ரேவதி இங்கு வந்தால் குறைந்தபட்சம் மூன்று, அல்லது நான்கு நாட்களாவது நிச்சயம் இருப்பாள் என்பதால்.. “மாப்பிள்ளை விட்டுருவார், நீ இரு ரேவா.” என்றார் சுப்புலஷ்மி.
“இல்லம்மா.. இப்போல்லாம் ஸ்கூல் போய்ட்டு வரும்போது நான் இல்லைனா மாமனார் மாமியாரை ரொம்ப படுத்துறானாம். நான் கிளம்பறேன்.” என்றாள்.
“ஒன்னாவதுதான படிக்கிறான். இரண்டு நாள் லீவ் போட்டுக்கலாம். இரு ரேவா.” என்றான் வான்முகிலன்.
நீண்ட நாள் கழித்து தன்னை இருக்க சொல்லும் தம்பியை பார்த்தவள் கண்கலங்கியது. “ஹேய்.. ரேவா என்ன இது?” என்க.. “ஆறு மாசமா என்னை துரத்துறதுலதான குறியா இருப்ப.. இப்போ மட்டும் என்ன?” என்றாள் ஆதங்கமாக.
“அது.. நீ மாமாவை ரொம்ப படுத்துறதுனால சொன்னேன். இப்போ அப்படியில்லயில்ல? இதுக்குப் போய் அழுவியா?” என சிரித்து, “இரு.. இரண்டு நாள் கழிச்சி போய்க்கலாம்.” என்றான் பிணைப்போடு.
“மாமா அப்போ நானும் ஸ்கூல் போக மாட்டேன், அம்மாவோடதான் இருப்பேன்.” என்றான் ப்ரவீன்.
“பரவால்ல முகிலா, ப்ரவீன் இப்போதான் என்னோட ஒட்ட ஆரம்பிச்சிருக்கான்.. அவனுக்கு ஸ்கூல் லீவ் விடும்போது வரேன்.” என அறைக்குள் சென்று தயாராகி வந்து அனைவரிடமும் சொல்லி தேன்நிலாவைப் பார்க்க, தலைகுனிந்தாள் தேன்நிலா.
லிங்கேசனின் அன்னையையே இன்னும் மன்னிக்க முடியாத தேன்நிலாவிற்கு, தன் அக்காவை மன்னிக்க காலம் ஆகும் என்றுணர்ந்த வான்முகிலனிற்கு இருவர் நிலையை நினைத்தும் சங்கடமானது.
“கவலைப் படாத ரேவாக்கா, போகப்போக சரியாகிடுவா.” என அக்காவை தேற்ற.. சரியென்பதாய் தலையசைத்து கணவன் மகனோடு கிளம்பினாள் ரேவதி.
தேன்நிலா தவிப்பாய் பார்க்க.. “உன் குழந்தை வயித்துலதான இருக்கு? நீ இரு, இரண்டு நாள் கழிச்சு போய்க்கலாம்.” என்றான்.
“வயித்துல இருக்க குழந்தைக்குத்தான் அங்க எல்லாரும் ஆவலோட வெய்ட்டிங்..” என வான்முகிலனிடம் சொல்லி, தோழியை தனியே அழைத்து சென்றவள்.. “கண்ணெல்லாம் ரொம்ப சிவந்திருக்கு, தூங்கி ரெஸ்ட் எடு. அண்ணாவோட நிறைய பேசி உன் மனபாரம்லாம் இல்லாம ஆக்கு.. நான் ஒரு வாரம் கழிச்சு வரேன்.” என்றாள் ஆத்மார்த்தமாக.
வெக்கத்தோடு தேன்நிலா தலைகவிழ.. “அங்க அவரோட தாத்தாக்கு நான் வேணும்.. இப்போ நிறைய கதை சொல்ல ஆரம்பிச்சிருக்கார். எனக்கு தூக்கம் வந்தாலும், நீ தூங்கு பிருந்தாம்மா, உன் வயித்துல இருக்க என் கொள்ளு பேரன் கேட்டுப்பானு சொல்வார்.
அப்படிபட்டவங்களை விட்டுட்டு இங்க இருக்க முடியாதில்ல? அது சரியும் கிடையாதுதான? எதாவது முக்கியமான வேலைனா கண்டிப்பா வந்துடுவேன். இப்போ நான் கிளம்பவா?” என்றாள் தன்மையாக.
“காலைல சீக்கிரம் எழுந்தது ஒருமாதிரி இருக்கு முகிலா, நான் படுக்கறேன்.” என சுப்புலஷ்மி அறைக்குள் செல்ல, மனைவியை அழைத்து வந்தான் தனதறைக்கு.
“ஏங்க.. எனக்கு உங்க ரேவாக்காவோட” என திணற.. “ஸ்.. ஏதும் பேசக்கூடாது, உன்னை எனக்கு புரியும்.. பேசாம படு..” என கட்டளையிட்டு கட்டிலில் சரிந்தான்.
தேன்நிலா முகம் தவிப்பிலிருக்க.. “ப்ச்.. உன்னை எனக்கு தெரியாதா? எல்லாம் போக போக சரியாகிடும். சரியாகலனாலும் பிரச்சனை வராம நான் பார்த்துக்குவேன். எதையும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கு.” என்றான் கட்டளையாக.
“ம்.” என கண்மூட, பத்து நிமிடம் கழித்தும் தேன்நிலாவின் அலைபுறும் கண்களைப் பார்த்தவன்.. நெருங்கிப் படுத்து, “தூக்கம் வரலையா?” என்றான்.
பட்டென கண்விழித்தவள்.. இல்லை என்பதாய் தலையசைத்தாள் பாவமாக.
மனதிலுள்ளதை சொல்வதற்கு முன்பே கண்கலங்கியது தேன்நிலாவிற்கு. “ப்ச்.. நிலா.” என வான்முகிலன் முறைக்க.. “அன்னைக்கு என் அப்பாவோட அம்மா என்னை வீட்டை விட்டு துரத்த நினைச்சிதான் அப்படி பேசினாங்க. ஆனா அவங்க பேசினது மகன் மருமகளோட அந்தரங்கத்தைனு எப்படி உணராம போனாங்கனு தெரியல.
உங்களுக்காக என்னை உங்கக்கா கேக்கும்போதும், எங்கம்மா சுகத்துக்காக என்னை தனியா விட்டுட்டு இருக்காங்கனு சொன்னாங்க.. என்ன? லிங்கேசப்பாவோட அம்மா பேசினதை போல கெட்ட வார்த்தையில சொல்லாம கொஞ்சம் வேறமாதிரி சொன்னாங்க.. அவ்வளோதான் வித்தியாசம்.
அப்போவும் உங்களுக்காகத்தான் அப்படி பேசினாங்க, இப்போவும் உங்களுக்காக என்மேல அன்பா இருக்க நினைக்கிறாங்கனு புரியுது. காலைல நான் அழுததுக்கு காரணம் அவங்களா இருக்குமோனு நினைச்சி அவங்களோட பேசலனாலும் பரவால்லனு உங்ககிட்ட சொல்லவும் அவங்கமேல உள்ள வெறுப்பு உண்மையா குறைஞ்சிடுச்சி.
இன்னைக்கு கிளம்பும் போது என்னை பார்த்தாங்க, அவங்களுக்காக இல்லனாலும் உங்களுக்காகவாவது சின்னதா தலையசைச்சா என்ன குறைஞ்சிடும்னு உள்ளுக்குள்ள தோணுச்சுதான்.. ஆனா செய்ய முடியல..
இயல்பா பேசுவேனா தெரியாது. ஆனா கண்டிப்பா இந்த வீட்டுல அவங்களை அந்நியமா உணர வைக்க மாட்டேன், நமக்கு உரிமையான இடத்தில அந்நியமா உணருறது எவ்வளோ கொடுமைனு ஏழு வயசுலயே உணர்ந்திருக்கேன். உங்களோட பிறந்தவங்களுக்கு அந்த கொடுமையை உணர்த்தி அவங்களையும் கஷ்டப்படுத்தி, உங்களையும் கஷ்டப்படுத்தமாட்டேன்.
போகப்போக சரியாகனும்னு கடவுளை வேண்டிக்கறேன். அதுவரை எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.” என்றாள் யாசகமாக.
உணர்வுகளை வெளிக்காட்டாமல்.. “பேசி முடிச்சிட்டியா? இதெல்லாம் நீ சொல்லாம எனக்கு தெரியாதா? பேசாம தூங்குடி.. கண்ணெல்லாம் கபகபனு எரியுது.” என்றான் அதட்டலாக.
அப்பொழுதும்.. “என் மேல கோபம் வரல.?” என கேட்க.. “இதுல எங்கையாவது உன் தப்பு இருக்கா?” என்றான்.
இல்லையென்பதாய் தேன்நிலா தலையசைக்க.. “அப்போ எப்படி எனக்கு உன்மேல கோபம் வரும்? தப்பு பண்ணாதவங்க மேல கோபப்படறதுக்கும், முட்டாள்தனமா பேசுறதுக்கும் நான் என்ன தமிழன் பாட்டி மாதிரி பைத்தியக்காரனா?” என முறைக்க.. “அ.. அ.. அச்சோ.. அவங்களை ஏன் உ.. உ.. உங்களோட ஒப்பிடுறிங்க.?” எனப்பதறி, திணறி.. “எனக்கு தூக்கம் வருது.” என கண்மூடினாள்.
தமிழன் பாட்டி பேசியது அத்தை மாமாவின் அந்தரங்கத்தை என நாம் கூட இத்தனை ஆழமாய் நினைக்கவில்லையே.. எத்தனை பெரிய மனவேதனைகளை பிருந்தாவிடம் கூட பகிராமல் மனதில் வைத்து புழுங்கியிருக்கிறாள். பல வருடம் கழித்து அதையே தன் அக்கா பேசும்போது எத்தனை துடித்திருப்பாள்? என வேதனையோடு பார்த்திருந்தான் மனைவியை.
நேற்றிரவு தூங்காததாலோ.. அல்லது மனதிலுள்ள அனைத்தையும் கொட்டியதாலோ.. இரண்டே நிமிடத்தில் உறங்கியிருந்தாள் தேன்நிலா.
தந்தை இறந்த பின்னே நாம் பட்ட கஷ்டத்தை விட தேன்நிலா பல மடங்கு மனவேதனையை சிறு வயதிலிருந்தே அனுபவித்திருக்கிறாள் என மனைவியையே பார்த்திருந்தவனுக்கு, இவளை இயல்பாக்குவது அத்தனை எளிதல்ல எனப்புரிந்தது.
நடந்தவைகளை மாற்ற முடியாவிட்டாலும், இனி உன் அனைத்துமாய் நான் இருப்பேன் என மனதினில் நினைத்தபடி தேன்நிலாவிடம் நெருங்கிப் படுக்க, தூக்கத்தோடே இவளும் ஒன்றினாள் கணவனோடு. அவளின் கையை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு கண்மூடினான் வான்முகிலன்.
மதியம்போல் வான்முகிலன் எழுந்திட, தேன்நிலா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.
நேரம் பார்க்க, இரண்டு மணியென்பதால் சாப்பிட வேண்டி தேன்நிலா தூக்கம் கலையும்படிதான் எழுந்தான்.. ஆனால் தேன்நிலா விழிக்கவில்லை.
எழுந்து வெளியே வந்தவன்.. “ம்மா சமையல் செய்தியா? இல்ல நான் பண்ணவா?” என கிச்சன் வர, “ஏன் உன் பொண்டாட்டி பண்ண மாட்டாளா?” என்றார் சீண்டலாக.
“அவ சமையல் உன் சமையலை விட கேவலமா இருந்தா என்ன பண்ணனுதான் கேட்டேன். உனக்கு பரவால்லனா எழுப்பிட்டு வரேன்.” என்றான் சிரிப்போடு.
“தூங்கறாளா? எழுப்பாத எழுப்பாத. நான் சமைச்சிட்டேன்.” என அவசரமாய் சொல்லி, “நல்லாத்தான் சமைப்பா.. பிருந்தா சொல்லியிருக்கா.” என இலகுவாய் சொல்லி, “சாப்பிடுறியா? இல்ல அவ எழுந்த பின்ன சாப்பிடுறியா?” என்றார்.
“அவ எழறப்போ சாப்பிட்ட்டும், நாம சாப்பிடலாம்.” என அமர, அனைத்தும் எடுத்து வந்து சுப்புலஷ்மி பரிமாற, “நீ சாப்பிடலம்மா?” என்றான்.
“நான் ஒரு மணிக்கே சாப்பிட்டேன்.நீ சாப்பிடு.” என்றவர் வான்முகிலன் சாப்பிடும் வரை அமைதிகாத்து, “உங்க கல்யாணம் பிரச்சனையில்லாம முறைப்படி நடந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்ல முகிலா?” என்றார்.
“அதான் எனக்கும் தெரியல.” என வருந்தி.. “ரேவாவை புரிஞ்சிப்பாளா?” என்றார் தவிப்போடு.
“கண்டிப்பா புரிஞ்சிப்பாம்மா, நிலாவால ரேவாக்கு ஒரு கஷ்டமும் வராது.” என்றான் உறுதியாக.
மகனின் பேச்சில் பெருத்த நிம்மதிகொண்டார் சுப்புலஷ்மி. “ம்மா.. அவளை வெளில கூட்டிட்டு போலாம்னு இருக்கேன், ஒரு பத்து நாளைக்கு.. தனியா இருந்துப்பியா? இல்ல பசங்க யாரையாவது வர சொல்லட்டுமா?” என்றான்.
“போய்ட்டு வாங்க முகிலா.. ராணியை இங்க இருக்க சொல்லிக்கிறேன்.” என்றார் நிறைந்த மனதோடு.
மூன்று மணிபோல் தேன்நிலா லேசாய் விழிக்க, அவளின் தூக்கம் நன்றாக கலையும் படி கழுத்தில் குறுகுறுப்பூட்டி, “சாப்பிட வா.” என்றான்.
“பசிக்கல.” என முகம் சுருக்கியவள்.. “யார் சமைச்சா?” என பதறி எழுந்தாள்.
“அம்மா சமைச்சாங்க, நான் சாப்பிட்டாச்சு, தொணதொணக்காம சீக்கிரம் வா.”என வான்முகிலன் வெளியேற.. எழுந்து முகம் கழுவி வந்தவள்.. “அச்சோ நானே போட்டுப்பேன்.” எனப் பதறினாள்.
“அச்சோ.. பரவால்ல சாப்பிடு.” என்றான் அவளைப் போலவே.
தேன்நிலா சாப்பிடவும்.. “நாளைக்கு வெளில போறோம். பத்து நாளைக்கு டிரஸ் பேக் பண்ணு. நைட் டைம் கொடுக்கமாட்டேன்.” என்றான் சிரிப்போடு.
“அச்சோ பத்து நாளைக்கா?நான் ஒருவாரம்தான் லீவ் கேட்டுருக்கேன்.கண்மணி மேமையாவது சமாளிக்கலாம், விஷ்வா சார்கிட்ட பதிலே சொல்ல முடியாது.” எனப் பதறினாள்.
“ஏன் ஒத்துக்கமாட்டாங்க? போன் போடு, நான் பேசறேன்.” என்றான் கோபத்தோடு.
வெளியே வந்த சுப்புலஷ்மி.. “வேலைக்கு போயே ஆகனுமா நிலா?” என்றார்.
தேன்நிலா முகம் பரிதவிக்க.. “ஆமாம்மா.. தமிழனுக்கு இவதான் ஃபீஸ் கட்டுறா.. அவன் படிப்பு முடியும் வரை போகட்டும், அதுக்கப்புறம் அவ விருப்பம்.” என்றான்.
“ஃபீஸ் ஒரு பிரச்சனையா? நீ கட்டிடு.” என்க.. “ஏங்க..” என பதறியவளை கண்ணசைவில் தேற்றி.. “நாம கட்டினா முதல்ல தமிழன் ஏத்துப்பானானு யோசிக்கனும். எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு பண்ண நினைக்கக்கூடாது. அதோட நிலா தமிழனுக்கு ஃபீஸ் கட்டவும்தான் மாமாவோட அம்மாக்கு புத்தி வந்திருக்கு. இது அவளோட கௌரவப் பிரச்சனையும் கூட.. அதனால அவளே வேலைக்கு போய் கட்டட்டும்.” என்றான்.
“இவ்வளோ சம்பாதிக்கிறாங்க, மருமகளை வேலைக்கு அனுப்புறாங்கனு நினைப்பாங்களோனுதான் வேணாம்னேன். நீ எதையும் யோசிக்காம செய்ய மாட்ட, உன் விருப்பப்படி செய் முகிலா.” என்றுவிட்டார் சுப்புலஷ்மி.