட்டு தட்டி பொண்ணை லாரிக்குள்ள ஏத்தினதும், நீ லாரி எடுத்துடுனுட்டு முகிலன் கீழ இறங்கியிருக்கான்.
ஆனா முகிலன் நினைச்சது போல இல்லாம பெரிய கத்தி, உருட்டு கட்டைலாம் வச்சிருந்திருக்கானுங்க, உள்ள இருக்க டிரைவர்கிட்ட, தனியா போனா கொன்னுடுவாங்கனு காரை அடிச்சு தூக்குடானு இன்னொரு டிரைவர்கிட்ட சொல்லவும், அவனும் லாரியை ஸ்டார்ட் செய்து வேகமா காரை நெருங்கவும் பயந்து விலகியிருக்கானுங்க, அந்த நேரம் என் பொண்ணை காப்பாத்தி லாரில போட்டுட்டு கிளம்பியிருக்கான்.
கொஞ்ச தூரம் போனதுக்கப்புறம், எதாவது கடையில டிரஸ் வாங்கலாம்னு முகிலன் இறங்கியிருக்கான். அப்போதான் என் பொண்ணை தேடிட்டிருக்கானுங்கனும், கடத்துனவனுங்க பெரிய இடம்னும் முகிலனுக்கு தெரிய வந்துருக்கு.
நம்மளை ஏது அடையாளம் சொல்லியிருந்தா பொண்ணை காப்பாத்த முடியாதேனு, டிரஸ் எடுக்குற எண்ணத்தை கைவிட்டு கிளம்பிட்டாங்களாம். இரண்டு மணிநேர டிராவலுக்கப்புறம் முகிலனுக்கு தெரிஞ்ச லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு, அங்கையே வேற லாரி டிரைவருக்கும் ஏற்பாடு செய்து, லாரியை அனுப்பிட்டு முகிலன் என் பொண்ணோடவே தங்கியிருந்திருக்கான்.
அன்னைக்கு நைட் இரண்டு மணிக்கே என் பொண்ணு போட்டோவை காட்டி, விசாரிச்சானுங்கனு லாட்ஜ் ஓனர் சொல்லியிருக்கார். வெளில போனா ஆபத்துனு புரியவும், என் பொண்ணு வளையல், செயின், கம்மல்லாம் கழட்டி லாட்ஜ் ஓனருக்கு கொடுத்து, காட்டிக் கொடுக்காதிங்க, பாவம் தெரியாம சிக்கியிருக்குனு கெஞ்சவும், நாளைக்கெல்லாம் காலி பண்ணிடனும்னு கண்டிஷனோட லாட்ஜ் ஓனர் சம்மதிச்சிருக்கார்.
விசயம் வெளில தெரிய வேணாம்னு லாட்ஜ் ஓனர் சமாதானம் ஆகும் அளவுக்கு பணத்தை கொடுத்து, முகிலனுக்கு வேற டிரஸ் வாங்கி கொடுத்து, சாப்பிட வச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.
அவனுங்க திட்டமிட்டு கடத்தியிருக்காங்கன்னாலும், உங்க பொண்ணுக்கும் போதை பழக்கம் இருக்குனு முகிலன் சொல்லவும் என்னால நம்பவே முடியல.
முகிலன் சொன்னது உண்மைனு என் பொண்ணோட போனை வச்சி தெரிஞ்சுக்கிட்டேன், விசயம் வெளில தெரிஞ்சா குடும்ப மானம் போய்டும்னு முகிலன்கிட்ட கெஞ்சவும், வெளில சொல்றத்துக்குத்தான் உயிரை பணையம் வச்சி சோறு தண்ணி கூட சாப்பிடாம இருந்து காப்பாத்தினேனானு திட்டினான்.
நான் எம்.பின்ற விசயம் கூட, அப்போ முகிலனுக்கு தெரியல. யார் என்னனே தெரியாம என் பொண்ணை காப்பாத்தியிருக்கான். இந்த உதவிக்கு என்ன செய்தாலும் தகாது, பணம் வேணுமானு கேட்க அசிங்கமா இருந்தது. வெறும் கையோட அனுப்பவும் மனசில்ல, என்ன வேணும்னு கேட்டேன்..
என் பொண்ணு இருந்த கார் நம்பரை சொல்லி, உங்க பொண்ணை கடத்தினவன் பெரிய இடம் போல, கார்ல இருந்த மூனு பேருக்கும் என்னை நல்லா அடையாளம் தெரியும்.. என் குடும்பத்துக்கு நான் ரொம்ப ரொம்ப முக்கியம்.. அவனுங்களால எனக்கெதாவது பிரச்சனை வந்தா சொல்றேன், அப்போ உதவி செய்தா போதும்னுட்டு கிளம்பிட்டான்.
என் வாழ்நாள்ல என்னை அதட்டி பேசின முதல் ஆளான முகிலனை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சி. இவனை மாதிரி துணிவான நல்ல குணமுள்ள ஆட்களை விட எனக்கு மனசு வரல.. என் பொண்ணை போதை பழக்கத்துலயிருந்து மீட்டனும்னு எந்தளவுக்கு யோசிச்சேனோ.. அதே அளவுக்கு முகிலனுக்கு எதாவது செய்தே ஆகனும்னு அவனை கேட்காமலே முடிவு பண்ணிட்டேன்.
வரப்போற எலக்ஷன்ல எம்.எல்.எ க்கு வேட்புமனு கொடு, அதுக்கான செலவை நான் பண்றேன், உனக்காக நானே ஓட்டு கேட்குறேன், உன்னை மாதிரி நல்லவன்தான் பொது வாழ்வுல ஈடுபட தகுதியான ஆள்னு எவ்வளவோ சொன்னேன்.
உங்க பொண்ணை காப்பாத்திட்டதுக்காக என்னை பெரிய தியாகினு நினைச்சிக்காதிங்க சார், என் அம்மா, அக்கா, தங்கையை நல்லபடியா பார்துக்கிட்டேன்னா அதுதான் என் வாழ்நாள் சாதனை. இப்போனு இல்ல, எப்பவுமே எனக்கு என் குடும்பம்தான் முக்கியம். இந்த அரசியல்லாம் எனக்கு சரிபட்டு வராதுனு திடமா மறுத்துட்டான்.
சொந்தமா லாரி வாங்கி தரேனு சொன்னேன், உங்க நன்றி கடனை அடைக்க, என்னை வாழ்நாள் கடன்காரனாக்கிடாதிங்கனு அதையும் மறுத்திட்டான்.
நீயே சொல்லும்மா, முகிலன் செய்த உதவி சாதாரண உதவியா? எங்க காட்ல வேலை செய்யுறவங்களுக்கே உழைப்பை மிஞ்சின ஊதியம் தரவங்கனு பெயரெடுத்த பரம்பரை எங்க பரம்பரை. என் குடும்ப மானத்தை காப்பாத்தினவனை சும்மா விட்டுட்டேனா என் கட்டை வேகுமா.?
பணமும் வாங்க மாட்டான், அரசியலும் வேணாம்னுட்டான், அதான்.. அவனுக்கு தெரிஞ்ச தொழில்ல முன்னேறுற மாதிரி செய்யலாம்னு யோசிச்சி பர்மிட் வாங்கி தர முடிவெடுத்தேன்.
என் வயசுக்கு இது சரிவராது சார்னு அதுக்கும் ரொம்ப தயங்கினான்.. வயசுக்கும் இதுக்கும் சம்மதமில்லை, இவ்வளோ சின்ன வயசுல ஸ்டேட் டு ஸ்டேட் லாரி ஓட்டுறதே பெரிய விசயம், அதோட நல்ல மனசிருக்கு, இதைவிட வேற தகுதி என்ன வேணும்னு சமாதானம் செய்து பர்மிட் வாங்கி கொடுத்தேன்.
இத்தனை வருச அரசியல் வாழ்க்கையில என் பவரை யூஸ் பண்ணி நான் செய்த ஒரே காரியம் முகிலனுக்கு நேஷனல் பர்மிட் வாங்கி தந்தது மட்டும்தான். அதுவும் அஞ்சு லாரிக்குத்தான் வாங்கி கொடுத்தேன்.
பேச்சுத் திறமை, நேர்மை, டிரைவர் க்ளீனர்கிட்ட நடந்துக்கிற விதம், ஊழியர்களுக்கு உழைப்புக்கேத்த ஊதியம் கொடுக்குறது, அவங்க பாதுகாப்பை யோசிக்கிறதுனு தொழில்ல முகிலனோட ஆளுமை பார்த்து நானே பிரம்மிச்சிருக்கேன்.
அவனோட நல்ல மனசுக்கும் அயராத உழைப்புக்கும் பரிசா இன்னைக்கு முப்பது லாரிக்கு மேல பர்மிட் வச்சிருக்கான்.
அதுல வர வருமானத்துலதான் வாழ்றான், மத்தபடி எனக்கும் அவனுக்கும் இல்லீகல் பிஸ்னஸ் ஏதும் இல்லம்மா..” என்றார்.
தெளிவான தேன்நிலா முகம் கண்டு நிம்மதியடைந்த செந்தாமரை.. “அன்னைக்கு பாதிக்கப்பட்ட மகிழ்மதி இவங்கதான்.” என அருகில் அமர்ந்திருந்த மகளை காண்பித்து.. “முகிலனை விட ரொம்ப மூத்தவளா போய்ட்டா, இல்லைனா முகிலன் உனக்கு கிடைச்சிருக்கமாட்டான்.” என சிரித்து.. “மருமகனாக்கிக்க முடியாத குறையை போக்க மகனா ஏத்துக்கிட்டேன். அவன்தான் என்னை அப்பாவா ஏத்துக்காம பாஸ்னு சொல்லிட்டிருக்கான்.” என்றார் குறையாக.