“இல்லடா, அப்படிலாம் பெரியவளை விட்டுட்டு எதுவும் வாங்கக்கூடாது. அவ கல்யாணமாகி போகும்போது நமக்கு இப்படி வசதியில்ல, பிருந்தா கல்யாணத்துலயாவது வேணுங்கிறதை வாங்கி கொடுத்து அவளை சந்தோசப்படுத்தனும்.”
“கல்யாணத்துல செய்யலன்னாலும் அதுக்கப்புறம் செஞ்சிருக்கோம்தானம்மா?” என்றவன்.. “ஆனாலும் பிருந்தாம்மாக்கு என்ன வாங்குறோமோ அதை ரேவாக்காக்கும் வாங்கலாம். அதுக்கு ரேவாக்கா இங்க வரனும்னு இல்லையே. நாமளே வாங்கலாம்.” என்றான்.
நிலா என்ன சொல்லியிருப்பாள் என அறிவதற்காக ரேவதி சுப்புலஷ்மிக்கு அழைக்க.. “ரேவாதான் பண்றா.” என அழைப்பை ஏற்றவர் நலம் விசாரித்து.. பிருந்தா திருமணம் பற்றியும் சொல்ல, “நான் இல்லாமலே கல்யாணம் பேசி முடிச்சிட்டிங்களா?” என வருந்த..
“அப்படியில்ல ரேவா, இப்போ அரை மணி நேரத்துக்கு முன்னதான் சம்மந்தி வீட்டுலயிருந்து பேசினாங்களாம்.
இப்போதான் முகிலன் என்கிட்ட சொல்லிட்டிருந்தான். உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ பண்ணிட்ட.” என்றார்.
“இங்க கொடு.” என வாங்கியவன்.. “இப்போ எதுக்கு வரன்ற.?” என்றான்.
“என்ன முகிலா இப்படி கேக்குற? பிருந்தா கல்யாணத்துக்கு பர்ச்சேஸ் பண்ண நான் வேணாவா?” என்றாள் உரிமையாக.
“எனக்கு பொண்ணு கேட்க, என்கிட்ட சொல்லாம போய் கேட்ப.. ஒரு பட்டுசாரி வாங்க நீ இல்லாம நான் வாங்ககூடாதா?” என்றான் கோபமாக.
ரேவதி ஸ்தம்பித்து அமைதியாகிட, “நகையெல்லாம் நிச்சயத்தப்பவே வாங்கியாச்சு, இப்போ பட்டுசாரி மட்டும் எடுத்துட்டு அதுக்கேத்த நகை மட்டும் வாங்க போறோம், இதுக்கு நீ வரனும்னு இல்ல.” என்றான்.
“முகிலா..” என ரேவதி குரல் கமற..
“ப்ச்.. இப்போ எதுக்கு அழற? உனக்குனு குடும்பம் இருக்கு, நேத்துதான் விட்டுட்டு வந்தேன், இன்னைக்கே வரேன்னா? அது தப்பில்லையா?
அதோட எப்பவும்போல இப்பவும் நீ பாட்டுக்கு கிளம்பி வரக்கூடாது, பிருந்தாம்மா கல்யாண விசயம்ன்றதால முறைப்படி நாங்க வந்து சொன்னதுக்கு அப்புறம்தான் வரனும். அதுதான் எங்களுக்கும் மரியாதை. மாமாக்கும் மரியாதை.” என்றான்.
இதென்ன இப்படிலாம் ஆரம்பிக்கிறான் என கடுப்பானவள்.. “ம்.. அவருக்கு மரியாதை ஒன்னுதான் குறைச்சல்.” என முனுமுனுக்க.. “ப்ச் ரேவா.. உன்னை பார்த்துதான் உன் பையன் வளருவான்னு நேத்துதான் அவ்வளோ சொன்னேன்.. இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா?” என அதட்டி.. “நடந்ததையே நினைச்சிட்டிருந்தா சாகற வரைக்கும் நிம்மதி இருக்காது.” என்றான் சலிப்பாக.
“அப்போ முதல்ல என்னை வந்து அழைச்சிட்டு போ.. அப்புறம் பட்டு சாரி எடுத்துக்கலாம்.” என்றாள்.
“ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம்னுதான் முடிவாகியிருக்கு, இன்னும் டேட் ஃபிக்ஸ் பண்ணல, தேதியே முடிவு பண்ணாத கல்யாணத்துக்கு என்னனு வந்து கூப்பிடறது?
தேதி முடிவான பின்ன பத்திரிக்கையோட வரேன், கல்யாணத்துக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தினா போதும். நீ மட்டும் வந்தா போதாது, ஒவ்வொரு விசேஷத்துக்கும் குடும்பத்தோடதான் வரனும். எனக்கு கடைக்கு போக நேரமாகுது, நான் வைக்கிறேன்.” என்க..
இப்படியெல்லாம் வெட்டிவிட்டாற்போல் முகிலன் ஒருநாளும் பேசியதில்லை, நேத்து நிலாவை போய் பார்த்து வந்தபின்னதான் இப்படி பேசுறான், என்ன சொல்லி தொலைச்சானு தெரியலையே என.. “இரு முகிலா.” என அவசரமாய் சொன்னவள்.. “நேத்து நிலா உன்னையும் மரியாதையில்லாம பேசினாளா? அதான் யார்கிட்டயும் சொல்லாதனு பிருந்தாகிட்ட சொல்லி வச்சியா?” என்றாள்.
“நிலா என்ன சொன்னா? என்ன சொன்னானு எதுக்கு இப்படி துளைச்செடுக்கிற? அவ என்ன சொல்லியிருப்பானு உனக்கு தெரியாதா?” என பல்லை நெறித்தவன்.. “ஒரு இளம் விதவையோட கல்யாணத்தை, அதுவும் இருபது வருசத்துக்கு முன்ன முறைப்படி நடந்த கல்யாணத்தை விமர்சனம் பண்ற அளவுக்கு உன் எண்ணம் தரம் கெட்டு போய்டுச்சினு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது,
அவளைப் பத்தியோ, அவங்கப்பாம்மா பத்தியோ பேச உனக்கு என்ன உரிமையிருக்கு?” என அதீத கோபத்தோடு கேட்டு, “நிலாவை தனியா விட்டுருக்காங்க, தாத்தா பாட்டிதான் வளர்த்தாங்கனு சொல்லியிருக்கியே?
உன் மகனும் அவங்க தாத்தா பாட்டிகிட்டதான வளருறான்.? அப்போ நிலாவைப்பத்தி பேச உனக்கென்ன தகுதியிருக்கு?” என கத்த.. “முகிலா, நானும் அவளும் ஒன்னாடா? அவங்கம்மா..” என ஆரம்பிக்க..
“நிறுத்து ரேவா..” என கர்ஜித்தவன்.. “இனி இதைப்பத்தி என்கிட்டனு இல்ல, வேற யார்க்கிட்டயும்.. ஏன் அம்மாகிட்ட கூட நீ பேசக்கூடாது. நிலாவைப் பத்தி எங்கையாவது மூச் விட்டனு தெரிஞ்சது.. என் உறவை இழந்துடுவ..” என உறுதியான குரலில் கண்டித்து இணைப்பை துண்டித்தான் கோபமாக.
“முகிலா..” என சுப்புலஷ்மி அதிர்ந்து விழிக்க.. “நிலாவோட அம்மா சூழ்நிலைப்பத்தி ரேவாக்கு தெரியாம இருக்கலாம். உனக்கு தெரியும்தான? எல்லாம் தெரிஞ்சிருந்தும் ரேவாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்திட்டிருந்தியாம்மா? எப்படி மனசு வந்தது? இதுல அவ உங்களை வீட்டை விட்டு வெளில போங்கனு சொன்னானு வேற கம்ப்ளைன் பண்றிங்க.” என முறைக்க..
“ரேவாவை பேசவிடாம தடுத்தேன் முகிலா, படபடனு வார்த்தையை விட்டுட்டா.” என வருந்த.. “என்னனு தடுத்த?” என முறைக்க.. என்ன சொல்லி தடுத்தோம் என யோசிக்க, வா ரேவா போலாம் என்றோமே தவிர, இப்படி பேசாதே என சொல்லவில்லை என்பது உரைக்க, சுப்புலஷ்மியின் முகம் குன்றியது.
புதுப் பெண்ணை சந்தோசமாய் வைத்துக்கொள்ள நினைத்து தன்னை சமன் செய்தவன்.. “ம்மா கிளம்பு, கடைக்கு போலாம்.” என்றான் தன்மையாக.
பெரிய மகள் கோபிப்பாளே என சுப்புலஷ்மி தயங்க.. “ம்மா.. ரேவாக்கா என்ன என் எதிரியா? ரேவாவை கூப்பிடாததுக்கு வேற காரணமும் இருக்கு, ரேவாக்கா மாமியார் நடந்துக்கிட்டதும், அந்த நேரம் மாமா அமைதியா இருந்ததும் தப்புதான், ஆனா அதையே நினைச்சிட்டு அங்க யாரோடவும் இணங்காம இருக்கு.
மாமாமேல பாசமிருந்தா இப்படி மாசத்துல இருபது நாள் இங்க வந்து இருக்குமானு யோசி. இப்படியே போனா நாம கொடுக்குற உரிமையும், பாசமும் ரேவாக்காவோட வாழ்க்கையை இல்லாம ஆக்கிடும்.” என்றான்.
இதெல்லாமும் சுப்புலஷ்மி அறிந்ததுதான், உன் மாமியாரும், மாப்பிள்ளையும் முன்ன மாதிரி இல்ல, பிரவீன் பிறந்ததுக்கு அப்புறம் மொத்தமா மாறிட்டாங்க, நீதான் அவங்களை தள்ளி வைக்கிற, இது நல்லதுக்கு இல்லை என எத்தனையோ முறை எடுத்துரைத்தாகிற்று..
இங்க வந்தாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, இங்கையும் வர வேணாம்ன்றியா? என அழும் மகளை எப்படி வர வேண்டாம் என்பது? என வருந்தினார்.
“நீயும் தன்மையா எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்திட்ட.. ரேவாக்கா அவங்க வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிற மாதிரி தெரியல, ரேவா வாழ்க்கை நல்லாயிருக்கனும்னா இனி நான் சொல்ற மாதிரி கேளு.” என கண்டித்து..
“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணமாகி போற பிருந்தாவையும் கொஞ்சம் நினைம்மா, நீ இப்படி இருந்தா பிருந்தா சந்தோசமா இருக்குமா?
கல்யாணப் பொண்ணுக்கு சாரி எடுக்க போறோம்.. சந்தோசத்தோட கிளம்பு..” என்றான் இன்முகத்தோடு.
நிலாவை பேசியதால் பெரிய மகளை வெறுத்து விட்டானோ என பயந்த சுப்புலஷ்மிக்கு, அவளின் வாழ்க்கையை சிறக்க செய்ய நினைக்கிறான் என்பது பெரும் நிம்மதியை உண்டாக்க, இன்முகத்தோடு மகன், மகளுடன் சென்றார்.
** ** ** ** **
ஓய்வு நேரமென்றால் காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது வான்முகிலனின் வழக்கம். ஆனால் வேறு பாதையில் ஒரு மணி நேரம் வரை நடப்பவன், வீட்டிற்கு வரும்போதுதான் தேன்நிலா வரும் வழியில் வருவான். அதுவும் தேன்நிலா வருவதற்கு முன்பாகவே வந்திடுவான்.
இருவரும் என்றாவது ஓர்நாள்தான் சந்திப்பார்கள். தேவையின்றி பேசிக்கொண்டதும் இல்லை. ஓரிரு முறை தேன்நிலாவிற்கு உதவி தேவைப்படும் சூழலில் பேசியிருக்கிறான்.. அவ்வளவே.
இன்று வழக்கத்திற்கு மாறாக தேன்நிலா வரும் பாதையில்தான் நடந்துகொண்டிருந்தான். அவளும் வழக்கமாய் வரும் நேரத்திற்கு முன்பாகவே வர, ஆச்சர்யமானவன்.. நடையின் வேகத்தை குறைத்தான்.
தேன்நிலா இவனை கவனிக்காமல் வந்துகொண்டிருக்க, வான்முகிலனை கடக்கும் நேரம், “தேன்நிலா நில்லு.” என சற்று உரக்க குரல் கொடுத்தான்.
இது அவன் குரலாச்சே என வண்டியை நிறுத்தி தேன்நிலா திரும்பிப் பார்க்க.. நில்லு என்பதாய் செய்கை செய்து நடையின் வேகத்தை கூட்டினான்.
பிருந்தாகிட்ட எதுக்கு அப்படி சொன்னனு சண்டை போட வந்திருக்கானோ என யோசிக்க, அதற்குள் அவளிடம் வந்திருந்தான்.
“எ..எ..ன்ன? எதுக்கு நிக்க சொ.. சொன்னிங்க?” என திணறினாள்.
“என் அக்கா தெரியாம பேசிடுச்சினு சொல்ல மாட்டேன், ஆனா எப்படியாவது குறிச்ச தேதியில கல்யாணத்தை முடிச்சிடனும்னு நினைச்சி பேசிடுச்சி. தப்புதான், பெரிய தப்புதான்.
ஓ.. இதுதான் விசயமா என நினைத்தவள்.. “நீங்க கேட்டு, அவங்க திரும்பவும் என்கிட்டயே பேசிட்டா கூட பரவாயில்ல, எங்கம்மாப்பாகிட்ட எதாவது சொல்லிட்டா என்ன பண்றதுனுதான் பிருந்தாகிட்ட அப்படி சொல்ல சொன்னேன்.
உங்கம்மா பொண்ணு கேட்டது மட்டும்தான் எங்கம்மாப்பாகிட்ட சொல்லியிருக்கேன், அதுக்கே ரொம்ப வேதனைபட்டாங்க, இதுல அவங்களோட கல்யாணத்தைப் பத்திலாம் உங்கக்கா பேசினது தெரிய வந்தா இன்னும் வேதனைப்படுவாங்கனுதான் பிருந்தாகிட்ட அப்படி சொன்னேன்.” என்றாள் வருத்தத்தோடு.
“அதுக்காக தப்பு செய்தவகளை கேட்கலன்னா தப்பை எப்படி சரி செய்யிறது?” என்க.. அப்போ கேட்டுட்டியா என்பதாய் தேன்நிலா முகம் பதட்டத்திற்குள்ளாக.. “பயப்படாத, நீ நினைக்கிற மாதிரிலாம் நடக்காது.” என்றான்.
தேன்நிலா முகம் நிம்மதியை காட்ட, “வேற எதாவது சொல்லனும்னாலும் என்கிட்டயே சொல்லு, இனி பிருந்தாகிட்ட சொல்லி அவ கல்யாண மூடை ஸ்பாயில் பண்ணாத.” என்றான்.
இன்னும் மூன்று மாதத்தில் பிருந்தாவிற்கு திருமணம் என தேன்நிலா அறிந்ததுதான் ஆதலால், சரி என தலையசைத்தவள்.. “காலைலயே உங்ககிட்டதான் சொல்ல நினைச்சேன், நீங்க வரல..” என்றவள்.. “நான் கிளம்பறேன்.” என்றாள்.
தன் பாக்கட்டிலிருந்து கார்டை எடுத்து நீட்டியவன்.. “இதுல என் நம்பர் இருக்கு, எப்போ தேவைன்னாலும் கால் பண்ணு.” என்றான்.
“வ்.. வ்வே.. வே..ணாம்.. நீங்க என்னை பாதுகாக்குறதாலதான அப்படி பேசினாங்க? என்னை நான் பார்த்துக்கிறேன், அன்னைக்கு போல எவனாவது என்கிட்ட வம்பு செய்யிறதை பார்த்தா கூட எனக்கு ஹெல்ப் பண்ண வராதிங்க..
என் விதி எப்படியோ அப்படி நடக்கட்டும்.” என பொலபொலவென கண்ணீர் விடுத்தபடி சொன்னவள், வான்முகிலன் பதில் பேசும் முன் கிளம்பியிருந்தாள்.
தேன்நிலாவின் இயலாமை கண்ணீரில் தெரிந்தாலும், அவள் கிளப்பிய ஸ்கூட்டியின் வேகம் அவளின் கோபத்தை காட்ட, தன் தாடியை தேய்த்தவாறு, பாதையிலிருந்து தேன்நிலா மறையும் வரை மெச்சுதலாய் பார்த்திருந்தான் வான்முகிலன்.