“பந்தி முடிய இன்னும் ஒருமணி நேரம் ஆகும் போல, கால் வலிக்கும்டி.” என அக்கறையாய் சலிக்க.. “நைட் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என தேன்நிலா தேற்ற.. என்ன? நைட் ரெஸ்ட் எடுக்கனுமா??? என அதிர்வோடு முறைத்தவன்.. “நீ வா.” என தங்கையிடம் அழைத்து சென்று.. “பிருந்தா உனக்கு டையர்டா இல்லையா? போய் கொஞ்ச நேரம் படு, இவளையும் கூட்டிட்டு போ.” என அனுப்பி வைத்தான்.
இரவு ஏழு மணிபோல் மங்களம் குடும்பம் விடைபெற.. தேன்நிலா தவிப்பாய் பார்க்க.. “நிலாம்மா, இங்கயிருந்து கூப்பிட்டா நம்ம வீட்டுக்கு கேட்கும், இதுக்கே இப்படி கலங்குவியாடா?” என சிரிப்போடு தேற்றி கிளம்பியிருந்தார் லிங்கேசன்.
இன்னைக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்தது, உங்க ரூமை டெகரேட் செய்ததுனு எல்லாமே ரேவாக்காதான்..
நீ கை ஊனி நடப்பன்றதால பால்கூட ரேவாக்காவே வச்சிடுச்சாம். என் தம்பியை சந்தோசமா வச்சிக்க சொல்லி உன் ஃப்ரண்டுக்கு புத்தி சொல்லி அனுப்பிவிடுனு என்கிட்ட சொன்னுச்சு.” என கண்ணிமைக்க.. முகம் சிவந்து தலைகுனிந்தாள் தேன்நிலா.
தேன்நிலா அருகே அமர்ந்தவள்.. “எனக்கு கல்யாணம் ஆகும்போது, என் வீட்டை விட்டு பிரியறதை விட, உன்னை விட்டு பிரியத்தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.
ஆனா இப்போ.. இந்த நிமிஷம்.. இந்த உலகத்துல என்னைவிட சந்தோசமா யாரும் இருக்கமாட்டாங்க.” என நிறைந்த சந்தோசத்தோடு அணைத்துக் கொண்டாள் பிருந்தா.
“ஏய் பிருந்தா வயிறு அழுந்தப் போகுது.” என பதற.. தன் வயிற்றை வருடியவள்.. “நீயும் கூடிய சீக்கிரம் இப்படி ஆகனும்.” என்று வாழ்த்தி.. “வா..” என வான்முகிலன் அறைக்கு அழைத்து வந்து, மீண்டும் ஒருமுறை அணைத்து உள்ளே அனுப்பி கதவை மூடினாள் நிறைந்த மனதோடு.
அறையில் மௌனம் ஆட்கொள்ள, சில நொடிகளுக்குப் பிறகு மெல்ல நிமிர்ந்தாள். கட்டிலில் அமர்ந்தபடி தேன்நிலாவை தலைசாய்த்து பார்த்து, தன்னிரு கைகளை விரிக்க, முன்னேற முடியாமல் கால்கள் பின்னியது.
லோயர், டீசர்ட்டை மாற்றி வேஷ்டி போடு என ரேவதி எத்தனை எடுத்துரைத்தும், இது போதும் என்றுவிட்டான் வான்முகிலன்.
அளவான அலங்காரத்தோடும், நிறைந்த நாணத்தோடும் தேன்நிலா வந்திருக்க, தனக்காக தனதறைக்கு விரும்பி வந்திருக்கும் மனைவியை எழுந்து அழைத்து வர மனமில்லை வான்முகிலனிற்கு. தேன்நிலா தானாய் தன்னை நெருங்குவதே பெருமையாக தோன்ற, விரித்த கையை மடக்காமல் அமர்ந்திருந்தான்.
வான்முகிலன் அருகே வந்த பின்னும் வான்முகிலன் கையை மடக்காமல் இருக்க, செய்வதறியாது.. “ப்..ப்..ப்ரவீன் உங்களை ரொம்ப கேட்டான்.” என திணறினாள்.
“ம்.. எனக்கும் காது கேட்டுச்சு, அவன் இங்க வரும்போதெல்லாம் ஈவ்னிங் விளையாடுவேன், இன்னைக்கு பந்தி போட்ட சேரெல்லாம் அப்படியே இருந்ததால விளையாடல, அதான் கேட்டிருப்பான். சுபாசும், மாமாவும் உன் கர்ணாவோட மாடிக்கு கூட்டிட்டு போகவும் குஷியாகியிருப்பான்.” என்றான்.
தவிப்போடு தேன்நிலா நின்றே இருக்க, “ம்.” என கைகளை இன்னும் விரிக்க.. வேறு வழியின்றி முன்னேறி அவனருகே அமர்ந்த தேன்நிலா வான்முகிலன் தோள்சாய, வளைத்துக்கொண்டான் காதலாக.
தன்னுள் கட்டுண்டிருந்தவளிடம் “பசிக்குதா? பால் வேணுமா?” என்க.. இவள் வேண்டாம் என தலையசைக்க.. “அப்போ பத்து மணிக்கு மேல குடிச்சிக்கலாம்.” என்றவாறு நிலாவை கட்டிலில் சரித்து, அருகே படுத்தான்.
சிறு எதிர்ப்பும் காட்டவில்லை தேன்நிலா, அதேநேரம் வான்முகிலனையும் பார்க்கவில்லை. முகம் பார்த்தால்தான் மனதிலுள்ளதை படித்துவிடுகிறானே என மெத்தை விரிப்பை பார்த்திருந்தாள்.
தேன்நிலா முகம் பெரும் தவிப்பிலிருக்க, “மண்டைக்குள்ள என்ன ஓடுது.? முகத்துல இப்படி பயத்தை காட்டினா நான் எப்படி உன்னை.. உன்கிட்ட..” என முற்றுபெறாமல் முடிக்க.. “இல்ல, அதெல்லாம் இல்ல.. உங்கக்கா எனக்காக பார்த்து செய்யிறாங்க, ஆனா என்னால ஒன்றிப்போக முடியல.” என்றாள் குற்றவுணர்வோடு.
“கல்யாணமாகி பதினைஞ்சு நாளுக்கப்புறம் நம்ம ரூம்க்கு வந்திருக்க.. இந்த அக்கா பிரச்சனை ஆட்டுக்குட்டி பிரச்சனைலாம் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ நான்.. நீ.. நம்மளைப்பத்தி மட்டும் யோசி.” என்றான் சிறு கடுப்போடு.
கோபமோ என தேன்நிலா வான்முகிலனை பார்க்க.. நிலா முகத்தில் விரலால் கோலமிட்டபடி.. “கொஞ்சம் முன்ன அதெல்லாம் இல்லனு சொன்னியே.. அந்த அதெல்லாம்ன்றது எது?” என்றான்
பதில்பேச முடியாமல் தேன்நிலா தடுமாற.. “இப்போ என்ன பண்ணிட்டேனு உன் முகம் இப்படி சிவக்குது? சிலிர்க்குது?” என்றான் சிரிப்போடு.
தேன்நிலா திரும்பிப்படுக்க முனைய அவளோடு இன்னும் நெருங்கிப் படுத்தான். மனைவியின் சம்மதம் மனமொழியாக அல்ல, வாய்மொழியாக வேண்டும் என மனம் பிடிவாதம் செய்ய.. “பயமாயிருக்குடி.” என்றான் கெஞ்சலாக.
“ரொம்ப நேரம் நின்னது கால் வலிக்குதா?” என அவளின் கால்களை பிடித்துவிட, இல்லை என்பதாய் உடனே தலையசைத்தாள்.
“அப்போ என் பயம் தேவையில்லாது.. ஆமாம்தான.?” என நிலாவை தன்புறம் திருப்ப, கண்களை மூடினாள்.
“சரி.. வார்த்தைல சொல்லவேணாம், சின்ன முத்தம் கொடு போதும்.” என தன் முகத்தால் அவள் முகம் நெருங்கியவன்.. “எங்க கொடுத்தாலும் எப்படி கொடுத்தாலும் ஓ.கே.” என்றான் கொஞ்சலாக.
தனது முக பாவனை கணவனை பயம் கொள்ள வைக்கிறதா? ஆகையால்தான் அனுமதி கேட்கிறானா? என தன் தவிப்பை போக்க எண்ணி பெருமூச்சிழுத்து மெல்ல இமை திறந்தாள் தேன்நிலா.
லாரிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து வான்முகிலன் கண்கள் எப்பொழுதும் சிவப்பாகத்தான் இருக்கும். தற்போதும் அப்படித்தான் இருந்தது.
ஆனால் வழக்கம்போல் பார்க்கும் கூரிய பார்வைக்கு மாறாக கணவனின் மோகப் பார்வையில் தடுமாறிய மனதை திடப்படுத்தி, முத்தம் கொடுக்க முயன்று தோற்று, வான்முகிலனின் சிகையை இறுக்கிப்பிடிக்க, அச்செயலிலேயே மிகுந்த திருப்தி அடைந்தான் வான்முகிலன்.
மனைவியை முழுதாய் அறிய ஆசைகள் கோடி இருந்தாலும், இதழை ஆக்ரமித்தவாறு மிக நிதானமாகத்தான் செயல்பட்டான் வான்முகிலன்.
ஒரு பெண் முதலில் அறியும்.. அடையும்.. பருவ இன்பம் கண்ட தேன்நிலா.. பனித்துளியின் முத்தம் பட்டு மலரும் மலரின் நிலைபோல் மயங்கியிருந்தாள்..
“தேனம்மா.. தேனு..” என அவளின் கன்னம் தட்ட, வான்முகிலனின் கண்பார்க்க முடியாமல் கவிழ்ந்து படுத்தாள் தேன்நிலா.
பதில் சொல்ல வார்த்தையின்றி தேன்நிலா தடுமாற.. “ம்.. குடி.” என பாலை கொடுத்தான் மனைவிக்கு.
வாங்கி பருக, வான்முகிலன் தேன்நிலாவையே பார்த்திருக்க.. “நீங்க குடிக்கல?” என்றாள்.
“ம்ஹும்.” என மறுத்தவன், அவளிடமிருந்து டம்ளரை வாங்கி டேபிளில் வைத்து.. “தூங்கு.” என்றான் கட்டளையாக.
உடைகளை சரிசெய்து கண்மூட, அறைக்குள் வான்முகிலன் நடக்க ஆரம்பிக்க, ஒரு மணிநேரமாக கண்மூடியிருந்த போதும் தூக்கம் அணுகவில்லை தேன்நிலாவிற்கு.
“நீ.. நீ.. ங்க தூங்கல?” என்றாள் சன்னக்குரலில்.
தூங்கிவிட்டாள் என நினைத்திருந்தவன் சட்டென மனைவியை பார்க்க, “தூக்கம் வரலயா?” என்றாள் அக்கறையாக.
அதற்கு மேல் தாளமுடியாமல் அவளருகே அமர்ந்தவன்.. “தூக்கம் வரல.” என தாபத்தோடு இதழை வருட, தன் வீட்டு மாடியில் அன்றும் இதற்காகத்தான் நடைபயின்றானா? என தேன்நிலா பரிதவிக்க.. அவளின் மனமொழி புரிந்து.. “ம்.. அன்னைக்கு என்னை ரொம்ப படுத்திட்ட, இன்னைக்கும் பத்தல, கொஞ்சம் கூட பத்தல. அதான் தூக்கம் வரல, வேணும்.. நிறைய வேணும்.” என்றவன் செயல்களில் பிரம்மித்த தேன்நிலா.. உணர்வுகளின் பிடியில் மொத்தமாய் சிக்கிட, தேன்நிலாவின் அச்சம் தானாய் விலகியது.
வேணாம் என விழிகள் பொய்யாய் கெஞ்ச, வேண்டும் என வெக்கம் மெய்யாய் கொஞ்ச.. மனைவியின் மனமொழி புரிந்தவனின் செயல்களில், மோகம் தேன்நிலாவையும் தொற்றிக்கொள்ள, நாணம் விலக்கி, வளையொலி கொலுசொலிக்கு போட்டியாக சின்ன சிணுங்கல்களோடு தேன்நிலா அல்லாமல் தேன்கிண்ணமாய் இனித்தாள் மனைவி.
வானம் போர்வையாக, அணைத்தவன் ஆடையாக, தான்தான் ஆளுகிறோம் என்று அறியாமலே அவளை ஆளச்செய்து ஆண்மையின் மென்மை உணர்த்தினான் வான்முகிலன்.
வானம் மொத்தமும் நிலவினுள் அடங்கும் விந்தை அரங்கேற.. அதிகாலை வரை வசந்தம் கண்டது வான்முகிலன் வாலிபம்..