“சரிடா சரிடா, முதல்ல சாப்பிடு.” என இணைப்பை துண்டித்தார் லிங்கேசன்.
“ஷப்பா..” என பெருமூச்சிழுத்தபடி சோபாவில் சரிந்தவள்.. எல்லாம் தெரிந்தும் என்னை பார்க்கனும்னு தோணலையில்ல? உங்களை எவ்வளோ உயர்வா நினைச்சிருந்தேன், ஆனா என்னையும் என் குடும்பத்தையும் இவ்வளோ கீழ நினைச்சிருக்கிங்கனு இப்போதான தெரியுது. என நீண்ட நேரம் மருகியபடி இருந்தவள் அவளையறியாமல் உறங்கிப்போனாள்.
அதிகாலை எழுந்த நிலாவிற்கு பசி வயிற்றை பிசைய, அப்பொழுதுதான் நேற்று மதியமும் சரிவர உண்ணாததும், இரவும் உண்ணாமல் உறங்கியதும் நினைவு வந்தது.
தன்னை சுத்தம் செய்து, கிச்சனுக்கு சென்றவள் பிரட் டோஸ்ட் செய்து உண்டு, கொஞ்சம் காபியும் குடிக்க, சற்று தெம்பு வந்தாற்போல் உணர்ந்தாள்.
தந்தையின் தியாக உள்ளத்தை புரிந்துகொள்ளாமல் தன் அன்னையின் இரண்டாம் திருமணத்தை தாழ்வாய் நினைப்பதும், உயர்வாய் நினைப்பதும் அவரவர் மனதை பொருத்தது.
அடுத்தவர்களின் நிலையை எள்ளி நகையாடும் குரூர மனம் படைத்தவர்களிடம் நியாயத்தையும், நற்பண்பையும் எதிர்பார்க்க முடியாது.
நீங்கள் நினைப்பதுபோல் என் தந்தை இழிவானவர் இல்லை, உங்களை விட பலமடங்கு உயர்வானவர்கள். உங்கள் எண்ணம் உங்களோடு என மனதை தேற்றி, வாசல் பெருக்க வெளியே வந்தாள் தேன்நிலா.
வான்முகிலன் வீட்டை பார்வையிட, திருமணத்திற்கென போடப்பட்டிருந்த பந்தல் கழட்டப்பட்டிருப்பதை பார்க்கவும்.. திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதை போல, அதனை ரத்து செய்யவும் அதிக வேலை இருக்கும்தானே?
கூடவே மனஉளைச்சல்.. கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோன ஏமாற்றம் போன்றவற்றை யோசித்தவள்.. அதனால்தான் நேற்று வாக்கிங் வரலை போல என யோசித்தபடி வாசல் பெருக்கி சிறு நட்சத்திர கோலமிட்டு உள்ளே சென்றாள்.
தேன்நிலா தன் வழக்கமான வேலைகளில் மூழ்கினாலும் நேற்று சுப்புலஷ்மி பெண்கேட்ட விதமும், தான் மறுத்த பின்னே ரேவதி கூறிய சொற்களும் மனதில் கணன்றுகொண்டேதான் இருந்தது.
இதோ ஓடிவிட்டது ஒரு வாரம். வான்முகிலனை சந்திக்க காலை மாலையென அவன் நடைபயிற்சி செல்லும் வழித்தடத்தில் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது காத்திருப்பாள். ஆனால் வான்முகிலன்தான் வந்த பாடில்லை.
உன்கிட்ட சொன்னா மட்டும் தன் பெற்றோர் குறித்து உன் வீட்டாரின் பேச்சு இல்லையென்றாகிடுமா? என சோர்வாய் உணர்ந்தவள்.. தன் அன்னையின் திருமணம் குறித்து மற்றவர்கள் பேசும்போது சிறு வயதிலிருந்து எப்படி கடந்தேனோ, அதை போல தற்போதும் கடக்கவேண்டும் என மனதை திடப்படுத்த முயன்றாள்.
ஆனாலும் ரேவதி பேசிய பேச்சுக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டேதான் இருந்தது.
இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் லிங்கேசனும் மங்களமும் வழக்கம்போல் மகளைக் காண வீட்டிற்கு வந்தனர்.
“நல்லாயிருக்கியா நிலாம்மா?” என்ற தந்தையின் கண் பார்த்து பேச முடியாமல்.. “ம்.. இருக்கேன்ப்பா. இருங்க டீ போடுறேன்.” என கிச்சனுள் விரைந்தாள்.
“நிலா..” என அழைத்தபடி கிச்சனுள் வந்த மங்களம்.. “வரும்போது பிருந்தாம்மாவை (சுப்புலஷ்மி) பார்த்தேன், வழக்கமா நலம் விசாரிக்கிறவங்க இன்னைக்கு முகத்தை திருப்பிட்டு போய்ட்டாங்கடி.. தாயா புள்ளையா பழகினோமேனு கல்யாணத்துக்கு வான்னு ஒரு போன் கூட பண்ணலனு நாமதான கோவிக்கனும்?
ஆனாலும் அந்த பிருந்தா பொண்ணு உனக்கு பத்திரிக்கை வச்சான்னு சொன்னியா? சரி நமக்கு வச்சா என்ன? நம்ம பொண்ணுக்கு வச்சா என்னனு மனசை தேத்திக்கிட்டேன்..
ஒருவேளை அவங்க பொண்ணு பத்திரிக்கை வச்சும் நீ கல்யாணத்துக்கு போகலனுயேது கோவிச்சுக்கிட்டாங்களா? ஏன் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போனாங்க? எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சி நிலா..” என பரிதவித்தார் மங்களம்.
“ப்ச்.. விடும்மா. அவங்க என்ன நினைப்பில இருந்தாங்களோ.” என அன்னையின் முகம் காணாமல் டீ வைத்து.. “அவங்க பேச்சு பேசத்தான் வந்தியா? என்னை பார்க்க வரலையா?” என செல்லமாய் கோபித்தபடி டீயோடு லிங்கேசனிடம் வந்தமர்ந்தாள்.
“ஒருவேளை புது மருமகளோட பிரச்சனை வந்திருக்குமோ?” என மங்களம் யோசிக்க.. இதற்குமேலும் மறைத்தால் அம்மா ஆன்ட்டிகிட்ட போய் ஏன் என்கிட்ட பேசலனு கேட்டாலும் கேட்டுடுவாங்க என.. “ம்மா.. அவங்க மகன் கல்யாணம் நின்னுடுச்சி. அந்த டென்ஷன்ல உன்னை கவனிக்காம விட்டுருப்பாங்க.
நீயேது போய் என்கிட்ட ஏன் பேசுலனு நின்னுடாத, என்ன காரணமா இருந்தாலும் நம்மளை ஒருத்தர் மதிக்கலனா அவங்ககிட்டயிருந்து தள்ளி நிக்குறதுதான் நல்லது.” என்றாள் இறுக்கமாக.
மங்களம் லிங்கேசனின் வீடு இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவென்பதாலும், எப்பொழுதும் மங்களத்திற்கு துணை நிற்கும் வான்முகிலனின் குடும்பம் லிங்கேசனின் தாய்தந்தை, மற்றும் சொந்தங்களுக்கு பிடிக்காதென்பதாலும், இவனின் திருமணம் நின்றுவிட்டதை அறிந்த ஒரு சிலரும் லிங்கேசன் குடும்பத்திற்கு சொல்லாமல் போகவே, மங்களத்திற்கும் இவ்விசயம் தெரியாமல் போனது.
“ஏண்டி என்கிட்ட சொல்லல? ஒரு ஆறுதலுக்காவது பேசியிருப்பேன்ல? வாழ்க்கையில ஒவ்வொரு கஷ்டத்துலயும் என் கூட நின்னவங்க நிலா.” என்றார் தவிப்போடு.
தன்னை பெண் கேட்டதை தற்போது இவர்களிடம் சொல்லக்கூடாது என நினைத்திருந்த தேன்நிலாவின் மனதிடம் சற்றே சருக்க..
“ம்மா, எல்லாம் செய்தாங்கதான், அவங்க செய்த உதவிலாம் என் மனசுக்குள்ள இருக்குதான். அதுக்காகலாம் கல்யாணம் நின்னதுக்கும் நாம ஒன்னும் செய்ய முடியாது. அவங்களுக்கு ஆறுதல் சொல்லுற அளவுக்கு பணபலத்துலயும், அதிகார பலத்துலயும் அவங்களை விட நாம பெரியவங்களும் இல்ல, அப்படியே சொன்னாலும் அதை அவங்க காது கொடுத்து கேட்கப்போறதும் இல்ல.” என்றாள்.
மகள் இப்படி பேசுபவள் இல்லையே என லிங்கேசன் ஆழ்ந்து பார்க்க.. “அப்பா..” என்றாள் தடுமாற்றமாக.
லிங்கேசன்.. “நீ எதையோ மறைக்கிற நிலாம்மா, உன்னை எனக்கு தெரியாதா? சொல்ல விருப்பம் இல்லனா விடு.” என்றார் மகளை அறிந்தவராய்.
“இல்லப்பா.. ஆனா வேற ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.” எனும்போதே கண்கள் கலங்கியது.
“அழற அளவுக்கு என்ன நிலா பிரச்சனை? எப்போ ஆனது? ஏன் என்கிட்ட சொல்லல?” என கேள்விகளை அடுக்கினார் மங்களம்.
“பத்து நாள் முன்ன ஆன்ட்டியும், ரேவாக்காவும் இங்க வந்தாங்க.” என தன்னை வான்முகிலனுக்கு பெண் கேட்டதையும், கேட்ட விதத்தையும்.. தான் மறுத்ததையும் சொன்னவள், ரேவதி தன் தாய் தந்தையை இழிவுபடுத்தியதை மட்டும் மறைத்தாள் கண்ணீரோடு.
“எவ்வளோ பெரிய விசயம்? தனியா இருக்க பொண்ணுகிட்ட இப்படி வந்து கேட்பாங்களா?” என கோபத்தோடு முனுமுனுத்த லிங்கேசன்.. அதுவும் மகளின் ஊனத்தை முன்வைத்து கேட்டுருக்காங்க, அதிலும் நிலாவை நன்கறிந்தவர்களே இப்படி பேசியிருக்கிறார்கள் என நினைக்க மனம் பெரும் வேதனையானது.
“அவங்க எவ்வளோ பெரிய ஆளா கூட இருக்கட்டும், உங்களை நம்பி உங்க பாதுகாப்புல இருக்க பிள்ளைகிட்ட இப்படித்தான் நடந்துப்பிங்களானு நான் கேட்காம இருக்கமாட்டேன்.” என உடனே சுப்புலஷ்மிக்கு அழைக்க மொபைலை எடுத்த லிங்கேசனை தடுத்து, அவரின் மொபைலை வாங்கினாள் தேன்நிலா.
“ஏன்டாம்மா? என்ன பண்ணிடுவாங்க? அவங்க வீட்டு பொண்ணுகிட்ட இப்படி யாராவது நடந்துகிட்டா சும்மா விடுவாங்களா? நிச்சயம் செய்த பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொன்னதால நம்ம பொண்ணை அவமதிப்பாங்களா? வசதி வாய்ப்பிருந்தா என்னனாலும் பேசலாமா? இல்ல அவங்க பணத்துலயேது வாழுறோமா?” என லிங்கேசன் கோபப்பட..
மங்களம்.. “நீயும் அன்னைக்கே எனக்கு சொல்லியிருக்கனும் நிலா. இவ்வளோ பெரிய விசயத்தை எதுக்கு மறைச்ச?” என்றார் கோபத்தோடு.
சொன்னால், பெண்கேட்டதோடு தங்களை இழிவு படுத்தியதும் வெளி வருமே என வருந்தியவள்.. “உங்ககிட்ட சொன்னா அப்பவே கிளம்பி வந்துருப்பிங்க, அவங்ககிட்ட நியாயம் கேட்க நினைப்பிங்க, திரும்பவும் அவங்க என்னை அவமதிப்பாங்க, இதுதான் நடக்கும்..” என வருந்தி..
“அவங்க மகன் கல்யாணம் குறிச்ச தேதியில நடந்தாகனும்னு என்னை கேட்டாங்க, நான்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கலயில்லம்மா? நமக்காக எவ்வளவோ செய்திருக்காங்க. அவங்க முன்ன செய்த நல்லதுக்காக இதை பெருசு பண்ணவேணாம்னு நினைச்சேன். அதான் சொல்லல. விடுங்க..” என வான்முகிலன் குடும்பத்திற்காகவும் பேசும் நிலைக்கு ஆளானாள் தேன்நிலா.
லிங்கேசன்.. “இவ்வளோ பெரிய விசயத்தை எப்படி விட முடியும்? எதுவானாலும் சொல்லனும் நிலா, அவங்க உன்னை கேட்டு இத்தனை நாளாகியும் உனக்காக நாங்க எதுவும் செய்யாதது இன்னும்தான் அவமானம். தனியா இருக்கிறதால எல்லாமும் நீயே பார்த்துக்குவியா?” என்றார் கோபத்தோடு.
பிரச்சனை பெரிதாக வேணாம் என அவர்கள் செய்த தவறிற்கு நிலா தன்னை சமாதானம் செய்கிறாள் எனப்புரிந்து.. மகள் மீதுள்ள கோபம் விடுத்து, “முகிலன் தம்பிக்கு கூட இது தப்புனு தெரியலயா?” என்றார் ஆற்றாமையோடு.
தேன்நிலா மனதிலும் இந்த எண்ணமே சுழன்று கொண்டிருக்க.. “தெரியலப்பா. அவரை அதுக்கப்புறம் நான் பார்க்கவேயில்ல. ஆன்ட்டியும் அன்னைக்கு கேட்டதோட சரி.. நான் திடமா மறுக்கவும் அதுக்கப்புறம் தொல்லை பண்ணல..” என்றாள் பொறுமையாகவே.
இனியும் இவர்களின் அருகாமையில் மகள் இருப்பது சரிவராது என நினைத்த லிங்கேசன்.. “இனி இங்க இருக்க வேணாம்டா, நம்ம வீட்டுக்கு வந்திடு.” என்றார் கெஞ்சலாக.
“அப்பா, எனக்கு ஒன்னும் ஆகாது.” என்றாள்.
மகள் வரமாட்டாள் என லிங்கேசனுக்கு தெரியும்தான். ஆனாலும் மனம் கேட்கவில்லை. “இவ்வளோ பிரச்சனைக்கப்புறமும் நீ இங்க தனியா இருந்தா எங்களுக்கு அசிங்கம்டா. எனக்காக வரக்கூடாதா?” என்றார் வேண்டுதலாக.
“நமக்கென்னப்பா அசிங்கம்? அவங்க பிரச்சனைக்கு சம்மதமேயில்லாத என்கிட்ட தரமில்லாம பேசினவங்கதான் அசிங்கம். அதை அனுமதிச்ச அவங்க மகனுக்கு இன்னும் அசிங்கம். நீங்க கவலைப்படாதிங்கப்பா.” என்றாள்.
“சரி அங்கையே வந்து நிரந்தரமா இருக்க வேணாம், ஒரு பத்து நாளைக்கு வாயேன்.” என்றார் ஆசையாக.
தேன்நிலா அமைதியாக, “என் அப்பாம்மா முதல்ல மாதிரி இல்லடாம்மா, தமிழனுக்கு நீதான் ஃபீஸ் கட்டறனு தெரிஞ்சதுலயிருந்து இப்போ ஒரு வருசமா மாறிட்டாங்க. அப்பப்போ உன்னை விசாரிக்கவும் செய்வாங்க,
ஆனாலும் அவங்களாலதான இங்க நீ தனியா இருக்குறனு உன்கிட்ட நான் சொல்றதில்ல. நீ வந்தா யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.” என்றார்.
அவரிகளின் மாற்றம் தேன்நிலாவிற்கு தெரியும்தான். லிங்கேசன் சொல்லவில்லையென்றாலும் மங்களம் அவ்வப்போது சொல்வார்.. ஆனாலும் தேன்நிலாவிற்கு அங்கு போக பிடிப்பதில்லை. என்னை விடும்மா, அவங்க உன்னை புரிஞ்சிக்கிட்டாங்கனா போதும்.. தாத்தா பாட்டி நினைவோட இங்க இருக்கத்தான் எனக்கு பிடிச்சிருக்கு என்றிடுவாள்.
“சின்ன வயசுல அவங்களுக்கு என்னை பிடிக்கலனுதான் இங்கையே இருந்துட்டேன், ஆனா இப்போ அவங்களை நினைச்சி வரலனு சொல்லலப்பா, இந்த நேரம் அங்க வந்தா அவங்க பொண்ணு கேட்கவும்தான் போய்ட்டானு நினைப்பாங்க. இப்படி நிகழ்வுக்கப்புறம் கண்டிப்பா நான் இங்கதான் இருக்கப்போறேன்.” என்றாள் தீர்மானமாக.
லிங்கேசன் வருத்தமாய் பார்க்க.. “அன்னைக்கு கேட்டதோட சரிப்பா, இப்போ ஒரு வாரமா என்னை எந்த தொல்லையும் பண்றதில்ல. திரும்ப எதாவது பிரச்சனை செய்தா கண்டிப்பா கால் பண்றேன். அப்போ நீங்க வந்து என்ன கேட்கனுமோ கேளுங்க.” என்றாள் தேறுதலாக.
“சரிம்மா..” என சமாதானமானார் லிங்கேசன். மதியம் வரை பேசியிருந்து, மங்களம் சமைக்க.. மூவரும் உண்ட பின்னே மதியம்போல் இருவரும் கிளம்பினர்.
வான்முகிலன் வீட்டினை கடக்கும்போது, தனித்திருக்கும் பெண்ணிடம் திருமணத்திற்கு கேட்டது சரிதானா? அதுவும் அவளின் ஊனத்தை முன்னிருத்தி கேட்டது முறையா? இதுதான் நீங்கள் அறிந்த நாகரீகமா? என வான்முகிலன் அன்னையிடம் கேட்க மனம் துடித்தது.
ஆனா மகள் இங்குதான் இருப்பேன் எனும்போது, வான்முகிலன் வீட்டினில் பிரச்சனை செய்வது மகளுக்கு இடையூறாகிவிட்டால் என யோசித்திருந்த நேரம் சுப்புலஷ்மி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.