“ஹே.. நிலா..அழாத.. அழாத..” என மட்டுமே தேற்றியவன் கண்கள் குளம் கட்டியது.
பாட்டி சாப்பாடு.. என போய் நின்ற நிலாவிடம்.. உங்கப்பங்காரனை தூக்கி கொடுத்துட்டு உங்கம்மா எங்க எழவை எடுக்க வந்துட்டா, கூடுதல் தரித்திரமா நீ வேற.. எவனுக்கோ பிறந்த பிள்ளைக்கெல்லாம் என் மகன் அப்பனாகனும்னு தலையெழுத்தா?
உங்கம்மா உனக்கு அப்பனை மட்டும் தேடியிருந்தா பொண்டாட்டிய பறிகொடுத்த எவனையாவது கட்டியிருப்பா.. அவளுக்கு ஆம்பிளை சுகம் கேட்டுருக்கு. என சொல்லி, இப்போ நான் சொன்னது எல்லாத்தையும் ரொம்ப அசிங்கமான வார்த்தையில பச்சையா பேசினாங்க.
புருசன் பொண்டாட்டி உறவுனா என்னனு ஏழு வயசிலயே என்னால யூகிக்க முடிஞ்சது. அந்தளவுக்கு பேசினாங்கங்க என நிலா கதறியழ.. ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை வான்முகிலனிற்கு.
ஏழு வயது சிறுமியிடம் எப்படி பேசியிருக்கிறார்கள்? இப்படியும் மனித ஜென்மமா? என லிங்கேசனின் அன்னையை வறுத்தெடுத்தான் மனதில்.
“இப்போலாம் திருந்திட்டாங்கனு அப்பாவும் தமிழும் சொல்வாங்க.. ஆனாலும் அவங்க முகத்துல முழிக்க எனக்கு பிடிக்கல, அவங்களை நினைச்சாலே ரொம்ப அருவருப்பா இருக்கும், அதனாலதான் என் தாத்தா பாட்டி இறந்த பின்னயும் அங்க போகாம இங்கேயே தனியா இருந்துட்டேன்.” என்றாள் கண்ணீரோடு.
அச்சம்பவம் நடந்த அன்று நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்ததும், யார் கேட்டும் காரணம் சொல்லாமல் பினாயில் குடித்து உயிரை விட நிலா துணிந்ததாகவும் மங்களம் சொன்னது நினைவு வர, வேதனையடைந்தவன்.. “ப்ச்.. நிலா.. விடு.. அதைப் பத்தி பேசாத.” என மிரட்டினான்.
“ம்.. ம்.. பேசல.. ஆமாம் எனக்கு அதை நினைக்க பிடிக்காது..” என துடைக்க துடைக்க வழியும் கண்ணீரை துடைத்தவாறு தன்னை தேற்ற முயன்றாள்.
“முகிலா..” என ரேவதியின் குரல் ஓங்கி ஒலிக்க.. “வரேன் ரேவா..” என்றான்.
“அ.. அ.. அவங்க யாருக்கும் த்.. த்.. தெரிய வேணாம். ப்ளீஸ்..” என திணறினாள் கெஞ்சலாக.
வான்முகிலன் முறைக்க.. செந்தாமரை மகள் நினைவு வரவும்.. “ஆமாம்ல? நீங்க சொல்லமாட்டிங்க. சொல்லமாட்டிங்க.” என்றாள் நம்பிக்கையோடு.
மெச்சுதலாய் பார்த்தவன்.. வெளியே அனைவரும் பதட்டத்தில் இருப்பார்கள் என்றும், தற்போது உள்ளேயே இருந்தால் பழைய நினைவலிருந்து மீண்டு வர சிரமப்படுவாள் என்பதாலும், ஒருமுறை அனைவரையும் சந்தித்து விட்டால் பிறகு தூங்க சொல்லலாம் என்பதாலும் வெளியே போக நினைத்து, “ம்.. கண்ணை துடை, நீ அழும் சத்தம் கேட்டுத்தான் கூப்பிடறாங்க.” என்றெழுந்து சென்று சிறிதாய் கதவை திறந்தான்.
“முகிலா… நிலா என்னோட பேசலனா பரவாயில்ல, அவளை ஏதும் சொல்லாத.” என பரிதவித்தாள் ரேவதி.
“ஹே ரேவாக்கா.. அவ உன்னை நினைச்சி அழல.” என சொன்னாலும் அங்கே யாரும் நம்ப தயாராய் இல்லை.
தேன்நிலா அழுகை சத்தம் கேட்டதும் உண்மையில் அவளிடம் மன்னிப்பு கேட்க பரிதவித்தாள் ரேவதி. ஆனால் தற்போது கேட்டால் தம்பிக்காக என்றாகிடும் என தயங்கி நிற்க.. “அண்ணா எனக்கு நிலாவை பார்க்கனும்.” என்றாள் பிருந்தா.
“உள்ள வா.” என நன்றாக திறக்க, பிருந்தா உள்ளே போக, வாசலிலேயே நின்றாள் ரேவதி.
“பிருந்தா.. நான் உன் அக்கா பேசினதைப்பத்தி பேசல.” என தேன்நிலா தவிப்பாய் சொல்ல.. பிருந்தா மனம் ஆசுவாசப்பட்டாலும்.. “அப்போ எதுக்கு அப்படி அழுத?” என்றாள் கவலையாக.
“ம்.. அது எனக்கும் அவருக்கும் உள்ள விசயம், உனக்கு சொல்லமாட்டேன்.” என்றாள் கலங்கிய கண்களோடும் சிரிப்போடும்.
“ப்ச்.. நிலா.. எதுக்கு அழுதனு எனக்கு சொல்ல மாட்டியா?” என்றாள் தவிப்பாக.
“எதுக்கு அழுதேனு த்.. தெரியல ப்..பிருந்தா, ஆ..னா அழவும் என் மனபாரம் குறைஞ்சிடுச்சு, நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என திணறினாள் சிரித்த முகமாக.
“உள்ள வா ரேவா.” என வான்முகிலன் அழைக்க, அப்பொழுதும் உள்ளே வராமல் ரேவதி தயங்க, தான் அழைக்காததால் வரவில்லையா என அதிர்வாய் கணவனைப் பார்த்தாள்.
கணவனிற்காக ரேவதி பேசியதை மறக்க வேண்டும்என மனதில் நினைத்திருந்தாலும், சட்டென பேச வாய் வரவில்லை தேன்நிலாவிற்கு. மனைவியை உணர்ந்து.. “பிருந்தா இரண்டு பேரும் வெளில வாங்க.” என வான்முகிலன் வெளியேறினான்.
“நிலா.. பெட்கவர் போர்வைலாம் எடுத்து வந்து மிஷின்ல போட்டுட்டு முகம் கை கழுவிட்டு வா, விளக்கேத்தனும்.” என மருமகளுக்கு பணித்து, “ராணி போய் ரூமை துடைச்சிடு.” என்று வேலையாளிடம் சொல்லி, மருமகளைப் பார்த்தார்.
சரி என்பதாய் தலையசைத்து சுப்புலஷ்மி சொன்னதை செய்து, தனதறைக்கு சென்று முகம் கழுவி வரும்போதே பிருந்தாவிற்கான மோதிரத்தையும் எடுத்து வந்தாள் தேன்நிலா.
தம்பதியாய் நின்று கடவுளை வணங்க, மங்களம், லிங்கேசன், தமிழரசன் வந்தனர்.
“வா மங்களம்.வாங்க.” என அனைவரையும் வரவேற்க, மகள் மருமகனை பார்த்து பூரித்து போனார்கள் லிங்கேசனும் மங்களமும்.
“அப்பா..” என தேன்நிலா முகம்மலர, மகளின் கண்சிவப்பில் தானாய் மலர்ந்தது மங்களத்தின் முகம்.
“நிலா இதை பிருந்தாக்கு கொடுத்துடு. நேத்து தண்ணில போட்டு எடுத்துட்டேன், இனி கொடுக்கலாம்.” என தேன்நிலா வாங்கிய புடவையை கொடுக்க, “நான் வாங்கமாட்டேன்.” என முறுக்கினாள் இந்துபிருந்தா.
“உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன்தான?” என கெஞ்சலாய் பார்க்க, “என்ன வாக்கு?” என்றாள் பிருந்தா.
“அ..அது உன் கல்யாணத்தப்போ என்னை சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொன்னதான? நான் செய்துக்கிறேனு சொன்னேன். சொன்ன மாதிரியே இதோ இப்போ கல்யாணம் செய்துட்டேன். அதுக்காகவே நீ மோதிரம் வாங்கிக்கனும்..” என்றாள் உரிமையாக.
“என்ன? கல்யாணம் நீ செய்துக்கிட்டியா?” என வான்முகிலன் முறைக்க.. அமைதியா இருங்களேன் என்ற பார்வை பார்த்தாள் கெஞ்சலாக.
“அதை உரிமையா அப்போவே கொடுத்திருக்கனும்.” என இந்து பிருந்தா முறைக்க.. “இதை உன்கிட்ட கொடுக்காம முடியாம போனதுக்கு உங்கண்ணன்தான் காரணம்.” என்றாள் தேன்நிலா.
“ஏதே..” என வான்முகிலன் வியக்க, “ஆமாம்.. பிருந்தா கல்யாணத்துக்கு முன்னவே என்னை கல்யாணம் செய்திருந்திங்கனா இந்த பிரச்சனை வந்துருக்காது, எல்லாம் உங்களாலதான்..
நீங்க லேட் பண்ணவும்தான் கொடுக்க முடியாம ஆகிடுச்சு, அதனால நீங்களே என் ஃப்ரண்டை சமாதானம் செய்து மோதிரத்தை போட்டு விடுங்க.” என கணவனிடம் ஒப்படைத்தாள் பொறுப்பை.
“ஹே..” என சந்தோசக் குரலோடு சுபாஷ் வெளியே வர, தேன்நிலா முகம் வெக்கத்தை பூச, பொலிவான முகத்தோடு.. “எனக்குத்தான் பல்பு எரியாம போச்சு, நீ எனக்கு ப்ரப்போஸ் பண்ணிருக்கலாமில்ல? ஏன் நானேதான் கல்யாணத்துக்கு கேட்கனுமா?” என சிரிப்போடு கேட்டான் வான்முகிலன்.
அனைவரும் அருகில் இருக்க, அதற்கு மேல் வாதிட முடியாமல் கணவனை மீண்டும் கெஞ்சலாய்ப் பார்த்தாள் தேன்நிலா.
வான்முகிலன்.. “பிருந்தா.. என் பொண்டாட்டிய ரொம்ப கலங்க வைக்காத. அப்புறம் பின் விளைவுகள் ஜாஸ்தியா இருக்கும்.” என சிரிப்போடு மிரட்ட, “கெஞ்சினா கூட வாங்க யோசிச்சிருப்பேன், மிரட்டுறிங்களா? அப்போ வாங்கவே மாட்டேன்.” என மறுத்தாள்.
“அண்ணா..” என தேன்நிலா சுபாஷை பார்க்க.. மனைவியிடம் சென்ற சுபாஷ்.. “மாசமா இருக்க பொண்ணுங்க ஆசைப்படறது மட்டும்தான் நிறைவேறனும்னு இல்ல பிருந்தா.. மாசமா ஆகப்போற பொண்ணுங்க ஆசைப்படறதும் நிறைவேறலாம்.” என கண்ணிமைத்து கிசுகிசுத்தான்.
“உனக்கான கிஃப்ட் வாங்கிட்டு அதை கொடுக்க முடியாம எவ்வளோ தவிச்சிருக்கும்… எத்தனை கஷ்டத்துக்கப்புறம் நிலா உன் வீட்டுக்கு வந்துருக்கு, கோபம் காட்டின வரை போதும். போய் மோதிரம் போட்டுக்கோ, இனி விளையாட்டுக்கு கூட நிலா மனசு கஷ்டப்படக்கூடாது.” என்றான் சுபாஷ்.
அன்று தன் திருமணத்தின் போது தேன்நிலா அழுததை நினைத்து, உண்மைதான்.. இனி நிலாவை தவிக்க விடக்கூடாதென தோழியிடம் வந்தவள்.. “ம்..” என நீட்டினாள் தனது விரலை.
அனைவரும் பெருமையாய் பார்த்திருக்க.. தேன்நிலா பிருந்தா கையில் மோதிரம் அணிவித்தாள் சந்தோசத்தோடு.
பிறகு சேலையையும் கொடுக்க, பிரித்துப் பார்த்த பிருந்தாவின் முகம் மகிழ்ச்சியை காண்பிக்க, சந்தோசத்தோடு சுப்புலஷ்மி கிச்சன் சென்றார்.
ரேவதி மீதுள்ள வருத்தத்தை மகனிடம் காண்பிப்பாளா? அல்லது மகனோடு மருமகள் சந்தோசமாக இருந்திருப்பாளா என்ற தவிப்போடு காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்தார் சுப்புலஷ்மி.
யாரும் எழாமல் இருக்க, மருமகன்களும் வீட்டில் இருப்பதால் பால்பாயாசம் செய்து, சாம்பார், குருமா, சட்னியும் செய்து, அனைவரும் எழுந்த பின்னே இட்லி, அல்லது எது வேண்டுமோ செய்து கொள்ளலாமென பாலை காய்ச்சும் நேரம்தான் பிருந்தா மகன் அறையை தட்டினாள்.
எனவே தற்போது இட்லிக்கு வைத்து, மற்றொரு அடுப்பில் தோசை வார்க்க ஆரம்பித்தார். “பிருந்தா நாம செய்யலாமா?” என கண்களால் கிச்சனை காட்ட, “ஆத்தி.. எனக்கு தாளிப்பு வாடையே ஆகாது. ஆளை விடு.” என்றாள் அலறலாக.
“எல்லாரும் இருக்கிறதால முன்னவே சமைச்சிட்டேன் நிலா. இட்லி ஊத்தி, தோசை வார்க்குறது மட்டும்தான்.. நான் பார்த்துக்கிறேன்.” என் உள்ளிருந்து சொன்னார் சுப்புலஷ்மி.
“மகள் மருமகனை மறு வீட்டு விருந்துக்கு அழைச்சிட்டு போக வந்தோம் ம்மா.” என்றார் லிங்கேசன்.
“சைவம்லாம் விருந்துல வராதுங்க தம்பி.” என்க, “நேத்து கறிவிருந்தே இன்னும் செரிக்கல, எதுவானாலும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வச்சிக்கலாம் மாமா, இன்னைக்கு வேணாம்.” என்றான்.
இருவரும் தனிமையை எதிர்பார்ப்பார்களோ என யோசித்து.. “உங்க விருப்பப்படி செய்துக்கலாம். நாங்க கிளம்பறோம்.” என்க, “இரு மங்களம் சாப்பிட்டு போகலாம்.” என்றார் சுப்புலஷ்மி.
கிச்சன் சென்ற மங்களம்.. “நிலாகிட்ட புடவையை கொடுத்துட்டு விருந்துக்கு அழைச்சிட்டு போகத்தான் வந்தோம். மகளைப் பார்த்ததும் மனசு நிறைஞ்சிடுச்சி, இனி வயித்துக்கு அவசரமில்லை.
கல்யாணம் ஆகி பதினைஞ்சு நாளுக்கப்புறம் சேர்ந்துருக்காங்க, தனிச்சு பேச நிறைய இருக்கும். நாங்க ஒரு வாரம் கழிச்சி வந்து அழைக்கறோம்.” என இன்முகமாக வெளியே வந்து..
“தமிழன் காலேஜ்க்கு லேட் ஆகிடும், நாங்க இன்னொரு நாள் வரோம்.” என வான்முகிலனிடமும் பிருந்தா ரேவதியிடமும் சொல்லி விடைபெற்றனர்.
பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக மகனை குளிக்க வைத்து நரேந்திரன் ப்ரவீனோடு வர, “உனக்கு கிளி ரொம்ப பிடிக்குமா?இன்னும் என்னெல்லாம் பிடிக்கும்?” என ப்ரவீனோடு நன்றாக பேசினாள் தேன்நிலா.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், “ம்மா.. ப்ரவீனை ஸ்கூல்ல விட இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும். நாங்க கிளம்பறோம்.” என்றாள் ரேவதி.