“அன்னைக்கு என்ன நடந்ததுனு முழுசா தெரியுங்களா.?” என்றவளின் குரலில் கோபம் இருந்தாலும், முகம் வேதனையை காட்டியது.
நம்மகிட்ட பாதி மறைச்சிருப்பாங்களோ என யோசித்தவனுக்கு ரேவதி மீது சந்தேகம் வர, நடந்ததை முழுதாய் தெரிந்தாக வேண்டுமென, “ஒருவேளை என்கிட்ட எதாவது மறைச்சிருக்கலாம், உனக்கு என்ன சொல்லனுமோ சொல்லு.” என்றான்.
வான்முகிலனின் ஆதரவான குரலில் இவளின் பதைப்பும் சற்று குறைய.. “நான் பிறந்து ஆறு மாசத்துல எங்கப்பா இறந்துட்டார். என்னை அவர் பார்த்தது கூட இல்லையாம். எனக்கு ஒன்றரை வயசு இருக்கும், அப்போதான் நான் நடக்க ஆரம்பிச்சேனாம், ஒரு மாசம்தான் நடந்திருப்பேனாம், அப்போ ஒரு சின்ன ஆக்ஸிடண்ட், அதுல என் கால்ல பலமா அடிபட்டுடுச்சி,
அப்போவே சரியான ட்ரீட்மண்ட் எடுத்திருந்தா நானும் மத்தவங்களைப் போல நல்லாத்தான் நடந்திருப்பேன், அங்க ஒரு இடத்துல மாக்கட்டு கட்டுறாங்க, அதை கட்டினா குழந்தை கால் சரியாகிடும்னு என் பாட்டி சொன்னதை கேட்டு என் கால்ல கட்டு போட்டாங்க, ஒரு வாரத்துல ரொம்ப வீங்கிடுச்சாம்,
இதெல்லாம் சரி வராது, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போலாம்னு என் தாத்தா கூட்டிட்டு போனார், இன்னும் இரண்டு நாள் விட்டுருந்தா காலையே எடுக்க வேண்டியதாகியிருக்கும்னு டாக்டர் சொன்னாங்களாம், அப்புறம் ஒரு மாசம் வரைக்கும் ட்ரீட்மண்ட் கொடுத்து சரியானது.
அப்போயிருந்துதான் இப்படி நடக்க ஆரம்பிச்சேனாம். பேச்சு கூட அந்த ஆக்ஸிடண்ட் அதிர்ச்சியில வந்ததா இருக்குமோனு எங்கப்பாக்கு இப்போ வரைக்கும் குற்றவுணர்விருக்கு.”
இவளின் கால் ஊனம் எப்படியானதென அன்னை மூலம் வான்முகிலனுக்கு தெரிந்ததுதான்.. ஆனால் ஆக்ஸிடண்ட்? குற்றவுணர்வு வார்த்தையில் அதிர்வாய் பார்க்க.. “ஆமாம், அந்த ஆக்ஸிடண்ட் செய்தது என் லிங்கேசப்பாதான், என்னை தூக்கிட்டு என் அம்மா ரோடை க்ராஸ் பண்ணும்போது தெரியாம மோதிட்டாராம்.
சின்ன குழந்தையை இடிச்சிட்டோமேனு எனக்கு சரியாகிடுச்சானு இரண்டு நாளா என் தாத்தாகிட்ட கேட்டுட்டே இருந்தாராம். எனக்கு அப்பா இல்லைன்ற விசயமும் அப்போதான் லிங்கேசப்பாக்கு தெரிஞ்சிருக்கு..
இரண்டு மாச ட்ரீட்மண்ட்க்கப்புறம் மெல்ல நடக்க ஆரம்பிச்சேனாம், என் மகள் இப்படி நடக்கமாட்டாளே, ஒரு மாசமா நல்லாதான் நடந்தானு எங்கம்மாக்கு என் நடையை ஏத்துக்க முடியல.
டாக்டர்கிட்ட கேட்டா, காலை காப்பாத்துனதே பெரிய விசயம், இனி குழந்தை இப்படித்தான் நடப்பானு சொல்லிட்டாங்களாம்.
அதுக்கப்புறம் மூன மாசம் கழிச்சி ஒரு நாள் லிங்கேசப்பா அவர் அம்மாப்பாவோட வந்தாராம். என்னை பார்க்கத்தான் வந்திருக்கார்னு நினைச்சி என் தாத்தா பாட்டில்லாம் உன்னாலதான் என் பேத்திக்கு இப்படி ஆகிடுச்சினு திட்டி தீர்த்துருக்காங்க.
பதில் பேச்சில்லாம திட்டு வாங்கிட்டு, என் அம்மாவை கல்யாணம் செய்துக்க கேட்டாராம். எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க, என் தாத்தா பாட்டி லிங்கேசப்பாவோட அப்பாம்மாவை பார்க்கவும்.. மகன் உங்க பொண்ணைத் தவிர வேற யாரையும் கட்டிக்கமாட்டானாம்னு சொன்னாங்களாம்.
என் அப்பாவோட கல்யாணத்துக்கப்புறம் ஒரு மாசம்தான் சேர்ந்திருந்தாங்களாம், அப்புறம் போனவரு ஆறு மாசத்துக்கப்புறம் ஒரு மாசம் லீவுல வந்தாராம். அதுக்கப்புறம் போனவர், ஒரு வருசம் கழிச்சு பிணமாதான் வந்தாராம். மிலிட்டரில எல்லை பாதுகாப்புல இருந்தப்போ இறந்துட்டார்.
சொந்த தாய்மாமனைத்தான் எங்கம்மா கல்யாணம் செய்துக்கிட்டாங்க, முப்பத்தஞ்சு வயசாகிடுச்சினு யாரும் எங்கப்பாக்கு பொண்ணு கொடுக்காததால எங்கத்தை எங்கம்மாவை கட்டி வச்சாங்களாம். எங்கப்பா சாகும் போது எங்கம்மாக்கு இருபது வயசுதான். ஆறுமாச குழந்தையா கையில நான்..
மகன் இறந்த வேதனையை விட, எங்க தாத்தா பாட்டிக்கு மருமக வாழ்க்கையை நினைச்சிதான் ரொம்ப வேதனை. எங்கம்மாவோட அம்மா, அதாவது எங்க தாத்தாவோட மகள் எங்கம்மா வாழ்க்கையை நினைச்சி நினைச்சி அழுதே எல்லாருக்கும் முன்ன போய் சேர்ந்துட்டாங்களாம். எங்கம்மாவை பாதுகாக்க என் தாத்தா பாட்டியை விட்டா ஆளேயில்ல, இப்படி வேதனையில இருக்கும்போது என் லிங்கேசப்பா எங்கம்மாவை கேட்டாங்க,
இன்னும் எத்தனை காலம் பேத்திக்கு பாதுகாப்பா இருக்க முடியும்னு எங்க தாத்தா கிடைச்ச வாய்ப்பை கெட்டியா பிடிச்சிக்கிட்டார்.
எங்கம்மா கல்யாணத்துக்கு மறுக்கவும், கல்யாணம் செய்துக்கலனா எல்லாரும் விசம் குடிச்சிட்டு சாகலாம், உன்னை இந்த கோலத்துல பார்க்குறதை விட சாகறது உத்தமம். குழந்தைக்கும் சேர்த்து விஷம் கொடுத்துடலாம், பொண்ணு பிள்ளையா வேற போய்ட்டா, அப்பாம்மாவோட இருக்க குழந்தைக்கே பாதுகாப்பில்ல, இந்த சமூகத்துல யாருமில்லாம அநாதையா வளருறதுக்கு நம்மளோட வந்துடறது உத்தமம்னு சொல்லவும் எங்கம்மா பயந்துட்டாங்க..
இப்படி மிரட்டியும் பயப்படுத்தியும்தான் கல்யாணம் செய்து வச்சாங்க. எங்கம்மா கல்யாணம் செய்துக்கிட்டதை பல பேர் பலவிதமா பேசினாங்க, ஆனா இத்தனை வருசத்துல யாரும் உங்கக்கா மாதிரி பேசல.” என்று பொல பொலவென கண்ணீர் விட்டாள் தேன்நிலா.
“ரேவாக்கா என்ன பேசுச்சு?” என்றான் அதிர்வோடு.
“உங்கப்பா உங்கப்பாங்காத, உன்னை பெத்த அப்பா இறந்ததுக்கப்புறம் கவர்மண்ட்லயிருந்து அவருக்கு வந்த பணமெல்லாத்தையும் இவர்தான் வாங்கிக்கிட்டார், மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டி, நல்ல பணம் வந்துருக்கும், போறாததுக்கு காலம் பூரா பென்ஷன், இப்படி விதவையை கட்டிக்க யாருக்குத்தான் கசக்கும்?
அதோட இந்த வீடு, இது உனக்குத்தான்னாலும் அதுவும் அவருக்குதான் சாதகம். உனக்காக எதுவும் செய்ய வேணாம் பாரு.
இதெல்லாம் போக, அவர் பெத்த மகனை நீ படிக்க வச்சிட்டிருக்க, பொய்யாவாவது உன்னை தாங்க இந்த ஒரு காரணம் போதாதா? மொத்ததுல காசுக்காகத்தான் உங்கம்மாவை கல்யாணம் செய்துக்கிட்டார்,
உங்கம்மாவுக்கும் பணம் கொடுத்தாலும் புருசன் இருந்தா போதும்னு, அதாவது ஆம்பிளை துணை இருந்தா போதும்னு உன்னை அம்போனு இங்க விட்டுட்டு அவங்க ஜாலியா இருக்காங்க. அவங்க சந்தோசத்துக்கு அடையாளமா உன் தம்பி. இப்படிபட்டவங்க சம்மதம்லாம் உனக்கு தேவையில்ல, புத்தியா யோசிச்சு கிடைக்கிற வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோ..
என்னதான் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டாலும், பெத்த பிள்ளையை.. அதுவும் வயசு பிள்ளையை இப்படி தனியா விட்டுட்டு இருந்தா பேசத்தான் செய்வாங்க..
எங்களை தவிர்த்து யார் பொண்ணு கேட்டு வந்தாலும் உங்கம்மாவோட ஏன் இல்லனு கண்டிப்பா கேட்பாங்க.. அப்போ..”
இத்தனை இழிவாகவா ரேவா பேசியிருக்கு? என்பதோடு தன் அம்மா கூட ரேவாவை கட்டுப்படுத்தலையா என இருவர் மீதும் வந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமலும், மேற்கொண்டு என்ன பேசியிருப்பார்கள் என்பதை யூகித்து, தேன்நிலா வாய் மொழியாக அதனை கேட்க விரும்பாமல்.. “போதும் விடு.” என கோபமாய் எழுந்தான் வான்முகிலன்.
“விடுன்னா?” என்றாள் ஆற்றாமையோடு.
பணத்துக்காகத்தான் லிங்கேசன் இவளின் அம்மாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தன் சந்தோசத்திற்காக நிலாவை இங்கே தனியே விட்டுருக்கிறார்கள் என்பதையும் தகாத வார்த்தையில் சொல்லியிருக்கிறாள் என தன் அக்காவை சரியாய் கணித்தவன்.. “என் அக்கா இந்தளவுக்கு பேசும்னு நான் நினைக்கவேயில்ல, இதுக்கு மேல என்ன பேசியிருக்கும்னு யூகிக்க முடியாத முட்டாளில்லை நான். அதை நீ சொல்லி என்னால கேட்க முடியாது,
இதுக்கு நான் மன்னிப்பு கேட்குறது சரி வராது. ரேவாவையும் என் அம்மாவையும் கேட்க வைக்கிறேன்.” என்று, கிளம்பலாம் என்பதாய் தங்கையை பார்த்தான்.
என் மேலயா? என புருவம் உயர்த்தியவன்.. “ஏன்? எனக்கு பொண்ணு கேட்டுட்டாங்கன்னா?” என்றான் அர்த்தப் பார்வையோடு.
“உங்கம்மா வந்து பொண்ணு கேட்டு போனதுக்கப்புறம், உங்ககிட்ட இதுபத்தி பேசலாம்னு ஆபீஸ் போய்ட்டு வர வழியில ஒரு வாரமா தினமும் ஒரு மணி நேரம் வரை காத்திருப்பேன், நீங்க வரவேயில்ல.
உங்கம்மாக்கும் எனக்கும் பிரச்சனையாகிடுச்சுனு தெரிஞ்சும், இத்தனை நாளா எதைப் பத்தியும் கண்டுக்காம இருந்த உங்ககிட்ட இதுப்பத்தி இனி பேசவே கூடாதுனு நினைச்சிருந்தேன்.
எனக்கு அவங்க மன்னிப்பும் வேணாம், உங்க மன்னிப்பும் வேணாம், கிளம்புங்க சாமி.” என உள்ளடக்கிய கோபத்தோடு, வேண்டுதல் போல் சொன்னாள்.
தன்னை எதிர்பார்த்திருந்தேன் என தேன்நிலா சொன்னது நிம்மதியைத் தந்தாலும், தன் மீது இத்தனை கோபம் தேவையில்லாதது என.. “மன்னிப்பு கேட்க வேணாம்னா வேற என்னதான் செய்யுறது?” என முறைத்தான்.
“ஒன்னும் பண்ண வேணாம், மன்னிப்பு கேட்டுட்டா மறக்கக்கூடிய வார்த்தைகளை உங்கக்கா பேசல, எங்கம்மாப்பாவை இழிவா பேசுனவங்களை மன்னிக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசும் கிடையாது..” என வருத்தத்தோடு சொன்னவள்..
எனக்குதான் திக்குவாய், கால் ஊனம், உங்க அளவுக்கு பணபலமோ, ஆள்பலமோ இல்ல, உங்களுக்கு அப்படியா? உங்களை கேவலமா நினைப்பேன்னு நீங்க எப்படி என்னை நினைக்கலாம்?” என்றாள் சிறு கோபத்தோடு.
ஓ.. அப்போ என்னை கேவலமா நினைக்கலயா? என இலகுவானவன்.. “விசயம் கேள்விபட்டதும் உன்னை பார்த்து பேசனும்னுதான் நினைச்சேன், நைட் ஆகிடுச்சேனு காலைல பேசிக்கலாம்னு விட்டுட்டேன். அடுத்தநாள் லேட்டா எழுந்தேன், உன் வீட்டைப் பார்த்தா பூட்டியிருந்தது, மதியம் அர்ஜண்ட்டா லாரிக்கு போயாக வேண்டிய சூழல், இன்னைக்குத்தான் வந்தேன்.” என்றான் தன்மையாக.
தேன்நிலா அமைதியாக இருக்க.. “கல்யாணம் நின்னு போன டென்ஷன்ல, அவளை போல லாரி டிரைவர்னு என்னை கேவலமா நினைச்சிட்டியோனு நினைச்சது தப்புதான், அதுக்கொரு சாரி.” என்றவன்..
“ஆனா பாரு.. நீ நினைக்கிற மாதிரி உன்கிட்ட எந்த குறையும் பெருசா தெரிஞ்சதில்ல, நாம நிறைய பேசிக்கிட்டதில்லன்னாலும் எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உன்னை எனக்கு தெரியும்.
அப்போ இருந்து இப்போ வரைக்கும் நீ திக்கி திக்கி பேசும்போது திக்குவாய்னு எனக்கு தோணினதேயில்ல, சின்ன வயசுல உன் தாத்தா பாட்டியோட பேசும்போதும், இப்போ தெருவில காய்கறி விக்குறவங்ககிட்ட பேசும் போதும் உன் பேச்சை கேட்டுருக்கேன்.
பல நேரம் நல்லாதான் பேசுவ, எதோ சில நேரம்தான் திணறுவ.. உன் திணறல் ஒரு மாதிரி சரியா பேசிப் பழகாத குழந்தையோட மழலை மாதிரி, நல்லாதான் இருக்கும். அதனால உன் பேச்சை குறையா நினைக்காத.” என்றான்.
மழலை என நினைப்பதெல்லாம் பெரும் அபத்தம் என்ற உண்மை புரிந்தபோதும், தன்னை பெற்ற அன்னை கூட இப்படி சொன்னதில்லை என்பதால் மழலை என்ற சொல், தேன்நிலாவின் மனதை ஒரு நொடியேனும் வருடத்தான் செய்தது.
ஆனாலும் இவர்களின் குடும்பத்தோடு இனி யாரிடமும் பேசக்கூடாது என முடிவெடுத்திருந்ததால் அமைதியாக நின்றிருந்தாள்.
இந்துபிருந்தா.. “நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் என்கிட்ட பேசல?” என்றாள் வருத்தத்தோடு.
“நீ தப்.. தப்..ப்பே செய்யலன்றதாலதான் உ.. உன்னோட ப்..ப்..பேசல பிருந்தா. இவங்க மேல உள்ள கோபத்துல உன்னை எதாவது சொல்லி உன் மனசை க்..க்.. கஷ்டப்படுத்த விரும்பல.” என்றாள் தேன்நிலா.
அக்காவும் அம்மாவும் பேசியதை மறக்க முடியாமல், தன் குடும்பத்தில் இனி யாரிடமும் பேசக்கூடாதென முடிவெடுத்திருக்கிறாள், தவறிழைக்காத பிருந்தாவை தவிர்ப்பது இவளிற்கும் கடினம்தான் போல, அதனால்தான் இத்தனை திணறுகிறாள் என்பதும்..
சிறு வயதிலிருந்தே கோபம், அல்லது இயலாமை போன்ற உணர்வில்தான் திக்குவாள் என தேன்நிலாவை புரிந்தவனுக்கு.. “எங்கம்மா அக்கா மேல உள்ள கோபத்துல நீ கஷ்ட்டபடாத, பிருந்தாவோட பேச உனக்கு ஏன் பிடிக்கலனு என் தங்கைக்கு நான் புரிய வச்சுக்கிறேன்..” என தன்மையாகவே சொல்லி பிருந்தாவோடு வெளியேறினான் வான்முகிலன்.
தன் அம்மா, அக்காவை தேன்நிலா மன்னிக்கவில்லை என்றபோதும் வான்முகிலனுக்கு அவளின் மீது கோபமில்லை என்பதை அறிந்துகொண்ட இந்துபிருந்தா தன் அண்ணனையே பார்த்திருந்தாள்.