“உன்னாலதான் அந்தபுள்ள முகிலனை வேணாம்னா, இப்போ நிலாவும் வேணாம்னுட்டா, நான் பேசறதுக்குள்ள உனக்கென்ன அவசரம்? அவங்கப்பாம்மா பத்திலாம் நீ எதுக்கு பேசுன?” என வீட்டிற்குள் நுழையும்வரை சுப்புலஷ்மி திட்டிக்கொண்டே வந்தார்.
அண்ணன் திருமணம் நின்றுபோன துக்கத்தில் இருக்கும் அன்னையை தேற்ற நினைத்து இவர்களுக்காக காத்திருந்த இந்துபிருந்தா, சுப்புலஷ்மியின் பேச்சில்.. “என்னம்மா ஆச்சு? இவ்வளோ நேரம் எங்க போயிருந்திங்க? ரேவாக்கா யாரைப்பத்தி என்ன பேசுனாங்க?” என்றாள் பதட்டமாக.
“அம்மா இவகிட்ட எதுவும் சொல்லாத, முகிலன்கிட்ட சொல்லிடுவா.” என முனுமுனுத்தாள் ரேவதி.
இருந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட்டோமே.. நாளை மறுநாள் அனைவரும் திருமணம் ஏன் தடைபட்டதென கேட்பார்களே என்ற கவலையிலிருந்த சுப்புலஷ்மிக்கு ரேவதியின் முனுமுனுப்பு கேளாமல் போகவே.. “எல்லாம் உன்னாலதான். கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லியிருந்தா நிலா சம்மதிச்சிருப்பா.
அவமட்டும் மருமகளா வந்திருந்தா என் சொல் பேச்சு ஒன்னுகூட மீறமாட்டா, உன்னைப் போய் கூட்டிட்டு போனேன் பாரு. நானா தனியா போயிருந்தேன்னா எப்படியாவது சம்மதிக்க வச்சிருப்பேன்.” என புலம்பினார் சுப்புலஷ்மி.
தற்போதுதான் இந்துவிற்கு அன்னை அக்காவின் செயல் புரிய.. அதானே? பக்கத்துலயே இருக்க நிலாவை யோசிக்காம அம்மா ஏன் அவங்களை பார்த்தாங்க? ம்.. எப்படியோ இப்போவாவது யோசிச்சாங்களே என சந்தோசமாய் நினைத்தவள்.. ரேவாக்கா எதாவது திமிரா பேசியிருப்பாங்க, அதான் நிலா கல்யாணத்துக்கு சம்மதிக்கல போல, அம்மா புலம்புறதைப் பார்த்தா இதுதான் நடந்திருக்கனும்.
நாம போய் பேசலாம், நிலா கண்டிப்பா சம்மதிப்பா என வெளியேற முயல.. “ஏய் எங்கடி போற? இனி நிலா கிலானுட்டு அவகிட்ட பேசி உன்னைப் பார்த்தேன்.. அவ்வளோதான் பார்த்துக்க.” என மிரட்டினாள் ரேவதி.
“ஏன் போகக்கூடாது? நீ போனல்ல? அப்போ நானும் போவேன். அம்மா நீ கவலைப்படாத. நிலாவை சமாதனம் செய்துட்டு வந்து அண்ணன்கிட்ட விசயத்தை சொல்றேன், அண்ணன் கரெக்டா பேசிமுடிச்சிடும்.” என வேகமாய் வெளியேறினாள் இந்துபிருந்தா.
அச்சோ இவளுக்கு வேற தெரிஞ்சிடுச்சே, முகிலன்கிட்ட ஒன்னையும் மறைக்கமாட்டாளே, இப்போ அங்க வேற போறா.. ரேவதி பேசினதெல்லாம் நிலா இவகிட்ட சொல்லிட்டாள்னா, யாரைக் கேட்டு இதை ஆரம்பிச்சிங்கனு முகிலன் கோபப்படுவானே என சுப்புலஷ்மி பயந்திருந்த நேரம் போன வேகத்தில் வாடிய முகத்தோடு திரும்பி வந்தாள் இந்துபிருந்தா.
“உன்னையும் திட்டி அனுப்பினாளா? போகவேணாம்னு சொன்னேனே கேட்டியா? அவகிட்டலாம் பேச்சு வாங்கனும்னு தலையெழுத்தாடி?” என தங்கையை அதட்ட, “நிலா ஒன்னும் என்னை திட்டல.” என அண்ணனின் அறைக்கு போக.. “ஏய் முகிலன்கிட்ட எதுவும் சொல்லாத.” என தங்கையின் கை பிடித்தாள் ரேவதி.
“விடு..” என கோபமாய் கையை உருவியவள் வேகமாய் தட்டினாள் வான்முகிலனின் அறைக்கதவை.
கதவைத் திறந்த வான்முகிலன் தங்கை நின்றிருந்த கோலம் கண்டு பலமாய் சிரித்து.. “ஹே.. கல்யாணம் நின்னதுக்கா இத்தனை அழுகை? லூசு.. அவ இல்லன்னா பொண்ணே இல்லையா என்ன?” என தங்கையின் தலைகோதினான் பாசத்தோடு.
“அதில்லண்ணா, அம்மாவும் அக்காவும் நிலா வீட்டுக்கு போய் உனக்காக பொண்ணு கேக்குறேன்ற பேர்ல எதோ ரகளை பண்ணிருக்காங்க, நான் நிலா வீட்டுக்கு போனேன், தயவு செய்து இனி என்னோட பேசாத பிருந்தா, முதல்ல இங்கயிருந்து கிளம்புனு நிலா சொல்லிட்டா.
இப்படி முகத்துல அடிச்சமாதிரி என்கிட்ட நிலா எப்பவும் பேசினதில்ல, இன்னைக்கு கதவை கூட திறக்கல.. அழுதுட்டே பேசினா..” என்றாள் இந்துபிருந்தா.
உண்மையா என்பதுபோல் வான்முகிலன் ரேவதியையும் அன்னையையும் பார்க்க.. “அதுவந்து..” என சுப்புலஷ்மி தடுமாற.. “கல்யாணம் நின்னது வெளில யாருக்கும் தெரியாத மாதிரி அதே முகூர்த்தத்துல எப்படியாவது உனக்கு கல்யாணம் நடந்தே தீரணும்னு அம்மாக்கு ஆசை.
நம்ம நிலாவை கேட்கலாம்னு அம்மாதான் என்னை கூப்பிட்டுச்சி, சரி நாம பார்த்து வளர்ந்த பொண்ணாச்சே, அம்மா ஆசையை ஏன் கெடுப்பானேனு போனேன்.. அவகிட்ட பேசினதுகப்புறம்தான் எவ்வளோ திமிர் பிடிச்சவனு தெரிஞ்சது..
அம்மா தன்மையாதான் பேசுனுச்சி, உன்னை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கனும்னு நானும் சொன்னேன், அவதான் புரிஞ்சிக்காம கோபம் வரமாதிரி பேசினா.” என்றாள் ரேவதி.
“என்னை கட்டிக்க அவ என்ன கொடுத்து வச்சிருக்கனும்? அந்தளவுக்கு அவ என்ன குறைஞ்சிட்டானு இப்படி கேட்டுருக்க? இதான் பொண்ணு கேக்குற லட்சணமா? அம்மா கூப்பிட்டாலும் என்கிட்ட கேட்காம எனக்கு பொண்ணு பார்க்க கிளம்புவியா நீ?” என உட்சபட்ச கடுப்போடு கேட்டவன்..
“யாரை கேட்டும்மா அவளை பொண்ணு கேட்டிங்க? பொண்டாட்டியா வரப்போறவனு நினைச்சி மூனுமாசமா ஒருத்தியை நினைச்சிட்டிருந்தேன், அவ வேணாம்னு சொன்னதும் உடனே இன்னொருத்தியை ஏத்துக்க முடியுமா? எனக்குனு மனசு இல்லையா?” என தனக்காக பேசி..
“இந்த நேரத்துல தனியா இருக்க பிள்ளைகிட்ட போய் கல்யாணத்துக்கு கேட்டதே தப்பு.. அவ வாழ்க்கையில யார் வரனும்னு முடிவு பண்ண நீங்க யாரு? இதுல திமிரா பேசுறானு அவளையே குறைவேற சொல்றிங்க.. நியாயமாமா இது? நம்ம பிருந்தாவ யாராவது இப்படி கேட்டுருந்தா நாம சும்மா விடுவோமா?” என தேன்நிலாவிற்காகவும் பேச..
“நம்ம பிருந்தாவும் அவளும் ஒன்னா?” என இடையிட்டு.. “நாங்க என்ன அவ வீட்டுக்கு விருந்துக்கா போனாம்? தயவு செய்து என் வீட்டை விட்டு வெளில போங்கன்றா.. வீட்டுக்கு வந்தவங்களை இப்படித்தான் பேசுவாளானு கோபம் வரவும் நானும் பேசிட்டேன்” என்றாள் ரேவதி.
“நீ வாயமூடு.. நான் அம்மாகிட்ட பேசிட்டிருக்கேன்.” என அதட்டி அன்னையைப் பார்க்க, “இப்போ என்ன முன்ன பின்ன தெரியாதவகிட்டயா கேட்டுட்டேன்? எத்தனை வருசமா தாயா புள்ளையா பழகியிருக்கோம்? உன்னை பத்தியும் நம்ம குடும்பத்தை பத்தியும் தெரியாதா அவளுக்கு?
இரண்டு நாள்ல நடக்க வேண்டிய கல்யாணம் நின்னுடுச்சி, என் பையனை கட்டிக்கோனு சொல்றேன், தெரிஞ்சவன்ற உரிமைலதான் கேக்குறாங்கனு அவளும்தான் கட்டிக்கிட்டா என்ன? உன்னை விட ஒசத்தியா ஒரு மாப்பிள்ளையை எங்க தேடினாலும் கிடைப்பானா?” என தேன்நிலாவை குறை கூறினார் சுப்புலஷ்மி.
“ஆமாம்.. அவ கல்யாணத்துக்கு மறுக்கவும் திட்டிட்டு வந்தோம். என்ன இப்போ?” என ரேவதி சொல்ல.. உக்கிரமாய் அக்காவை பார்த்தவன்.. “முதல்ல உனக்கு அமைஞ்ச வாழ்க்கையை சரியா வாழப்பாரு. என் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும்.
இனி பொண்ணு கேக்குறேன் அப்படியிப்படினு எனக்கு தெரியாம எங்கையாவது கிளம்புனிங்க.. அவ்வளோதான் பார்த்துக்கோங்க.” என இருவரையும் திட்டி தனிமை வேண்டி மாடிக்கு சென்றான் வான்முகிலன்.
** ** ** ** ** ** **
தான் லாரி டிரைவர் என்பதையும், டிகிரி படிக்கவில்லையென்பதையும் சொன்னதிலிருந்தே தனக்கென நிச்சயிக்கப்பட்டவள் தன்னிடம் பேச்சை நிறுத்தியிருந்ததால், நடக்கவிருந்த திருமணம் தடைபட்டதில் பெரிதாய் பாதிப்படையவில்லை வான்முகிலன்.
ஆனால் தேன்நிலா தன்னை வேணாம் என்றது இவளும் தன்னை கீழாக பார்க்கும் நிலையை தன் வீட்டினரே ஏற்படுத்தியிருக்கிறார்களே என அன்னையின் மீது கோபம் வந்தது.
என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என யோசித்தவாறு தேன்நிலாவின் வீட்டைப் பார்த்தான். வெளியில் லைட் எரிந்துகொண்டிருந்தது. இன்னும் தூங்கவில்லைபோல, பிருந்தா சொன்னதை போல அழுதுகொண்டிருக்கிறாளா என நினைத்து வருந்தினான்.
அன்னையின் நிம்மதிக்காக விலகி தனித்து வாழும் தேன்நிலாவின் மீது நன் மதிப்பு உண்டு வான்முகிலனிற்கு.
தற்போது ஒரு வருடமாக தம்பியின் படிப்பு செலவை இவள் ஏற்றிருப்பதை கேள்விபட்டதிலிருந்து அவள் மீதிருந்த மதிப்பு மேலும் கூடியிருந்தது.
இரண்டு வருடம் முன்புவரை தேன்நிலா தன் தாத்தாவோடுதான் வசித்து வந்தாள். அவர் இறந்தபின்னே தன்னோடு வருமாறு தேன்நிலாவின் அன்னையும் தந்தையும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தனர்.
இந்த பஞ்சாயத்தும் வான்முகிலனின் அன்னையிடம்தான் வந்தது. வயசுபுள்ள தனியா இருந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? என சுப்புலஷ்மி எடுத்துரைத்தும், பார்க்குறவங்க நினைக்கிறதை விட என் அம்மா நிம்மதிதான் முக்கியம், நான் அங்க போனா அங்க யாரும் நிம்மதியா இருக்கமாட்டாங்க என வெளிப்படையாகவே சொல்லி தன் அன்னையோடு செல்ல மறுத்துவிட்டாள் தேன்நிலா.
அதன்பின் வான்முகிலன் அன்னையிடம் விசாரிக்க, மங்களம் புருசன் நிலாவை பெத்தபுள்ளையா பார்த்தாலும் அவன் அப்பாம்மா பேத்தியா நினைக்கனும்ல?
அவங்களுக்கு இவளை கண்டா ஆகறதில்ல, நல்ல நாள், பண்டிகை நாள்னு என்னைக்காவது ஒரு நாள் போனாலே மனசாட்சியே இல்லாம நொடிப்பாங்களாம்.
ஒரு நாள் தாத்தா வீட்டுக்கு வந்த நிலா எனக்கு அங்க இருக்க பிடிக்கல தாத்தா, உன்னோடவே இருந்துக்குறேனு சொன்னாளாம், வயசான காலத்துல நானும் உன் அம்மாவும் வெறுக்குனு உக்கார்ந்திருக்கோம், என்பேத்தியை நான் பார்த்துக்கிறேன்னு மங்களத்தோட அப்பா நிலாவை இங்கையே வச்சிக்கிட்டார்.
மங்களம் என்ன கெஞ்சியும் பேத்தியை விடவேயில்ல, அதுக்கப்புறம் நிலாவும் நான் நினைச்சமாதிரி பெருசா அவங்கம்மாக்கு ஏங்கல, ஆனா மங்களம் வந்தா அன்னைக்கெல்லாம் அவ முகம் ஜொலிக்கும்.
அதனால எனக்கும் நிலா அங்க போறதுல விருப்பம் இல்ல, ஆனாலும் மங்களம் கேட்டுக்கிட்டதாலதான் எடுத்து சொன்னேன், என்னை பொருத்தவரை அவ இங்க இருந்தாலே நிம்மதியா இருப்பா, இங்க பாதுகாப்புக்கு என்ன குறைச்சல்னு மங்களத்துக்கு தைரியம் சொல்லி அனுப்பினேன். என அன்னை அன்று சொன்னதையெல்லாம் மனதில் அசைபோட்டவாறு தேன்நிலாவின் வீட்டை பார்த்திருந்தான் வெகுநேரம் வரை.