“நிலா என்ன சொன்னா? ஏன்டி என்கிட்ட எதுவுமே சொல்லமாட்டுக்கிறிங்க?” என அங்கலாய்த்தார் சுப்புலஷ்மி.
“எதுக்கும்மா என்னை நச்சு பண்ற? உன்கிட்டயும் ரேவாக்காகிட்டயும் எதுவும் சொல்லக்கூடாதுனு அண்ணா சொல்லியிருக்கு, நிலா வீட்டுல என்ன நடந்ததுனு உனக்கு தெரியனும்னா அண்ணா எழுந்து வந்ததும் நீயே கேட்டுக்கோ.” என்றாள் இந்துபிருந்தா.
சுப்புலஷ்மியின் முகம் அதீத தவிப்பிலிருக்க.. “ம்மா.. எனக்கு டிபன் கிடைக்குமா? இல்ல நானே வச்சுக்கவா?” என குரலுயர்த்த.. “இதோ வைக்கிறேன்.” என மகளுக்கு டிபனை பரிமாற, வான்முகிலன் வெளியே வந்தான்.
லாரிக்கு சென்று வந்தாலும் ஓரிரவு நன்றாக தூங்கிவிட்டால் அடுத்தநாள் வழக்கம்போல் எழுந்திடுவான் வான்முகிலன். நேற்றிரவு ஒன்பது மணிக்கு அறைக்கு சென்றதால் வழக்கம்போல் காலை ஆறு மணிக்கு நடைபயிற்சிக்கு செல்ல எழுவான் என பார்த்திருந்தார் சுப்புலஷ்மி.
ஆனால் வான்முகிலன் எழுந்து வர ஒன்பது மணியாகியிருக்க, சுப்புலஷ்மி.. “வா முகிலா, உடம்புக்கேது முடியலையா? இவ்வளோ நேரம் தூங்கமாட்டியே..” என்றார் அக்கறையாக.
“நைட் ரொம்ப நேரம் முழிச்சிருந்தேன், அதான் இவ்வளோ நேரம் தூங்கிட்டேன்.” என சாப்பிட அமர, “டீ வேணாமா? டிபன் வைக்கவா?” என்றார்.
பத்து நிமிடத்தில் சாப்பிட்டதும் வான்முகிலன் எழ, “நேத்து நிலா என்ன சொன்னானு கேட்டதுக்கு டையர்டா இருக்குனு தூங்க போய்ட்ட, இந்த பிருந்தாகிட்ட கேட்டா அவளும் சொல்லமாட்டுக்கிறா, நிலா என்னதான் சொன்னா?” என்றார் சுப்புலஷ்மி.
வான்முகிலன் பேச எத்தனிக்க.. வேணாம் என்பதாய் கண்ஜாடை செய்தாள் இந்துபிருந்தா.
ரேவாக்கா பேசினது ரொம்ப ரொம்ப ஓவர், நிலா அம்மா கல்யாணத்தை பத்தி பேச நமக்கென்ன உரிமையிருக்கு? இதை நீ சும்மாவே விடக்கூடாதுண்ணா, என நேற்று கோபமாய் சொன்னவள், இன்று தன்னை ஏன் பேசவேணாம் என்கிறாள் என யோசித்தபடி.. “சொல்றேன்ம்மா.” என்றவன் தங்கையின் கைப்பிடித்தபடி தனதறைக்குள் சென்றான்.
“நிலா விசயத்தை பத்தி ரேவாகிட்டயும் அம்மாகிட்டயும் பேசாதே, நாளைக்கு நானே பேசிக்கறேன்னு சொன்னதுக்கு, நேத்து நைட்டே பேசியாகனும்னு சொன்ன? இப்போ ஏன் என்னை பேச வேணாம்ன?” என்றான்.
“நிலாதான் சொன்னா.”
“என்ன?” என்றான் புரியாமல்.
“நடந்து முடிஞ்சதைப் பத்தி இனி பேசவேணாம்னு இப்போ ஒரு அரை மணிநேரம் முன்ன போன் செய்து சொன்னா.” என்றாள்.
“நான் என்ன பேசனும்னு அவ சொல்வாளா?” என கடிந்தாலும் “ஏனாம்? நம்ம வீட்டுல யார்கிட்டயும் பேசமாட்டேன்னு சொன்னா? இப்போ மட்டும் எதுக்கு பேசினா?”
ஓ.. நம்ம வீட்டுல இதுபத்தி பேசினா, ரேவாவும் அம்மாவும் திரும்ப பிரச்சனை செய்வாங்கனு பயப்படுறா போல என நினைத்தவன்.. “சரி நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
“நிலா போன் பண்றதுக்கு முன்னாலையே, நிலா வீட்டுல என்ன நடந்ததுனு காலைலயிருந்து அம்மாவும், ரேவாக்காவும் என்னை படுத்தியெடுத்துட்டாங்க, நீ வேற நானே பேசிக்கிறேன்னு சொல்லிட்டியா.. என்னால இரண்டு பேரையும் சமாளிக்கவே முடியல, நீதான் இதுப்பத்தி பேசவேணாம்னு சொன்னனு உண்மையை சொல்லிட்டேன்..
அப்போவும் ரேவாக்கா, நான் முகிலன்கிட்ட எதுவும் கேட்டுக்கமாட்டேன், நீ சொல்லுனு தொல்லை பண்ணினாங்க, இவங்க இரண்டு பேரும் என்னை கேட்காம இருக்க என்ன பண்றது ண்ணா?” என்றாள்.
“மறந்துடுச்சினு சொல்லு.” என்றான் கடுப்போடு.
“அண்ணா..” என இந்து பாவமாய் பார்க்க.. “தப்பு பண்ணவும்தான குறுகுறுக்குது..” என பல்லை நெறித்தவன்.. “பேசறதெல்லாம் பேசிட்டு என்னை எதுக்கு தொல்லை பண்றிங்கனு நல்லா திட்டிவிடு.” என்றான்.
“இப்போ என்னண்ணா பண்றது? நிலா வேற இதைப்பத்தி பேசவேணாம்னுட்டா.. ரேவாக்காவை கேட்காம விட்டா அந்த தைரியத்துலயே இங்க வரும்போது திரும்பவும் பேசினாங்கனா? நிலா பாவம்ண்ணா.” என்றாள்.
“ப்ச்.. விடு இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்றவன்.. “இப்படி உக்காரு, உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்.” என கட்டிலில் அமர்ந்தான்.
“என்னண்ணா?” என அமர்ந்தாள் அருகே.
“சுபாஷை உனக்கு பிடிச்சிருக்குத்தான?” என்றான்.
“என்னண்ணா இது? நிச்சயமே முடிஞ்சிடுச்சி, இப்போ போய் கேட்டுக்கிட்டு.” என முகம் சிவந்தாள் இந்துபிருந்தா.
“ம்..” என தானும் சிரித்தவன்.. “அப்புறம் ஏன் சீக்கிரம் கல்யாணம் வேணாம்னு சொன்னியாம்?” என்றான்.
அச்சோ.. நான் சுபாஷோட பேசுறது அண்ணாக்கு தெரிஞ்சிடுச்சா என.. “அ…ண்ணா..” என அதிர, “என்ன உன் ஃப்ரண்ட் மாதிரி பேசுற?” என சிரித்தான்.
ஷப்பா.. சுபாஷோட பேசுறதை அண்ணா தப்பா நினைக்கல என நிம்மதியானவள்.. “இல்ல நேத்துதான் இதுப்பத்தி சுபாஷ் பேசினார். அதுக்குள்ள உனக்கெப்படி தெரிஞ்சது?” என்றாள் சங்கடத்தோடு.
“சுபாஷ் போன் செய்தான், கல்யாணத்தை அடுத்த மாசமே வச்சா பரவால்லனு ரொம்ப ரிக்வஸ்ட்டா கேட்டான், அவங்க தாத்தாக்கு ரொம்ப முடியாம இருக்காம், அவருக்கு எதாவது ஆகிடுச்சினா அவங்க வழக்கப்படி ஒரு வருசத்துக்கு கல்யாணம் தள்ளி வைக்குறமாதிரி ஆகிடுமாம்.
இதெல்லாத்தையும் விட சுபாஷ் தாத்தாக்கு சுபாஷ் கல்யாணத்தை பார்க்காம உயிரை விட்டுடுவேனோனு புலம்பறாராம். அதனாலதான் கல்யாணத்தை சீக்கிரம் வைக்கலாம்னு கேட்குறாங்க. நீ ஏன் வேணாம்னு சொன்ன? சுபாஷ் ரொம்ப ஃபீல் பண்ணினான்.” என்றான்.
“இவ்வளோ விசயம் இருக்கிறது எனக்கு தெரியாதுண்ணா, ஆனாலும்..”
“என்ன ஆனாலும்? விசயத்தை சொல்றதுக்கு முன்னாடியே இவ்வளோ சீக்கிரம் கல்யாணம்லாம் என்னால கண்டிப்பா பண்ண முடியாதுனு சொல்லிட்டு கட் பண்ணிட்டியாம். இதுதான் மரியாதையா? ஒரு விசயத்தை பேசினா அதை முழுசா கேட்கனும்.” என கண்டித்து.. “அட்லீஸ்ட் வீட்டுல கேட்டுட்டு சொல்றேனாவது சொல்லியிருக்கலாமில்ல?” என்றான்.
“நிச்சயம் செய்யும்போது ஆறு மாசம் கழிச்சிதான கல்யாணம்னு சொன்னாங்க? இப்போ மூனு மாசம்தான முடிஞ்சிருக்கு.? எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். ஒரு வருசம் கழிச்சே பண்ணிக்கிறேன்.” என்றாள்.
“உனக்கு சுபாஷை பிடிக்கும்தானே?” என்றான் மீண்டும்.
“அண்ணா என்ன இது? பிடிக்காமலா நிச்சயம் செய்துக்கிட்டேன்? அதுக்காக இப்படி சட்டுனு கல்யாணம் செய்துக்க சொன்னா எப்படி? மனசளவுல நான் தயாராக வேணாமா?” என்றாள் தவிப்பாக.
“மூனு மாசமா சுபாஷை உன்னோட வருங்கால கணவனாதான நினைச்சிருப்ப? இன்னும் என்ன மனசளவுல தயாயராகனும்?
உன் கல்யாணம் சுபாஷோடனு முடிவாகிடுச்சி. அவங்க சுட்டிவேஷன் சொல்லி கேட்குறாங்க, பேரன் கல்யாணத்தை பார்த்துட்டு சாகனும்னு அவங்க தாத்தா வாய்விட்டு கேட்டதுக்கப்புறமும் மறுக்கிறது தப்பில்லையா?
அதோட மூனு மாசத்துல கல்யாணம்னு ஃபிக்ஸ் பண்ணிட்டு, அடுத்த மாசமே வைக்கிறது உனக்கு கஷ்டமாயிருக்குங்கற.. ஆனா மூனு மாசத்துல கல்யாணம்னு சந்தோசமா இருந்த சுபாசுக்கு அதை ஒரு வருசத்துக்கு தள்ளி வைக்கிறது ஏமாற்றமாகாதா? மனசுக்கு பிடிச்சவனை ஏமாத்துறது சரியா?” என்றான்.
“அண்ணா..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் கலங்க.. “ஹே.. பிருந்தா.. எதுக்கு அழற?” என்றான்.
இவனின் பொய் மிரட்டலில் பயந்தவள்.. “உன் கல்யாணம் முடிஞ்சபின்னதான நான் பண்ணிக்குவேன்னு சொன்னேன்? இப்போ என்னை பண்ணிக்க சொல்றிங்க.. நான் மாட்டேன்.” என்றாள் சிறுபிள்ளைத்தனமாக.
“ஹே.. இதான் உன் பிரச்சனையா.? லூசு.. கண்ணைத்துட.” என அதட்டினான் சிரிப்போடு.
“அண்ணா..” என வான்முகிலனின் தோள்சாய.. தங்கையை வருடியவன்.. “பிருந்தாம்மா.. அந்த மஹிமா என்னை வேணாம்னு சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லடா.” என்றான் தன்மையாக.
“இல்ல.. நீ எங்களுக்காக பொய் சொல்ற.. உனக்கு அவளை எவ்வளோ பிடிச்சதுனு எனக்கு தெரியும்.” என்றாள் கேவலோடு.
“ஹா..ஹா.. பார்டா. இந்தளவுக்கு என்னை வாட்ச் பண்றியா?” என்றவனுக்கு தன் திருமணம் நின்றதால்தான் இவள் திருமணத்திற்கு மறுக்கிறாள் எனப்புரிய.. “ம்.. அவளை ரொம்ப பிடிச்சுதான் பொண்ணு கேட்க சொன்னேன், ஆனா எங்க நிச்சயத்துக்கப்புறம் அவ பேசினதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல, அப்பவே இவ எனக்கு சரிவருவாளானு யோசிச்சேன்.
அவ என்னை வேணாம்னதும் பெருசா வருத்தம் இல்ல. சொல்லப்போனா கல்யாணத்துக்கு முன்னாடியாவது சரியான முடிவெடுத்தாளேனு நிம்மதியாதான் இருந்தது. நினைச்சு பாரு.. கல்யாணமாகிட்டு சும்மா நச நசன்னுட்டிருந்தா வாழ்க்கை நரகமாகிடாது? அப்படி வாழ்க்கை எனக்கு தேவையா?” என்றான்.
“அப்படி வாழ்க்கை தேவையில்லதான், ஆனா என் கல்யாணத்துக்கு முன்னாடி உன் கல்யாணம் முடிஞ்சாகனும். சுபாஷ் பாவம்னு நினைச்சினா உனக்கு சீக்கிரம் பொண்ணு பாரு.”
“பொண்ணு என்ன சந்தைலையா விக்குது? ஒரு மாசத்துல பார்க்க சொல்ற? லூசு.. ஒரு மாசத்துல்லாம் பார்க்க முடியாது, ஆனா கூடிய சீக்கிரம் பார்த்துடுவேன்.
என்னை நினைச்சிலாம் கல்யாணத்தை தள்ளி போட வேணாம்ங்க பெரிய மனுஷி. தயவு செய்து சுபாஷ் சொல்ற டேட்ல கல்யாணத்தை பண்ணி, அவங்க தாத்தாகிட்ட ஆசிர்வாதம் வாங்கு. நல்ல மனசோட வாழ்த்துற பெரியவங்களோட வாழ்த்து உன் வாழ்வை சந்தோசமாக்கும்.” என்றான்.
தன் அண்ணன் மனதில் மஹிமா இல்லை என்பதிலும், கூடிய விரைவில் திருமணம் செய்வேன் என்றதிலும் சந்தோசமடைந்தவள்.. “இரு அம்மாகிட்ட உனக்கு பொண்ணு பார்க்க சொல்றேன்.” என எழுந்தாள்.
“போலாம்.. இரு.” என தன்னருகே அமர்த்தியவன்.. சுபாஷிற்கு அழைத்து.. “உங்க விருப்பப்படி கல்யாணத்தை வச்சுக்கலாம். பிருந்தாம்மா சம்மதிச்சிட்டா.. டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க.” என்று இணைப்பை துண்டித்தான்.
“நானெங்க சம்மதிச்சேன்?” என சிணுங்கியவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன்.. அன்னையிடம் விபரத்தை சொன்னான்.
“ஒரு மாசத்துல கல்யாணம் வைக்கிறது பிரச்சனையில்ல, ஆனா எல்லாரும் உன் கல்யாணம் என்னாச்சுனு கேட்பாங்களே முகிலா?” என வருந்தினார் சுப்புலஷ்மி.
“கல்யாணம் நின்னது பெரிய அவமானம் மாதிரி, இதை ஒரு காரணத்தை வச்சே இன்னும் எவ்வளோ நாளைக்கு ஓட்டப்போற? கல்யாணம் நின்னதை விட, அதையே சொல்லி சொல்லி புலம்புறதும், என்னை கேட்காம தேன்நிலாவை பொண்ணு கேட்டதும்னு இதெல்லாம்தான் எனக்கு அசிங்கமா இருக்கு.” என்றான் கோபமாக.
சுப்புலஷ்மி கண்கலங்க.. சற்று நேர அமைதிக்குப் பிறகு, “பிருந்தாம்மா, ஒரு டீ போடு.” என்றவன், அன்னையிடம்.. “மஹிமாவோட எனக்கும் கல்யாணம் ஆகியிருந்தாலும் இரண்டு பேரோட குணத்துக்கும் சரிபட்டு வந்திருக்காதும்மா, கல்யாணம் ஆன பின்ன பிரியற மாதிரியான சூழ்நிலை கூட வந்திருக்கலாம்.” என்க.. அதிர்வை காட்டினார் சுப்புலஷ்மி.
முகிலன் சொல்வதும் உண்மைதான்.. நிச்சயித்த நாளிலிருந்து அவளை மனைவியாக நினைத்திருப்பான், கை கூடும் நேரம் கிடைக்காமல் போனதில் எத்தனை ஏமார்ந்திருப்பான்? இதில் நான்வேறு அவளைப்பற்றியே பேசுறேன். மறந்தும் இனி அவள் பேச்சை எடுக்கக்கூடாது, அதோடு பிருந்தா திருமணத்திற்குள்ளாக முகிலனுக்கு பெண்பார்த்திட வேண்டுமென நினைத்தார்.
இந்துபிருந்தா டீ கொடுக்க, வாங்கியவன்.. “போய் ரெடியாகு, பட்டு சாரி வாங்க போலாம். முதல்ல அதை எடுத்துட்டா, தைக்க கொடுத்துடலாம், அதுக்கேத்தமாதிரி நகையும் வாங்கிடலாம்.” என்றான்.
“முகிலா.. ரேவா இல்லாம நாம எப்படி போறது? அவ கோவிப்பாடா.” என்றார்.
“ம்மா.. ரேவாக்கு கல்யாணம் ஆகி ஆறு வயசுல மகன் இருக்கான், முதல்ல அதை மனசுல வை. நேத்துதான் விட்டுட்டு வந்தேன். இப்போ திரும்பவும் வர சொல்வியா? அதெல்லாம் வேணாம். நாம எடுக்கலாம். ரேவாக்கா கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்ன வந்தா போதும்.” என்றான்.