தேன்நிலா தலைகுனிய.. அது நிச்சயம் நாணத்தால் அல்ல, ரேவதி பேசியதை நினைத்து என வான்முகிலனிற்கு புரிய.. “முதல்ல டீ குடி.. ரேவாக்கா பத்தி பேசலாம்.” என்றான்.
“உங்கக்கா பேசினதை மறக்க முயற்சிக்கறேன். இனி அதைப் பத்தி பேசவேணாம் ப்ளீஸ்..” என்றாள் கலக்கத்தோடு.
“சரி.. சரி.. டீ குடி.” என்றான் ஆதரவாக.
தேன்நிலா டீ குடித்து முடிக்க, கதவை தாழிட்டவன்.. “ரேவாக்கா பத்தி கொஞ்சம் பேசனும், ஆனா அத்தையை பேசினது பத்தி இல்ல, ரேவா பர்சனல் லைஃப் பத்தி.. இப்போ பேசலாமா? இல்ல இன்னொரு நாள் பேசலாமா?” என்றான் பொறுமையாக.
“இப்போவே பேசலாம்.” என்றாள் கணவனுக்காக.
“ம்..” என மனைவி கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு.. “மாமா கவர்மண்ட் வேலைன்றதால, பொண்ணு கேட்டதும் சின்ன வயசுனு கூட யோசிக்காம ரேவாக்காக்கு அப்பா கல்யாணம் செய்து வச்சுட்டார்.
பெருசா சீர் எதுவும் செய்யல, அப்போ அப்பாவால என்ன முடிஞ்சதோ அதை செய்தார். ஆறு மாசம் வரைக்கும் பெருசா எந்த பிரச்சனையும் வரல.
கல்யாணமாகி ஆறு மாசமாகுது, ஏன் இன்னும் குழந்தை இல்லை? டாக்டரை போய் பாருங்கனு ரேவாக்கா மாமியார் சொல்லியிருக்காங்க..
கல்யாணம் ஆகி ஆறுமாசம்தானே ஆகுதுனு மாமாக்கு டாக்டரை பார்க்க விருப்பமில்ல, ரேவாக்காகிட்ட சொன்னவர் அவங்கம்மாகிட்ட சொல்லியிருக்கனும். சொல்லாததால ரேவாக்காதான் டாக்டரை பார்க்க சம்மதிக்கலனு நினைச்சிட்டு திட்டியிருக்காங்க.
ரேவாக்கா மாமாகிட்ட புலம்பியிருக்கு, மாமா அவங்கம்மாவை திட்டவும் புருசனுக்கு சொல்லி கொடுத்துட்டானு ரேவாக்கா மேல இன்னும் வெறுப்பாகிட்டாங்க.
சீர் எதுவும் வேணாம்னு பேச்சுக்கு சொன்னா, கவர்மண்ட் வேலைல இருக்க மாப்பிள்ளைனு கூட யோசிக்காம இப்படியா ஒன்னுமில்லாம அனுப்புவாங்க? அப்படியிப்படினு பேச ஆரம்பிச்சிட்டாங்க.
அதுக்கு மாமாவும் எதுவும் சொல்லாததுதான் ரேவாக்காக்கு கஷ்டமாகிடுச்சு, கோபத்தோட இங்க வந்துட்டாங்க. அப்பா எடுத்து சொல்லி கொண்டுபோய் விட்டுட்டு வந்தார்.
ரேவாக்கா மாமியார்கிட்டயும் எங்க தராதரம் தெரிஞ்சுதான என் பொண்ணை கட்டிக்கிட்டு போனிங்க? இப்போ அதுயில்ல இதுயில்லனா என்ன அர்த்தம்? வரதட்சணை கேஸ் கொடுக்க வச்சிடாதிங்கனு எச்சரிச்சிட்டு வந்துருக்கார்.
எங்கப்பா ரேவாக்கா மாமியாரை பேசினது தெரியவும்.. எங்கம்மாவை பேச உங்கப்பாக்கு என்ன ரைட்ஸ் இருக்குனு மாமாக்கும் ரேவாக்காக்கும் சண்டை ஆகிடுச்சி.
அடுத்து வந்த கொஞ்ச நாள்ல அப்பா இறந்துட்டார். அது இன்னும் ரேவாக்கா மாமியாருக்கு சாதகமாகிடுச்சி. கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல குழந்தை வேணும்னு கேட்டவங்களுக்கு மூனு வருசம் ஆகியும் குழந்தையில்லனா சொல்லவா வேணும்? என்னென்ன பேசினாங்களோ? ஒருநாள் நான் லாரிக்கு போய்ட்டு வந்ததும், இனி அந்த வாழ்க்கை எனக்கு வேணாம்னு ஒரே அழுகை.
என்ன நடந்ததுனு கேட்டா.. எனக்கு வயித்துல கட்டி இருக்கு, குழந்தை வேணும்னா ட்ரீட்மண்ட் பண்ணனும் டாக்டர் சொன்னாங்க.. ஒன்னுமில்லாதவளை கட்டிக்கிட்டு வந்ததில்லாம இந்த தண்ட செலவு வேறையானு என் மாமியார் திட்டினாங்க. இப்படி வாழ்க்கை எனக்கு வேணாம் முகிலானு அழுதுச்சி.
ட்ரீட்மண்ட்க்கு எவ்வளோ செலவாகும்ன்னேன், லட்ச கணக்குல ஆகும்னு சொல்லுச்சு.. வழக்கமா அப்பா ஒருத்தர்கிட்ட கடன் வாங்குவார், அவர்கிட்ட போனேன். கடன் கேட்டேன். அப்பா வாங்கினதே ஐம்பதாயிரம் பாக்கி இருக்கு, நீ என்னப்பா இரண்டு லட்சம் கேக்குறனு கடன் கொடுக்க யோசிச்சாங்க.
அப்போ எனக்கு பதினேழு வயசுதான்.. டிரைவிங் லைசன்ஸ் கூட எடுக்கல, சும்மா க்ளீனராதான் போய்ட்டிருந்தேன், அவர் யோசிக்கிறதும் நியாயம்தானேனு நினைச்சு, அசல் கொடுக்க லேட்டானாலும் வட்டியை சரியா கொடுத்துடுவேன், நம்பி கொடுங்க. எங்கப்பா பேரை காப்பாத்துவேனு கேட்டேன், அப்பாவை சொன்னதும் கொடுத்தார்.
என் அக்காகிட்ட பணத்தை கொடுத்து ஊருக்கு வா, நான் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்னேன். ஏதுடா இவ்வளோ பணம்? அப்படி வட்டிக்கு வாங்கி அவங்களுக்கு குழந்தை பெத்துகொடுக்கனுமா? இரண்டு லட்சம்ன்றது சாதாரண விசயமா? எப்படி கடன் அடைப்ப? வீட்டு செலவுக்கு என்ன பண்ணுவ? நிறைய சுமையை ஏத்திக்காம பணத்தை கொண்டுபோய் கொடுத்துடுனு பிடிவாதம்.
பணத்தை விட உன் வாழ்க்கைதான் முக்கியம், கிளம்புனு சொன்னேன்.. அப்போவும் மறுத்துச்சி.. வாழ்க்கை இதுதானு டிசைட் பண்ணிட்டா முடிஞ்சவரை சமாளிக்கத்தான் பார்க்கனும். முடியலனா மொத்தமா விலகி வந்துடனும்.. இதுல எது உன் சாய்ஸ்னு கொஞ்சம் மிரட்டலோட கேட்டேன்.
ரேவாக்கா திருதிருனு முழிச்சுச்சு.. இந்த ஒரு முறை வாக்கா, மாமாகிட்ட நான் பேசுறேன்னு தேற்றி கூட்டிட்டு போனேன்.
நான் போன நேரம் மாமா வீட்டுல இல்ல, பணம் கொடுத்துருக்கேன், மாமா வந்ததும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக சொல்லுங்கனு ரேவாக்கா மாமியார்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்.
அதுக்கப்புறம் ஒரு வருசம் கழிச்சும் குழந்தையில்ல, வேற ஹாஸ்பிட்டல்ல பார்க்கலாம்னு விசாரிச்சு அம்மாவை அழைச்சிட்டு போக சொன்னேன். அங்க இன்னும் மூனு லட்சம் செலவானது. அம்மாகிட்ட இருந்த கொஞ்ச நகையையும் வித்துட்டேன், அதில்லாம வெளில கடன். இவ்வளோ செய்தும் குழந்தையில்லையேனு ரொம்ப மன உளைச்சலாகிடுச்சு.
மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் நான் வீட்டுல தங்கறதே பெரிய விசயம்.. பணம் சம்பாதிக்கிறது மட்டும்தான் என் கவனத்துல இருக்கும்.
உத்திரபிரதேசத்துல இருந்தப்போ ஒருநாள் அம்மா ஃபோன்.. உடனே வீட்டுக்கு வான்னு.. அம்மா சொல்றதுக்காகலாம் வந்துட முடியுமா? சரக்கை சேர வேண்டிய இடத்துல சேர்த்துட்டு வீட்டுக்கு வர பத்து நாள் ஆகிடுச்சி.
நைட் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வரேன்.. அம்மாவும் ரேவாக்காவும் முழிச்சிட்டு இருந்தாங்க. என்னாச்சுனு கேட்டா.. இத்தனை லட்சம் செலவு செய்தும் வராத குழந்தை இனிமேலா பிறக்கப்போகுது? பேசாம அத்துவிட்டுடலாமானு அவங்கம்மா கேட்கும்போது மாப்பிள்ளை அமைதியாவே இருந்தாங்களாம். எப்படி முகிலா அங்க அனுப்புறதுனு அம்மா அழுதாங்க.
அம்மா சொல்றது உண்மையாக்கானு கேட்டேன். ரேவாக்கா அழவும், கோபம்னா கோபம்.. கண்மண் தெரியாத கோபம் வந்துடுச்சி.. மாமாக்கு போன் செய்தேன்.
உனக்கு டைவர்ஸ் வேணும்னா நீ கேளு.. பொட்டத்தனமா உங்கம்மாவை எதுக்கு கேக்க வைக்கிறனு பச்சையாத்தான் திட்டினேன். மரியாதையா பேசுடானு மாமா எகிறவும்.. நான் எதுக்கு உனக்கு மரியாதை கொடுக்கனும்?
இனி உனக்கும் என் அக்காக்கும் சம்மதமில்ல.. இன்னும் ஒரே வாரத்துல அனுப்புறேன் வக்கில் நோட்டிஸ்.. மான ரோசம் இருந்தா மறுப்பு சொல்லாம கையெழுத்து போட்டுனு, இன்னும் நல்லா கத்திட்டு வச்சுட்டேன்.
நான் இப்படி முடிவெடுப்பேனு அம்மா நினைக்கல, பொறுமையா பேசிருக்கலாமில்ல முகிலானு பயந்தாங்க. என்ன பொறுமையா பேசுறது? குழந்தையில்லனா டைவர்ஸ் பண்ணுவாங்களா? எப்போ அந்த வார்த்தை வந்ததோ இனி ரேவாக்காவே நினைச்சாலும் அங்க அனுப்ப நான் தயாரா இல்லனு சொல்லிட்டேன்.
கொஞ்ச நாள் போகட்டும், ரேவா உடம்பு சரியானதுக்கப்புறம் வேற நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கலாம்னு முடிவெடுத்துதான் அம்மாகிட்டயும் மாமாகிட்டயும் அப்படி சொன்னேன்.
ஆனா என் முடிவை பொய்யாக்கிட்டான் என் மருமகன்.. ம்.. அக்கா கர்பம்ன்ற விசயம் அடுத்தநாள் தெரியவந்தது.” என்றான் மென்மையான முகத்தோடு.
இந்த விசயத்தை சொல்லி பிருந்தா கேக் கொடுத்தது நினைவு வர, இத்தனை ஆர்பாட்டத்திற்கு பிறகுதான் ப்ரவீன் கிடைத்தானா என யோசித்திருந்தாள் தேன்நிலா.
கர்பமான விசயத்தை சொல்ல வேணாம்னேன். சொல்லலைனா தப்பாகிடும்னு அம்மா எனக்கு தெரியாமலே சொல்லிட்டாங்க. அடுத்தநாள் குடும்பமே வந்தாங்க.
நான் பேசினதுக்கு சண்டைக்கு வராங்கனு பார்த்தா, அக்காவை கூட்டிட்டு போறேனு சொன்னாங்க. எப்படி இப்படி டமார் பல்டி அடிக்கிறாங்கனு சரியான கோபம் எனக்கு. ஒரே முடிவா அனுப்பவே முடியாது. டைவர்ஸ் டைவர்ஸ்தான்னுட்டேன்.
அப்போ எங்க வம்ச வாரிசு என்கிட்டதான் வளரும்ன்னாங்க. பத்து மாசம் சுமந்து குழந்தையை பெக்க போறது என் அக்கா.. குழந்தை எங்களுக்கும்தான் வாரிசுனு சண்டைக்கு மேல சண்டைதான் நடந்துச்சு.
மாசமா இருக்கும்போது மன உளைச்சல் வேணாம், குழந்தை பிறந்த பின்ன பேசிக்கலாம்னு அம்மா மாமாகிட்ட கெஞ்சவும், மாமா குடும்பம் அமைதியா போய்ட்டாங்க.
ஆனா எனக்கு ரேவாவை அங்க அனுப்ப மனசே இல்ல, குழந்தை பிறந்தாலும் அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டேன்.
ரேவாவால என் மன உளைச்சலை தாங்க முடியல, அதோட மக வாழ்க்கை வீணாகிடும்னு அம்மா புலம்பலை தாங்க முடியாம குழந்தை பிறந்த பின்ன புருசன் வீட்டுக்கு போக முடிவெடுத்துச்சு.
வெக்கமாயில்லையா உனக்குனு ரேவாவை திட்டினேன். குழந்தையோட ரேவா வாழாம இருந்தா நம்மளால நிம்மதியா இருக்க முடியுமானு மாசக்கணக்கா எங்கம்மா ஒரே அழுகை. வேற வழியில்லாம போய்த் தொலையுதுனு அக்காவை அனுப்பி வச்சேன்.
மாமா குடும்பம் ப்ரவீன் பிறந்த பின்ன டோட்டலா மாறிட்டாங்க. ஆனா ரேவாக்காவாலதான் பழசை மறக்க முடியல, இப்போ வரைக்கும் மாமாவோட இணங்கி வாழ்றதில்லனு எனக்கு நல்லாவே தெரியும்.. அந்த வேதனை மனசுல ஓடிட்டேதான் இருக்கும்.
ஒன்னு முழுசா விலகிடனும், இல்ல பிரச்சனையை மறக்க பார்க்கனும்னு எத்தனையோ முறை சொல்லிட்டேன். நான் நல்லாத்தான் இருக்கேனு ஒரே வார்த்தையில முடிச்சிடும்.
இப்போ முகிலன் எவ்வளவோ செய்துட்டான், ஆனா அப்போ சீர் கொடுக்காததாலயும், விரும்பிய நேரம் குழந்தை பாக்கியமும் கிடைக்காததாலயும்தான இத்தனை பிரச்சனை?
எதுவானாலும் நடக்க வேண்டிய நேரத்துல நடந்தாதான் மதிப்பிருக்கும். ஓரிடத்துல நிர்வாணமாகி நின்னபின்ன எத்தனை உடுத்தினாலும் போன மானம் போனதுதான்னு அம்மாகிட்ட சொல்லுமாம். பிருந்தா என்கிட்ட சொல்லுவா.
அந்த மனநிலையிலயே கிட்டதட்ட எட்டு வருசமா வாழ்ந்திட்டிருக்கு. அந்த நேரம் என் கல்யாணம் நிக்கவும், எப்படியாவது குறிச்ச தேதியில கல்யாணத்தை நடத்தியாகனும்ன்ற எண்ணத்துல உன்கிட்ட அப்படி பேசிடுச்சி.
அது நிச்சயம் சரி கிடையாது, சின்ன வயசுலயே கல்யாணம், நிம்மதியில்லாத பத்து வருச கல்யாண வாழ்க்கையால பக்குவமா எதையும் யோசிக்க தெரியல, தன் குடும்பத்துக்காக உழைக்கிற தம்பி வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு நினைச்சி உன்கிட்ட முட்டாள்தனமா நடந்துடுச்சி.
ரேவா பேசினதை நீ மன்னிக்கனும்னு நான் நினைக்கல, தன் சொந்த பிரச்சனைக்காக உன்னை தப்பா பேசி கார்னர் பண்ண நினைச்சது சரியும் கிடையாது. உனக்கு பிடிக்கலனா ரேவாவோட பேசாத.
ஆனா அதை நினைச்சிட்டு நம்ம வீட்டுல உன் நிம்மதியை கெடுத்துக்காத நிலா. உன் அம்மா கல்யாணம் தப்புனு நம்ம வீட்டுல யாரும் நினைக்கல.” என்றான் மன்றாடலாக.
ரேவதி வாழ்க்கையை நினைத்து எத்தனை வேதனையடைகிறான் என்பதிலேயே ரேவதி மீதுள்ள பாசம் புரிந்தது. ஆனாலும் ரேவதிக்காக தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசும் கணவனின் பேச்சில் நெகிழ்ந்து சரி என்பதாய் தலையசைத்தாள் கண்ணீரோடு.
மனைவியின் கண்ணீர் துடைத்து அணைக்க.. “உ… உ.. உங்க ரேவாக்கா சொன்னாங்கள்ல? நிர்வாணமா நின்ன பின்ன எத்தனை உடுத்தினாலும் மானம் போனது போனதுதான்னு.. அதே போலத்தான் எனக்கு தமிழன் பாட்டி சொன்னதும்.” என இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத லிங்கேசன் அம்மா சொன்ன வார்த்தைகளை திணறி திணறி கண்ணீரோடு சொல்லி கதறினாள் தேன்நிலா.
தேன்நிலாவின் அழுகை சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் வான்முகிலன் அறையருகே வந்தனர்.