சிறு வயதிலிருந்து பழகி வரும் பக்கத்து வீட்டோடு எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்வது மிக்கடினமாய் இருந்த நிலையில், பழகியவர்கள் எதிரியாய் மாறிவிட்டால், அந்நிலை தனித்திருக்கும் பெண்ணிற்கு எத்தனை மோசமான உணர்வை கொடுக்குமென கடந்த பதினைந்து நாட்களில்தான் உணர்ந்தாள் தேன்நிலா.
இதில் வான்முகிலனின் உதவியையும் நிராகரித்த பின்னே மனம் பெரும் தள்ளாட்டத்திற்கு உள்ளாக தொய்வாய் சரிந்தமர்ந்தவள் இரண்டு மணிநேரம் வரை அப்படியே அமர்ந்திருந்தாள்.
தேன்நிலாவின் மொபைல் அழைக்க அதில் கவனம் கலைந்து, அழைப்பை ஏற்று.. “அம்மா..” என்றாள் ஏக்கக்குரலில்
“இதோட நாலுமுறை போன் செய்துட்டேன், நீ எடுக்கலன்னதும் அங்க வர கிளம்பிட்டிருக்கேன்.” என்றார் பதட்டமாக.
அச்சோ.. என மொபைலை பார்க்க, மங்களத்திடமிருந்து இருமுறையும், லிங்கேசனிடமிருந்து இருமுறையும், இந்துபிருந்தாவிடமிருந்து எட்டு முறையும் அழைப்பு வந்திருந்தது.
“என்ன பொண்ணு நீ? ரேவாம்மாவோட எதாவது பிரச்சனையோனு நான் பயந்தே போய்ட்டேன்.” என கடிய.. “அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா.. இப்போ கிளம்பி வந்து அலைச்சல் படாத, ஞாயித்துக்கிழமை அப்பாவோட வா.” என்றாள் அக்கறையாக.
“சரிம்மா.” என்றவர், மகளின் நலம் இரவு உணவுபற்றி சற்றுநேரம் பேசியிருந்து இணைப்பை துண்டித்தார்.
எதுக்கு இத்தனை முறை போன் செய்திருக்கா? நான்தான் இனி பேசாதேனு சொல்லிட்டேன்ல? என கோபமாய் நினைத்தாலும், மனம் தவிக்கவும் செய்தது.
இந்துபிருந்தாவை பார்க்கனும் போல் இருக்க, வாட்ஸாப் சென்றாள். அதிலும் இவளிற்காக ஏழு செய்திகள் காத்திருந்தது.
இன்னும் பத்து நாள்ல எனக்கு கல்யாணம், என்றும் இத்தனை சீக்கிரம் எதனால் என்றும், எனக்கு உன்னை பார்க்கனும், செடிக்கு தண்ணி ஊத்தக்கூட வெளில வராம உள்ள என்னதான் பண்ணிட்டிருக்க? ஒரு மணிநேரமா உனக்காக மாடில காத்திருக்கேன், என்னை பார்க்க கூடாதுனே வெளில வரலையா? சரி நான் போறேன். என்று கடைசியாக கண்ணீர் விடும் பொம்மையை அனுப்பியிருந்தாள் இந்துபிருந்தா.
அச்சோ என வெளியே வந்த தேன்நிலா அவளின் வீட்டு மாடியைப் பார்க்க, மொபைலில் யாருடனோ பேசியபடி அங்கு வான்முகிலன்தான் நின்றிருந்தான்.
பத்து நாளில் திருமணமா? என மனம் வலுவிழந்து போனது தேன்நிலாவிற்கு. சிறு வயதிலிருந்து திக்குவாய் என்றும், நடக்கவே கஷ்டப்படுற உன்னை எந்த விளையாட்டுல சேர்க்க? என்றும் சக தோழிகள் கிண்டல் செய்தாலும் இந்துபிருந்தா ஒருநாளும் அப்படி பேசியதில்லை.
மாறாக கேரம், செஸ் போன்ற விளையாட்டை சொல்லி கொடுத்து, நிலாகிட்ட செஸ்ல ஜெயிங்கடி பார்க்கலாம் என தோழிகளுக்கு சவால் விட்டு, தேன்நிலாவை பெருமை படுத்தி, தானும் ஆனந்தம் அடைவாள்.
தாத்தா பாட்டி இறந்தபின்னே இந்துபிருந்தாவின் நட்பே தேன்நிலாவை திடமாக்கியது. இப்படியாக தேன்நிலாவின் மனதில் சிறு வயதிலிருந்து தற்போது வரை இந்துபிருந்தா உயர்ந்தவளே.
இன்னும் பத்து நாளில் அவளின் திருமணம் என்றதும் இந்துபிருந்தாவோடான அனைத்து நிகழ்வுகளும் வலம் வர கண்ணீர் பெருகியது தேன்நிலாவிற்கு.
தலைகுனிந்து முகத்தை மூடியபடி வாசலிலேயே அமர்ந்துவிட்டாள். அரைமணிநேரம் அமர்ந்திருந்தவளுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை வந்தது.
பிருந்தா அனுப்பியிருப்பாளோ என ஆவலாய் உள்ளே போனவளை ஏமாற்றாமல் இந்துபிருந்தாதான் அனுப்பியிருந்தாள். முன்னர் அனுப்பிய செய்தியை தேன்நிலா பார்த்ததன் அடையாளம் தெரியவும் கால் பண்ணுடி ப்ளீஸ் என்றிருந்தது.
ரேவதி இழிவாய் பேசியதையும், வான்முகிலனிடம் ரோசமாய் பேசியதையும் யோசித்தவள், இவளிடம் பேசினால் தன்னை கரைத்து விடுவாள். இனி எவர் நட்பும் வேணாம், நான் தனியாள்தான், என தன்னை திடப்படுத்தினாள்
இப்போ கூட உன்வீட்டுக்கு வந்திருப்பேன், என்னை யாரும் தடுக்க முடியாது. உன் வீட்டுக்கு போய் உன்னை கஷ்டப்படுத்த வேணாம்னு என் அண்ணன் சொல்லிடுச்சி, அதனாலதான் வரல.. என் கல்யாணத்துக்கு போன்ல கூட வாழ்த்த மாட்டியா? என தன் குரலை அனுப்பியிருந்தாள் இந்துபிருந்தா.
இந்துபிருந்தாவின் ஏக்கக்குரலில் திடப்பட்ட மனது கரைய தனது வாழ்த்தை டைப் செய்தாள். ஆனால் அனுப்பதான் இல்லை. உயிர் தோழிக்கு இச்சிறு வாழ்த்து போதுமா என மனம் தவித்துக்கொண்டேயிருக்க, மனநிலையை மாற்ற எண்ணி தமிழரசனிற்கு அழைத்து அவனின் படிப்பு பற்றியும், உடல்நிலை பற்றியும் விசாரித்து, இந்த வாரம் அம்மாப்பாவோட நீயும் வாடா என்று கோரிக்கை வைத்து இணைப்பை துண்டித்தாள்.
போனில் பேசி முடித்த வான்முகிலன் தேன்நிலா வீட்டினை நோட்டமிட, அவ உன் உதவியை வேணாம்னாலும், நிலா கல்யாணமாகி போற வரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோண்ணா. என்ற தங்கையின் கோரிக்கை நியாபகம் வர, இந்தளவுக்கு உனக்கு இவளை பிடிக்கும்னு இப்போதான் தெரியுது. என தங்கையை பெருமையாய் நினைத்தபடி தன் வீட்டிற்குள் போனான்.
பந்தல் போடுவது, புத்தாடை எடுக்க செல்வதென அந்த வாரம் கழிந்திருக்க, இந்துபிருந்தாவின் திருமணமும் நெருங்கிட, திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், வான்முகிலன் வீட்டினில் சொந்தபந்தங்கள் நிறைந்திருந்தது.
பணி முடித்து வந்த தேன்நிலா தன் தெருவினுள் நுழையும்போதே மேளச்சத்தம் அமர்க்களப்படுத்தியது. ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தவளின் கண்கள் தானாய் வான்முகிலனின் வீட்டினை நோக்க, இந்துபிருந்தாவிற்கு நலங்கு வைக்கிறார்கள் எனப்புரிந்தது.
இந்துபிருந்தா இல்லாமல் இனி எப்படி இருப்பது என சென்ற வாரமெல்லாம் வருந்தினாலும், தோழியின் திருமண வைபவத்தை நினைத்து முகம் மலர்ந்தது.
இவளின் வீட்டை தாண்டிதான் வான்முகிலன் வீடென்பதால் இந்துபிருந்தாவை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. எட்டி எட்டி பார்த்தபடி தன் வீட்டின் கேட்டினுள் நுழைய வண்டியிலிருந்து கீழிறங்கினாள்.
வண்டியை உள்ளே தள்ளுவதை போல் பாவனை செய்தபடி இந்துபிருந்தாவை பார்க்கும் ஆவலில் கண்களை அலைபாய விட்டிருந்தவளின் சிறுபிள்ளைத்தனத்தை பார்த்திருந்த வான்முகிலன்.. அடி அறிவே என மனதில் நினைத்தவாறு தன் சொந்தக்கார சிறுமியோடு தேன்நிலா அருகே வந்தவன்..
“பிருந்தாவை வீட்டு வாசல்ல உக்கார வச்சு நலங்கு சுத்திட்டிருகாங்க, இவங்கள்லாம் நலங்கு வச்சி முடிச்சவங்க, அங்க கூட்டமா இருக்குனு இங்க நின்னுட்டிருக்காங்க, இவ்வளோ பெரிய காம்ப்பௌன்ட் சுவத்தை மீறி பிருந்தா தெரிவாளா?
உனக்கு பிருந்தாவை பார்க்கனும்னா உள்ள வந்து பாரு. உள்ள வர விருப்பமில்லனா நலங்கு முடிஞ்சதும் பிருந்தாவை உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவா.?” என்றான் தன்மையாக.
ஸ்கூட்டியை கேட்டினுள் செலுத்தியவள்.. “ந்..ந்.. நீ… நீங்க என்னோட ப்..ப்..பேசுறதை உங்க சொந்தமெல்லாம் ஒரு மாதிரி பார்க்குறாங்க, என்னோட பேசி எதாவது ப்..ப்..புது பிரச்சனையை கொண்டு வந்துடாதிங்க.. யாரும் என் வீட்டுக்கு வரவேணாம்.. எனக்கு யாரையும் பார்க்க வேணாம்.” என கோபமாய் சொல்வதாய் நினைத்து வேண்டுதலாய் சொல்லி உள்ளே சென்றிருந்தாள் தேன்நிலா.
அடுத்த நாள்..
இன்றிரவு பிருந்தாவை அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள், காலையிலேயே வேலைக்கு கிளம்ப மனமில்லாமல்தான் கிளம்பியவள், தற்போது அரைநாள் விடுப்பு சொல்லி வீட்டிற்கு கிளம்பினாள்.
அன்று பிருந்தாவின் நிச்சயம் முடிந்தபின்னே, உன் கல்யாணத்துக்கு என்ன கிப்ஃட் வேணும்? என இருவரும் மாறிமாறி கேட்டுக்கொண்டபோது, நான் உனக்கு செயின் வாங்கி தரேன் என்று இந்துபிருந்தா சொல்ல, என்னால அவ்வளோலாம் முடியாது, என்னால முடிஞ்சதை செய்யிறேன் என தேன்நிலா சொல்லவும்,
நான்னா என் அண்ணாகிட்டயோ, இல்ல அம்மாகிட்டயோதான் காசு வாங்கி செய்வேன். ஆனா நீ அப்படியில்ல.. உன் சொந்த உழைப்புல ஒரு டிரெஸ் வாங்கி கொடுத்தாலும் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும் என்றிருந்தாள் இந்துபிருந்தா.
அன்றைய பேச்சினை நினைத்தவாறு நகைக்கடைக்குள் சென்றவள் ஒரு மணிநேரம் வரை ஆராய்ந்து அரை சவரனில் மோதிரம் வாங்கிக்கொண்டு, தன்னிடம் இந்துபிருந்தா எதிர்ப்பார்த்த உடை வாங்க நினைத்து மாலுக்கு சென்று.. பிருந்தாவின் விருப்ப நிறமான இளமஞ்சள் நிற சுடிதாரையும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
வாங்கிவிட்டோம்.. ஆனா எப்படி கொடுப்பது? என் மகனை வேணாம்னு சொல்லிட்டு, என் பொண்ணுக்கு மட்டும் செய்வியானு ஆன்ட்டி சண்டைக்கு வருவாங்களே. ஆன்ட்டி கேட்கலன்னாலும் ரேவதிக்கா விடமாட்டாங்க..
வான்முகிலனிடம் கொடுத்து கொடுக்கலாமென்றாலும், நேற்று அவனையும் பேச வேணாம்னுட்டோம் என்ற யோசனையோடு வந்துகொண்டிருந்தவள் நேரத்தை பார்க்க, ஐந்து மணி என்றது.
இன்னும் சற்று நேரத்தில் வாக்கிங் முடித்து வான்முகிலன் இவ்வழியாகத்தான் வருவான், ஆனால் இன்றிரவு பெண்ணழைப்பு என்பதால் வாக்கிங் வருவானா? அப்படியே வந்தாலும் தான் கொடுப்பதை பிருந்தாவிடம் கொடுக்க ஒப்புக்கொள்வானா? முதலில் தன்னிடமிருந்து பிருந்தாவிற்கானதை வாங்கிக்கொள்வானா? என்ற யோசனையோடு வந்துகொண்டிருந்தவள்,
ஒரே ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போமே.. திட்டினாலும் பரவாயில்லை, பிருந்தாவிற்காக வாங்கிக்கலாம் என வண்டியை ஓரம்கட்டி வான்முகிலன் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
ஆறரை மணியாகியும் வான்முகிலன் வராமல் போகவே, ப்ச்.. இன்னைக்கு வாக்கிங் வரல போல என ஏமாற்றத்தோடு, இனி இங்கிருப்பது வீணென வீட்டிற்கு கிளம்பினாள்.
தெரு முழுக்க மின்விளக்குகளால் ஒளிர்ந்தது. பிருந்தாவின் வீடும் வர்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. சில நொடி ரசித்தாலும், இன்றிலிருந்து தோழியை பார்க்கக்கூட முடியாது என்பது மனதை அழுத்த துவங்க.. மிக மெதுவாக வண்டியில் வந்துகொண்டிருந்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் இந்துபிருந்தா கிளம்பவிருக்க, வீடெங்கிலும் பெண்கள் கூட்டமாய் இருக்கவே, மாடிக்கு வந்திருந்த வான்முகிலன், தன் மாமாவோடு பேசிக்கொண்டிருந்தாலும், கேட்டினுள் வண்டியை செலுத்த முடியாமலும், கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல் துடைத்த படியும் இருந்த தேன்நிலாவை மாடியிலிருந்தபடி பார்த்துகொண்டுதான் இருந்தான்.
“மாமா.. ஒரு நிமிஷம்.” என ரேவதி கணவனிடம் பர்மிஷன் கேட்டு, கீழிருந்தவனை விசிலடித்து அழைத்தவன், பல்சரை எடுக்க சொல்ல செய்கை செய்தான்.
“என்னோடது இல்லைண்ணா.” என இவன் சொல்ல, “பரவால்ல, நகர்த்திவிடுடா.” என வான்முகிலன் முறைக்க.. “இதோ..” என தேன்நிலா அருகில் சென்றவன்,
“க்கா, இருங்க.” என்று ஸ்கூட்டி செல்வதற்கு ஏதுவாக பல்சரை நகர்த்த.. “தேங்க்ஸ்..” என ஸ்கூட்டியை உள்ளே செலுத்த, “இதுக்கு போய் அழுவிங்களாக்கா? அண்ணா என்னை திட்றார்.” என மேலே காண்பிக்க, வான்முகிலன்தான் இருப்பானென அறிந்தவளாய் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
வான்முகிலன் வீட்டினில் சூழ்ந்திருந்த கூட்டத்தை நினைத்தவள்.. இன்னைக்கு இதை கொடுக்க முடியாது, திருமணம் முடிந்த பின்னே என்றாவது ஓர்நாள் கொடுக்கலாம் என முகம் கழுவ போனாள்.
தன் வீட்டை கடக்கும் போது பிருந்தாவால் தன்னை நினைக்காமல் இருக்க முடியாது, வீடு பூட்டியிருந்தாலாவது அமைதியா போயிருப்பா, ஸ்கூட்டியை பாரத்தா நான் இங்கதான் இருக்கேனு தெரிஞ்சிட்டு என்னை பார்க்க தவிப்பாளே என தேன்நிலா மனம் தவிக்க.. ப்ச்.. அப்போவும் அம்மா அங்க வர சொன்னாங்க. பெரிய்ய இவமாதிரி நான் உள்ளயே இருந்துக்குவேன்னு சொன்னது ரொம்ப தப்பு என தற்போதுதான் உணர்ந்தாள்.
வீட்டினும் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவள், செடிக்கு தண்ணீர் பாய்ச்ச வெளியே வந்தாள். அந்த வேலையும் கால் மணி நேரத்தில் முடிய, டீயாவது குடிக்கலாம் என அடுப்பை பற்ற வைக்க, பிருந்தா வீட்டிலிருந்து மேளச்சத்தம் ஓங்கி ஒலித்தது.
என்ன? இந்நேரமே அழைச்சிட்டு போறாங்களா? என அடுப்பை அணைத்து வாசலுக்கு வந்தாள்.
கூட்டம் கூட்டமாய் மக்கள் செல்ல ஆரம்பிக்க, தன்னை கண்டால் ரேவதிக்கா எதாவது சொல்லிடுவாங்களா? என வந்த வேகத்தில் உள்ளே சென்றாள்.
ஆனாலும் பிருந்தாவை காண மனம் தவிக்க, தன் வீட்டு வாசலில் நின்றால் யார் என்ன சொல்வார்கள் என மீண்டும் வெளியே வந்தாள்.
மேளக்காரர்கள் தேன்நிலா வீட்டினை கடக்க, மனம் கேளாமல் கேட் அருகே செல்லலாமா என யோசித்திருந்த நேரம் பிருந்தா தேன்நிலாவின் வீட்டினை பார்க்க, அவள் முகம் தெரியவில்லை.
அனைவரும் நிற்கிறார்கள், என்னை பார்க்கத்தான் பிருந்தா தன் வீட்டின் முன் நின்றிருப்பாள் என கேட் அருகே விரைந்தாள் தேன்நிலா.
“நகருக்கா.” என ரேவதியை நகர்த்தி மற்றவர்களையும் நகரச்சொல்ல, தன்னை காணும் ஆவலோடும் கலங்கிய கண்களோடும் கேட்டை பிடித்தபடி நின்றிருந்த தேன்நிலாவை பார்த்ததும், ரேவதியின் மறுப்பை புறக்கணித்து விரைந்து சென்று கட்டிக்கொண்டாள் தோழியை.
விபரமறிந்த நாளிலிருந்து தன்னோடு இருப்பவளை இனி காணமுடியாது, தன்னை தேற்ற இவளின் நட்பு கிடைக்காது என நினைக்க, தொண்டைக்குழி அடைத்தது. வாழ்த்து சொல்லவும் முடியாதபடி வார்த்தைகள் சிக்கித் தவிக்க, பிருந்தாவை அணைத்தபடி அப்படியொரு அழுகை அழுதாள் தேன்நிலா.
இப்படியொரு நட்பா? அப்புறம் ஏன் இந்தபொண்ணு கல்யாணத்துக்கு வரல? என அருகிலிருந்தவர்கள் அதிசயித்து கலந்துரையாட, சற்று நேரம் பொறுத்துப் பார்த்த ரேவதி.. “நம்ம வீட்டுலயிருந்து கிளம்பும் போது கூட இப்படி அழல, எதுக்கு இவளை பிடிச்சிட்டு அழுதிட்டிருக்க? மேக்கப்லாம் கலைஞ்சிடும், அழுகையை நிறுத்து, எல்லாரும் உன்னையே பார்க்குறாங்க, வா பிருந்தா.” என தங்கையின் கையை பிடித்திழுத்தபடி முனுமுனுத்தாள் ரேவதி.
பிருந்தாவை தன்னிடமிருந்து விடுவித்து.. “அழாத..” என கண்ணீரோடு புன்னகைத்து.. “எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும்.” என அந்த நேரம் தனக்கு தெரிந்த வகையில் வாழ்த்தினாள்.
பால்ய காலத்திலிருந்து சிநேகிதி என்பதோடு, தாய் தந்தையோடு இருந்தால் பிருந்தாவின் பிரிவு இத்தனை வாட்டாது, இருக்கும் ஒரே தோழியை இழக்க முடியாமல்தான் இத்தனை அழுகை என தேன்நிலாவை வாஞ்சையோடு பார்த்திருந்தான் வான்முகிலன்..
தான் தனித்திருக்கும் அக்கறையில்தான் சொல்கிறாள் என்றுணர்ந்த தேன்நிலா சரி என்பதாய் தலையசைக்க.. “நிஜம்மா செய்துக்கனும்.” என மீண்டும் கேட்டு இந்துபிருந்தா தன் கையை நீட்ட, அப்பொழுதுதான் பிருந்தாவிற்காக வாங்கிய பரிசுப்பொருள் நியாபகம் வர,
இப்படி சூழல் வரும் என தெரிந்திருந்தால் மோதிரத்தை எடுத்து வந்திருப்பேனே என தேன்நிலா மனம் தவிக்க,
அவள் முகத்தின் தவிப்பறிந்தவன்.. இவளின் கவனத்தை கலைக்கவில்லையென்றால் இப்படியே பார்த்துக்கொண்டு நிற்பாள் என.. “பிருந்தாக்காக எல்லாரும் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க.. உன்கிட்ட சத்தியம் வாங்காம பிருந்தா கிளம்பமாட்டா போல, சீக்கிரம் சத்தியம் செய்..” என வான்முகிலன் கோபம்போல் அவசரப்படுத்த, பிருந்தாவின் கை மீது தன் கையை வைத்து, செய்துக்கிறேன் என்பதாய் தலையசைத்தாள் தேன்நிலா.