வான்முகிலன் வீட்டிற்கு வர.. “சம்மந்தி வீட்டுலயிருந்து போன் செய்தாங்க முகிலா, வர பத்தாம் தேதியும், பதினேழாம் தேதியும் நாள் நல்லாயிருக்காம், இந்த இரண்டு தேதியில என்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாமானு கேட்டாங்க, நம்ம பிருந்தாவுக்கு பதினேழாம் தேதி ஒத்து வராது..
பத்தாம் தேதி கல்யாணத்தை வச்சுக்கலாம்னா இன்னும் பனெண்டு நாள்தான் இருக்கு. உனக்கு ஏதும் வெளியூர் போற வேலை இருக்கானு தெரிஞ்சிகிட்டு சொல்லாம்னு, என் மகன் வந்ததும் கலந்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்.” என்றார் சுப்புலஷ்மி.
“ம்.. எனக்கும் கால் பண்ணினாங்கம்மா, பிருந்தா கல்யாணத்தை விட பெரிய வேலை என்னயிருக்கு? அப்படியேன்னாலும் தள்ளி வச்சுக்குவேன், பிருந்தாக்கு ஓ.கே ன்னா அவங்க சொன்னமாதிரி வர பத்தாம் தேதியே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு போன் பண்ணி சொல்லிடு.” என்றான்.
“அதுக்குள்ள எல்லாத்தையும் ஏற்பாடு செய்திட முடியுமா?”
“மண்டபம் பார்க்குறது, சமையல் ஆள் பார்க்குறதெல்லாம் அவங்களே பார்த்துக்கறாங்களாம். பத்திரிக்கை அடிக்கிறது மட்டும் கொஞ்சம் சீக்கிரம் அடிச்சு தரமாதிரி ஏற்பாடு செய்ய முடியுமானு கேட்டாங்க, அது ஒன்னும் பிரச்சனையில்ல, நான் வீட்டுக்கு போய் கால் பண்றேனு சொல்லியிருக்கேன்.
“பத்திரிக்கை இரண்டு நாள்ல கொடுத்துடுவாங்களா முகிலா? எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்கவே ஒரு வாரம் தேவைப்படுமே?” என்றார் சுப்புலஷ்மி.
“இதெல்லாம் ஒரு விசயமாம்மா? நாளைக்கு காலைல பத்திரிக்கை அடிக்க கொடுக்கப்போறேன், நாலஞ்சு பத்திரிக்கை மாடலோட சுபாஷ் வரன்னுருக்கார், நீ போய் மருமகனை எப்படி வரவேற்குறதுனு யோசி.
ஏன்னா.. கல்யாணத்துக்கு அப்புறம் மருமகன் நம்ம வீட்டுக்கு வரது பெரிய விசயமில்ல, கல்யாணத்துக்கு முன்னாடி வரதுதான பெரிய விசயம்? பத்திரிக்கை மாடல் கொடுத்த மாதிரியும் இருக்கும்.. அப்படியே பிருந்தாவை பார்த்த மாதிரியும் இருக்கும்.” என தங்கையை பார்த்தவாறு சிரிப்போடு சொன்னான்.
“போடா.. சுபாஷ் தம்பி அப்படிபட்டவர் கிடையாது, பத்திரிக்கை டிசைன் கொடுக்கத்தான் வருவாரு.” என சுப்புலஷ்மி மருமகனிற்காக பேசி உள்ளே போக, “ண்ணா..” என வெக்கப்பட்டாலும், அன்னையைப் போல உள்ளே போகாமல் வான்முகிலனிடம் வந்தாள் இந்துபிருந்தா.
எதோ காரியத்தோடுதான் வருகிறாள் என தங்கையை அறிந்தவனாக.. “ம்.. வாங்க மேடம்.” என்றான் அர்த்தப் பார்வையோடு.
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும். ரூம்க்கு போலாம் வாண்ணா.” என்றாள் சன்னக்குரலில்.
“ப்ச்.. ரேவாக்காவை அழைக்கனும். அதானா?” என்றான்.
“ரேவாக்கா இல்லாம நம்ம வீட்டுல சின்ன விஷேசம் கூட நடக்காதுனு எனக்கு தெரியாதா? அது இல்லண்ணா, இது வேற விசயம். நீ வாயேன்.” என தனதறைக்கு அழைத்துப்போனாள்.
“ஹே.. அம்மாக்கு தெரியாம அப்படியென்ன சீக்ரட்?” என வியந்தபடி தங்கை பின்னே போனவனை கட்டிலில் அமர்த்தி தானும் அமர்ந்து.. “என் நிச்சயத்தப்போ நான் எப்படியிருந்தேன்?” என்றாள்.
எதையோ சுற்றி வளைக்கிறாள் என அறிந்து.. “இதை கேட்கத்தான் உள்ள கூட்டிட்டு வந்தியா?” என முறைத்தான்.
“ப்ச்.. அதெல்லாம் இல்ல..” என்க.. ஆமாம்.. சுபாஷ் தன்னிடம் சந்தோசமாகத்தானே பேசினான்.? அப்போ வேறென்ன என யோசித்தவன், நிச்சயத்தப்போ எப்படியிருந்தேன் என பிருந்தா கேட்டதை யோசித்தான். ஆனால் ஒன்றும் பிடிபடத்தான் இல்லை.
“என்னனு சொன்னாத்தான தெரியும் பிருந்தாம்மா?” என்றான் கனிவாக.
“நேரா விசயத்துக்கு வரேன். ஆனா எனக்கு நீ செய்வியா?” என வான்முகிலன் கையைப் பிடித்தாள்.
“என்னால செய்ய முடியாததை கேட்கமாட்டேனு எனக்கு தெரியும், என்ன மண்டைக்குள்ள உழண்டுட்டிருக்குனு சொல்லு.” என்றான்.
“மஹிமாவோட உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போனப்போ, நான் வந்தா உங்க வீட்டுல மத்தவங்களுக்கு பிடிக்குமோ என்னவோ? பத்திரிக்கையை வாங்கிக்கிறேன், ஆனா கல்யாணத்துக்கு வரமாட்டேன், என்னை கோவிக்க கூடாதுனு சொன்னா.
ஏன் வரமாட்ட? வந்துதான் ஆகனும்னு சொன்னேன்.
உன் அண்ணன் கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு, நான் வரனும்னு இருந்திருந்தா உன் வீட்டுல யாராவது பத்திரிக்கை வச்சிருப்பாங்கதான?
எதோ காரணத்துக்காக நான் வரவேணாம்னு நினைக்கிறாங்க போல, அதுல எனக்கு வருத்தமும் இல்ல, ஏன்? உன் அண்ணன் கல்யாணத்துக்கு வரலைனா என்னோட பேசமாட்டியானு சிரிச்சிட்டே கேட்டா.
உன் கல்யாணத்துக்கு அவளை கூப்பிடுவோம்னு எதிர்பார்த்திருக்கானு எனக்கு அப்போதான் தெரிஞ்சது, ரொம்ப கஷ்டமாகிடுச்சி.
அவளை எப்படி சமாதானம் செய்யலாம்னு யோசிச்சி, பெண்ணழைப்புக்கு கூப்பிட்டுட்டு இருந்தப்போதான், நீ வந்து யாரையும் கல்யாணத்துக்கு அழைக்க வேணாம்னு மொபைலை வாங்கி கட் பண்ணவும் அவ முகமே வாடிப்போய்டுச்சிண்ணா.
உன் கல்யாணத்துக்கு நிலா வரது உனக்கும் பிடிக்கலனு நினைச்சிட்டா போல, கல்யாணம் நின்னுபோனதாலதான் என் அண்ணன் அப்படி சொன்னாங்கனு அடுத்தநாள் போய் சமாதானம் செய்யலாம்னு நினைச்சிட்டிருந்தேன், அதுக்குள்ள அம்மாவும் ரேவாக்காவும் பிரச்சனை பண்ணிட்டாங்க.
அதுலயிருந்து என்னோட நிலா பேசறதேயில்ல, வழியில பார்த்தாலும் குனிஞ்சிட்டே போய்டுறா. நாங்க இரண்டு பேரும் சின்ன வயசுலயிருந்து ஃப்ரண்ட்ஸ்..
என் நிச்சயத்தப்போ கூட அவதான் எனக்கு மேக்கப் போட்டுவிட்டா, கல்யாணத்துக்கும் நீயே போட்டு விட்டுடுனு அப்போவே சொன்னேன்.
கல்யாணத்துக்கெல்லாம் உன் அண்ணன் பெரிய பியூட்டிசியனை புக் பண்ணுவார்னு சொன்னா. அதெல்லாம் இல்ல, நீதான் பண்ணனும்னு சொன்னேன்.
நான் பண்ணனும்னா எப்படி? இப்போ மாதிரியே கல்யாணத்தன்னைக்கும் என் வீட்டுல வந்து மேக்கப் போட்டுப்பியானு சிரிச்சிட்டே கேட்டா.
கல்யாணப்பொண்ணு எப்படி உன் வீட்டுக்கு வந்து மேக்கப் போட்டுக்க முடியும்? நீதான் மண்டபத்துக்கு வரனும்னு சொன்னேன்.
மண்டபத்துக்கு வந்து மேக்கப் போட்டு விடறதுக்கு நானென்ன பியூட்டிசியனா? அந்தளவுக்கு நான் ஒர்த்தும் இல்ல, உன் வீட்டுலயும் அதுக்கு அனுமதிக்கமாட்டாங்கனு சொன்னா.
என் வீட்டுல அனுமதிக்காமத்தான் இப்போ உன் வீட்டுல வந்து மேக்கப் போட்டுக்கிறேனா? அதெல்லாம் அனுமதிப்பாங்க, நான் வந்து பத்திரிக்கை வைப்பேன், நீ கல்யாணத்துக்கு வந்தே ஆகனும்னு சொன்னேன்..
என் பிருந்தா கல்யாணத்துக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா என் வரவு உன் குடும்பத்து ஆள்களுக்கு பிடிக்காதுனு சொன்னா..
உன்னை பிடிக்கலனா என் அம்மா உன்கிட்ட பேசுவாங்களா? என்னை இங்க வர அனுமதிப்பாங்களா? நீயா எதாவது கற்பனை பண்ணிக்காத, உன்னை பிடிக்காதுனெல்லாம் இல்ல. உனக்கு பத்திரிக்கை வைப்பேன். நீ கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும். நீ இல்லாம என் கல்யாணம் நடக்காதுனு சொன்னேன்.
நான் கல்யாணத்துக்கு வரனும்னா, என்னை கல்யாணத்துக்கு அழைக்கவானு உன் அம்மா அண்ணாகிட்ட நீ பர்மிஷன் கேட்கனும், அவங்க சம்மதிச்சா பத்திரிக்கை வைக்கனும்னு கூட இல்ல, என் பிருந்தா கல்யாணத்துக்கு பத்திரிக்கை இல்லாமலே வருவேன்னு பாசத்தோட சொன்னா.
என் நிலாவை சும்மால்லாம் கூப்பிடமாட்டேன், பத்திரிக்கை வச்சி முறைப்படிதான் கூப்பிடுவேன், நீ கல்யாணத்துக்கு வந்தே ஆகனும்னு அன்னைக்கு உன்னை நம்பித்தான் ப்ராமிஸ் பண்ணினேன்.” என்றாள் இந்துபிருந்தா.
பிரச்சனை வருவதற்கு முன்பாகவே பிருந்தாவை தவிர்த்து மொத்த குடும்பமும் இவளை கீழாக பார்ப்பதாய் நினைத்திருக்கிறாள், அதற்கு தகுந்தாற்போல்தான் அவளிற்கும் தன் குடும்பத்திற்குமான உறவும் இருந்திருக்கிறது என்பதை தற்போதுதான் உணர்ந்தான் வான்முகிலன்.
ஆனாலும்.. “முன்ன பிரச்சனை இல்லாத போது நீ ப்ராமிஸ் பண்ணியிருக்க பிருந்தாம்மா, இப்போ அப்படியில்லயில்ல? நம்மளாலதான் அவளுக்கு வேதனைன்னாலும், அம்மா இதுக்கு சம்மதிக்கமாட்டாங்க, நான் பேசி சம்மதிக்க வச்சி, நீ போய் பத்திரிக்கை வச்சாலும் நிலா உன் கல்யாணத்துக்கு வரமாட்டா.” என்றான் உறுதியாக.
“ஏன் அப்படி சொல்ற? பத்திரிக்கை வச்சா நிலா எனக்காக கண்டிப்பா வருவா.” என்றாள் நம்பிக்கையோடு.
“இல்ல பிருந்தாம்மா. ரேவாக்கா பேசினதை அவளால மறக்க முடியல..” என மாலை அவளை சந்தித்ததை விளக்கியவன்.. “என் உதவியையும் வேணாம்னுட்டா, உன்கிட்டயும் பேசறதில்ல, இனி நம்ம குடும்பத்தோட எந்த டச்சும் வச்சுக்கக்கூடாதுனு முடிவெடுத்திருக்கவ, எப்படி கல்யாணத்துக்கு மட்டும் வருவா?”
என்ன சொல்வதென அறியாத இந்துபிருந்தாவிற்கு கண்கலங்கியது.
“பத்திரிக்கை வச்சி அவளை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேணாம் பிருந்தாம்மா, அவ கோபமும் நியாயம்தானே? அவங்கம்மாவை ரேவாக்கா அத்தனை பேச்சு பேசியிருக்கு, அப்போ எப்படி அவளால கல்யாணத்துக்கு வரமுடியும்?” என்றான் தன்மையாக.
அவங்க தாத்தா பாட்டி என்கிட்ட ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க, நிலா வீட்டுக்கு போனா அப்பா நியாபகமே வராது, அவங்க பாட்டி இறந்ததுக்கப்புறம் இது நானே சமைச்சேன் சாப்பிட்டு பாரேன்னு தினம் தினம் எதாவது கொடுப்பா.
காலேஜ்ல கூட நிலா அளவுக்கு நான் யாரோடவும் பழகினதில்லண்ணா, என் கல்யாணத்துல அவ இல்லாம எப்படி?” என கண்கலங்கினாள் இந்துபிருந்தா.
இவர்களின் நட்பின் ஆழம் நினைத்து பெருமையடைந்தவன்.. “இத்தனை பிரச்சனைக்கப்புறம் கல்யாணத்துக்கு கூப்பிடறது அவளை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும்.
உன் மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுனுதான் உன்னோட பேசலனு அன்னைக்கு சொன்னாதான? உங்களுக்குள்ள இவ்வளோ புரிதல் இருக்கும்போது நீ கல்யாணத்துக்கு கூப்பிடலனாலும் உன்னை தேன்நிலா புரிஞ்சிப்பா பிருந்தாம்மா.
அவ உன் கல்யாணத்துக்கு வரலைனா என்ன? கொஞ்ச நாள்ல அவளும் கல்யாணம் செய்துதான ஆகனும்? அவ கல்யாணம் எப்போனு எங்கேனு வாட்ச் பண்ணி உனக்கு சொல்றேன். உன்னை இன்வைட் பண்ணலைனாலும் நீ அவ கல்யாணத்துக்கு போய் சர்ப்ரைஸ் கொடுத்து உன் ஃப்ரண்ட்ஸிப்பை ஸ்ட்ராங்காக்கிடு.” என தேற்றினான் வான்முகிலன்.
“அண்ணனும் தங்கையும் என்னதான் அப்படி ரகசியம் பேசுவாங்களோ?” என முனுமுனுத்தபடி கதவை தட்டினார் சுப்புலஷ்மி.
வான்முகிலன் கதவை திறக்க, “அதான் கல்யாண தேதி முடிவாகிடுச்சில்ல? ரேவாவை போய் கூட்டிட்டு வா முகிலா.” என்றார்.
“ம்.. போலாம், நாளைக்கு சுபாஷ் வந்துட்டு போனதுக்கப்புறம், பத்திரிக்கை அடிக்க கொடுத்துடுவேன், இரண்டு நாள்ல பத்திரிக்கை வந்திடும். அதுக்கப்புறம் நாம இரண்டுபேருமே போய் முறைப்படி அழைச்சிட்டு வரலாம்.” என்றான்.
“முகிலா..” எனும்போதே இடைமறித்தவன்.. “ம்மா.. சும்மா ரேவா, ரேவான்னுட்டிருக்காத, பிருந்தாக்கு சமையல் கத்துகொடு. இன்னும் பத்து நாள்ல கல்யாணம் ஆகி போற பொண்ணை சந்தோசமா வச்சுக்கோ.” என்று பத்திரிக்கை அடிப்பது குறித்து பேச மொபைலை எடுத்தபடி தனதனறைக்குள் போனான்.
“இதென்ன இப்படி சொல்லிட்டு போறான்? இப்போ சந்தோசமா இல்லையா நீ.?” என மகளிடம் சென்றார் சுப்புலஷ்மி.