ரேவதி.. “உன்னை, நம்ம குடும்பத்தை நல்லா தெரிஞ்சவளாச்சே, இப்படிபட்ட சூழல்ல கண்டிப்பா மறுக்கமாட்டானு நம்பிக்கையோட பொண்ணு கேட்டோம். நன்றி கெட்டவ, கொஞ்சம் கூட யோசிக்காம மறுத்துட்டா..
உன்னை வேணாம்னு சொன்னவளை எதுக்கு நீ போய் பார்க்குற? அதெல்லாம் வேணாம்.” என்றாள்.
“நன்றி கெட்டவளா?” என வான்முகிலன் முறைக்க.. “ஆமாம்.. நன்றி கெட்டவதான். நம்ம தைரியத்துலதான அவளை இங்க விட்டு அவங்கம்மா தைரியமா இருக்காங்க. உன்னோட பயத்துலதான் பசங்க யாரும் அவளை வம்பு பண்றதில்ல, இதெல்லாம் கூட நினைச்சிப் பார்க்கல, அம்மாவோட வயசுக்கு மரியாதை கொடுக்கல, அப்போ அவ நன்றி கெட்டவதான..?” என்றாள் ரேவதி.
“நானென்ன அவளுக்கு பாடிகாடா அவ பின்னாடியே சுத்திட்டிருக்கேனா? நீ நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல, அவ யாரை நம்பியும் இல்ல.. எதோ நம்மளாலதான் அவ வாழறான்ற மாதிரி நீங்களா ஒன்னு நினைச்சிக்கிட்டு அவளை ஃபோர்ஸ் பண்ணிருக்கிங்க.
நான் கூட எதோ அவ ஊனத்தை வச்சி அசிங்கப்படுத்திருக்கிங்கனு பார்த்தா, இப்படிலாம் வேற சொல்லிகாட்டியிருக்கிங்களா? எப்படி ரேவா இப்படிலாம் பேசுன? அசிங்கமாயில்ல? இப்படி பொண்ணு கேட்டு நீங்க அவளை மட்டும் அசிங்கப்படுத்தல, என்னையும் சேர்த்துதான்.” என கடுகடுத்தான்.
“இதுல நீ அசிங்கப்பட என்ன இருக்கு முகிலா? நம்ம அம்மா அவங்கம்மாக்கு எவ்வளோ அனுசரனையா இருந்திருக்காங்க.. அவகிட்ட நமக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு?” என ரேவதி நியாயம் கேட்க..
“இதுக்குமேல இதைப்பத்தி பேசாத, எதாவது சொல்லிடப்போறேன்.” என எச்சரித்தான் கடுமையாக.
ரேவதி செய்வதறியாது நிற்க.. “எனக்கு லாரி பர்மிட் கிடைச்சதே என் பாஸாலதான். முப்பது லாரிக்கு பர்மிட் கிடைக்கிறதெல்லாம் நம்மளை மாதிரி ஆள்களுக்கு சாதாரண விசயமேயில்ல,
உன்ன மாதிரி அவரும் நம்ம பிருந்தாவை கேட்டுருந்தார்னா நம்மளால ஏத்துக்க முடியுமா? எனக்கு இவ்வளோ பெரிய உதவி செய்திருக்காங்கன்றதுக்காக மரியாதை தெரியாதவங்க பையனை பிருந்தாதான் கல்யாணம் செய்துக்கத்தான் சம்மதிச்சிருப்பாளா?” என்க..
ரேவதி அதிர்ந்து பார்த்தாள் வான்முகிலனை. “உன்ன மாதிரி பொண்ணு கேட்டா எப்படி வலிக்கும்னு இப்போ புரியுதா?” என முறைத்தவன்.. “என் பாஸ் உதவி செய்ததால நான் லட்சக்கணக்குல சம்பாதிக்கிறேன். வசதியான வாழ்க்கை வாழுறோம்.
ஆனா தேன்நிலா அவங்கப்பா பென்ஷன்ல படிச்சா, நல்லா படிச்சு கௌரவமான வேலை பார்த்து சொந்த கால்ல நிக்குறா.. நன்றி கெட்டு போற அளவுக்கு நாம ஒரு உதவியும் அவளுக்கு பண்ணல.
சரியா சொல்லனும்னா, என் கல்யாணம் குறிச்ச தேதியில நடந்தாகனும்னு நீதான் அவகிட்ட உதவி கேட்டுருக்க, அதுவும் அதிகாரத்தோட.
பக்கத்து வீட்டுல குடியிருக்கான்றதுக்காகவும், அவங்கம்மாக்கு இரண்டு வார்த்தை அனுசரனையா பேசிட்டோம்ன்றதுக்காகவும் இந்தளவுக்கு அவளை மட்டமா நினைப்பியா நீ?” என முறைப்போடு பேசிக்கொண்டிருந்தவன், சட்டென பேச்சை நிறுத்தி.. தன்னை நிலைப்படுத்தி..
“கிளம்பு, உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன். நீ செய்த வேலைக்கு இங்க இருந்தா திட்டிட்டேதான் இருப்பேன்.” என அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தனதறை சென்று உடை மாற்றி வர..
மகனின் கோபத்தை குறைப்பதற்காக, “வண்டிக்கு போய்ட்டு வந்து சித்த நேரம் கூட படுக்கல, ரேவாவை நாளைக்கு கூட்டிட்டு போய்க்கலாம் முகிலா, ரொம்ப அலுப்பா இருக்கும். இன்னைக்கு ரெஸ்ட் எடேன்.” என்றார் தயக்கத்தோடு.
“உன் மகனுக்கு இவ்வளோ பார்க்குற? ரேவாக்கா வீட்டுக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது, ப்ரவீனுக்கும் அம்மா நினைப்பு இருக்கும்ல? ரேவாக்கு சொல்றதை விட்டுட்டு என்னையும் அழைச்சிட்டு போக வேணாம்ன்ற. உன்னாலதான் ரேவாக்கா இப்படி இருக்கு.” என கண்டித்து..
“ரேவாவை விட்டுட்டு வந்து ஒரேடியா நைட் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்.” என்று ரேவதியைப் பார்க்க மறு பேச்சின்றி வான்முகிலனோடு வெளியேறினாள் ரேவதி.
** ** ** ** **
இரண்டு மணிக்கு சென்ற வான்முகிலன் வீடு வர ஏழு மணியாகியிருக்க, “ப்ரவீன் நல்லா இருக்கானா? மாப்பிள்ளை வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? கல்யாணம் நின்னு போனதைப் பத்தி எதாவது கேட்டாங்களா? ஏன் இவ்வளோ நேரம்?” என பரிதவித்தார் சுப்புலஷ்மி.
“முக்கியமான சொந்தங்களுக்கு போன்ல சொல்லும்போதே, கல்யாணம் எதனால நின்னதுனு சேர்த்தேதான் சொன்னேன்ம்மா, ரேவாக்கா வீட்டுலயும் அப்படித்தான், அதனால யாரும் எதுவும் கேட்கல, நான் போகும்போது மாமா வீட்டுல இல்ல, ப்ரவீன் ஸ்கூல்லயிருந்து வந்ததும் பார்த்துட்டு வரலாமேனு வெய்ட் பண்ணினேன், கொஞ்ச நேரம் அவனோட பேசிட்டு, விளையாடவும் வீட்டுக்கு வர இவ்வளோ நேரமாகிடுச்சி.” என்றான்.
வான்முகிலன் இப்படியெல்லாம் அவர்கள் வீட்டில் நேரம் ஒதுக்குபவன் இல்லை ஆதலால் சுப்புலஷ்மியின் முகம் கலக்கம் கொள்ள.. “ரேவாக்கா பழைய கோபத்துல புரியாம நடந்திட்டிருக்கு, நமக்கே தெரியாம நாமளும் அதுக்கு காரணமாகிட்டோம். இனி கொஞ்சம் கண்டிசன் செய்தாதான் சரி வரும்.” என்க..
“ஏன் முகிலா அப்படி சொல்ற?” என தவித்தார் சுப்புலஷ்மி.
“இப்போ வேணாம், நாளைக்கு பேசலாம்.” என பிருந்தாவை அழைத்து, “ம்மா, நான் போய் பிருந்தா ஃப்ரண்டை பார்த்துட்டு வரேன்.” என தங்கையின் கை பிடித்தவாறு வெளியேற எத்தனிக்க..
“இந்த நேரத்துல போகனுமா? நாளைக்கு போலாமே முகிலா.” என்ற அன்னையின் மறுப்பில் நின்றவன்..
“இப்போ போறதுல உனக்கென்ன பிரச்சனை?”
“நான்தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல?”
“தப்பா பேசினது தேன்நிலாகிட்ட, மன்னிப்பு கேட்டது அவங்கப்பாகிட்ட.. இது சரியா?” என முறைத்தவன்..
“ஒருத்தரோட பிறவிக்குறையை குத்திக்காட்டி பேசுறது எவ்வளோ பெரிய தப்புனு உனக்கு இன்னும் புரியலயாம்மா?
என் மேல உள்ள பாசத்துல சம்மதமேயில்லாத அவளை நோகடிச்சிருக்கிங்க, மன்னிப்பு கேட்டாலும் நீங்க பேசினது இல்லனு ஆகிடாது, ஆனா அதையும் செய்யலனா என்னால நிம்மதியா இருக்க முடியாது.” என நடக்க துவங்க..
“சரி.. அவகிட்டயும் நானே மன்னிப்பு கேட்டுக்கிறன், நீ போனா யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க..” என்றார்.
“அதான் பிருந்தாவை கூட்டிட்டு போறேன்ல?”
அப்பொழுதும் விடாமல், “அவளும் நானும் போறோம், நீ வேணாம்.” என்றார் சுப்புலஷ்மி.
“உன்னைதான் வீட்டை விட்டு போக சொல்லிட்டாள்ல? நீதான் போகக்கூடாது. சும்மா போய் பேசிட்டு வரதுக்கெல்லாம் யார் என்ன சொல்லிடப்போறாங்கனு அதையும் நானே பார்த்துக்கிறேன்.” என்றவன் சுப்புலஷ்மி பதில் பேசும்முன் கிளம்பியிருந்தான்.
** ** ** **
கதவு திறந்திருக்க, உற்சாகமாய் உள்ளே போக இருந்த இந்துபிருந்தாவின் கைப்பிடித்தவன்.. “பெல் அடி.” என்றான்.
இந்துபிருந்தா அழைப்பு மணியை அடிக்க.. இந்த நேரத்தில் யாரென்ற யோசனையோடு கதவைத் திறந்த தேன்நிலா ஸ்தம்பித்து நின்றாள்.
“உள்ள வரலாமா?” என இந்துபிருந்தா கேட்க, ரேவதி பேசியதற்கு நியாயம் கேட்கவேண்டி வான்முகிலனை எதிர்பார்த்து பத்து நாள்கள் காத்திருந்தவள், அதன்பின் நீ வந்து மட்டும் என்னவாகப்போகுது? கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இல்லையென்றாகிடுமா என்ற ஆற்றாமையில், கடந்த நான்கு நாட்களாக இதுகுறித்து வான்முகிலனிடம் பேசும் எண்ணத்தையும் கைவிட்டிருந்தாள்.
பிருந்தாவை தவிர்த்து அனைவரின் மீதும் கோபமிருந்தபோதும், தன்னைத் தேடி வராதவன் வந்திருக்கான்.. உள்ளே அழைக்கவில்லையென்றால் தவறாகிடும் என்ற யோசனையோடு தேன்நிலா பேச்சு வராமல் நிற்க, “இங்க வெளிலயே கூட பேசலாம். ஒரு பத்து நிமிஷம் மட்டும்தான்.” என அனுமதி கேட்டான் தேன்நிலாவின் கண்பார்த்து.
“உ.. உ.. ள்ள..” என திணறியவள் வரசொல்லும் செய்கையை தன் கையினில் காட்டினாள்.
இருவரும் உள்ளே செல்ல, அமரும்படி கை காட்டினாள். இந்துபிருந்தா அமர, வான்முகிலன் நின்றேயிருந்தான்.
உள்ளே வர சொல்லிவிட்டாள். ஆனால் அவனின் அன்னையும் ரேவதியும் பேசிய பேச்சுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அன்று வான்முகிலனை பார்த்து கேட்கவேண்டும் என நினைத்திருந்த கேள்விகள் கூட வர மறுத்தது. இயலாமை கண்ணீராய் வெளியேற அதை மறைக்க தலைகவிழ்ந்தாள்.
“சின்ன பிள்ளையா நீ? எதுக்கு அழற? அம்மா கேட்டாங்க, உன் விருப்பத்தை சொன்ன.. இதுல ஒரு தப்பும் இல்ல, கண்ணைத் துடை.” என கண்டித்தான்.
பிருந்தா சொல்லவும் தேன்நிலா முதுகாட்டி நின்றாள். ஆனாலும் கண்களை துடைக்கும் பாவனை புரிய..
“இப்போ என்ன? அவங்க கேட்ட விதம் தப்பா? இல்ல எனக்கு கேட்டதே தப்புன்றியா?” என்றான் சற்று குரலுயர்த்தி.
அதிர்ந்த தேன்நிலா அமைதியே கையிலெடுக்க, ப்ச்.. மன்னிப்பு கேட்க வந்துட்டு மிரட்டிட்டு இருக்கேன், என தன்னை நிலைப்படுத்தி.. “என் கல்யாணம் நின்னுபோன டென்ஷன்ல அம்மா தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திட்டாங்க, அவங்களுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன், ரேவாக்கா பேசினதுக்கும் சாரி..” என வருந்தி சொன்னவன்..
“அதுக்காக இன்னைக்கு வரைக்கும் அவங்க பேசினதை நினைச்சி அழறது முட்டாள்தனம். உன்னை நீயே கீழ்படுத்திக்கிறதுக்கு சமம். இனி இதை நினைச்சு அழாத, வருத்தமும் படாத. என் வீட்டாளுங்க அன்னைக்கு போல இனி எப்பவும் உன்னை பேசமாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு.” என நம்பிக்கையோடு சொல்லி..
“உனக்கு கால் இப்படி இருக்கு, பேச்சு சரியா வராது.. இதெல்லாம் ஒரு குறையா எனக்கு எப்பவும் தோணினதில்ல, உனக்கும் அப்படித்தானு எனக்கு நல்லா தெரியும். அம்மா பேசுனதை மறந்து உன்னோட இயல்புல எப்பவும் போல பிரிஸ்கா இருக்கனும்.. சரியா?” என்றான்.
திரும்பி நின்றிந்த நிலாவின் காது சிவக்கவே.. தன் பேச்சில் உடன்பாடில்லை என்பது புரிய.. “எங்கம்மாவை வந்து மன்னிப்பு கேட்க சொல்லட்டா.?” என்றதும் சட்டென திரும்பினாள் தேன்நிலா.
இதைத்தான் எதிர்பார்க்கிறாள் என நினைத்து.. “சரி அவங்களை அனுப்பி வைக்கிறேன்.” என எழுந்தான்.
“யாரும் மன்னிப்பு கேட்க வேணாம்னா? அப்போ நான் வந்தது, பேசினது எதுவுமே உனக்கு பிடிக்கல, அப்படித்தான?” என்றவன்.. “வா பிருந்தா.” என தங்கையின் கையைப் பிடித்தவாறு இரண்டடி நடக்க,
நான் இவனை கீழாக நினைப்பதாய் நினைக்கிறானா? எனப்பதறி.. “இ.. இருங்க..” என்றாள். ஒரு நொடி நின்றவன் மீண்டும் நடக்கத் துவங்க.. “நி..ல்லுங்க.” என்றவளுக்கு இந்தமுறை குரல் உள்ளேயே இருக்க, வான்முகிலனை தடுக்கும் பொருட்டாக டேபிள் மீதிருந்த டம்ளரை வேகமாய் கீழே போட்டாள்.
கீழேயேது விழுந்துவிட்டாளா என இருவரும் சட்டென திரும்ப, கலங்கிய முகத்தோடு உள்ளே வர செய்கை செய்தாள்.
“யாரும் மன்னிப்பு கேட்க வேணாம்னல்ல? வேற என்ன இருக்கு பேச?” என்ற வான்முகிலன் அங்கேயே நிற்க, “அண்ணா.. என்னதான் சொல்றானு கேட்டுட்டு போய்டலாமே.” என இந்துபிருந்தா சொல்லவும், “ப்ளீஸ்.” என தேன்நிலாவும் சொல்ல உள்ளே வந்தமர்ந்தான்.
மனவேதனை நெஞ்சை அடைக்க, வார்த்தை வெளிவர திணறியது. இரண்டு நிமிடம் போல் தேன்நிலா அமைதியாகவே இருக்க, அவள் முகத்தில் வேதனையை கண்டவன் இந்தளவுக்கு வருந்தும் அளவிற்கு என்னானது? என அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
அன்னை திருமணத்தை சொல்ல நாம் ஏன் தயங்கனும்? என தன்னை திடப்படுத்தி.. “எங்கம்மாக்கு கல்யாணம் ஆகி, அதாவது இரண்டாவது கல்யாணம் ஆகி இருபத்தியொரு வருசம் ஆகுது.
என் ஸ்கூல், காலேஜ்னு ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் பலபேர் பலவிதமா எனக்கு தெரியாமலும் பேசியிருக்காங்க, தெரிஞ்சும் பேசியிருக்காங்க, சிலர் நீ யாரோட இன்சியல் போட்ருக்க? உன்னை பெத்த அப்பா இன்சியலா? இல்ல இப்போ இருக்க ஸ்டெப்ஃபாதர் இன்சியலா?
பொண்டாட்டி செத்தா புருசன்தான் புதுமாப்பிள்ளைனு சொல்வாங்க, உங்கம்மாதான் புருசன் செத்தா பொண்டாட்டி கூட புதுப்பொண்ணாகலாம்னு ஒரு பெரிய புரட்சி பண்ணிருக்காங்கனு என்கிட்டயே சொல்வாங்க.”
“ப்ச்.. இப்போ எதுக்கு இதெல்லாம்.?” என இடையிட்டான் மேற்கொண்டு இதனை கேட்க விரும்பாத தோரணையில்.
“ஒரே ஒரு முறை கேளுங்களேன், என் அம்மா கல்யாணத்தை பத்தி பலபேர் பேசியிருக்காங்க, அந்த நேரம் வருந்தினாலும் சில மணி நேரத்துல அதுலயிருந்து வெளி வந்திடுவேன், ஆனா உங்கக்கா பேசினதை மட்டும் மறக்கவே முடியல..” என்றாள்.
அப்பொழுதும் மங்களத்தின் திருமணத்தை கேட்க விரும்பாமலும், அவளின் ரத்தபந்த அப்பா இறந்ததால்தான் இப்படி நிலைமையென மனவேதனையில் இருக்கிறாள் என நினைத்தவன்.. இப்பேச்சினை தவிர்க்க நினைத்து.. “உன் அப்பா இறந்தப்புறம் ஒரு வருசம் கழிச்சி, உன் அம்மா மறு கல்யாணம் செய்தது, அந்த குடும்பத்துக்கும் உனக்கும் இடையே நடந்தது, உன் தாத்தா பாட்டி இறப்புக்கு அப்புறம் நடந்ததுனு எல்லாமும் எனக்கு தெரியும். விடு..” என்றான் தன்மையாக.
“இல்ல, ஒரு சில விசயங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல. எங்கப்பாம்மா, என் தாத்தா பாட்டிக்கு மட்டுமே தெரிஞ்ச விசயம், அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.” என்க.. பெண்தானே கேட்டார்கள்? இவளின் பெற்றோர் பற்றி தன்னிடம் பேசும் அளவிற்கு என்ன கட்டாயம் வந்துவிட்டதென வான்முகிலன் புருவம் உயர்த்தினான்.