“பேசு.” என வான்முகிலன் சத்தமாகவே சொல்ல.. “ஒரு வாரம் லீவ் பத்தாதுங்களா தேன்நிலா.?” என்றான் விஷ்வா.
“ச.. ச.. சார்..” என தேன்நிலா திணற.. “ஓ.கே.. எவ்வளோ நாள் வேணும்?” என்றான்.
தேன்நிலா விழிவிரிக்க, “உங்களுக்கு என் ஒய்ஃப் ஃபுல் சப்போர்ட் பண்றாங்க, அவங்களை மீறி என்னால உங்களை ஒன்னும் சொல்ல முடியாது. தைரியமா சொல்லுங்க, எத்தனை நாள் வேணும்? சொன்னாத்தான் அதுக்கேத்த மாதிரி வேற ஏற்பாடு செய்ய முடியும்.” என்றான்.
இவன் உண்மை சொல்கிறானா? இல்ல கோபத்தோடு பேசுகிறானா என அறியாமல் தேன்நிலா தவித்திருக்க.. “ஒரு மாசம் வேணும்னு கேளு.” என்றான் வான்முகிலன்.
“ஓ.கே.. கிராண்டட்.. ஆனா ஒரு மாசத்துக்கப்புறம் சரியா ஜாயின் பண்ணிடனும்.” என இணைப்பை துண்டித்தான் விஷ்வா.
ஆச்சர்யமடைந்தவள்.. “ஏங்க.. அவ்வளோ சீக்கிரம் யார்கிட்டயும் விஷவா சார் பேசவேமாட்டார். எப்படி சம்மதிச்சார்னு தெரியல.” என்றாள் சந்தோசத்தோடு.
“வேறென்ன? என்னைப் போல பொண்டாட்டிக்கு பயப்படுறவனா இருப்பானோ என்னவோ?” என சிரித்து.. “சரி.. சரி.. ஆகுற வேலையை பார்க்கலாம் வா.” என்றான்.
“அவ்வளோ டிரஸ் இங்க இல்ல, அங்க வீட்டுல இருக்கு..” என்க, “வா போலாம்.” என தேன்நிலா வீட்டிற்கு அழைத்துப் போனான்.
“அத்தை மாமா கிளம்பிட்டாங்களா? வீடு பூட்டியிருக்கு?” என்றான் உல்லாசமாக.
இவனின் சந்தோசம் புரியாமல்.. “தமிழ்க்கு காலேஜ் இருக்கு, அங்க வயசானவங்க இருக்காங்க, அதான் கிளம்பிட்டாங்க.” என வழக்கமாய் சாவி வைக்கும் இடத்திலிருந்து எடுத்து, இவள் வீட்டை திறக்க, உள்ளே அழைத்துச் சென்றவன் தேன்நிலாவை அணைத்தான்.
“பேக் பண்ண சொன்னிங்க?” என விழிவிரிக்க.. “பண்ணலாம் பண்ணலாம்.” என்றவன் செயல்களை மறுக்கத் திராணியற்று கணவனோடு இழைந்தாள் தேன்நிலா.
ஏழுமணிபோல் இருவரும் வீடு வர, மகனின் சந்தோசம் சுப்புலஷ்மிக்கு எத்தனை நிம்மதி கொடுக்கும் என அறியாத தேன்நிலாவிற்கு மனதில் பயம்தான்.. ஆனால் தேன்நிலா பயந்ததைபோல் சிறு முகச்சுழிப்பும் காட்டவில்லை சுப்புலஷ்மி.
அடுத்த நாள் மகன் மருமகளை வாழ்த்தி தேன்நிலவிற்கு அனுப்பி வைத்ததில் சுப்புலஷ்மி மீதிருந்த சங்கடம் போனது தேன்நிலாவிற்கு.
அடுத்து வந்த நாட்களில் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதை மட்டுமே கடமையாய் கொண்டிருந்தாள் தேன்நிலா.
தேன்நிலா தாத்தா இறந்த பின்னே தனிமையோடு எவ்விதம் போராடினாள்? என தேன்நிலாவின் மனதை அழுத்தும் விஷயங்களை பாதி இரவு வரை பேசியிருந்து, நாளொன்றுக்கு ஒரு மனபாரத்தையாவது அவள் மனதிலிருந்து இறக்கிய பின்னேதான் தன் தாபம் உணர்த்துவான் வான்முகிலன்.
கணவனிடம் பாரம் இறக்கி வைத்த பின்னே மனம் அத்தனை இதமாய் இருக்க, அவளின் காதல் வான்முகிலனை பித்தம் கொள்ள செய்ய, ஒவ்வொரு நாளின் விடியலிலும் அடுத்த நாள் இரவை இரவல் கேட்கும் ஆவல் வரும் வான்முகிலனிற்கு.
இதோ சென்றுவிட்டது ஒருமாதம். இருவரும் இணைந்த பின்னே முதல் நாள் வேலைக்கு சென்று வந்த தேன்நிலா அறைக்குள் செல்ல, பின்னோடு வந்த கணவனிடம்.. “என்னால வேலையே செய்ய முடியல.” என குறைபட்டாள்.
“ஏன்?” என வான்முகிலன் புருவம் சுருக்க.. “இந்த கூடு விட்டு கூடு பாய்ஞ்ச மாதிரி, எனக்குள்ள வந்துட்டிங்க போல. கம்ப்யூட்டரை ஆன் செய்தா ஒன்னும் புரியல, கத்துக்கிட்டதெல்லாம் மறந்து போன மாதிரி இருந்தது.” என்றாள் பாவமாக.
“அப்படியா? அப்போ எனக்குள்ள நீதான் இருக்கியா? எதுக்கும் நாளைக்கு லாரி ஓட்ட வருதானு செக் பண்ணனும்.” என சந்தோசமாய் சிரித்தபடி வான்முகிலன் வழக்கம்போல் தன் கைகளை விரிக்க.. காதலோடு கட்டுண்டாள் தேன்நிலா.
** ** ** **
பிருந்தாவிற்கு ஏழாம் மாதம் துவங்க.. வளைகாப்பிற்கான ஏற்பாடுகளை அமர்களமாய் ஆரம்பித்தான் வான்முகிலன். பிருந்தாவின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத மனைவியின் தவிப்பை வளைகாப்பினில் போக்கிட எண்ணி, தங்கைக்கு வெகு விமரிசையாக செய்தான் வளைகாப்பு.
சுப்புலஷ்மியிடம் தானாக பேசுவதில்லை என்றாலும், சுப்புலஷ்மியாக ஏதேனும் கேட்டால் முன்புபோல் தலையசைத்து பேசுவதை தவிர்த்து, இன்முகமாய் பதில் கொடுக்க ஆரம்பித்திருந்தாள் தேன்நிலா. சமையலறையில்தான் இவர்களின் உரையாடல்கள் இருக்கும்.
ரேவதியிடம் இன்னமும் பேசுவதில்லைதான்.. ஆனால் முகம் திருப்பவும்மாட்டாள். ப்ரவீனிடம் பாசமாகவும் நரேந்திரனிடம் மரியாதையோடும் பழகுவாள்.
பிருந்தாவும் ரேவதியும் நகைச்சுவை பேசும்போது தானும் சிரிப்பாள். இப்படி பிள்ளையை தரக்குறைவாக பேசி தன் தரத்தை குறைத்துக்கொண்டோமே என ரேவதியை பல முறை உணரவைத்திருந்தாள் தேன்நிலா.
வளைகாப்பு வைபவம் இனிதே முடிந்திருக்க, இனி தோழியோடு பலமாதம் ஒரே வீட்டில் இருக்கலாம் என்ற சந்தோசத்தில் இருந்தாள் தேன்நிலா.
தேன்நிலாவின் முகப்பொலிவே அவளின் சந்தோசமான வாழ்வை உணர்த்த.. வான்முகிலன் எனது மருமகன் என கர்வம் கொண்டனர் லிங்கேசன் மங்களம் தம்பதியினர்.
வாழ்வின் மறக்க முடியாத பொற்காலமாய் மூன்று வருடங்கள் முடிந்திருந்தது. லிங்கேசனின் பெற்றோர் இறந்திருக்க, லிங்கேசனின் பெற்றோர் இறப்பிற்கு சென்றிருந்தாள் தேன்நிலா.
அவரகள் இறந்தபின்னேயும் காயம் பட்ட வடு மாறவில்லைதான்.. ஆனாலும் தமிழனிற்காகவும், தந்தைக்காகவும் சென்றிருந்தாள். மகள் தன் வீட்டிற்கு வந்ததில் மனம் குளிர்ந்தார் லிங்கேசன்.
தமிழனிற்கு மும்பையில் வேலை என்பதால் கர்பினி மகளை பார்த்துக்கொள்ள லிங்கேசனும் மங்களமும் இங்கேயே வந்துவிட்டனர்.
தேன்நிலாவின் வளைகாப்பிற்கு பிறகு மகளை தன் வீட்டிற்கு மங்களம் அழைத்து வந்த பின்னேயும், பகலில் வேலை நிமிர்த்தமாக வெளியே சென்றாலும், இரவில் தேன்நிலாவோடுதான் உறங்குவான் வான்முகிலன்.
கை ஊன்றி நடக்கும் நிறை மாத கர்பினி மனைவியை விட்டு நகராத அண்ணனிடம்.. “எங்களை மட்டும் வளைகாப்பு செய்து என் புருசன்கிட்டயிருந்து பிரிச்சி இங்க கூட்டிட்டு வந்துட்டிங்க.
இப்போ நீ மட்டும் பொண்டாட்டியோடவே இருப்பியா?” என பெருமையோடு பொய்க்கோபம் காட்டுவாள் பிருந்தா.
“ப்ரவீன்.. உன் சித்தி மாமாவை திட்டுறா, என்னனு பாரு.” என என வான்முகிலன் மருமகனை ஏவிவிட்டால் போதுமே.. ப்ரவீனோடு இந்துபிருந்தாவின் இரண்டு வயது மகனும் கூட்டு சேர்ந்து ப்ரவீன் பேசும் வார்த்தைகளை அப்படியே மழலையில் பேசுவான் அழகாய்..
தனக்காக அன்னையை திட்டும் சின்ன மருமகனின் பாவனையில் தொலைந்து போவான் வான்முகிலன்.
பத்து நாள் கழித்து, அதிகாலை எழுந்த தேன்நிலாவிற்கு வலியெடுக்க ஆரம்பிக்க.. மெல்ல ஹாலுக்கு வந்து அன்னையை எழுப்பி விபரம் சொன்னாள்.
மங்களம் பதறியதில் வான்முகிலன் விழித்திட, மருத்துவமணைக்கு விரைந்தனர். “இங்க பாருங்க.. சும்மா டென்ஷன் ஆகி எல்லாரையும் டென்ஷன் பண்ணக்கூடாது, இது எல்லா பொண்ணுங்களும் சந்திக்கிறதுதான்.” என அத்தனை வலியிலும் மிரட்டுவதாய் நினைத்து கெஞ்ச, “உன்னால பேச முடியல, பேசாத.. நான் தைரியமாத்தான் இருக்கேன்.. டாக்டர் சொல்றமாதிரி கேளு.” என தலைகோதி அனுப்பி வைத்தான் வரவழைத்த இயல்போடு.
பெரிய வயிற்றோடு கை ஊன்றி நடக்கும் மனைவியை நினைத்து கவலை கொள்ளாத நாளில்லை வான்முகிலன். எதையும் வெளிகாட்டாமல் அவளிற்கு தைரியம் சொல்வான்.
ஆனால் தற்போது அவன் பயத்தை வெளிப்படையாய் முகம் காண்பிக்க, கணவனை தேற்றி மகவை ஈன்றெடுக்க உள்ளே சென்ற தேன்நிலா.. அத்தனை வலியிலும் வாய்விட்டு கத்தவேயில்லை.
மூன்று மணிநேரமாகியும் எவ்வித தகவலும் இல்லாமல் போகவே, உச்சபச்ச டென்ஷனோடு அமர்ந்திருந்த வான்முகிலன் அதற்கு மேல் தாளாமல் கதவை தட்ட, ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்த செவிலிப்பெண்.. “பயப்பட ஒன்னும் இல்ல, இன்னும் கொஞ்ச நேரத்துல பிறந்திடும்.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே குழந்தை அழும் சத்தம் கேட்டது.
வெளியே வந்த மற்றொரு செவிலிப்பெண்.. “பொண்ணு பிறந்திருக்கு.. இரண்டு பேரும் நல்லாயிருக்காங்க.. அரை மணிநேரம் கழிச்சு பார்க்கலாம்..உக்காருங்க.” என சொல்லிச் செல்ல, சத்தியமாய் தனக்குள் உண்டான உணர்வை சொல்ல வார்த்தையில்லை வான்முகிலனிற்கு.
“ஆனாலும் உங்க வெய்ஃப் பயங்கர அழுத்தம் சார்.. முகமெல்லாம் அப்படி சிவக்குது.. ஆனா சின்ன சத்தம் கூட போடலயே.. மொத்த வலியையும் கட்டில் கம்பியை பிடிச்சே ஆத்திக்கிட்டாங்க.. இப்படி யாரையும் நான் பார்த்ததேயில்ல. வீட்டுக்கு அழைச்சிட்டு போனதும் நல்லா பெரிய பூசனி வாங்கி சுத்தி போடுங்க.” என பெருமை பாராட்டி உள்ளே போனாள் செவிலி.
அரைமணி நேரம் கழித்து உள்ளே போனவன் பார்த்த பார்வையில் கண்ணிமைத்து உதடு விரித்தவள்.. “பிருந்தாக்கு சொல்லிட்டிங்களா? தமிழன் ரேவாக்காக்கு சொல்லிட்டிங்களா?” என்றாள் சோர்வாக.
மனைவியின் வறண்ட உதட்டில் முத்தம் பதித்தவன்.. “எல்லாருக்கும் சொல்லியாச்சு. அம்மா வெளிலதான் இருக்காங்க, நான் வரவும் அவங்க வெளில இருக்காங்க.”என்றான்.
ரொம்ப வலிச்சதா? நீ கத்தினா நான் பயப்படுவனா? இப்படி ஏண்டி வலியை தாங்கின? என்று கேட்க நிறைய இருந்தாலும், எதையும் கேட்க வாய்வரவில்லை வான்முகிலனிற்கு.
நான் பதறக்கூடாதென்பதற்காகத்தானே கத்தாமல் இருந்திருக்கிறாள்? மனைவியின் செயலில் கோபம்தான் என்றாலும் இதைவிட சிறப்பாக காதலை வேறு எப்படி காட்ட முடியும்? என ஆழ்ந்த பார்வை பார்த்திருந்தான் வான்முகிலன்.
சின்ன சிணுங்கலாய் தந்தையின் கவனம் கலைத்து தன் இருப்பை உணர்த்தினாள் வான்முகிலனின் இளவரசி.
தேன்நிலா சாயாலா? நம் சாயலா என்றெல்லாம் வான்முகிலனிற்கு தெரியவில்லை.. ஆனால் உலகின் மொத்த அழகையும் தனதாக்கியிருந்த குழந்தையை கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.
“என்ன பேச்சையே காணோம்?” என தேன்நிலா சிரிக்க.. அவளின் சோர்ந்த குரல் சொன்னது அவளின் வலியை.
“ப்ச்.. அமைதியா இரு.” என அதட்டி நெற்றி முத்தம் வைத்து.. “அத்தை மாமா, அம்மாலாம் வெளில ஆசையா காத்திட்டிருக்காங்க.. இரு வரேன்.” என வெளியேறி அனைவரையும் அழைத்து வந்தான்.
இதுவரை மனையாளுக்கென பெரிதாய் பரிசு எதுவும் வாங்கியதில்லை வான்முகிலன். அவளின் மனமொழி உணர்ந்து செயல்படுவான் அவ்வளவே.. வான்முகிலனிடமிருந்து தேன்நிலாவால் எதையும் மறைக்க முடியாது, அவளின் முகபாவனை வைத்து அனைத்தையும் கண்டறிந்திடுவான். அதற்கு ஈடாக தன் காதலை உணர்த்த நினைத்த தேன்நிலாவிற்கு மூன்று வருடம் கழித்து இன்றுதான் வெற்றி கிடைத்த உணர்வு வந்தது.
தன்னையும், உடன் பிறந்தவர்களையும் எங்கும் விட்டுக்கொடுக்காமல், குடும்பத்தை அரவணைத்து செல்லும் கணவனின் அன்பிற்கு இணையாக உலகத்தில் வேறு என்ன இருக்கிறது என்ற பெருமை தேன்நிலா முகத்தில் நிலையாய் குடிகொண்டது.