“வா மங்களம், அவங்களை பார்த்து பேசிட்டு போவோம்.” என்றார் லிங்கேசன்.
“வேணாம் வாங்க, இன்னொரு முறை பிரச்சனை வந்தா சொல்றேன்னு நிலா சொல்லியிருக்காள்ல? போலாம்.” என தவித்தார் மங்களம்.
“அவங்களை பார்க்கலன்னா போயிருக்கலாம்தான், இத்தனை நடந்தபின்ன அவங்களை பார்த்தும் நாம பாட்டுக்கு போய்ட்டோம்னா அவங்க செய்தது தப்பு இல்லனு ஆகிடும். வா.” என்றவர் மனைவியின் வருகையை எதிர்பார்க்காமல் வான்முகிலன் வீட்டு கேட்டினை திறந்தார்.
நடந்ததை தேன்நிலா சொல்லியிருப்பாள், இவர்கள் வந்து கேட்டால் வான்முகிலன் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்க, அவன் இல்லாதபோதே இதுகுறித்து பேசிடலாம், வேலை சுலபமாய் முடியுமென சுப்புலஷ்மியும் லிங்கேசனை நோக்கி வந்தார்.
கேட்டிலிருந்து வீட்டிற்கு நூறு மீட்டர் வரை இடைவெளியிருக்க பாதி தூரத்தில் இருவரும் சந்தித்தனர். லிங்கேசன் கேட்கும் முன்னே தானே ஆரம்பித்தார்.
“உங்க பொண்ணை என் மகனுக்கு கேட்டது தப்புதான், அவ மறுக்கவும் நம்ம நிலாதானேனு ரேவா கொஞ்சம் அதிகப்படியா பேசிட்டா, அவளுக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்றவர் லிங்கேசனின் பதிலுக்கு காத்திராமல் வேகநடையோடு வீட்டினுள் சென்றார் சுப்புலஷ்மி.
என்ன இவங்க இப்படி பேசிட்டு போறாங்க.. சிறு வயது நிலாவிற்காக எத்தனை முறை தனக்கு உபதேசித்தார்கள், ஆனால் இவங்களுக்குனு வரும்போது நியாய அநியாயம் மறந்துடுச்சா? மன்னிப்பையும் கூட உண்மையில் வருந்தி கேட்கவில்லையே. எதோ கடனுக்காகவும், மேற்கொண்டு இப்பேச்சு வேணாம் என்பது போலவும், பண்றதெல்லாம் பண்ணிட்டு இவங்க பாட்டுக்கு பேசிட்டு போறாங்க என ஸ்தம்பித்தார் லிங்கேசன்.
சுப்புலஷ்மி உள்ளே சென்றிருக்க, வாடிய முகத்தோடு தன்னிடம் வந்த கணவனிடம்.. “என்னங்க சொன்னாங்க?” என மங்களம் விசாரிக்க, நடந்ததை கூறி, “எதாவது சண்டை போட்டுருந்தா, இதுதான் பொண்ணு கேட்குற லட்சணமானு கேட்டுருப்பேன் மங்களம்.
மன்னிப்பு கேட்கறவங்ககிட்ட என்ன நியாயம் கேட்க முடியும்? அதோட மன்னிப்பு கேட்டதும் வேலை முடிஞ்சதுனு உடனே கிளம்பிட்டாங்க.” என்றார் ஆற்றாமையோடு.
“சரி விடுங்க, நம்ம நிலா சொன்னமாதிரி முன்ன செய்த நல்லதை நினைச்சி அவங்க பேசினதை மன்னிச்சிடுவோம்.” என்று கணவனோடு கிளம்பினார்.
** ** ** ** ** **
வான்முகிலன் சென்று இன்றோடு பதினெட்டு நாள் முடிந்திருந்தது.
“என் மகனை வேணாம்னு சொன்னவளுங்களை விட அழகான பொண்ணா பார்க்கனும்.” என புலம்பினார் சுப்புலஷ்மி.
ரேவதி.. “ஆமாம்மா, அழகான பொண்ணுமட்டுமில்ல, முகிலன் படிக்கலனும், லாரி டிரைவர்ன்றதாலயும்தான வேணாம்னாளுங்க? அந்த மஹிமா, நிலாவை விட அதிகம் படிச்ச பொண்ணா பார்க்கனும்.
படிப்பு, அழகு மட்டும் போதாது.. முகிலன் திறமைக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஏத்த மாதிரி பெரிய இடத்து பொண்ணாவும் பார்க்கனும்.” என்றாள் சவாலாக.
“ஆமாம் ரேவா.. அப்படித்தான் பார்க்கனும்.” என சுப்புலஷ்ம்யும் ஆமோதிக்க..
சுப்புலஷ்மி.. “அந்த பொண்ணு அழகாத்தான் இருக்கும் ரேவா. முகிலனுக்கு கேட்டா கொடுப்பாங்கதான். ஆனா நிலா அளவுக்கு அழகு கிடையாது. இவ முக லட்சணமே வேற.. முகத்தை கழுவி பொட்டு வச்சாலே பளிச்சினு இருப்பா.”
ரேவதி.. “அதுக்குனு அவளோட கம்ப்பேர் பண்ணாத, எனக்கு எரிச்சலா வருது.” என்றாள் கோபமாக.
“ஆமாம் எனக்கும் நிலாவை நினைச்சா கோபமாத்தான் வருது.” என மருகி.. “நாம உள்ள போனதும் கொஞ்சம் திக்கினா, கல்யாணத்துக்கு கேட்டதுக்கப்புறம் ஒரு பேச்சுக்கு கூட திக்கல பார்த்தியா ரேவா. அவ்வளோ நேரம் பேசியும் திடமா மறுத்துட்டா.
முகிலன் மாதிரி மாப்பிள்ளை கிடைப்பானானு எடுத்து சொல்லியும் கூட மனமிறங்கல, கடைசியா என் வீட்டை விட்டு வெளில போங்கனு சொல்லிட்டா.. நான்தான் தனியா இருக்க பிள்ளையாச்சேனு பாவம் பார்த்திட்டிருந்திருக்கேன்.” என்றார் ஆற்றாமையோடு.
தேன்நிலா திருமணத்திற்கு மறுப்பாள் என நினைத்துப் பார்க்கவில்லை இருவரும். எனவே அவள் மறுப்பை தாளமுடியவில்லை சுப்புலஷ்மியால்.
“வான்முகிலன் வரதுக்குள்ள நாலஞ்சு இடமாவது தயாரா பார்த்து வைக்கனும்னு தரகருக்கு இரண்டு நாள் முன்னவே போன் செய்துட்டேன்.” என்க.. இதற்கு மேல் இங்கே நிற்கவேண்டாம் என, அன்னையை அழைத்தபடி உள்ளே வந்தான் வான்முகிலன்.
“வா முகிலா..” என இன்முகத்தோடு வரவேற்றவர்.. “இன்னைக்கு வருவேனு போன் செய்திருந்தா கறி செய்திருப்பேன்ல?” என கோபித்து.. “நீ சொன்ன மாதிரி கல்யாணத்தைப் பத்தி யாரும் எதுவும் கேட்கலடா.” என்றார் நிம்மதியோடு.
“ம்.. குளிச்சிட்டு வரேன்ம்மா.” என தனதறைக்குள் சென்றான்.
வான்முகிலனின் வழக்கம் இதுதான் என்பதால்.. “சரி.. சீக்கிரம் குளிச்சிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என உற்சாகமாய் சமையலறை நுழைந்தார் சுப்புலஷ்மி.
கால் மணிநேரத்தில் வான்முகிலன் வர, “அண்ணா..” என பாசமாய் அழைத்தபடியும் ஆரவாரமின்றியும் வான்முகிலனிடம் வந்த இந்துபிருந்தா.. “அண்ணா அம்மா புது தரகர் ஏற்பாடு செய்துருக்காங்க, நீ வந்ததுக்கப்புறம் பேசிக்கலாம்னு சொன்னா அம்மா கேட்கவேயில்ல.” என குறைபட்டாள்.
சுப்புலஷ்மி… “ஆமாம் முகிலா, பழைய தரகர் ராசி சரியில்லனு புது தரகர்கிட்ட பேசியிருக்கேன், நீ வந்ததும் போன் பண்றனு சொல்லியிருக்கேன், நாளைக்கு நீ வீட்டுலதான இருப்ப?”
“ம். வீட்லதான் இருப்பேன். தரகர் பேரென்ன? இவரை எங்கயிருந்து பிடிச்ச?” என்றபடி உண்டான்.
வான்முகிலன் தரகர் பற்றி விசாரித்தது இந்துபிருந்தாவிற்கு பிடிக்காமல் போக.. “என் கல்யாணம் முடிஞ்ச பின்னதான அண்ணா பண்ணிக்கிறேன்னுச்சி, அவசரப்படாம பொறுமையா நம்ம குடும்பத்துக்கு ஏத்தமாதிரி பார்க்கலாம்மா.” என்றாள்.
“எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு பெரியாளாகிட்டியா? போற இடத்துல எப்படி புத்தியா பொழைக்கிறதுனு மட்டும் யோசி. பெரியவங்க விசயம் நாங்க பார்த்துக்குறோம்.” என முறைக்க..
“பிருந்தாவை ஏன்ம்மா கோவிக்கற? என் கல்யாணம் முடிஞ்சபின்னதான் நான் கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்ன பொண்ணு, இன்னைக்கு பொறுமையா பார்க்கலாம்னு சொல்லுதுனா யோசிக்க வேணாமா? இந்த முறையும் தவறான பொண்ணை பார்த்துடக்கூடாதேனு பயப்படுறா.. அதான் பொறுமையா பார்க்கலாம்ன்னு சொல்றா. ஆமாம்தான பிருந்தா?” என்றான் வான்முகிலன்.
“ஆமாம்ண்ணா.” என பிருந்தா சொல்ல, “அதெல்லாம் இல்ல, அப்படி செய்தா பிருந்தா கல்யாணத்துல உன் கல்யாணம் எதனால நின்னதுனு கேட்பாங்க.
கல்யாணம் முடிவாகாம இருந்திருந்தா கூட தங்கச்சி கல்யாணம் முடியவும் பண்ணலாம்னு இருக்கோம்னு சொல்லலாம், இப்ப அப்படி சொல்ல முடியாது, நாம எதை சொன்னாலும் குதர்க்கமா கேள்வி வரும்.
ஒரே மாசத்துல பொண்ணு பார்த்து பிருந்தா கல்யாணத்துக்கு முன்ன உன் கல்யாணத்தை முடிச்சே ஆகனும்.” என்றார் சுப்புலஷ்மி.
“அதெப்படி?” என பிருந்தா ஆரம்பிக்க, பார்வையில் தங்கையை அடக்கியவன்.. “ரேவா.. நீ வந்து ரொம்ப நாளாகுது, உன் மகன் உன்னை தேடுவான். நியாயப்படி கல்யாணம் நின்னதும் நீ கிளம்பியிருக்கனும், நான் லாரிக்கு போயாகனுமே, தனியா இருந்தா அம்மா ரொம்ப புலம்பும்னு உன்னை போக சொல்லல, இப்போதான் நான் வந்துட்டேன்ல? இன்னைக்கு கிளம்பு. நானே வந்து விட்டுட்டு வரேன்.” என்றான்.
ரேவதிக்கும் மகனோடு இருக்க ஆசைதான். ஆனால் முகிலன் நினைக்கும் அளவிற்கு அவன் தன்னை தேடுவதில்லையே என்ற உண்மை கசக்க.. “ஆமாம்மா, உன் மருமகன் என்னை தேடிட்டாலும். அவனுக்கு என்னை விட, அவங்கப்பா, தாத்தா பாட்டி பேச்சுதான் பிடிக்கும்.” என்றாள் வருத்ததோடு.
“ஆறு வயசுதான் ஆகுது, அவன்கிட்டயும் கோபிப்பியா?” என முறைத்து, “அவன் தேடலன்னா கண்டுக்காம விடுவியா? உன் மகன் ரேவாக்கா. ப்ரவீன் உன்னை தேடுற மாதிரி நீ நடந்துக்கோயேன்.” என எடுத்துரைத்தான் பாசத்தோடு.
“என்னை துரத்தப்பார்க்குறியா? உனக்கும் நான் சலிப்பாகிட்டேனா?” என வருந்தினாள்.
“ப்ச்.. அப்படியில்ல ரேவா.. மருமக வீட்டோட இருக்கனும்னு உன் மாமனார் மாமியாருக்கும், பொண்டாட்டி பக்கத்துல இருக்கனும்னு மாமாக்கும், ஸ்கூல் போய் வர என் மருமகன் அம்மா இருந்தா நல்லாயிருக்கும்னு, இப்படி எல்லாருக்கும் ஆசையிருக்கும்ல?
கல்யாணத்துக்காக வந்த சரி.. அதுதான் நடக்கலயே.. அதுக்கப்புறமும் ரொம்ப நாள் இங்கையே இருந்தா அவங்களுக்கு கஷ்டமாத்தான இருக்கும்? அதோட வீட்டுலயிருக்கவங்களாவது சொல்லி அனுப்பக்கூடாதானு அம்மா மேலயும் சலிப்பு உண்டாகும். எல்லாத்தையும் விட முக்கியமா உன் மகனுக்கும் உனக்கும் டிஸ்டன்ஸ் ஜாஸ்த்தியாகிட்டே போகும். அது நல்லதுக்கில்லக்கா.” என்றான்.
“சரி.. சரி.. நாளைக்கு தரகர் வந்துட்டு போனதும் கிளம்பறேன்.” என்றாள்.
“ம்.. அதென்ன என்னை வேணாம்னு சொன்ன மஹிமாவை விட, தேன்நிலா மேல செம்ம கோபத்துல இருக்கிங்க?” என்றான் சிறு கடுப்போடு.
“அப்படிலாம் ஒன்னுமில்லையே, அதுக்கப்புறம் அவளை நாங்க பார்க்கவேயில்ல, அதில்லாம நீ சொன்னமாதிரி நிலாவோட அப்பாகிட்ட மன்னிப்பு கூட கேட்டுட்டனே.” என மறுத்தார் சுப்புலஷ்மி.
“வரும்போதே நீங்க பேசினதெல்லாம் பத்து நிமிஷம் போல வெளில நின்னு கேட்டுட்டுத்தான் உள்ள வந்தேன்.” என முறைக்க.. இருவரும் அதிர்வாகி அமைதியாக..
“ஆமாம்ண்ணா, நிலாவை எதிரியாவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போல்லாம் நிலா என்னோடவும் பேசறதில்ல, என்னை பார்த்தாலே தலைகுனிஞ்சிட்டு போய்டுறா, போன் செய்தாலும் அட்டன் பண்றதில்ல.” என வருந்தினாள் இந்துபிருந்தா.
“அவளை சரி பண்ணிடலாம் பிருந்தா. நான் பார்த்துக்குறேன்..” என தேற்றியவன்.. “ரேவாக்கா கிளம்பு. உன்னை வந்து விட்டுட்டு வரேன்.” என்றான்.
“அவகிட்ட நீ என்ன பேசப்போற? மரியாதை தெரியாதவ.” என்றாள் ரேவதி.
வான்முகிலன்.. “மரியாதை தெரியாதவளையா மருமகளாக்கிக்க நினைச்சிங்க.?” என முறைத்து.. “எனக்காகத்தான கேட்டிங்க? அதனாலதான பிரச்சனை வந்தது? இதை எப்படி கண்டுக்காம விட முடியும்? அன்னைக்கே பேசியிருப்பேன், லாரிக்கு போயாகவேண்டிய சூழ்நிலையால பேச முடியல, இப்போ தேன்நிலா வேலைக்கு போயிருப்பா, ஏழு மணிக்கு மேல வந்ததும் பிருந்தாவோட போய் பேசப்போறேன்.” என்றான் முடிவாக.