“ஏழு வயசுலயே அவங்கம்மா நிம்மதிக்காக அவங்களை விட்டு விலகியிருக்கா, பதினேழு வயசுல பாட்டி இறந்ததுக்கப்புறம் சமையல்ல இருந்து எல்லாமும் செய்து அவ தாத்தாவை பார்த்திருக்கா, பத்தொன்பது வயசுல அவ தாத்தாவும் போன பின்னகூட அவங்கம்மாவை நெருங்காம தனிச்சி வாழ்ந்திருக்கா..
எல்லாமும் அவங்கம்மா நிம்மதிக்காக மட்டுமேதான்.. என்னைப் பொருத்தவரை மங்களத்தோட பொண்ணு தேன்நிலான்றதை விட, தேன்நிலாவோட மகள்தான் மங்களம் அத்தைனு சொல்றதுதான் சரி வரும்.
இதுமட்டுமில்லாம வீட்டுல பெரியவங்க கட்டுப்பாடு இல்லாத சூழல்ல கை நிறைய சம்மபாதிச்சாலும் எவ்வளோ திட்டமிடல் இருந்திருந்தா.. யார்கிட்டயும் கடன் வாங்காம தன்னோட செலவையும் பார்த்துக்கிட்டு,வருசத்துக்கு நாலஞ்சு லட்சம் செலவு செய்து அவ தம்பியையும் படிக்க வச்சிட்டிருப்பா?” என பார்த்தான் ரேவதியை.
இவையெல்லாம் ரேவதி அறிந்ததுதான் என்பதால் ஆமோதிப்பதை தவிர வேறு வழியில்லையே.. எனவே அமைதியாய் இருக்க.. “பிருந்தா கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் அதிகநாள் நம்ம வீட்டுலதான் நீ இருப்ப. அம்மா வீட்டுல இருந்தாலும், பிருந்தாவும் நீயும் இல்லாத வீட்டுல இருக்கிறது எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமாக்கா?
யாருமில்லாத அந்த வீட்டுல கொடுமையான தனிமையோட எப்படித்தான் இருக்காளோ? அவங்கம்மாக்காக அவ தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ நிறைய தைரியமும், பெரிய மனசும் வேணும்.. ஆமாம்தான ரேவா?” என்றான் பெருமையாக.
இம்முறை ரேவதியின் கண்கள் பணிக்க.. “அம்மா, நீ, பிருந்தா எல்லாரும் எனக்கு எவ்வளோ முக்கியமோ அதுக்கு கொஞ்சமும் குறையாம அவளும் முக்கியம், அவ சந்தோசம் முக்கியம், கௌரவம் முக்கியம்..
எனக்கு அவளை எவ்வளோ பிடிச்சிருக்குனு சொல்ல வார்த்தையே இல்ல ரேவா.. அதனாலதான் அவ சம்மதம் சொல்லும் முன்னவே கல்யாணம் செய்துக்கிட்டேன்.
நீயும் அம்மாவும்.. எனக்காக இல்லாம, அவளுக்காகவே அவளை ஏத்துக்கனும்ன்றதுதான் என் விருப்பம்.” என்றான்.
தம்பியின் திருமணத்திற்கு பின்னே நிலாவிடம் மன்னிப்பு கேட்க சொல்வானோ என பயந்திருந்த ரேவதிக்கு தற்போது முகிலன் கூறிய வார்த்தைகள் நிம்மதியை கொடுக்க, பாசமாய் பார்த்தாள் ரேவதி.
“ஆனா உன் மனசை வருத்தி என் விருப்பத்தை நிறைவேத்த நினைக்காத. அதுவும் எனக்கு பிடிக்காது.” என்றான்.
“அதுக்காக அவகிட்ட போய் ஐ.லவ்.யு வா சொல்லமுடியும்?” என ரேவதி முறைக்க.. “ஹா..ஹா.. அதை நான் பார்த்துக்கிறேன், யாரையும் எதிரியா நினைக்காம எப்பவும்போல நம்ம வீட்டுக்கு வந்து சந்தோசமா பொங்கல் கொண்டாடு. அதுபோதும்.” என்றான்.
ரேவதி பெருமையாய் பார்க்க.. “மருமகனுக்கு வாக்கு கொடுத்திருக்கேன், ப்ரவீன் ஸ்கூல் விட்டு வந்ததும் கிளம்பிடுங்க மாமா, பொங்கல் முடிஞ்சதும் ரிசப்ஷன் இருக்கு. நல்லநாள் பார்த்து அம்மா டேட் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. பத்து நாளைக்கு எல்லாரும் அங்கதான்.” என்றான்.
தன் மீதுள்ள மனக்கசப்பு மறந்து, தப்பை மன்னித்து, மரியாதை கொடுக்கும் மச்சினன் பாசத்தில் நெகிழ்ந்த நரேந்திரன்.. “அங்கன்னா ஒரு வருசம்னாலும் உன் அக்காக்கும் மருமகனுக்கும் கசக்காது.
அவங்க சந்தோசத்தைவிட எனக்கு வேற என்ன வேணும்? இன்னைக்கு சாயங்காலம் ரேவாவையும் ப்ரவீனையும் அனுப்பி வைக்கிறேன், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, பொங்கல் அன்னைக்கு வந்துடறேன் முகிலா.” என்றான் நிறைந்த மனதோடு.
இங்கு எந்த பிரச்சனையோ என அன்னை யோசித்திருப்பார் என்றுணர்ந்து, சுப்புலஷ்மிக்கு அழைத்தவன்.. “ம்மா.. ரேவாக்கா வீட்டுலயே சாப்பிட்டேன், நீ சாப்பிட்டு படு, நான் சங்கம் வரைக்கும் போய்ட்டுதான் வருவேன்.” என உற்சாக குரலில் சொல்லி, ரேவதி மனதிலுள்ள தேன்நிலா மீதான வெறுப்பை போக்கிய நிறைவோடு விடைபெற்றான் வான்முகிலன்.
*** ** ** **
காலை ஏழு மணிபோல் வான்முகிலன் தனதறைவிட்டு வந்தான். நேற்றிரவு வான்முகிலன் வீட்டிற்கு வர பதினொரு மணியாகியிருக்க, இவனின் வரவை ஆவலோடு பார்த்திருந்த ரேவதியும் ப்ரவீனும் ஏமார்ந்த தகவலை சொன்ன சுப்புலஷ்மி.. “முகிலா.. நாம பார்த்து எந்த தேதி சொன்னாலும் சரிதானு மங்களமும் அவ வீட்டுக்காரும் சொன்னாங்கடா.” என்றார் சந்தோசமாக.
“அதுக்குனு நீ பாட்டுக்கு ரொம்ப நாள் இழுத்துடாதம்மா, முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் வை, இல்ல.. ரிசப்சனுக்கு முன்னாடியே நிலா வீட்டுக்கு குடித்தனம் பண்ண போய்டுவேன்.” என்றான் சிரிப்போடு.
“இப்போ மட்டும் போகாமலா இருக்க?” என சுப்புலஷ்மியும் சிரிக்க, “ஆமாம்ல?” என இளித்து, “சரி.. சரி.. டீ கொடு, மிலிட்டரிகாரன் பொண்ணு கன் டைம்க்கு ஆபீஸ் கிளம்பிடுவா.” என அவசரப்படுத்த, மகன் கையில் இன்முகத்தோடு டீ கொடுத்து.. “பொங்கல் முடிஞ்ச நான்காம் நாள் நல்ல நாள் முகிலா, மண்டபத்துக்கு சொல்லிடு.” என்றார்.
வான்முகிலன் மண்டப உரிமையாளருக்கு அழைக்க, அவ்வூரில் உள்ள நான்கு பெரிய மண்டபங்களும் மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தாகிவிட்டது என்ற தகவல்தான் வந்தது.
செந்தாமரையோடான பழக்கத்தை வைத்து எங்கும் இதுவரை தன் அதிகாரத்தை பயன்படுத்தியிராதவனுக்கு தற்போதும் அதைதான் பின்பற்ற தோன்றியது.
மண்டபம் கிடைத்தால்தான் பத்திரிக்கைக்கு சொல்லனும் என நினைத்திருந்தவன், இனி தன் திட்டங்கள் வேலைக்காகாது என.. தனது வீட்டிலேயே விருந்திற்கு திட்டமிட்டு, அதை செயல்படுத்த சம்மதப்பட்டவர்களிடம் பேசி முடித்து தேன்நிலா வீட்டிற்கு கிளம்ப்ப்பார்க்க.. “உன் மருமகன் எழுந்ததும் உன்னை தேடுவான்டா, இரு எழுப்பறேன்.” என்றார்.
“தூங்கறவனை எழுப்பாதம்மா, வெளில எங்கயும் போகல, நிலாவைப் பார்த்துட்டு கால் மணிநேரத்துல வந்துடறேன்” என கிளம்பினான்.
தேன்நிலா வீட்டு கதவு லேசாய் திறந்திருக்க, நிலாவின் தாய்தந்தையர் இருப்பார்கள் என்ற நினைவோடு நன்றாக கதவை திறந்து உள்ளே வந்தவன் கண்களில், அறையில் அவசர அவசரமாக பின்னலிட்டு கொண்டிருக்கும் மனைவி தென்பட, சமையலறை எட்டிப்பார்த்தான்.
யாரும் இல்லையென்பதை உறுதி செய்தவன் உல்லாசத்தோடு முன் கதவை மெல்லமாய் சாற்றி, மனைவி அறை நோக்கி நடைபோட, கதவு சாற்றப்பட்டதில் வெளிச்சம் மங்கவும் சட்டென வெளியே பாரத்தவள் கண்களை நிறைத்தான் வான்முகிலன்.
“அத்தை மாமா எங்க?” என அவளறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர.. “அ.. அவங்க காலைல கிளம்பிட்டாங்க, தமிழ் பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம்.” என்றாள் திணறலாக.
“இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பினாதான் டிராஃபிக்ல மாட்டிக்காம சரியான டைம்க்கு கம்பெனிக்கு போக முடியும்.” என்றாள் தவிப்பாக.
“லீவ் போட முடியாதா?” என்றான் ஏக்கமாக.
அச்சோ என்றானது நிலாவிற்கு. கண்கள் கலவரத்தை காண்பிக்க.. வான்முகிலனிற்கும் தான் எதற்கு வந்தோம் என்பதே மறந்துபோக, “ஹேய்.. சும்மா பேசிட்டிருக்கத்தான்.” என நெற்றியில் முட்டினான்.
அவனின் அருகாமை கொடுத்த அவஸ்த்தையோடு “லீவ் வேணும்னா எட்டு மணிக்குள்ள இன்ஃபார்ம் பண்ணியிருக்கனும், இப்போ லீவ் சொல்ல முடியாதே.” என்றாள் பாவமாக.
அவளின் பாவனையில் மயங்கியவன்.. “நீ லீவே சொல்ல வேணாம். கிளம்பு.” என மனைவியை விடுவிக்க.. அதற்கும் தேன்நிலா கலவரமாய் பார்க்க.. “ஷப்பா.. படுத்தாதடி, கிளம்பு.. நானே டிராப் பண்றேன்.” என ஹாலுக்கு வந்தான்.
துப்பட்டா அணியாதிருந்ததால் பின்னல் பின்னலிட்டது தேன்நிலாவிற்கு. நிலைக்கண்ணாடிக்கு முதுகாட்டி பின்னலிட்டவள், துப்பட்டாவை எடுத்து மடிக்கப் பார்க்க, வழக்கம்போல் நேர்த்தியாக மடிக்க முடியாது என்றுணர்ந்து, அத்தனை பெரிய துப்பட்டாவை இரண்டாய் மட்டுமே மடித்து அவசரமாய் பின் செய்ய, துப்பட்டா அணியாத தேன்நிலாவின் வரிவடிவத்தில் மயங்கியதை விட, தான் பார்த்திடக் கூடாதென அவசரமாய் அழகை மறைக்கும் மனைவி பேரழகாய் காட்சியளித்தாள் வான்முகிலனிற்கு.
“சரி வா.” என எழ, “நீ.. நீ..ங்க போங்க, நான் வரேன்.” என்றாள் திணறலாக.
பாத்ரூம் செல்ல நினைப்பாளே என நினைத்து வான்முகிலன் வெளியே வர, நெற்றிக்கு குங்குமமிட்டு தேன்நிலா வரவும், ரசித்தவன்.. “இதுக்குத்தான் வெளியே போக சொன்னியா? உன்னை எப்படி நான்..” என பாதியில் நிறுத்தினான் வாக்கியத்தை.
வான்முகிலனின் விடுபட்ட வாக்கியத்தை உணர்ந்தவளுக்கு முகம் குப்பென சிவந்திட, தனது வண்டிக்கருகே சென்றவள்.. அதனை துடைத்தவாறு, “நானே போய்க்கறேன். அப்போதான் ஈவ்னிங் வர சரியா இருக்கும்.” என வண்டியில் அமர.. “வீட்டை பூட்டலயா?” என்றான்.
மீண்டும் அச்சோ என பாவத்தை கண்களில் காண்பிக்க.. உள்ளே சென்று எடுத்து வந்து வீட்டை பூட்டி, சாவியை அவளிடம் ஒப்படைத்து, “பத்திரமா போய்ட்டு வா.” என்றான் இன்முகத்தோடு.
தேன்நிலா கிளம்ப.. “ப்ச் பிருந்தா வீட்டுக்கு எப்போ போலாம்னு கேட்க வந்து, அதை மறந்துட்டோமே.” என தன்னைத்தானே தலையில் தட்டியபடி.. “பக்கத்து வீட்டுல இவளை வச்சிக்கிட்டு நாம படுற பாடிருக்கே..” என இன்முகத்தோடு புலம்பியபடி வீடு வந்தான்.
** ** ** ** **
பொங்கல் பண்டிகையும் வந்திட, பிருந்தாவால் எழுந்து கோலம் போட முடியாததால் ரேவதியும் சுப்புலஷ்மியும்தான் வர்ணக் கோலமிட்டனர்.
“ரேவாக்காக்கு கை வலிக்குதாம், இங்கயும் கொஞ்சம் கலர் கொடு நிலா..” என இயல்பாய் கேட்க, தேன்நிலா தடுமாற.. “டேய்.. கை வலிக்குதுனு நான் சொன்னேனா?” என ரேவதி முறைத்தாள்.
இப்படியாக அடுத்து வந்த நாட்களிலும் ரேவதி இருக்கும்போதே நிலாவிடம் பேச, ரேவதியும் அதை இன்முகத்தோடு ஏற்பதை கவனித்திருந்த தேன்நிலாவிற்கு ரேவதி மீது பழைய மனக்கசப்பு இருந்தாலும்.. இனி தன் தாய்தந்தையை இழிவாக பேசமாட்டாள் என்ற நம்பிக்கை வர.. தேன்நிலாவின் மனம் மிகுந்த ஆசுவாசமானது.
நாளை மறுநாள் தேன்நிலா தன் வீட்டிற்கு வரும்நாளாக இருக்க, மனைவிக்கு ரேவதி மீதிருந்த வெறுப்பையும், பயத்தையும் பேசிப்பேசியே முடிந்தவரை குறைத்திருந்தான் வான்முகிலன்.