வான்முகிலன் தந்தை இறந்த பின்னே அவனின் பெருமைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள் பிருந்தா.. அவையெல்லாம் குடும்ப நலன், மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டமிடல்கள்தான்.. ஆனால் இருபது வயதில் வான்முகிலன் செய்த செயலில் பூரித்தவளுக்கு, என் கணவன் இப்படிப்பட்டவன் என அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்ற ஆசை..
ஆனால் அச்செயல் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாதென்ற கட்டளை இருக்க, வீட்டிற்கு வந்த தேன்நிலா எம்.பி மட்டுமல்லாது, அவரின் மொத்த குடும்பமும் சிறப்பாய் கவனித்தார்கள், அவரோட நல்ல குணம்தான் இதுக்கெல்லாம் காரணம் என மீண்டும் மீண்டும் கணவனின் பெருமை பேசினாள் பெருமையாக.
வான்முகிலனின் பெரிய இடத்து பழக்கம் அறிந்த லிங்கேசனிற்கு, எம்.பி வீட்டின் கவனிப்பை விட, மகள் மருமகனோடு இணக்கமாகியிருக்கிறாள் என்பதில்தான் பெரும் சந்தோசம் உண்டானது.
மகளின் மனமாற்றத்தை மனைவிக்கும் சந்தோசத்தோடு எடுத்துரைக்க, மங்களமும் மிகுந்த சந்தோசம் கொண்டார்.
தேன்நிலாவிற்கு அழைப்பு வர.. “பிருந்தாவா?” என சந்தோசமாய் அழைப்பை ஏற்க.. “விருந்துக்கு போய்ட்டு வந்தாச்சா நிலா? எங்கயிருக்க?” என்றாள்.
“இப்போதான் வந்தோம். வீட்டுல இருக்கேன்.” என்றாள்.
இருவரும் முதல்முறையாக தனியே சென்றிருக்கிறார்கள், தேன்நிலா அண்ணனோடு இயல்பாய் உரையாடாவிட்டாலும் பரவாயில்லை, அண்ணன் மனதை கஷ்டப்படுத்தாமலாவது இருந்திருப்பாளா? என அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவே அழைத்துவிட்டாள்.
ஆனால் எப்படி கேட்பது என சில நொடி யோசித்து.. “என் அண்ணாவோட பழம் விட்டாச்சா?” என்றாள் தயக்கக் குரலில்.
தன் தாய்தந்தைக்கு நிகராக தனது சந்தோசத்தை யோசிக்கும் தோழியிடம் உண்மையுரைத்தால் மிகவும் சந்தோசம் அடைவாள் என, “ம்.” என்றதுதான், தேன்நிலாவை பேசவிடாமல்.. “நிலா..” என உற்சாகமாக கத்தினாள் பிருந்தா…
“ப்ச்.. எதுக்கு கத்தற?அங்க சுபாஷ் அண்ணாவேது இருக்கப்போறாங்க.” எனப்பதற.. “அவர் வெளில போயிருக்கார், ஆனாலும் இருந்தா என்ன? நீ பழம் விட்டது தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவார்.” என்றாள் சந்தோசமாக.
“போனா போகுதுனுதான் பேசினேன், ஆனா என் பர்மிஷன் இல்லாம தாலி கட்டுனதுக்கு இருக்கு உங்கண்ணனுக்கு.” என தேன்நிலா பொய்யாய் கோபப்பட,
“இருக்கா? இருக்கட்டும்.. இருக்கட்டும்.. எங்கண்ணனுக்காக நீ எது கொடுத்தாலும் ஓ.கே.தான்.” என சிரித்தாள் இந்துபிருந்தா.
முகம் சிவந்த தேன்நிலா.. “டிரஸ் சேன்ஜ் பண்ணனும், நான் அப்புறம் பேசறேன்.” என இணைப்பை துண்டித்தாள்.
“மாமா.. உங்க பெருமை பேசி பேசி நிலாக்கா டையர்ட் ஆகிட்டாங்க, ஜுஸ் வாங்கிட்டு வாங்க.” என்றான் தமிழரசன்.
“டேய்.. அவருக்கேன்டா போன் செய்த?” எனப் பதறினாள் தேன்நிலா.
உல்லாச மனநிலையில் இருந்த வான்முகிலன்.. “அப்படியா? என்ன பெருமை பேசினா? என்கிட்ட ஒன்னுமே சொல்லலயே?” என்றான்.
“எம்.பிக்கு உங்க மேல செம பாசமாம், மகனைப் போல கவனிச்சாராம். உங்களோட நல்ல குணம்தான் இதுக்கெல்லாம் காரணமாம்..” என பேசிக்கொண்டிருந்த, தம்பியிடமிருந்து மொபைலை பிடுங்கி இணைப்பை துண்டித்தாள் தேன்நிலா.
“ப்ச்.. என்னக்கா? பேசிட்டிருக்கும்போது இப்படி செய்யிறது மரியாதையா இருக்குமா?” என முறைக்க, “நான் எதோ அப்பாம்மா சந்தோசப்படட்டுமேனு சொன்னேன், அதைப் போய் அவர்கிட்ட சொல்வியா?” என முறைத்தாள் தேன்நிலா.
முறைத்தாலும் தேன்நிலாவின் முகம் சிவந்திருக்க, இது வெக்கத்தால் வந்த சிகப்பென உணர்ந்த லிங்கேசனும் மங்களமும் மேலும் சந்தோசமடைந்தார்.
“சரி சரி விடும்மா, எல்லாம் ஒரு சந்தோசம்தான்.” என சந்தோசித்தார் லிங்கேசன்.
“இப்போ எதுக்கு இவ்வளோ பதறுறம்மா? கல்யாணத்துக்கப்புறம் பிருந்தாக்கு வர முதல் பொங்கல், பிருந்தாவை முறைப்படி அழைக்கும்போது ரோவக்காவையும் அழைக்கலாம்னு தோணுச்சு.அதான்.” என்றான்.
ஆனாலும் சுப்புலஷ்மியின் முகம் கலக்கத்தை காண்பிக்க.. “கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆகியிருந்தாலும் இப்போ கொஞ்ச நாளாதான் மாமா ரேவாக்காவை புரிஞ்சி நடந்துக்கிறார். அவர் புரிதலை நாம மதிக்கனும்.. இந்த வருசம் பொங்கல் இங்க கொண்டாடட்டும். அப்படியே ரிசப்சனுக்கும் சொல்லிட்டு வந்துடறேன்.” என்றான் தன்மையாக.
அன்னையிடம் ஆரம்பமான உரிமைப் போராட்டத்தை நினைத்து, “அட ஈஸ்வரா.” என இன்பமாய் சலித்தவன்.. “நிலாகிட்ட முதல்ல கேட்டாலும், உன்கிட்ட முதல்ல கேட்டாலும், நீங்க நினைக்கிற தேதியிலல்லாம் ரிசப்ஷன் வைக்க முடியாது. மண்டபம் எந்த தேதியில கிடைக்குதோ அப்போதான் வைக்க முடியும்.” என்றான் சிரிப்போடு.
சுப்புலஷ்மி முறைக்க.. “ம்மா.. பெரியவங்க பார்த்து கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தா, உங்க விருப்பப்படியும், நிலா அப்பாம்மா விருப்பப்படியும் செய்திருக்கலாம்,
நான் அப்படியா? நிலாவோட சம்மதம் கூட கேட்காமத்தான தாலி கட்டினேன்? அதுவும் தப்புதான? ரிசப்ஷனுக்காவது அவ சம்மதம் கேட்கனும்ல? இதிலல்லாம் குற்றம் கண்டுபிடுப்பியா?” என நியாயம் கேட்க,
சுப்புலஷ்மி.. “நீ கேட்டு மண்டபம் இல்லனு சொல்லிடுவாங்களா? நான் நல்லநாள் பார்க்குறேன், நான் சொல்ற தேதியில மண்டபத்துக்கு ஏற்பாடு செய்.” என்றார் உரிமையாக.
“சரி..” என மகிழ்வோடு சம்மதித்து, “நிலா அப்பாம்மாகிட்ட நீயே பேசிடு, நான் ரேவாக்கா வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்.” என்றான்.
“ரேவாவும் வந்த பின்ன எல்லாருமா போய் பேசலாம்.” என்றார் சுப்புலஷ்மி.
“ரேவாக்கா அவங்க வீட்டுக்கு வருமா?” என அர்த்தமாய் பார்க்க.. “இனி வந்துதான ஆகனும்?”
“அப்படி கட்டாயத்தோட நிலா வீட்டுக்கு ரேவாக்கா போக வேண்டாம். நான் பேசினதுக்கப்புறம் அதுவா விருப்பப்பட்டு போனா போகட்டும், இல்ல இப்படியே விட்டுடலாம்.” என்றான்.
சுப்புலஷ்மி முகம் தவிக்க.. “ம்மா.. ரேவாக்கா பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன், நீ ரிசப்ஷனுக்கு நல்லநாள் பாரு.” என்று தனதறைக்குள் சென்றான்.
அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் ரேவதியின் வீட்டிற்கு வந்தடைய.. “வாங்க தம்பி.” என ரேவதியின் மாமியார் வரவேற்க.. கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்த ரேவதி.. “வா முகிலா.. இவ்வேளோ சீக்கிரம் வந்துட்ட?” என ஆர்பரித்து, தண்ணீர் கொடுத்தாள்.
“ம்.. அப்பாவும் மகனும் குளிச்சிட்டிருக்காங்க.. இரு வரேன்.” என தனதறைக்குள் செல்ல எத்தனிக்க, நரேந்திரனும் ப்ரவீனும் வந்தனர். மாமனை கண்டதும் கண்களை அகலவிரித்த ப்ரவீன்.. “மாமா..” என வான்முகிலனிடம் வர, பாக்கட்டிலிருந்த சாக்லேட்டை கொடுத்தவன்.. “ம்… ப்ரவீன் குட்டி ஸ்கூல் போய்ட்டு வந்ததும் புது டிரஸ் எடுக்க போலாமா?” என்றான்.
“ஸ்கூலா? இன்னைக்கு போகமாட்டேன்.” என வான்முகிலன் தோளைக் கட்டிக்கொண்டு சிணுங்க.. “நீ ஸ்கூல் போனினா ஈவ்னிங் மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போவேன், போகலன்னா இப்போவே கிளம்பிடுவேன்.” என கெஞ்சலாய் மிரட்ட, “ஹைய்யா.. ஈவ்னிங் மாமா வீட்டுக்கு.” என குதூகலித்து, வான்முகிலனோடு தொணதொணத்தவாறே பள்ளிக்கு தயாராக ஆரம்பித்தான்.
அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் பள்ளி என்பதால் வான்முகிலனே பள்ளியில் விட கிளம்ப, அதீத சந்தோசத்தோடு கிளம்பினான் சிறுவன்.
பள்ளியில் விட்டு வந்து, காலை உணவுண்ட பின்னே, ரேவதியின் மாமியார் மாமனார் தனதறைக்குள் சென்றிட, “ரேவாக்கா, உன்னோட பேசனும்.” என்றான்.
என்னைப் பற்றி ஏதேனும் சொல்லியிருப்பாளோ? அவளிற்காக தன்னை கண்டிப்பானோ, கணவன் வேறு அருகிலிருக்கிறானே என ரேவதி முகம் தவிப்பிற்குள்ளாக.. “ப்ச் ரேவா.. நீ என் அக்கா. இதை நான் நியாபகப்படுத்தனுமா?” என அதட்டினான்.
ரேவதி தலைகுனிய.. “நான் யாரையும் குறை சொல்ல வரல, நிலாவுக்கும் உனக்குமான பழைய பிரச்சனையை பேசவும் வரல, நம்ம குடும்ப சந்தோசத்துக்காகவும், நிம்மதிக்காகவும் சில விசயங்களை பேச வந்தேன். பேசட்டுமா? இல்ல கிளம்பவா?” என்றான் முறைப்பாக.
தன்னை குறை சொல்ல வரவில்லை என்றதிலேயே நிம்மதி கொண்டு.. “பேசலாம் பேசலாம்.” என்றாள் ஆர்வமாக.
நரேந்திரன்.. “நீங்க பேசுங்க, நான் வரேன்.” என விலகப்பார்க்க.. “நீங்களும் இருக்கும்போது பேச நனைச்சித்தான் நேரமா வந்தேன். பெரிய ரகசியமெல்லாம் இல்லை, பத்து நிமிஷத்துல சொல்லிடுவேன். உக்காருங்க மாமா..” என கனிவாய் பேச நரேந்திரன் சோபாவில் அமர்ந்தான்.
ரேவதிக்கும் வான்முகிலனுக்கும் தனிமை கொடுக்க நினைத்து தனதறைக்குள் சென்ற நரேந்திரனின் தாய்தந்தையருக்கு, மகனிற்கு மதிப்பளிக்கும் வான்முகிலனின் பேச்சை கேட்டதும் சந்தோசமாகிட, தனதறை கதவை சாற்றினார் நிம்மதியோடு.
“நிலா என் பொண்டாட்டின்றதை மறந்துட்டு, ஜஸ்ட் நமக்கு தெரிஞ்ச பொண்ணா மட்டும் நினைச்சிக்கோக்கா. அப்போதான் நான் சொல்ல வரது சரியா தப்பானு உன்னால யோசிக்க முடியும்.” என்றான்.
நிலாவைப் பற்றிய பேச்சென்றதும் ரேவதியின் மனம் கலவரமானதுதான், ஆனாலும் கணவன் அருகிலிருக்க தம்பியின் கூற்றை தலையசைத்து ஆமோதித்தாள்.