வான்முகிலன் இரவு உணவை உண்டு தனதறைக்குள் சென்றிட, “ரேவா.. இன்னைக்கு நைட்டே நிலாகிட்ட பேசிடலாம்.” என்றார் சுப்புலஷ்மி.
ரேவதி.. “அம்மா.. முகிலன்கிட்ட கேட்காம அவகிட்ட கேட்டு என்ன பண்ண?” என்றாள்.
“குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கலனா செத்துடுவேனு பயமுறித்தி கூட முகிலனை சம்மதிக்க வச்சிடுவேன்.. ஆனா கடைசி நேரத்துல கல்யாணம் வேணாம்னு சொன்னவளுக்கு தகுந்த பாடம் சொல்லியாகனும்..
அவ வேணாம்னு சொன்னாலும் என் மகனை கட்டிக்க பொண்ணு ரெடியா இருக்கானு அவளுக்கும் அந்த குடும்பத்துக்கும் நிரூபிக்கனும்.. முக்கியமா.. என்மகனை வேணாம்னு ஏண்டா சொன்னோம்னு அந்த சிறுக்கி நினைச்சி நினைச்சி வேதனைப்படனும்.. அதுக்கு குறிச்ச தேதியில கல்யாணம் நடந்தாகனும்.” என்றார் சவாலாக.
“வேணாம்னு சொன்னவளை ஏன்மா நினைச்சிட்டிருக்க? என் கவலையெல்லாம் அவ மேல உள்ள கோபத்துல முகிலனுக்கு பிடிக்காததை செய்திடக் கூடாதுன்றதுதான்..” என்றாள் கவலையாக.
“நாம பார்த்து வளர்ந்தபுள்ள நிலா, வாழ்க்கை கொடுத்தமாதிரி இருக்கட்டும்ன்ற நல்ல எண்ணத்துலதான் போய் கேட்டேன், அந்த புள்ளைக்கு உன்னை கட்டிக்க சம்மதமாம்.. நீ என்ன சொல்றனு தன்மையா கேட்டா முகிலன் கண்டிப்பா சம்மதிச்சிடுவான்.” என நம்பிக்கையோடு சொல்லி…
“இப்போ எனக்கிருக்க கவலை நிலாவை சம்மதிக்க வைக்கிறதுதான்.. அவளை சம்மதிக்க வச்சிட்டா நைட் நிம்மதியா தூங்குவேன்..” என்றார்.
“நிலாவைப் பத்திலாம் எனக்கு கவலையில்ல, முகிலனை கட்டிக்க அவளுக்கு கசக்குமா? அதோட நாமகேட்டு அவளுக்கு மறுக்கத்தான் தைரியம் இருக்கா?” என சற்று செருக்காகவே சொல்லி..
“முகிலன்கிட்ட நான் பேசிக்கிறேன்.. முதல்ல போய் நிலாகிட்ட கேட்டுட்டு வந்திடலாம் வா..” என மகளை அழைத்தார் சுப்புலஷ்மி.
“அதுக்காக இந்த நேரத்திலயா? நல்லநேரம் பார்த்து ஏற்பாடு செய்த கல்யாணமே நின்னுபோய்டுச்சி, நைட் நேரத்துல போய் ஏடாகுடமாகிடப்போகுது, காலைல நிலாவோட அம்மாவை வர சொல்லி அவங்கள்ட்ட கேட்கலாம். அதுதான் முறையும் கூட..” என்றாள் ரேவதி.
“இப்போ பேசாம எப்போ பேசுறது? நாளைக்கு ஒருநாள்தான் குறுக்க இருக்கு, அடுத்தநாள் விடிஞ்சா முகூர்த்தம்.. அவங்கம்மாகிட்ட கேக்குறதை விட நிலாகிட்ட பேசுறதுதான் சரிவரும்.
நிலாகிட்டன்னா தன்மையா சொல்லலாம்.. சம்மதிக்கலனா வேற மாதிரி கூட கேட்டுப்பார்த்து எப்படியாவது சம்மதிக்க வச்சிடலாம். நிலா சம்மதிச்சிட்டா அவங்க அம்மா கண்டிப்பா சம்மதிச்சிடுவா. ஆனா நிலா சம்மதிக்கலனா அவங்க அம்மா சம்மதிக்கவேமாட்டா.. இப்போ இருக்கிற சூழல்ல நிலாவைத் தவிர வேற நல்லபுள்ள நமக்கு கிடைக்கமாட்டா..” என மகளை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.
** ** **
தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தங்கையிடமிருந்து மொபைலை வாங்கி இணைப்பை துண்டித்ததையே நினைத்திருந்த தேன்நிலாவிற்கு மனது ஆறவேயில்லை.
என்மேல எதாவது தப்போ.. இல்ல இவங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எதாவது பகையோ இருந்து தன்னிடம் பகைமை பாராட்டினால் இத்தனை வலி இருக்காது.. தன் அன்னையின் இரண்டாம் திருமணத்தை மற்றவர்களைப் போல இவனும் தவறாய் நினைத்திருக்கிறான் என நினைக்க மனது அதிலேயே உழன்றது.
மன அழுத்தம் அதிகமாக, ஒரு மணிநேரம் வரை பல சிந்தனையோடு அமர்ந்திருந்து, பிறகு வழக்கம்போல் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு யாரோ எதையோ நினைக்கட்டும்.. நாம் உண்டு படுத்துறங்களாம் என தோசை வார்த்து ஹாலுக்கு வர, கதவை தட்டும் சப்தம் கேட்கவே.. “யாரு?” என கேட்டவாறு கதவை திறக்க.. சுப்புலஷ்மியும் ரேவதியும் உள்ளே வந்தனர்.
இருவரையும் பார்த்ததும், தன் வீட்டிற்கா வந்திருக்கிறார்கள் என ரேவதியை நினைத்து அதிர்வடைந்தாலும்.. வான்முகிலன் திருமணத்திற்கு தன்னை அழைக்க சொல்லி இந்துபிருந்தா சொல்லியிருப்பாள். எனவேதான் வந்திருக்கிறார்கள் என சந்தோசித்து.. “வா.. வா.. வா.. வா.. ஆங்க ஆன்ட்டி. வாங்கக்கா.” என இன்முகத்தோடு திக்கினாள்.
அங்கிருந்த சோபாவில் இருவரும் உரிமையாய் அமர.. என்ன செய்வதென அறியாமல், தான் சாப்பிடுவதற்காக எடுத்து வந்த தண்ணீரை எடுத்து நீட்டினாள்.
ரேவதி வாங்கி குடிக்க பேரதிர்ச்சிதான் தேன்நிலாவிற்கு. ஏனெனில் இந்துபிருந்தா மட்டும்தான் தேன்நிலாவோடு பேசுவாள். சுப்புலஷ்மி.. எப்போவாவது வெளியே வரும் நேரங்களில் தேன்நிலா தென்பட்டால் பேசுவார். அப்படி நிகழ்வு எப்போதாவதுதான் நடக்கும்.
தான் தண்ணீர் குடித்ததை தேன்நிலா அதிர்வாய் பார்க்கவும், அதிலேயே பெருமையடைந்த ரேவதி.. “இதுக்கே அதிர்ச்சியானா எப்படி? இனி ஒன்னுக்குள்ள ஒன்னாகப்போறோம்.. இப்படி வந்து உக்காரு.. எதுக்கு வந்துருக்கோம்னு அம்மா சொல்வாங்க.” என்றாள்.
என்ன? ஒன்னுக்குள்ள ஒன்னாகப்போறோமா? என மேலும் அதிர்வானாள் தேன்நிலா.
“காலைல வந்து கேட்டுக்கலாம்னேன், நீதான இப்போவே கேட்கனும், இல்ல நைட் தூக்கம் வராதுனு சொன்ன? எதுக்கு அமைதியா இருக்க? நிலா என்னவோ ஏதோனு பார்த்துட்டிருக்கா.. பேசும்மா.” என ஊக்கினாள் ரேவதி.
“நிலா.. என் மகனோட கல்யாணம் நின்னுடுச்சி.” என்கவும்.. எப்படி? ஏன் நின்னுச்சி.? என உள்ளுக்குள் நினைத்தவளின் முகம் பேரதிர்ச்சியை காட்டியது.
சற்றுமுன் இதை சொல்லத்தான் பிருந்தா அழைத்திருப்பாளா? அவளின் அண்ணன் மீதுள்ள கோபத்தில் அவளின் அழைப்பை ஏற்காமல் விட்டது தவறோ என தற்போது யோசித்தாள்.
“கல்யாணம் நின்னுபோனது வேதனைதான்னாலும் அதுவும் நல்லதுக்குதான்னு இப்போதான் எனக்கு புரிஞ்சது.” என்றார் சுப்புலஷ்மி.
தன்னை ஒரு பொருட்டாக நினைத்து இதெல்லாம் பேசுவது இவர்கள்தானா என்ற அதிர்வில் இருந்தவளுக்கு தன்னிடம் எதோ சொல்ல முனைகிறார்கள், காரணமில்லாமல் வந்திருக்கமாட்டார்கள் எனப்புரிந்தது.
ஆனாலும் இத்தனை பெரிய விசயத்தை தன்னிடம் சொல்லி என்னாகப்போகிறது என விளங்காமல் போகவே.. “என்ன ஆன்ட்டி கல்யாணம் நின்னது நல்லதுக்குன்றிங்க?” என்றாள் புரியாமல்.
“எத்தனைதான் ஊரைக் கூட்டி நிச்சயம் செய்தாலும், முகிலனுக்கு நீன்னு கடவுள் எழுதியிருக்கும்போது அவளோட எப்படி கல்யாணம் நடக்கும்?” என்றார் பட்டென.
சுப்புலஷ்மியின் பேச்சில் அதிர்வான தேன்நிலாவிற்கு பேச்சு வராமல் போக.. ரேவதி.. “என்ன நிலா எதுவுமே பேசமாட்ற? முகிலன் கல்யாணம் நின்னதுக்கப்புறம் அவசரத்துக்காக உன்னை கேக்குறோம்னு நினைக்காத, என் தம்பியை கட்டிக்கிற குடுப்பினை உனக்குத்தான் இருந்திருக்கு, ஆனா எங்களுக்குத்தான் இது லேட்டா புரிஞ்சிருக்கு.” என சிரித்தாள் பெருமையோடு.
வான்முகிலனுக்கு தன்னை கேட்கும் தோரணையில் இருவர் மீதும் கோபம் வந்தபோதும்.. “இந்த நேரத்துல வந்து கல்யாணத்துக்கு கேக்குறிங்க? இது என்கிட்ட பேசுற விசயமா ஆன்ட்டி?” என்றாள் தன்மையாகவே.
“என் மகனோட அருமை தெரியாம அந்தபுள்ள கல்யாணம் வேணாம்னுட்டா, நாளை மறுநாள் முகிலனுக்கு கல்யாணத்துக்கு குறிச்ச முகூர்த்தநாள். இடையில நாளைக்கு ஒருநாள்தான் இருக்கு, அதான் இப்போவே வந்துட்டேன்… உன் கல்யாணத்துக்கு உன் விருப்பம்தான முக்கியம், அதான் முதல்ல உன்கிட்ட கேட்குறேன், நாளைக்கு உங்கம்மாகிட்ட பேசறேன்.”
உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்துக்கொண்டு என் அப்பாம்மாவை பொருட்டாக நினைக்காமல் என்கிட்ட இப்படி கேக்குறது எனக்கு பிடிக்கல என முகத்தில் அடித்தாற்போல் சொல்லத்தான் ஆசை. ஆனால் தன் தாத்தா பாட்டி இருக்கும்போது இவர்கள் கொடுத்த ஆதரவிற்காகவும், நடவாத விசயத்திற்கு எதற்காக பகைமை பாராட்டனும் என்றும்.. “இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல ஆன்ட்டி.” என்றாள் பொறுமையாகவே.
ரேவதி.. “ஹே.. நிலா.. நீ உன் குறையை நினைச்சியேது கல்யாணம் வேணாம்ங்காத, முகிலன் அதெல்லாம் பார்க்கமாட்டான்.” என்றாள் பெருந்தன்மையாக.
“எனக்கு என்ன குறை?” என்றாள் சற்று உயர்ந்த குரலில்.
ரேவதி.. “ப்ச்.. உனக்கு என்ன குறைனு உனக்கு தெரியாதா? தேவையில்லாத நேரத்துல எதுக்கு தேவையில்லாத பேச்சு? கல்யாணம் பேச வந்திருக்கோம். உனக்கு எந்த கலர் பட்டு வேணும்? கல்லுவச்ச நகை வேணுமா? இல்ல ப்ளைனாவானு கல்யாணப்பொண்ணு மாதிரி யோசி.. அப்போதான் நாளைக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணமுடியும்.
முகிலனை கட்டிக்கவும்.. எங்கம்மா போல மாமியார் கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கனும்னு உனக்கே தெரியும், ஆனாலும் உன் வாயால சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டினா எங்கம்மாக்கு நைட் நிம்மதியா தூக்கம் வரும்.” என்றாள் இயல்பாக.
தன் சம்மதமோ, தாய் தந்தை சம்மதமோ இவர்களுக்கு முக்கியமில்லை, என் திருமண நாளையும், நபரையும் இவர்களாக தேர்ந்தெடுத்து தன்னிடம் விசயத்தை மட்டும் சொல்ல வந்திருக்கிறார்கள் என தேன்நிலாவிற்கு புரிய.. “எனக்கு யாரும் வாழ்க்கை கொடுக்க வேணாம் ரேவதிக்கா.. என் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும்.” என்றாள்.
“யோசிக்காம பேசாத நிலா, எப்படிபட்ட வாழ்க்கை உன்னை தேடி வந்துருக்குனு யோசிச்சு முடிவெடு.” என்றாள் சற்று அதிகாரத்தோடு.
“நல்லா யோசிச்சிதான் பேசுறேன்க்கா.” என இம்முறை தேன்நிலா உறுதியோடு சொல்ல.. அதில் கோபமடைந்த ரேவதி.. “உன் நிலைமைக்கு இவ்வளோ திமிரு ஆகாது.” என்றாள் கண்டிக்கும் தோரணையில்.
“என் நிலைமைக்கு ஒரு குறையும் இல்ல. அப்படியேன்னாலும் அதைப் பத்தின கவலை உங்களுக்கு வேணாம். என்னை பார்க்க எங்கப்பாம்மா இருக்காங்க.” என்ற தேன்நிலா, நீங்க கிளம்பலாம் என்ற தோரணையில் முகம் திருப்பினாள் கோபத்தோடு.
“ஹ.. உன்னை பார்க்க உங்கப்பாம்மா இருக்காங்களா?” என இளப்பத்தோடு பார்த்தவள்.. “அப்புறம் ஏன் அவங்களோட இல்லாம இங்க தனியா இருக்க?” என்றாள் குத்தலாக.
“அது என் விருப்பம்.” என்றாள் சுள்ளென.
“உன் விருப்பமா இருந்துட்டு போகட்டும், ஆனா நாங்க பார்த்துக்குவோம்ன்ற நம்பிக்கையிலதான உங்கம்மா இங்க உன்னை விட்டுட்டு நிம்மதியா இருக்காங்க. அந்த நன்றி கொஞ்சமாவது உனக்குள்ள இருந்தா இப்படி பேசுவியா?” என ரேவதி கேட்க, அதற்கு தேன்நிலா பதில் கூறும் முன்.. “ரேவா..” என மகளை அடக்கிய சுப்புலஷ்மி..
“நிலா.. உன்னை குறைவா நினைச்சிருந்தா என் மகனுக்கு கேட்பேனா? சண்டை வேணாம், இனி நாமல்லாம் சொந்தமாகப்போறோம். உனக்கென்ன இப்போ? உன் அப்பாம்மாகிட்ட அனுமதி கேட்கனும். அவ்வளோதான? நாளைக்கு கேட்குறேன்.. சரியா?” என்றார் சமாதானமாக.
“இல்ல ஆன்ட்டி, இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல. நீங்க கிளம்புங்க.” என்றாள் தேன்நிலா.